Saturday, December 27, 2014

தற்கொலைக்கு முயன்ற முதியவரை மீட்ட இளைஞர்கள்

ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM" Services .
****************************************************************
( 400 / 26 - 12 - 2014 )
நேற்று 25/12/2014 கோபால் சுமார் 70 வயதிருக்கும் ஒருவர் தன்னுடைய தனிமை நிலை வெறுப்பின் காரணமாக மனம் உடைந்து செய்வதறியாது தான் வசிக்கும் நாமக்கல்லில் இருந்து ஊர் ஊராக சுற்றி இறுதியில் கோவை வந்த அவர் சாலையில் போகும் வாகனங்களின் முன் விழுந்து தற்கொலைக்கு முயற்சி செய்துக் கொண்டிருந்தார் . இதில் ஒரு வாகனத்தில் மோதி காலில் பலத்த காயம் வேறு ஏற்பட்டு காலில் ரத்தம் கொட்டிக் கொண்டிருந்திருக்கிறது . இதையெல்லாம் கோவை தண்டுமாரியம்மன் கோவிலை சுற்றி உள்ளவர்களும் அந்தவழியாக சென்ற போலீசாரும் வேடிக்கை பார்த்தபடி சென்றுக் கொண்டிருந்தனர்.
அந்த வழியாக கோகுல்.A, லலித்ப்ரகாஷ்.U, சசிகுமார்.A ஆகிய மூன்று இளைஞர்கள் திரைப்படம் பார்த்துவிட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் இந்த முதியவர் செய்யும் செயல்களை பார்த்துவிட்டு மனம் பரிதவித்து அவரை மீட்டு சமாதானம் செய்திருக்கிறார்கள் . அவர்களிடம் அம்முதியவர் தனக்கு யாரும் இல்லை என்றும் திருமணம் ஆகவில்லை, வேலைக்கு செல்ல உடல் நலம் ஒத்துவரவில்லை, கையில் பணமும் இல்லை, சாப்பாட்டிற்கு வழி இல்லை, பிச்சை எடுக்கவும் மனம் ஒப்பவில்லை, இதனால் எனக்கு மரணம் தான் தீர்வு என்றுக் கூறி புலம்பி இருக்கிறார்.
இதை கேட்ட அந்த மூன்று இளைஞர்களும் அந்த முதியவருக்கு காலில் ஏற்பட்டிருக்கும் காயத்திற்கு உதவும் நோக்கில் 108 ஆம்புலன்ஸ் அழைத்துள்ளனர். ஆனால் நீண்டநேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வராத நிலையில், அவர்கள் ஈரநெஞ்சம் அறக்கட்டளையுடன் தொடர்பு கொண்டு அம்முதியவருக்கு உதவும் படிக் கேட்டுக் கொண்டார்கள் .
அதனைத் தொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்புடன் இணைந்து தற்கொலைக்கு முயன்ற அந்த பெரியவரை நள்ளிரவில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவருக்கு காலில் ஏற்பட்டிருந்த பலத்த காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின் அவரை தற்காலிகமாக கோவை மாநகராட்சிக் காப்பகத்தில் பாதுகாப்பிற்கு சேர்த்து விட்டு வந்தனர்.
இளைஞர்கள் என்றால் இரவு நேரத்தில் ஊரை சுற்றிக் கொண்டும் நேரம் கழித்தும் வீடு திரும்புவதே வழக்கமாக கொண்டிருப்பர். அது போன்ற இளைஞர்கள் மத்தியில் கோகுல், லலித்பிரகாஷ், சசிகுமார் என்னும் இந்த மூன்று இளைஞர்களின் இந்த முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது.
இப்படிப் பட்ட இளைஞர்களை நம்பியே நாளைய இந்தியா காத்துக் கொண்டிருக்கிறது என்று ஈரநெஞ்சம் அறக்கட்டளை அவர்களை உங்கள் சார்பாக அம்மூவரையும் பாராட்டுகிறது.
~ ஈரநெஞ்சம்

Monday, December 08, 2014

ஈரநெஞ்சம் சேவை ஆதரவற்ற பாட்டியின் தலையில் புழுக்களின் கூடு

ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM" Services .
****************************************************************
( 389 / 7-12-2014 )

இன்று 7-12-2014 கோவை, கணபதி, சத்தி சாலையில் ஆதரவற்ற நிலையில் செல்லம்மா 80 வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருவர் மீட்கப்பட்டு பாதுகாப்பாக கோவை மாநகராட்சி காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது தலையில் பல காயங்கள் ஏற்பட்டு இருந்ததோடு அவற்றில் புழுக்கள் பிடித்து துர்நாற்றம் வீசிய நிலையிலும் இருந்தது. அதை சுத்தம் செய்து அவருக்கு மேலும் சிகிச்சை அளிக்க ஈரநெஞ்சம் அறக்கட்டளை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த பாட்டி யார் எப்படி அங்கு வந்தார் என்ற தெரியாத நிலையில் தலையில் இப்படி காயத்துடனும் புழுக்களுடனும் இருப்பதைப் பார்க்கும் பொழுது பரிதாபமாக இருந்தது.

தன் உடல், பொருள், ஆவியை தியாகம் செய்து நம்மை கவனித்துக் கொள்ளும். பெற்றோர் இயலாமை நிலைக்குத் தள்ளப்படும் போது அவர்களை கவனித்துக் கொள்ளாமல் இப்படி தெருவில் ஆதரவற்ற நிலையில் விடுவதை பார்க்கும் பொழுது கல்லும் கூட கசிந்துருகி கண்ணீர் சிந்தும்.

~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Today 7-12-2014, an old lady chellamma, age 80 years was there in Coimbatore, Sathy road and no one care for her. Eeranenjam found and admitted her in Coimbatore corporation home. In her head there are some wounds and lot of worms in there with bad smell. Eeranenjam trust people cleaned all that and admitted her in Coimbatore GH for further treatment.

Parents sacrifice all their life things for taking care of their children. But in their old age no one taking care for her. This is really sorrowful and making tears in some body's eyes.

~thank you
Eera Nenjam






https://www.youtube.com/watch?v=4eQrJ8TKD-0&list=UUlItkV-aZwettjImLxCk7qw



 

https://www.youtube.com/watch?v=aez2Mj5alZE&index=4&list=UUlItkV-aZwettjImLxCk7qw










Monday, November 24, 2014

புனிதம் தொலைத்த கங்கை மாதவி வம்ச நாயகியின் கதை



மாதவி வம்ச நாயகியின் கதை 

பஞ்சனை படுக்கைகளிலும் மலர் தூவிய மஞ்சத்திலும் மட்டுமே புரண்ட விலைமாது இன்று புழுதி புரள மாய்ந்து கிடக்கிறாள் .

பல மூர்க்கர்கள் உறவாடிய உடல் இன்று பல நோய்கள் உறவாடி அவள் மூச்சை மூர்சையாக்கி விட்டது.
அன்று ஆசையாசையாய் ஆபரணங்கள் அலங்கரித்த உடல் இன்று ஈக்களும் , எறும்புகளும் அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.

வாசனாதி திரவியங்கள் பூசி மணமணத்த உடல் இன்று புழுபுழுத்து துர்நாற்றம் வீசிக்கிடக்கிறது .

உயிரோடு இருந்தபோது பல ஆயிரம் கொடுத்து பல கைகள் தொட்டு அனுபவித்த உடல். இன்று ஆயிரக் கணக்கில் கொடுத்தாலும் தொட்டு தூக்கி குழிக்குள் போட ஒருவரும் முன் வருவதற்கு இல்லை .

விதைத்தவன் தண்ணீர் ஊற்றாமலா போவான் ? படைத்தவன் இந்த உடலையும் சுமக்க ஒரு புண்ணியவானை அனுப்பிவிட்டான் . சுடுகாடு வரை சென்று சேர்ந்தது அவ்வுடல் . அவ்வுடலுக்கு கொள்ளி வைத்து விட்டு அப்புண்ணியவான் திரும்பினான்... அரூப வடிவில் வந்தாள் அவள்...

அப்பெண் அவரிடம்...

ஐயா உங்களுக்கு மிகவும் நன்றி ... என்றாள்.
யாரம்மா நீ உனக்கு ஏன் இந்நிலை ... என்று அவர் கேட்டார் .

ஐயா நான்,
மாதவி வம்ச நாயகி நான் ... அவளைப் போலும் என் அழகிற்கு பஞ்சமில்லை கணவனின் அன்பிற்கும் பஞ்சம் இல்லை.
அன்பின் அடையாளமாய் ஒரு குழந்தை. என்று அழகான குடும்பம் எனது. செய்யாத பிழைக்கு பலியான கணவனை பிரிந்து வாழும் கொடிய நிலை உருவானது. பசித்த பிள்ளைக்கு உணவளிக்க முடியாத தருணத்தில் குழந்தை பசிக்கு உணவு பெற மனித பசிக்கு இரையாக என் உடலை நானே விலைப் பேசி கொடுக்க துவங்கினேன். அதனால் என் பிள்ளைக்கு மூன்று வேளை உணவும் நல்ல கல்வியும் கொடுக்க முடிந்தது .
எந்த சூழலிலும் என் நிலை என் மகளை சூழ்ந்துவிடக் கூடாது என தான் யார் என அவளுக்கு தெரியாமலே வளர்த்தேன். மாதவியின் மகளுக்கு "மணி மேகலை" என்றொரு காப்பியம் இருக்கிறது . ஆனால் என் மகளுக்கு "விபச்சாரி மகள்" என்ற அடைமொழி தான். அவளையும் விலை பேசும் மனித உருவம் கொண்டு அலையும் நரிகள் கூட்டம் ஒன்றா இரண்டா .

பெண்ணின் அடிமைத்தளையை உடைத்தெறிய வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்தவனும், என்னை அடிமை நாயைப்போல் பயன் படுத்தியிருக்கிறான் .

கந்து வட்டிக்காரனும், என்னை கசக்கி அனுபவித்து விட்டு கடன் சொல்லி விட்டு போயிருக்கிறான் .

ஜாதி வெறிப் பிடித்த மனிதனும் என்னிடம் வெறிக்கொண்டு பாய்ந்து
அனுபவித்திருக்கிறான்... என்றே அரற்றினாள்.

இதைக் கேட்ட அப்புண்ணியவான் ,
ஒரு நிலைக்கு மேல் நீ திருந்தியிருக்கலாமே ... என்றார்

திருந்துவதா திருந்த நினைத்தாலே இந்த சமுதாயமும் என்னைத் தீண்டி ருசிப்பார்த்த ஓநாய்கள் கூட்டமும் என்னை திரும்ப விடவில்லை.

போலீசாரால் கைது செய்யப் பட்ட போதெல்லாம் பத்திரிக்கைக் காரர்களால் "விபச்சார அழகி" என்னும் அடைமொழியுடன் செய்தியாக்கினால் தான் அவர்களுக்கு வியாபாரம் . பெண்களை தாயாக மதிக்கும் நம் நாட்டில் எங்களுக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதை இது தான்.
இப்படி எங்களைப் பற்றி எழுதினால்தான் பத்திரிக்கைக்கு வியாபாரம். என்னிடம் படுத்த ஆண்களை பற்றி ஒன்றும் எழுதியது இல்லை. அவர்களின் பெயர்களை கூட போடுவது இல்லை. எங்களுக்கு ஏன் இந்த நிலை என்று கூட சொன்னது இல்லை.

காட்டிக்குள் இரைத்தேடி அலையும் விலங்குகளைக் காட்டிலும் , நாட்டுக்குள் பெண் தேகம் தேடி அலையும் விலங்குகள் அதிகம்.

எனக்கும் என் குடும்பத்திற்கும் பொருள்கள் வாங்க வேண்டுமென்றால் விற்பதற்கு என்னுடல் இருந்தது. இப்போது நிரந்தரமாக பிணமாக இருக்கும் நான் அன்று இரவு பகலாக கட்டில் மேல் பிணமாகவோ , அல்லது நடிக்கும் கருவியாகவோ இருந்தால் தான் என் பிள்ளைக்கு பால் வாங்க பணம். நிர்வாணம் மட்டுமே ஆடையாக உடுத்தி பழக்கப்படுத்தப் பட்டவள். தேகம் மேயும் மாந்தர் செய்த காயங்களை மறைப்பதற்காக நூலாடை அணியவேண்டும்.

ஆசை பட்டு இந்த தொழிலுக்கு வந்திருந்தால் கூட வேஷம் போட்டு காலம் ஓட்டி இருப்பேன். வேதனையில் வந்தவள் தூறல் சிந்தாத வானம் இருக்கும் என் கண்ணீர் சிந்தாத நாட்கள் இல்லை. என்னை வேசி என்று ஏசும் எவரைப் பற்றியும் கவலைப் பட்டதே இல்லை .என் மீது கல்லெறிய எவருக்கும் தகுதியும் இல்லை.

உலகமே சேர்ந்து பெண்ணின் பெருமையை உயர்த்துவது எவ்வளவு பெரிய நாடக செயல் ? விதவை, விபச்சாரி, முதிர்கன்னி , மலடி ,ஓடுகாலி , ஒழுக்கங்கெட்டவள் இது போன்ற புனைபெயர் எந்த ஆண்களுக்கும் இல்லையே.  அப்படி என்றால் என்னிடம் வந்தவர்கள் எல்லாம் புனித மகான்களோ.? ஒரு பெண் தன் கணவனை மட்டும் எண்ணியும், ஒரு ஆண் தன் மனைவியை மட்டுமே எண்ணியும் உள்ளன்போடு வாழ்ந்தாலே என்னை போன்றவர்கள் தோன்றப் போவது இல்லையே. 

போகட்டும்,
என்னுடைய எதிர்பார்ப்பு எல்லாம் என் சந்ததிகளுக்கும் இந்த சமுதாயம் வேசி வேடம் அணிவித்திடக் கூடாது. நான் என் வேதனையை சொல்லி என்னை உத்தமியாக்கிக் கொள்ளவில்லை என்னால் கூட எத்தனையோ குடும்பம் சீரழிந்து உள்ளது . மனுஷியாக என்னை ஏற்காவிட்டாலும் சரி என்னுள்ளும் மனம் என்ற ஒன்று உள்ளது என்பதை ஏற்ககூடாதா ? செய்த பாவங்களுக்கு பாவமன்னிப்பு கேட்கவில்லை. பாவத்திற்கு தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும் . அதை தான் அனுபவித்தேன்...  என்று வருந்தினாள் அப்பெண்.

அப்போது அந்த புண்ணியவான் :
இல்லை அம்மா உன் பாவங்கள் இன்றோடு தீர்ந்தது அம்மா , ஆமாம் உன் போன்றோர் இல்லையெனில் இந்த சமூகம் இன்னும் இன்னும் சீரழிந்து போயிருக்கும். இப்போதே தாய்க்கும், பெற்றெடுத்த மகளுக்கும், உடன்பிறந்தவளுக்கும் வித்தியாசம் தெரியாத உன்மத்தர்கள் இங்கே அதிகரித்து விட்டனர். தாரத்தை இழந்து, தன்னிச்சையைத் தீர்க்க முடியா ஆண்களுக்கு  நீதான் அம்மா ஆறுதல். உன் போன்ற உத்தமிகள் இல்லையென்றால் நிலை என்னவாகும் , நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லையம்மா .

இன்னும் இன்னும் இது போல் உள்ளத்தாலும் உடலாலும் தினம் தினம் செத்து சமூகத்திற்கு நீ ஆற்றிய பணி அளப்பரியது .பாவத்தை சுமப்பவன் கடவுளல்ல பாவத்தை தீர்த்தவர்களே தெய்வமாகிறார்கள். நீ இங்கேயே  நரகத்தை முழுமையாய் அனுபவித்து விட்டாய். இனி உனக்காக சொர்க்கம் அதோ அங்கே திறந்திருக்கிறது என்று தாயே உன்னை வணங்குகிறேன்...என்றார் . 

அவளது ஆத்மா மகிழ்வுடன் காற்றோடு கலந்தே மறைந்தது...!

~மகி

Sunday, November 23, 2014

உலகம் அழியப்போகும் இன்னும் சில தினங்களில்



வானம் உடையுமா ?
நிலா மண்ணில் விழுமா ?
கடல் கரைத்தாண்டுமா ?
எரிமலை வீட்டின் அடுப்புக்குள் புகுமா ?
இமயம் இல்லாமல் போகுமா ?
இந்த பூமி உருண்டு ஓடுமா ?

இந்த பூமிக்கு முடிவு எப்படி இருக்கும்
என மனிதர்களுக்கு பெரும் பயம் கலந்த ஆவல் !

அடுத்தநாள் நாளிதழில்
இன்னும் இரண்டு நாளில்
நிலா உடையும்
உடைந்து
நிலா துகள்கள் பாறைகள் பூமியை தாக்கும்
என அறிவிப்பு...

மண்ணை பார்த்து நடந்த பெண்களும்
பெண்ணை பார்த்து நடந்த ஆண்களும்
இரண்டு நாளாக நிலாவை பார்த்தபடியே நடக்கிறார்கள்...

நிலாவைப் பற்றி வர்ணித்த பேனாக்கள் எல்லாம்
இப்போது நிலாவை பற்றி வரலாறு எழுத ஆரம்பித்தது....

நிலா கவிஞர்கள் கண்ணில்
நிலா பெரும் பாரத்தை தூக்கி வைத்தது...

பெண்ணை நிலா என கூறியவர்கள்
நிலா தான் பெண் என மாற்றி பேச ஆரம்பித்தனர்...

இரண்டு நாள் கழிய சில மணிநேரம்
பாக்கியாக வந்தது

கிட்டத்தட்ட பூமியின் முடிவு
உறுதியானது.

நிலா உடையும் சத்தம்
நீலாம்பூர் வரை செவி அடைத்தது...

அனைத்து தொழிற்சாலையும்
விடுமுறை அறிவிக்கப்பட்டுவிட்டது...

வெளியூர் வேலை வாசிகள்
முண்டியடித்து குடும்பத்துடன் சேர்ந்து போக
பேருந்தைத் தேடி...

பங்களாவாசிகள் பதுக்காத மீதிப் பணத்தை
பதுக்க பாதாளம் தேடி...

சில காதல் வாசிகள்
இறுதி முத்தத்தைத் தேடி...

போதை வாசிகள்
மரண வலி தெரியக் கூடாது என
டாஸ்மாக் தேடி...

பாச வாசிகள்
இறுதி கட்ட பாசம் காட்ட
தொலை பேசி தேடி...

ஆன்மீக வாசிகள்
சிறப்புப் பிரார்த்தனை என
தேவாலயம் , கோவில், மசூதி தேடி...

சாலை எங்கிலும்
மக்கள் நெரிசல் சாலை விதிகளை மீறி
மாரத்தான் ஓட்டம்...

டாஸ்மாக்கில் குடிக்கும் கணவனை
வீட்டிற்கு வரச்சொல்லி அழுகை...

துடிக்கும் இதயம் எல்லாம் துடி துடிக்க
ஆரம்பித்துவிட்டது...

முன் பதிவு செய்து கட்டிக்கொண்ட
கல்லறையில் அடுத்தவன் புகுந்துவிட கூடாது
என தன் கல்லறையை தேடி...

இன்னும் சில நிமிடம் தான்
என அறிவிப்பு வந்தது...

தொலைகாட்சி சிறப்பு செய்தி

அழிவைப் பற்றி அறிவிப்பு வாசிப்பாளர்
கடைசி நிமிடம் என தெரிந்தும் முகத்தில் மேக்கப்பும்
புது சேலையும் செயற்கையாய் ஒட்டி வைத்த சிரிப்புடன்...

போக்குவரத்து நெரிசலில் சிக்கி நடந்தே வீட்டிற்கு
ஓடும் ஒபாமாவையும்...

தூய்மை இந்தியாவிற்காக
விளம்பரத்திற்கு நடிக்க
வந்த நடிகைகளையும் நடிகர்களையும்
மரணபயம் முகத்தில் விளையாட
விளக்குமாறை கீழே போட்டுவிட்டு ஓடுவதை
காட்டிக்கொண்டு இருந்தது...

நிலா பாறைகள் பூமியை நோக்கி
கண்ணில் தெரியும் தூரம்...

சில நொடிகள்

உலகமே மரண பயம் வாயை அடைத்துகொண்டது
பூமியெங்கும் சப்தம் நின்று நிசப்தம் பரவியது...

வீட்டை தேடும் பதட்டத்தில்
ஒரு தாய் தன் கைக் குழந்தையை மறந்தாள்...

குழந்தை பசிக்கு அழுதது
பூமியின் நிசப்தத்தால் அழுகை
சிங்காநல்லூரில் இருந்து சிங்கப்பூர்வரை
எதிரொலித்தது...

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த
பசு ஒன்று குழந்தை அருகில் வந்தது
குழந்தை பசுமாட்டின் காலைபிடித்து
மடிதேடி வாய் வைத்தது...!

~மகி

Saturday, November 22, 2014

ஒரு சேவையின் எதிரொலி

ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM" Services 
*********************************************************************
(381 / 21-11-2014)
" Ashish Acharya " மற்றும் அவரது நண்பர்களுக்கு ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் "

உலகம் முழுவதும் இருந்து பல கோடி மக்கள் புண்ணியம் தேடி வரும் ஒரு தெய்வ ஸ்தலம் , திருப்பதி திருமலை அடிவாரத்தில் அலிப்பெரி பகுதியில் பெண் ஒருவர் ஆதரவற்ற நிலையில் ( HIV ) நோயால் பாதிக்கப்பட்டு உடல் முழுவதும் காயங்களுடனும் எறும்புகள் ஊற பார்ப்பதற்கே பரிதாபமாக இருப்பதைக் கண்ட பாண்டிச்சேரியில் இருந்து வந்து நடைப்பயணமாக சாமி தரிசனம் செய்ய வந்த பாண்டியில் சமஸ்க்ருதம் p.hd மாணவர்களான ஆஷிஷ் 26 ( Ashish ) மற்றும் அவரது நண்பர் ஷர்மா ( sharma ) திருமலை கோவில் தரிசனம் செல்வதை தவிர்த்துவிட்டு அந்த பெண்ணை மீட்டு பெரும் முயற்சிக்குப் பின் திருப்பதி கதி காலனி ஜகன் மாதா சர்ச் , மதர் தெரசா மிஷினரியில் சேர்த்தனர் .

இதை பற்றி ஆஷிஷ் மற்றும் அவரது நண்பர்கள் கூறும் பொழுது.

" முதலில் நாங்கள் ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் , அந்த அறக்கட்டளையின் செயல் பாடுகள் அதன் பணியின் உந்துதலாலேயே எங்களுக்கும் இந்த உணர்வு ஏற்பட்டு இந்த பெண்ணை நாங்கள் பாதுகாக்கும் முயற்சியை மேற்கொண்டோம்.

முன்னதாக நாங்கள் பாண்டிச்சேரியில் இருந்து திருமலை கோவிலுக்கு தரிசனம் செய்ய 18 / 11 /2014 அன்று திருப்பதி வந்தோம் 19 ஆம் தேதி மலை ஏறுவதற்காக அடிவாரம் வரும் பொழுது இந்த பெண் சாலை ஓரமாக இருப்பதை பார்த்து நெஞ்சம் பதைத்தது. இந்த பெண்ணுக்கு உதவ வேண்டும் என்று தோன்றியது அதனால் 108 ஆம்புலன்ஸ் அழைத்தோம் அவர்கள் வந்து இந்த பெண்ணை பார்த்து நாங்கள் இதுவரை இந்த பெண்ணை தொடர்ந்து நான்குமுறை மருத்துவமனையில் சேர்த்து விட்டோம் ஆனால் மருத்துவ மனையில் இருந்து இந்த பெண்ணை வெளியே கொண்டுவந்து போட்டுவிட்டு போய்விடுகிறார்கள் . இனியும் நாங்கள் இந்த பெண்ணை அழைத்து சென்றால் எங்களைத்தான் திட்டுவார்கள் என்று உதவ மறுத்துவிட்டு சென்று விட்டனர். இதனால் இந்த பெண்ணிற்கு உதவுவதில் சிக்கல் ஏற்பட்டது . கோவை ஈரநெஞ்சம் அறக்கட்டளை செய்து வரும் சேவை மற்றும் பணிகளைப் பற்றியும் தொடர்ந்து முகநூல் மற்றும் பத்திரிக்கை வாயிலாக நாங்கள் கவனித்து வருவதால் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு தொடர்பு கொண்டு அவர்கள் அளித்த வழிமுறைகள் படி நாங்கள் இந்த பெண்ணை திருப்பதி கதி காலனியில் உள்ள ஜகன் மாதா சர்ச் , மதர் தெரசா மிஷினரியில் சேர்த்தோம் . அதன் பிறகு கோவிலுக்கு செல்ல நேரம் இல்லாததால் மீண்டும் திருப்பதியில் இருந்து பாண்டிச்சேரிக்கு வீடு திரும்பினோம் " என்று தெரிவித்தார் .

"சாமி தரிசனம் இவர்கள் செய்யாவிட்டாலும் இவர்களின் சேவையை தரிசிக்க அந்த சாமியே இறங்கி வந்திருக்கும்."

நன்றி
~ஈரநெஞ்சம்

https://www.facebook.com/eeranenjam

On behalf of Eeranenjam Trust we are expressing our best wishes to Mr. Ashish Acharya and his Friends.

Tirupathi temple is a very famous and lot people coming there for praying. In foothills of Tirupathi Thirumalai, Alipperi area, Mr. Ashish 26 years and his Sharma who were students of Sanskrit Ph.D from Pondicherry were found a lady, HIV patient with lot of wounds and insects in her body. Mr. Ashish and his friend Mr. Sharma came for praying by walk from Pondicherry. But after seeing that lady they cancelled to go to temple and taken efforts to rescue the lady. After a lot of efforts they admitted her in Jaganmatha Church Mother Therasa missionary in Thirupathi Gathi Colony.

Mr. Ashish and his friends told , “First we wish to say thanks to Eeranenjam trust, as their service activities and helping tendency only encourage us to do this help to that lady.

We came from Pondicherry to To Thirupathi on 18-11-2014 and we planned to go to temple on 19-11-2014. Before that we have seen that lady in foot hills and we felt pained and decided to help her. We called to 108 Ambulance. They came and see her lady, and told that they have admitted her in hospital many times, but they left away her. If they admitted her again, they felt that hospital people will scold them. So, they are not ready to take her to hospital.

So, we unable to help her . As we are watching the helping activities and services of Eeranenjam Trust, Coimbatore thru Facebook and daily magazines, we were calling them and asked advised to help her. As per their advice we have admitted her in in Jaganmatha Church Mother Therasa missionary in Thirupathi Gathi Colony. Then we don’t have time to go temple, we have returned to our home.”

They may miss their chance to see and pray God, but God will come to see them due to their helping service.

Thanks
Eeranenjam.

Thursday, October 23, 2014

ஈரநெஞ்சம் கொண்டாடிய தீபாவளி

" ஈரநெஞ்சம் கொண்டாடிய தீபாவளி "
ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM" Services
***********************************************************
(370 / 21-10-2014)




கோவை சிங்கநல்லூர் அருகே நீலிக்கோணாம்பாளையம் என்னும் இடத்தில் சண்முகம் ( 58 ) என்பவர் கண் தெரியாதவராக இருக்கும் காரணத்தால் பத்து வருடங்களாக குடும்பத்தாரால் புறக்கணிக்கப்பட்டு கழிவுநீர் கால்வாய் ஓரமாக இத்தனை நாளும் இருந்திருக்கிறார் . அவரைப் பற்றி மனோன்மணி என்னும் பெண் ஈரநெஞ்சம் அமைப்புக்கு தகவல் தெரிவித்தார். அனைவரும் தீபாவளி கொண்டாடும் நேரம் அவர் இப்படி இருப்பது மனதுக்கு கஷ்டமாக இருப்பதாகவும் தெரிவித்தார் . அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற ஈரநெஞ்சம் அமைப்பினர் , அந்த பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் சண்முகத்தை அங்கேயே குளிக்க வைத்து , பொதுமக்கள் முன்னிலையில் அவரை தீபாவளி கொண்டாட வைக்க முடிவெடுத்தனர் . அதனைக் கண்ட பொதுமக்கள் அவர்களாகவே அவருக்கு உடுத்த புதிய துணி வாங்கி கொடுத்தனர் .பின்னர் சாப்பிட தீபாவளி பலகாரம் கொடுத்தனர் . பின்னர் அங்கிருக்கும் குழந்தைகள் முன்னிலையில் அவருக்காக பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடி அங்கிருக்கும் மக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களையும் நமது ஈரநெஞ்சம் அமைப்பு தெரிவித்துக்கொண்டது ...





பின்னர் கோவை மாநகராட்சி தங்கும் விடுதியில் அனுமதி கேட்டு அங்கு சண்முகம் அவர்களை பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார் . "




" சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷம் பிறரை மகிழ்வித்துப் பார்ப்பது தான் " ; அந்த வகையில் சண்முகம் அவர்களை மகிழ்வித்ததில் ஈரநெஞ்சம் அமைப்பு பெருமிதம் கொள்கிறது . அதில் பொதுமக்களும் கலந்து கொண்டது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது ...
ஈரநெஞ்சம் அமைப்பிற்கு இந்த தீபாவளி மறக்கமுடியாத தீபாவளி !!!
~ஈரநெஞ்சம்.
https://www.facebook.com/eeranenjam

Tuesday, October 21, 2014

சாலையில் தவித்த 85 வயது பாட்டியின் உறவினர் கண்டுபிடிப்பு

ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM" Services.
******************************************************************
(368 / 20-10-2014)

கடந்த 18/10/2014 அன்று கோவை B9 காவலர்கள் உதவியுடன் சரவணம் பட்டி பகுதியில் இருந்து சுப்பம்மாள் 85 என்ற பாட்டியை மீட்டு கோவை மாநகராட்சிக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார் , அதனை தொடர்ந்து பாட்டியின் உறவினர்களை கண்டுப்பிடிக்கும் முயற்சியை ஈரநெஞ்சம் மேற்கொண்டது ,

https://www.facebook.com/eeranenjam/photos/a.249582201805870.51248.199260110171413/643014075796012/?type=1&theater

அதன் பலனாக வீரமநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு செந்தாமரைக் கண்ணன் அவர்கள் மூலமாக கோவையில் சிங்காநல்லூர் பகுதியில் சுப்பம்மாள் பாட்டியின் மகன் முருகன் என்பவர் தொடர்பு கிடைத்து. உடனடியாக அவருக்கு தகவல் அளிக்கப்பட்டது. , தகவல் அறிந்ததும் முருகன் உடனடியாக காப்பகத்திற்கு வந்து சுப்பம்மாள் பாட்டியை அழைத்துச் சென்றார்.
 




பாட்டியின் மகன் முருகன் கூறும்பொழுது :
அம்மாவிற்கு சற்று ஞாபகமறதி இருப்பதாகவும் சிங்காநல்லூரில் எங்களது வீட்டில் இருந்து கடந்த 16/10/2014 அன்று காலை முதல் காணவில்லை , எங்கெல்லாமோ தேடினோம் எங்கு தேடியும் கிடைக்காததால் இன்று 20/10/2014 அம்மாவைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்க காவல் நிலையம் சென்றவேளையில் ஈரநெஞ்சம் அமைப்பினர் அம்மாவைப்பற்றிக் கூறி நேரடியாக வந்து அழைத்துச் செல்லும்படிக் கேட்டுக்கொண்டனர் , அதை கேட்டதும் பெரும் மகிழ்ச்சி அடைந்தோம் , அம்மாவை நான்குநாட்களாக காணாமல் குடும்பத்தில் யாரும் சரிவர உணவுகூட உண்ணாமல் அம்மாவைத் தேடி அலைந்துக்கொண்டே இருந்தோம் இன்று அவர் கிடைத்ததும் பெரும் நிம்மதி அடைந்தோம் , அம்மாவை கண்டுபிடித்துக் கொடுத்த ஈரநெஞ்சம் அமைப்பிற்கும் அம்மாவை பராமரித்துக் கொண்ட மாநகராட்சிக் காப்பகத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகக் கூறி தனது அம்மாவை அழைத்துச் சென்றார்.

மேலும் சுப்பம்மாள் பாட்டியை கண்டுப்பிடிக்க பெரிதும் உதவிய வீரமநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு செந்தாமரைக் கண்ணன் அவர்களுக்கும் மற்றும் ஈரநெஞ்சம் அமைப்பைச் சேர்ந்த நண்பர்களுக்கும் , கோவை B9 காவல் நிலைய காவலர்களுக்கும், மாநகராட்சிக் காப்பகத்திற்கும் மற்றும் நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது ஈரநெஞ்சம் அறக்கட்டளை.

~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam?ref=hl

Due to those efforts and with the help of Mr. Senthaamarai kannan, Veermanallur police station Inspector, we can found her son Mr. Murugan, who is living in Singanallur. We informed to him and immediately he came to Coporation home and brought her with him to their home.

Mr. Murugan told that his mother Subbammaal is absent minded some times. Last 16-10-2014 she was missed from their home. They tried to find her in all places. When we decided to give complaint in police station today 20-10-2014, Eeranenjam trust people contacted us to bring our mother. We felt very happy, For past 4days we didn’t take even proper food too and continuously we were searching our mother. Now we feel very happy and peaceful. So we wish to say thanks to Eeranenjam trust for find out mother and Corporation home for taken care of her.

Our Eeranenjam trust giving our thanks to Police Inspector Mr, Senthamarai kannan, Veeramanallur station, and Eeranenjam trust people, B9 police station police officers, Friends and Corporation home for giving their helping hand to find Subammal family.

Thanks,

Eeranenjam.

Sunday, October 12, 2014

கைப்பொருள் இழந்து கலையை வாழவைக்கும் மாமனிதன்..அண்ணாமலை

நம் எண்ணங்களில் தோன்றும் பல கற்பனைகளை எழுத்து வடிவமாகவோ , அல்லது சித்திர வடிவமாகவோ படைக்கும் பொழுது அதை பார்ப்பவர்கள் மனதை கவர்ந்து அவர்களின் மனதில் எளிதாக பதியும் . அது மட்டுமில்லாமல் காலங்காலமாக அது அழியாமல் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை . இதன் காரணமாகவே கல் தோன்றிய காலமுதலாக சிலைகள், சுவர் ஓவியங்கள் , குகை ஓவியங்கள் , கல் வெட்டுகள் , ஓலை சுவடி ஓவியங்கள் மற்றும் பல படைப்புகள் படைக்கப்பட்டு இன்றளவும் நம் மனதை கவர்ந்துக் கொண்டிருக்கிறது . ஆனால் இக்காலக்கட்டத்தில் அப்படி பல கலைகளை உருவாக்கும் கலைஞர்கள் பலரும் , கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களுக்காக மக்கள் முன் படைக்க முன்வருவது இல்லை . அவர்கள் படிக்கும் கலைகளை , வியாபார நோக்கத்துடன் விற்று பல அரிய கலைஞர்கள் வியாபாரிகளாகவே மாறி விட்டனர் என்றே சொல்லலாம் .
இப்படிப் பட்டவர்களின் மத்தியில் கோவையைச் சேர்ந்த ஜெகநாதன் என்கின்ற  அண்ணாமலை என்பவர் தனது கலைத்திறன் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் , கோவையை சுற்றி பல அரிய சிற்பங்களையும் , சுவர் ஓவியங்களையும் மக்கள் மத்தியில் படைத்து வருகிறார் .

 

கோவையை அழகு படுத்தும் வகையிலும் மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும் வகையிலும் , இவர் கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் வடிவமைத்துள்ள உலக அதிசயமாக உள்ள ஹவா மஹால். பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் , செங்கோட்டை போன்றவை மிகவும் தத்ரூபமாக காட்சி அளிக்கின்றது . இந்த படைப்புகளுக்கு மக்கள் மத்தியிலும் பலமான வரவேற்பு கிடைத்துள்ளது.

 


முன்னாள் பிரதமர் திறந்துவைத்த கோவை கொடிசியாவில் உள்ள ஸ்க்கான் கோவிலின் முகப்பு அலங்காரம் இவரை ஒரு சிறந்த சிற்ப கலைஞராக காட்டி உள்ளது . இது மட்டும் இல்லாமல் திருப்பூர் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பொழுது முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் திறக்கப்பட்ட திருப்பூர் நினைவுத்தூண் , கிணத்துக் கடவு பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அண்ணா சிலை காந்திப்பூங்காவில் அமைந்துள்ள காந்தி சிலை என கோவையை சுற்றி பல கலை வேலைப்பாடுகள் அண்ணாமலையால் உருவாக்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் கட்டிட சிறப்புக் கலைஞராக வலம் வந்தவர் அண்ணாமலை . கோவையில் பல கட்டிடங்களுக்கு முகப்பு அலங்காரம் வடிக்கும் கலைஞராக இவரையே தேர்வு செய்து வருகின்றனர் . அது மட்டும் இல்லாமல். தான் கற்ற கலையை பள்ளி மாணவர்களுக்கும் பயன் பெரும் வகையில் சிறு சிறு கற்களை கொண்டு சிற்பம் செய்யும் கலைகளையும் கற்றுக் கொடுத்து வருகிறார்.
இந்த பணியெல்லாம் தனது குடும்பம் நடத்துவதற்கு என எடுத்துக் கொண்டாலும் , இவர் தற்போது துவங்கி செய்துவரும் கலை வேலைப்பாடு தனது வருமானத்திற்கும் மிஞ்சிய பொருட்செலவில் மக்களுக்கு விழிப்புணர்வை கொடுக்கும் வகையில் கோவையைச் சுற்றி உள்ள சுவர்களில் சிற்பம் வடித்து வருகிறேன் என்று கூறுகிறார் . மேலும் அதை பற்றி அவரிடம் கேட்ட பொழுது.


" நான் இந்த கலைப்பணியை கடந்த 20 வருடத்திற்கு மேலாக செய்து வருகிறேன் . பல சவால்களுக்கு இடையே தான் , நான் ஒரு நல்ல கலைஞன் என்று பெயர் வாங்கினேன் . குறிப்பாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் அமைக்கும் பொழுது கோவை மாநகராட்சி சார்பாக 150 பொறியாளர்களுக்கு மேல் தேர்வு செய்யப்பட்டு , யாரும் சரிவர அந்த கோபுரத்தை சாய்த்து அமைக்க முடியாமல் நிராகரித்த பிறகு வெறும் 6 ஆம் வகுப்புவரை மட்டுமே படித்த நான் மிக நேர்த்தியாக 16 அடியில் பைசா கோபுரம் 1.5 அடி சாய்வாக அமைத்து கட்டியது எனக்கு மிகவும் சவாலாக அமைந்து இருந்தது . காந்தி பூங்காவில் வைத்திருக்கும் காந்தி சிலையின் கண்கள் உயிருள்ள மனிதக் கண்களைப் போன்றே அமைக்கப்பட்டதாகும் . ஸ்கான் கோயிலின் முகப்பு வடிவம் அமைக்க எனக்கு அழைப்பு வந்த பொழுது நானும் எனது குடும்பத்தாரும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை " என்றும் கூறினார் .
மேலும் அவர் கூறும் பொழுது பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாத விஷயங்களான போக்குவரத்து நெறிமுறைகள் , மழைநீர் சேகரிப்பு , எரிபொருள் சிக்கனம் , மின்சார சிக்கனம் , தூய்மை , பிறருக்கு உதவும் மனம் , போதை பழக்க வழக்கங்களின் தீமைகள் போன்ற பல்வேறு விஷயங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளக்கமாக தத்ரூபமாக சாலைகளின் ஓரமாக இருக்கும் சுவர்களில் சுவர் சிற்பங்கள் உருவாக்கி வருவதாக கூறினார் ,
இந்த சுவர் சிற்பங்களுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாகவும் கூறினார் . ஒரு சுவற்றில் சுவர் சிற்பம் உருவாக்க குறைந்தது 5 நாட்கள் வரை ஆகும் . அதற்கான செலவு 15 ஆயிரம் ரூபாய் வரையிலும் ஆகிறது என்றும் , இதுவரைக்கும் 5 இடங்களில் உருவாக்கி விட்டதாகவும் பொது மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற நல்ல எண்ணத்தின் காரணமாக தனது மனைவி இந்திராணி அவர்களின் விருப்பப்படி அவரது நகைகளை அடமானம் வைத்து அதில் வந்த பணத்தை கொண்டு இந்த சுவர் சிற்பம் உருவாக்கி வருவதாகவும் கூறிய பொழுது , எங்கள் மனம் சற்று கனத்தது.






மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது மட்டுமல்லாமல் , லிம்கா உலக சாதனை மற்றும் கின்னஸ் சாதனையே தனது வாழ்வின் லட்சியமாக கொண்டு கலைத்துறையில் தன்னை அர்பணித்து வரும் அண்ணாமலை மக்களிடம் இருந்து எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்று தான் . சாலையோரமாக யாராவது நீண்ட சுவர் தந்து உதவினால் , அவர்கள் அவரது சாதனை கலைப் பயணத்திற்கு ஏணிப்படியாக இருப்பார்களே !!!

அண்ணாமலை அவர்களை தொடர்புகொள்ள ~92452 80844 / 90035 38492 / 0422 2499191

~மகேந்திரன்

Sunday, September 14, 2014

மழையால் ஒதுங்கிய கவிதை... மகி




வீட்டைச் சுற்றிலும் தண்ணீர்
இவர்கள் தொண்டைக் குழி மட்டிலும்
பாலைவனம்...

வாண்டுகள் வலை போட்டுத்தேடுகின்றனர்
மீன் தொட்டியையும், தொட்டிக்குள் இருந்த
மீனையும்...

குட்டிகளுக்கு விளையாட வீட்டுக்குள்ளேயே ஆறு
இறங்கி விளையாட கரை எங்கே...

மீனவர்கள் வீட்டை தேடியே
ஆறும் மீனும்...

படித்தது போதும் கொஞ்சநாள்
மழை பாடம் படிக்க,
வேடிக்கை பார்க்க, படிப்பு வாசம் படாத
தாத்தா பாட்டியெல்லாம் குடும்பத்துடன்
பேரன் படிக்கும் பள்ளி மாடியில்...

அண்ணாந்து நட்சத்திரம் ரசிக்கும்
கவிஞன் இன்று
ஹெலிகாப்டர் உணவுக்காக
அண்ணாந்து பார்க்கிறான்...

இந்துமா சமுத்திர கடலைவிட
காஷ்மீர்க்கு மழை கொடுத்த
வெள்ளம் பெரியது,

தென்னகத்தில் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் போல
இங்கே மழை நீரை குடிநீராக மாற்ற முடியுமா...

கழிவு நீர் கலந்த மழை நீர் வீட்டுக்குள்ளேயே
முட்டிக்கு மேல் நிற்க
எங்கு சிறுநீர் கழித்தால் என்ன டா குரல்...

கட்டி இருக்கும் உடை முதல் கொண்டு மழை
துவைத்துக் கொடுத்துவிட்டது
காயப்போட மின்னல் கொடி மட்டும் தான் மிச்சம்...

ஆங்காங்கே வைக்கோல் கன்றை மட்டும் விட்டு வைத்துவிட்டு
பசுவெல்லாம் மழை கொன்றது...

நீரில் சமாதியான கர்ப்பிணி வயிற்றில் மட்டும் தண்ணீர் இல்லை,
அவளை சுற்றிலும் தண்ணீர்...

சுடுகாடு தேடி மிதந்துவரும் பிணங்கள்
மனிதனுக்காக குழி வெட்டும் இடமெல்லாம்
மழை நீர் ஆக்கிரமிப்பு
மழை கொன்ற மனித உடலை புதைக்க
வெட்டியானும் இல்லை வெட்ட இடமும் இல்லை...

மழை போதாது என்று
தண்ணீரில் தெரியும் மேகத்தை பார்த்து
கண்களிலும் கண்ணீரின் மழை...

மூழ்கிக்கிடக்கும் தண்ணீர் லாரிகள்...
நீரில் மிதக்கும் பிளாஸ்டிக் குடங்கள்

மார்வாடி மழையால் மரித்துப் போனது அறியாது மார்வாடிக்
கடைக்கு மிதந்துவரும் பித்தளைக் குடங்கள்...

தபால் பெட்டிக்குள் தண்ணீர்
பட்டுவாடா நடப்பது எப்போது...
யாரோ எழுதிய கடிதம்
யாருக்கோ கொண்டு சேர்க்கும் மழை...

ஏற்கனவே கடனில் மூழ்கிப்போன வீடுகள்
இன்று மீண்டும் வெள்ளத்தில் மூழ்குகிறது...

கூடு கட்டின மரம் இருந்த இடம்
தெரியாமல் பறவைகள்
அல்லல்...

இதுதான் விதி என்பதா
தாமரை பூவிற்கு தண்ணீரிலேயே மரணம்..

பூந்தோட்டம் இருந்த இடம் காணோம்
பட்டாம் பூச்சிகள் கண்ணிலும் மழை...

நெல்வயலுக்குள் புகுந்ததால்
ஜோசியக் கிளி கூட
அவர்களோடு பட்டினிதான்...

மனிதன் பொதுக் கூட்டத்திற்கு தேதிக் குறிப்பிட்ட
அதே தேதியில் மழை வெள்ளம் நடத்தும்
இரங்கல் கூட்டம்...

கொஞ்சம் அதிகம் வேண்டிவிட்டார்கள் போல
கொட்டுகிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது
கோவிலுக்குள் இருக்கும் கடவுளுக்கும்
ஒதுங்க இடம் கிடைக்காமல் தவிக்கிறது...

மழைக் காட்சியை படம் பிடிக்க வைத்திருந்த கேமராக்களையும்
நீர் ஒப்பனை செய்ய , மின்னல் வந்து படம் பிடிக்கிறது...

தேர்தல் சமயத்தில் குடைசின்னம் கொண்ட கட்சிகளுக்கு
எதிர்க் கட்சிக்காரனே செய்யும் ஓசி பிரச்சாரம்...

ஒரு உண்மை உறுதியானது
" தண்ணீர் பந்தலுக்குள்ளும் தண்ணீர்...

மழைநீர் சேகரிப்புத் திட்டம்
உடைத்தெறிந்தது இந்த மழை வெள்ளம்...

என்ன தேவையோ தெரியவில்லை
சாலை மறியல் செய்யும் மழை...

மழை என்னும் ஒரே ஒரு திருடன் ஒரே நேரத்தில்
அனைத்து வீடுகளுக்குள்ளும் புகுந்து
உயிர் முதல் அனைத்தையும் களவாடி விட்டான்
தண்டிக்க ராணுவத்தால் கூட முடியாது...

மழை மிச்சம் வைத்த உயிர்களை
நிவாரண நெரிசல் சவ வேட்டையாடுகிறது...


~ மகி

Wednesday, September 10, 2014

600 குடும்பங்களைத் தற்கொலையில் இருந்து மீட்டுத்தந்த கோவையைச் சேர்ந்த லதா .

செப்டம்பர் 10  தற்கொலைத் தடுப்பு தினம்:

செப்டம்பர் 10 தற்கொலைத் தடுப்பு தினம்: , "உலகத் தற்கொலை தடுப்பு தினம்" ஆகும். தற்கொலைத் தடுப்பிற்கான சர்வதேச அமைப்பு மற்றும் உலகச் சுகாதார‌ அமைப்பு ஆகியவை இணைந்து இந்த தினத்தை 2003 ஆம் ஆண்டில் இருந்து நினைவுகூர்ந்து வருகிறது. தற்கொலை எண்ணம் தலை தூக்க காரணங்கள் பல சொல்கிறார்கள். பொருளாதாரச் சிக்கல், கடன், அவமானம், குடும்பப் பிரச்னைகள், காதல், படிப்பு, மனரீதியான பிரச்னைகள் என ... உலகம் முழுவதும் 40 நிமிடங்களுக்கு ஒருவர் என்றால் ஒரு நாள் பொழுதில் 3 000 பேர் , ஆண்டுக்கு சராசரி 15 சதவீதம் என தற்கொலை அதிகரித்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் இறப்புக்கான காரணங்களில் தற்கொலை 13 ஆவது இடத்தில் இருக்கிறது.



இந்தச் சமுதாயத்தில் நான் வாழ தகுதியற்றவன் என முடிவுசெய்து தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளும் ஒரு பயங்கரமான கோழைத்தனம் தற்கொலை "எந்த மாவீரனாலும் முடியாது, ஒரு கோழையால் மட்டுமே சாதிக்கப்படும் ஒரு வீரச்செயல் தற்கொலை" இந்தச் செயலை செய்வதால் கின்னஸ் புத்தகத்தில் இடமோ அல்லது விருதுகளோ கிடைக்கப்போவது இல்லை . காலம் முழுவதும் தற்கொலை செய்தவருக்கும், அவர் குடும்பத்தினருக்கும் நிலைக்கப் போவது தீராத அவப்பெயர்தான்.

தற்கொலை செய்து கொள்ளப்போகிறவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும் தற்கொலையால் பெறப்படும் விளைவுகள் என்ன என்று . ஆனால் தற்கொலைக்குப் பின் நமக்குத் தெரியப்போகிறதா என்ன என்ற ஒரு சுயநலம் அதில் இருக்கிறது . தற்கொலை செய்து கொள்வதால் கண நிமிடங்களில் உயிர் போய்விடும். ஆனால், நம்மை நினைத்து, நினைத்து முடங்கிப் போகும் தாய், தந்தை, மனைவி , குழந்தைகள் போன்ற சொந்தங்கள் தினம், தினம் செத்துப் பிழைப்பது பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை.


தற்கொலை செய்து கொள்பவர்களை அவர்களது ஒரு சில செயல்கள் மூலம் நாம் கண்டுபிடித்துவிடலாம் . தற்கொலை செய்துக்கொள்ள ஒருவர் முடிவெடுத்து விட்டார் என்றால் அவருடைய பேச்சில் பல மாறுதல்கள் தெரியும் . தற்கொலை செய்து கொள்ளப் பலநாட்களுக்கு முன்பே முடிவு செய்து விடுவார்கள் . பல துன்பங்கள் இருந்தும் தற்கொலை முடிவுக்குப் பின் சந்தர்ப்பம் கிடைக்கும் வரை வேண்டுமெனவே சிலர் உற்சாகமாக , மகிழ்ச்சியாக இருப்பது போலக் காட்டிக் கொள்வார்கள். இன்னும் சிலர் "இனியும் என்னால் எதுவும் செயல்பட முடியாது " " இனிமேல் எனக்கு யாரும் இல்லை " "அனைத்திற்கும் ஒரு முடிவு காண்கிறேன் " என்றெல்லாம் சொல்லி கொண்டிருப்பார்கள் . இதையும் மீறி அக்கணத்திலேயே தூண்டப்பட்டுத் தற்கொலை செய்து கொள்பவர்கள் மிகக் குறைவு.

தற்கொலை செய்து கொள்வது அவ்வளவு எளிதானதும் இல்லை தற்கொலை செய்துகொள்வதற்கு வாழ்ந்துவிட்டுப் போகலாம் . சில தற்கொலைகள் முயற்சிக்கும் போது ஏற்படும் வலிகள் மிகவும் கொடுமையானதாக இருக்கும் , அது நமக்கு இருக்கும் தற்கொலைக்கான காரணத்தைக் காட்டிலும் வலி மிகுந்ததாக இருக்கும் .

" வாழ நினைத்தால் வாழலாம் , தற்கொலை ஒன்றும் சாதாரணம் அல்ல " 
600 குடும்பங்களைத் தற்கொலையில் இருந்து மீட்டுத்தந்த கோவையைச் சேர்ந்த லதா .




சாவதற்குத் துணிவு இருப்பவர்களுக்குத் துன்பங்களைத் துரத்துவது ஒன்று பெரியதல்ல , தன்னம்பிக்கையும் ஊக்கமும் இருந்தால் பிரச்சினைகளை வென்று வாழ்ந்து விடலாம் என்று சாதித்திருக்கிறார் கோவையைச் சேர்ந்த லதா என்ற பெண்மணி. ஒரு கிராம் தங்க நகை தொழில் செய்து வரும் இவர் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களைத் தற்கொலையில் இருந்து மீட்டு இருக்கிறார்.

கடந்த 1998ஆம் ஆண்டுக் கோவையில் நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து பலரும் வேலை இழந்து வாழ்வாதாரம் இழந்து செய்வதறியாது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டனர் . அதே முடிவுக்குத் தன் கணவரும் வந்த போது லதா தன் கணவருக்கு அறிவுரை கூறி தன்னம்பிக்கை ஊட்டி , நம்மாலும் சாதிக்கமுடியும் வாழ்வதற்கு வேறு வழி இல்லாமல் போகாது இந்த உலகில், எனக் கணவருடன் கைகோர்த்து , தன் குடும்பத்தை மட்டுமல்ல வாழ்விழந்து நிற்கும் பிற குடும்பங்களும் தற்கொலை என்ற முடிவுக்கு வந்து விடாமல் தடுப்பதோடு அவர்களுக்கு வாழ்வாதாரத்தையும் தேடிக் கொடுத்திருக்கிறார்.

கிட்டத்தட்ட 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களையும் இணைத்து, அனைத்து பெண்களையும் சேர்த்து அப்போதைய மாவட்ட ஆட்சியர் திரு, முருகானந்தம் அவர்களிடம் சென்று வாழ வழி ஏற்படுத்தித் தரும்படி மனு கொடுத்தார் . அவர்களது மனுவை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் உடனடியாக அவர்கள் அனைவருக்கும் தன்னம்பிக்கை மற்றும் ஊக்கம் கொடுக்கும் பயிற்சியை அளித்ததோடு அனைவருக்கும் சிறுதொழில் பயிற்சிக்கும் ஏற்பாடு செய்து கொடுத்தது இவரது முயற்சியாலேயே !!!

அனைவருக்கும் விருப்பப்பட்ட சிறு தொழிலுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுத் தற்போது அனைவரும் சுயதொழில் மூலம் முன்னேற்றம் கண்டு நல்ல நிலையில் வருமானம் பெற்று வாழ்ந்து வருகின்றனர். அனைவருக்கும் தற்கொலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு அவர்கள் வாழவும் நல்ல வழி ஏற்படுத்தித் தந்த லதா அவர்கள் தன்னம்பிக்கை இருந்தால் சாவையும் வென்று விடலாம் என்பதற்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறார். மேலும் இவர் ஒரு கிராம் தங்க நகை செய்யும் தொழிலை பிறருக்கு கற்றுக்கொடுக்கும் ஆசிரியராகவும் விளங்குகிறார். இப்போதும் அவரைப் பார்ப்பவர்கள் தங்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுத்த தெய்வமாகவே நன்றியுடன் நினைத்து வருகின்றனர். எனவே தற்கொலை என்பது முடிவல்ல "தன்னம்பிக்கை இருந்தால் பிரச்சினைகளை மட்டுமல்ல சாவையும் வென்று சாதிக்கலாம் " புத்துணர்ச்சியுடன் வந்தவர்களுக்கெல்லாம் சாதிக்க வழிகாட்டியாக இருக்கிறார் பல விருதுகளுக்கும் சொந்தக்காரரான  லதா .



" வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் " இந்த லதா போன்றவர்கள் இருந்தால் ஒரு வழி அல்ல , ஆயிரம் வழிகள் உண்டு இப்பூமியில் ...

லதா அவர்களை தொடர்புகொள்ள : 94867 78910

~ஈர நெஞ்சம்

Saturday, August 23, 2014

மனநலம் பாதித்த சிறுவன் மீட்பு ~ஈரநெஞ்சம்

ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM" Services.
*******************************************************************
(347 / 21-08-2014)

கோவை சரவணம்பட்டி பகுதியில் கடந்த 11-08-2014 இரவு 16 வயது S. சிவபாரத் என்ற சிறுவன் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிவதை பார்த்த கோவை B9 காவல் காவலர்கள் பரிந்துரைக்க அந்த சிறுவனை தொன்போஸ்கோ சிறுவர் காப்பகத்தில் சேர்த்தனர் . மேலும் சிவபாரத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலை கொண்டு அவனது பெற்றோரை தேடும் முயற்சியில் ஈரநெஞ்சம் அமைப்பு முயற்சித்து 18-08-2014 அன்று சிவபாரத்தின் தந்தை செந்தூர் பண்டி , தாயார் லலிதா இருவரையும் கண்டுபிடித்து கோவை உக்கடத்தில் உள்ள தொன்போஸ்கோ காப்பகத்தில் இருக்கும் சிவபாரத்திடம் அழைத்து சென்றபோது அவன் அங்கிருந்து அதற்கு முதல்நாள் காணாமல் போய்விட்டதாக தகவல் தெரிவித்தனர் .




https://www.facebook.com/eeranenjam/photos/a.249582201805870.51248.199260110171413/609563489141071/?type=1&theater

தங்கள் மகன் கிடைத்துவிட்டான் என்ற மகிழ்ச்சியில் வந்த சிவபாரத்தின் பெற்றோருக்கு அவன் மீண்டும் காணாமல் போனது தெரிந்து மிகுந்த வேதனை அடைந்தனர் . ஈரநெஞ்சம் அமைப்பினர் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி சிவபரத் காணாமல் போனதற்கு அமைப்பே பொறுப்பேற்றுக்கொண்டு சிவபாரத்தை கண்டுபிடித்து தருவதாக உறுதியளித்து அவர்களை அனுப்பிவைத்தனர்.

https://www.facebook.com/eeranenjam/photos/a.249582201805870.51248.199260110171413/612734938823926/?type=1&theater

  


அதனை தொடர்ந்து மீண்டும் ஈரநெஞ்சம் அமைப்பின் முயற்சியால் சிவபாரத் 21-08-2014 கண்டு பிடிக்கப்பட்டான். பின்னர் கோவை மாநகராட்சி காப்பகத்தில் பாதுகாப்பாக சேர்க்கப்பட்டான். உடனடியாக அவன் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் மகனை அழைத்துச் செல்ல உடனே வந்தனர். பெற்றோர்களை கண்டதும் சிவபாரத் ஓடி வந்து கட்டிக்கொண்டு முத்தமிட்ட காட்சி காண்பவர் விழிகளில் கண்ணீரை பெருக்கியது.
 



அவனது பெற்றோர் கூறும்போது தங்கள் மகனை பிரிந்து மிகவும் வேதனை அடைந்து வந்ததாகவும் , அவனைத் தேடி எங்கெல்லாமோ அலைந்ததாகவும் தெரிவித்தனர். ஈரநெஞ்சம் அமைப்பினர் தங்கள் மகன் கிடைத்து விட்டதாக தகவல் தெரிவித்த போது மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்ததாகவும் பின்னர் மீண்டும் மகனை காணவில்லை என்ற போது மிகவும் கவலை கொண்டதாகவும் தெரிவித்தனர். ஆனாலும் எல்லோருமே ஈரநெஞ்சம் அமைப்பினரின் முயற்சியில் கண்டிப்பாக உங்கள் மகன் கண்டிப்பாக கிடைத்து விடுவான் என்றும் இது போல் குடும்பத்தை விட்டு பிரிந்த பலரையும் ஈரநெஞ்சம் அமைப்பினர் குடும்பத்துடன் சேர்த்து வைத்துள்ளனர் என்று கூறியது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியதயது . அதேபோல ஈரநெஞ்சம் அமைப்பினர் தங்கள் மகனை மீட்டுக் கொடுத்து தங்கள் மனதிற்கு நிம்மதியை கொடுத்துள்ளனர் என்று கூறி கண்ணீர் மல்க ஈரநெஞ்சம் அமைப்பினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

சிவபாரத் தனது பெற்றோருடன் சேர எடுத்துக்கொண்ட பெருமுயற்சியில் அமைப்புக்கு உதவிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் ஈரநெஞ்சம் அமைப்பு தனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது .
   




மீண்டும் ஒரு உறவை இணைத்து வைத்த மகிழ்ச்சியில் ஈரநெஞ்சம்.

~ ஈரநெஞ்சம்.

Thursday, July 17, 2014

அன்பு தங்கைக்கு

அன்பு தங்கை
அதென்ன அன்பு தங்கை ?

 


அன்பு என்றாலே தங்கைதான்.. அவசர பட்டு எழுதி விட்டேன்

அழகு என்னும் திமிர் பிடித்த பெண்கள் மத்தியில் , திமிரி வழிந்தோடும் அன்பு எடுத்தவள் நீ

திமிரி திரிந்த காளையாய் நான் இருக்க
கடிவாளம் உன் பாசமம்மா

நான் பிறந்த பயன் நீ என்னை அண்ணா என்று அழைத்தபோதே அடைந்துவிட்டேன் மா...

வேறென்ன வேணும் ஏழு ஜென்மத்திற்கு எனக்கு இந்த ஆசிர்வாதம் போதுமம்மா...

பாதி வயதிலே பல மடங்கு அனுபவம் வாய்ந்தவள் நீ...

நாடாளும் அரசன் நான் ஆனாலும் உந்தன் அறிவுரை வேணுமம்மா...

நீ சிரித்து மட்டும் பேச தெரிந்தவள் அல்ல அதில் சிந்தனை கலந்த சொல் கொண்ட சரஸ்வதி நீ யம்மா.

ஒருநாளும் உன் பேச்சை தட்டிப் போவேனா, என் எண்ணம் எல்லாம் தடம்புரள ஆவேனா !

நீ குழந்தை என்றாலும் எனக்கு உன் வாக்கு தெய்வவாக்கு தானம்மா
உனக்கு மூத்தவன் என்றாலும்

உனக்கு முதல் குழந்தை நான்தானம்மா
வாழ்வின் அர்த்தங்களில் முதலிடமாய் நீ..

சந்தேகம் வேண்டாம்.. அண்ணிக்கு ஆறு குழந்தை பெற்றாலும் அவளே சொல்லிடுவாள் அவளுக்கு மூத்த குழந்தை நீதான் என்று...

எத்தனை வெயில் காலம் , பனிக்காலம் மாறி மாறி வந்தாலும் நம் பாசக்காலம் மாறாது...

உன் பாசம் தொட்டுதான் என் பணியும் தொடங்கும்...

கோபத்தையும் கொள்ளும், அந்த கோபத்தையும் கொல்லும் சிரித்த பார்வை சக்தி உனக்கு.

உன் விருப்பம் அதுவென்று உனக்கென வாழாமல்
என் விருப்பம் உனதாக்கி உருகி வாழும் தேவமகள்...

வசந்த காலம் எனக்கு எது என்றால் உன் புன்னகை உதிரும் காலம்தான் .
எனக்கு இலையுதிர்காலம் எதுவென்றால் உன் கண்ணில் கண்ணீர் உதிரும் காலமம்மா...

உன் பாசம் கண்ட இந்த ஜென்மம் இது போதுமம்மா எனக்கு இன்னும் இரண்டு ஜென்மம் வேண்டும் அதில் ஒன்று
ஒரு தாய் வயிற்றில் நாம் பிறக்க பிறந்திட வேண்டும்...

அடுத்த ஜென்மம் உன் வயிற்றில் நான் பிறந்திட வேண்டும்...

உனக்காக நீ கவிதை கேட்டாயா அதற்கு இன்னும் எழுதலாம் ஆனால்
அதற்கு வான் கொண்ட காகிதம் போதாது.!!!

~மகி அண்ணா

Wednesday, July 16, 2014

“தாலி இழவு” என்ற பெயரில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்


" மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் "
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கோவையில் கொடூரம் ... 
நாடு ரோட்டில் நடந்த “தாலி இழவு”
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~



இந்த சமுதாயம் எத்தனை முற்போக்காய் மாறிவிட்டாலும் இன்னும் மனதை பாதிக்கும் சில அவலங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. பெண் முன்னேற்றம், பெண் சுதந்திரம் என்பதெல்லாம் இப்போது மிக பழம்பெரும் கதையாகி விட்டது. மிக குறைந்த சதவீதம் தவிர பெரும்பாலான அளவில் வேண்டிய அளவுக்கு பெண்கள் சுதந்திரமாகவும், முன்னேற்றத்துடனும் செயல்பட துவங்கி வெகு நாட்கள் ஆகிவிட்டது. இந்த துறை அந்த துறை என்றெந்த பாகுபாடும் இன்றி எல்லா துறைகளிலும் பெண்கள் வெகுவாக சிறப்புற செயல்பட துவங்கி சாதித்தும் வருகின்றனர். ஆனாலும் கூட இது முழுமையான முற்போக்காக எண்ண முடியவில்லை. சில சம்பவங்கள் பார்க்கும்போது பெண்கள் முன்னேற்றத்தின் அத்தனை மகிழ்வும் சற்று பின்னாலே போய் விடுகிறது. இது போன்ற அவலங்களில் இருந்து பெண்களை விடுவித்தால் மட்டுமே அந்த சாதனைகளும் முற்போக்கு என்ற முன்னேற்றமும் அடுத்த அடிக்கான மகிழ்வை முழுமையாக தரும். ஆம்... அப்படி ஒரு நிகழ்வுதான் “தாலி இழவு” என்று சொல்லப்படுகிற ஒரு அவலம்.

கோவையில் :





13.07.2014 அன்று ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த இந்த சம்பவம் மிகவும் கொடுமையானது. இது காலம் காலமாக நடந்து வருவதுதான் என்றாலும் யாரும் அறியாமல் மறைவாக நிகழும். ஆனால் இன்றோ ஈஸ்வரி என்ற பெண்ணுக்கு கோவை, சொக்கம்புதூர் மைதானத்தில் கணவனை (ஆறுமுகம்) புதைக்க வந்த இடத்திலேயே பலர் அறிய நடு சாலையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. காண்பவர் மனதை பதைபதைக்க வைத்தது கண்ணீர் பெருக வைத்தது. அந்த பெண் கடந்த பத்து வருடங்களாக கணவர் பிரிந்து சென்றதால் தனியே கூலிவேலை செய்து கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தார். பத்து வருடங்களுக்கு பிறகு அவர் இறந்துவிட்டார் என்ற உடன் உறவினர்கள் வந்து அந்த பெண்ணை அழைத்து வந்து, அதுவும் மயானத்திலேயே பலரும் பார்க்க அரங்கேறிய இந்த கொடுமை நாம் சொல்லிக்கொள்கிற முற்போக்கு சமுதாயம் என்ற வார்த்தைக்கு வைக்கப்பட்ட கரும்புள்ளியாகும்.

ஒரு பெண் பிறந்தது முதல் அவளின் அன்னை அவளுக்கு பூசி அழகு பார்த்த மஞ்சளையும் , நெற்றியில் வைத்து அழகு பார்த்த பொட்டையும் கணவன் இறந்த பின் அழிப்பது என்ன நியாயம் ? அவளின் தந்தை ஆசை ஆசையாய் அவளுக்கு வாங்கி அணிவித்து அழகு பார்த்த வளையல்களை கணவன் இறந்த காரணத்துக்காக உடைத்தெறிதல் என்பது அநியாயம் அன்றோ ? கணவன் வந்த பிறகு அவள் கழுத்தில் மாங்கல்யம் ஒன்று தானே புதிதாக அணிந்தாள். பிறகு எதற்கு பொட்டையும் ,மஞ்சளையும் அழித்து வளையல்களை உடைத்தெறிய வேண்டும் .

பெண்களின் மனதை காயப்படுத்தும் இது போன்ற நிகழ்வுகள் இன்றும் நடைபெற்று வருகிறது. அதில் செய்யப்படுகிற காரியங்கள் புண்பட்ட அந்த பெண்ணின் மனதை மேலும் காயப்படுத்துவதாகவே இருக்கிறது. பாதுகாப்பு உள்ளிட்ட பல காரணங்களை சாக்காக சொல்லி அன்றைய காலங்களில் நிகழ்த்திய இது போன்ற அவலம் இனியும் தேவையா ?. அந்த காரணங்கள் கூட சரியானவை இல்லை என்றாலும் இனிமேலும் இது தொடரவேண்டியது அவசியமா ?.

மனிதர்கள் ஏற்படுத்திய எல்லா சடங்குகளும் சம்பிரதாயங்களும் நமது சௌகரியங்களுக்காக ஏற்படுத்தியவையே. அந்த காரியங்களுக்கு ஏதாவது அர்த்தம் இருக்க வேண்டும். தன் துணையை இழந்து விட்டோம் என்ற நிலையை விட கொடுமையானது இதில் நிகழ்த்தப்படும் அவலங்கள். முழுமையாக அந்த பெண்ணை அலங்கரித்து பூ , பொட்டு, வளையல் போன்ற எல்லாமும் அணிவித்து பின்னர் அதை எல்லாம் அழித்து , உடைத்து , தாலியை அறுத்து, வேதனையில் இருக்கும் அந்த பெண்ணின் மனதை மேலும் குத்தி காயப்படுத்தாதா ? இது போன்ற நிகழ்வுகளை சக மனுசிக்கு நிகழ்த்துவது என்ன நியாயம்? கணவர் இறந்து விட்டால் உடன்கட்டை ஏறுதல், மொட்டை அடித்தல் போன்ற நிகழ்வுகளை வழக்கொழித்தது போல் இந்த அவலத்தை ஒழித்தால் தான் பெண்ணின் முன்னேற்றம் என்பதும் பெண் சுதந்திரம் என்பது முழுமையடையும்.

நன்றி ~