Tuesday, March 22, 2022

கொரோனா Vs ஹர்ஷினி

கோவை கணபதியில் சாலையோரம் தள்ளுவண்டியில் பானிபூரி கடை நடத்தும் தபசுராஜ் , கொண்டம்மாள் தம்பதியினர். இந்த தம்பதியினரின் மூத்த மகள் ஹர்ஷினி கோவை ராம்நகர் சபர்பன் மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறாள் . 5 ஆம் வகுப்புவரை படிப்பில் முதல் மாணவியாகத் திகழ்ந்து வந்தாள் . ஆறாம் வகுப்பு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்றபின் பள்ளியில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் கொண்டு கராத்தே , கபடி, மாரத்தான் போன்றப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். அது மட்டும் இல்லாமல் கட்டுரைப் போட்டி பேச்சுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பல பரிசுகளும் குவித்தாள் . விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் மிகுந்ததால் படிப்பில் நாட்டம் குறைந்து மந்த நிலை ஏற்பட்டது. இருந்தாலும் இவருடைய பெற்றோர் மகள் மீது நம்பிக்கை வைத்துப் படிப்பில் ஆர்வம் குறைந்ததைப் பெரிது படுத்திக் கொள்ளவில்லை .


இந்நிலையில் கொரோனா தொற்று 2020  ஆம் ஆண்டுத் துவங்கவே அடுத்த இரண்டு வருடங்கள் முழு அடைப்பு போன்ற காரணங்களால் பள்ளி செல்லாமல் இணையவழிக் கல்வி மட்டுமே இருந்தது. இணையவழிக் கல்வியில் புரிதல் இல்லாத நிலை  ஏற்படவே விளையாட்டுப் பிள்ளையான ஹர்ஷினி பொறுப்பற்று தன் போக்கிலிருந்து வந்திருக்கிறார்.  இவளுக்கு மிகவும் ஆர்வமான விளையாட்டுப் போட்டிகள் எதிலும் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள முடியாத நிலை உருவானதோடு படிப்பும் சரிவர ஏறவில்லை .

ஊரடங்கு உத்தரவு காரணமாக தர்ஷினியின் தந்தையால் பானிப்பூரிக் கடை போட முடியாத நிலை ஏற்படவும் ஏற்கனவே வறுமையிலிருந்த இவர்களுக்கு மேலும் வறுமையும், கடன் சுமையும் ஏற்பட்டு வீட்டு வாடகை கூடக் கொடுக்க முடியாத நிலையில் தவித்தனர். கடன் காரர்களுக்குக் கடன் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையும் சேர்ந்து , வறுமையின் உச்சநிலைக்கு தள்ளப்பட்டு நிலைகுலைந்தது குடும்ப பொருளாதாரம் .

இந்த நிலைப்பாட்டை கவனித்து வந்த ஹர்ஷினி சோர்ந்து இருந்த தனது தந்தையிடம் ,  "கடை திறக்க முடியவில்லை என்றால் நமக்குப் பணம் கிடைக்காதா அப்பா எதனால் இந்த நிலை?", என்று கேட்டாள். தபசு தன் மகளிடம் , "உலகமே கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப் பட்டிருக்கிறது, இதனால் உலகமெங்கும் ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது, கிருமித் தொற்று என்றால் என்ன என்றுகூட அறியாத பாமர மக்கள் ஊரடங்கால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர், வீதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லை , கடைகள் மூடப்பட்டுள்ளது , தினசரி வருவாய் இழந்து தவித்துவருபவர்களில் நம் குடும்பமும் ஒன்று . வீட்டிலேயே முடங்க வேண்டிய நிலையில் சேமித்து வைத்த சிறு துளியும் கரைந்து விட்டது , இந்த இக்கட்டான சூழலிலிருந்து எப்படி மீளப்போகிறோம்னு புரியல. உங்களை எப்படிக் காப்பாற்றப் போகிறேன்னு தெரியல. இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த நிலையோ?!", என்று விளக்கத்தோடு தன் மனக்குமுறலை கொட்டியிருக்கிறார் .

பள்ளி விடுப்பு என்ற ஒரே சந்தோஷத்திலிருந்து வந்த ஹர்ஷினி , தந்தையின் மனக்கவலையை உணருகிறாள். தன் தாய் தந்தையரின் ஆற்றாமை நிலையைக் கவனிக்க ஆரம்பித்து , தன் அறியாமையை உணர துவங்கினாள் .

தன் மாற்றமே தனக்கும் , தனது குடும்பத்தின் உயர்வுக்கும் வழி என உணர்ந்து என்ன செய்யலாம் என்ற முயற்சியில் இறங்கினாள் .

மீதம் இருந்த விடுமுறை நாட்களில் கண்ணில் படும் பழைய தினசரி நாளிதழ்களை எல்லாம் வாசிக்கிறாள் . வாசிப்பை நேசிக்கவும் ஆரம்பிக்கிறாள்.. வாசிப்புப் பழக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுப்படுத்திக் கொள்கிறாள்.. தினசரி ஆங்கிலம் , தமிழ் ஏடுகள் தொடங்கி மாத வாரச் சஞ்சிகைகள் வரை படித்துக் குறிப்பு எடுத்து செய்தி வாசிக்கக் கற்றுக் கொண்டாள் .

இந்த வருடம் 2021- 2022 கொரோனா தொற்று சற்று குறையவே பள்ளிகள் திறந்ததும் புது வித மனநிலையோடு மீண்டும் தனது பள்ளிப் படிப்பைத் துவங்க , புது எழுச்சியுடன் பள்ளிக்கு உற்சாகமாகச்  செல்ல துவங்கினாள் . படிப்பில் ஆர்வம் குறைந்து இருந்த ஹர்ஷினி தற்போது தனது வகுப்பில் முதல் மாணவியாக எல்லாப் பாடங்களில் 80 சதவிகித மதிப்பெண் பெற்று வருகிறாள்.

ஒருமுறை தன் ஆசிரியரிடம் தினமும் நான் என் சக மாணவர்களுக்கு நான் படித்த அன்றாடச் செய்திகளைப் பகிர நினைக்கிறேன் என்று தனது ஆர்வத்தைத் தெரிவிக்கவும், தினமும் காலை பிரேயர் நேரத்தில் செய்திகளை வாசிக்க ஆசிரியரும் அனுமதிக்கிறார்.

ஹர்ஷினி செய்திகளைத் தெள்ளத் தெளிவான உச்சரிப்புடன் வாசிப்பதைக் கண்டு ஆசிரியர்கள் , மாணவர்கள் மிகுந்த ஆச்சரியமும் வியப்பும் பெருமையும் கொண்டு , நமது பள்ளிக்கு இது பெருமை சேர்க்கும்படி உள்ளது என்று பாராட்டி வருகின்றனர்.
அது மட்டும் இல்லாமல் தற்போது பள்ளியில் நடத்தப்படும் பேச்சு போட்டி, கதை கட்டுரைப் போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து பரிசுகளையும் பெற்று வருகிறாள். தன்னைத் தானே மேலும் மெருகேற்றி தன் திறமைகளை மிளிரச் செய்து கொண்டு வருகிறாள்


தமிழ் நாட்டின் முன்னணி தினசரி, தினமணி நாளிதழில் பாரதியார் பாடல்கள் போட்டியில் "இரண்டாம் பரிசு" பெற்றாள். தினத்தந்தி நாளிதழில் கொரோனா பற்றிய இவளது கவிதை வெளியானது அவளின் எழுத்துப் பணியை மேலும் சிறக்கச் செய்துள்ளது . தானும் வளர்ந்து தன் சுற்றுச்சூழலையும் சரி செய்ய எண்ணிய ஹர்ஷினி,
தான் சந்திக்கும் பிரச்சினைகளை  தினமலர் நாளிதழுக்கு எழுதிச் சம்மந்தப்பட்டவர்கள் கவனத்திற்குக் கொண்டு சென்று பிரச்சினைகளையும் களைவது குறிப்பிடத் தக்கது.

தற்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இந்த இளம் வயதில் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரம் செய்து   தனது பேச்சுத் திறமையை வெளிப்படுத்தியது, அந்த பகுதி  மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுத் தந்தது மட்டும் இல்லாமல் சம்பந்தப் பட்ட வேட்பாளருக்கு கூடுதல் வாக்குகளும் கிடைத்தது .

இதெல்லாம் போக விடியற்காலை எழுந்து தனது தந்தைக்கு உதவியாகக் காய் வெட்டி கொடுப்பதும், மதிய உணவை வித விதமாகச் சமைக்கச்  செய்தும் தனது குடும்பத்தினரை மிகக் குறுகிய காலத்தில் பெரும் நம்பிக்கை அடையச் செய்து உள்ளார்.

இந்தக் கொரோனா நம்மிடையே எவ்வளவோ அழிவுகளை ஏற்படுத்தி உள்ளது என்றாலும், ஹர்ஷினியின் குடும்பத்திலும் ஹர்ஷினியின் மனதிலும்  நம்பிக்கை விளக்கை ஏற்றி உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை...

~ ஈரநெஞ்சம் மகேந்திரன்

Tuesday, March 08, 2022

தமிழினி புலனக்குழு மகளிர்தின சிறப்புப் போட்டி 5 -ன் முடிவுகள்:

நான் மதிப்பும்  மரியாதையும் கொண்டிருக்கும் தமிழினி குழும நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
என்னை மகளிர் தின சிறப்பு போட்டிக்கு நடுவராகத் தேர்வு செய்தமைக்கு நன்றிதனை தெரிவித்துக்கொள்கிறேன்!

நம் மனதைக் கவர்ந்த காட்சிகளை, நம்மோடு சேர்ந்து பயணிக்க வைப்பது நாம்  எடுக்கும் சில  புகந்தைகள்  (போட்டோகிராப்) தான்.  குகைகளில் ஓவியமாகவும், பாறைகளில் சித்திரமாகவும்,  பிறந்த புகைப்படங்கள் இன்று பரிணாம வளர்ச்சி பெற்று தாமி (செல்ஃபி) வரை வளர்ந்து இருக்கிறது.5ம் நூற்றாண்டு தொடங்கி இன்று கை பேசி காலம் வரை நிறைய,  அழகிய, அற்புதமான, ஆச்சரியமூட்டும், விசித்திரமான படங்களை இந்த உலகம் தன் செருகேட்டில் (ஆல்பம் ) சேர்த்து வைத்திருக்கிறது. 

கைக்குள் உலகத்தைக் கைப்பேசி கொண்டுவந்து சேர்க்கிறது. அந்த கைப்பேசி நாம் அனைவரையும் ஒரு சிறந்த புகைப்படக்காரர்களாகவும்  உருவாக்கிக் கொண்டிருக்கிறது  என்பதுக்குச் சான்று நாம் எடுக்கும் படங்கள்.  

சாதாரண மழைத் துளியின் அழகை அசாதாரண அழகாகக் காட்டும் வல்லமை கொண்டது புகைப்படக் கருவிகள். கருவிகளைக் கலைநயம் மிக்க ஒன்றாய் மாற்றும் திறன் கலைஞனுக்கே உண்டு.

நாம் காணும் காட்சிகளுக்கும் மனதுக்கும் எப்படி நெருங்கிய தொடர்பு உண்டோ அது போலத் தான் நாம் பதிவு செய்யும் புகைப்படங்களும். 
சில படங்கள் மனதை லேசாக்கும்,   (இயற்கைக் காட்சிகள்) சில படங்கள் நகைச்சுவையாக இருக்கும், சில படங்கள் முக சுளிப்பைத் தரும், சில கோவத்தைத் தூண்டும்.  இப்படி நம் உணர்வுகள், நாம் காணும் கட்சியைப் பொறுத்து இருக்கிறது. காண்பதை எல்லாம் அழகாகக் காட்டும் அதிசய கண்ணாடியை  கைக்குள் வைத்திருக்கும் நாம், பார்க்கும் காட்சியை நல்ல ரசனையோடும் இருக்கும் நவீன நுட்பத்தைப் பயன் படுத்தி வித்தியாசமாகக் காட்ட முயற்சி செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

குழுவில் பதியயப்பட்ட படங்களைப் பார்க்கும் போது, ஆகா! சிறப்பு! அருமை!  என்று இருந்தது,  சிலவற்றைப் பார்க்கும் போது இன்னும் சிறப்பாக எடுத்து இருக்கலாமோ எனத் தோன்றியது. ஒரே மாதிரி படங்கள், பழைய படங்களைத் தவிர்த்தால்  மேன்மேலும் போட்டியை மெருகேற்றியிருக்கும்.
போட்டிக்கான படங்களில் என் பார்வை கோணத்தில் மதிப்பிட்டுத் தேர்வு செய்திருக்கிறேன். சிறந்தவைகளில்  சிறந்ததைத் தேர்வு செய்வது கடினம்தான் என்றாலும்  சில விஷயங்களைக் கருத்தில் கொண்டு தேர்வு செய்து உள்ளேன்.
ரசிகனே சிறந்த கலைஞன்.

ஒரு எதார்த்தமான நிகழ்வை   மாற்றுக்கோணத்தில் மிக துள்ளியமாக படம் பிடித்து காட்டுவது என்பது ஒரு கலைஞனின் திறமை. அவ்வாறு நான் ரசித்த புகைப்படங்களை உங்கள் முன்  வைக்கிறேன்.



.... 
இதிலிருந்து  பரிசுகளுக்கான படங்கள்  தேர்வு செய்து உள்ளேன் .



முதல் பரிசு:
திருமதி ரஞ்சிதப்ரியா



இரண்டாம் பரிசு (இருவருக்கு)

1. திருமதி. கல்யாணி நாகேஷ்வரன்,

2. திருமதி.ஜெஸிந்தா


மூன்றாம் பரிசு:
திருமதி மரு. தமயந்தி முரளி
.....

சில புகைப்படங்கள் வரலாற்றையே மாற்றி உள்ளது . கோபம் , க்ரோதம் , வன்மம் போன்ற குணங்களை மாற்றக்கூடிய சக்தி புகைப்படங்களுக்கு  உள்ளது. ஆகையால் நாம் எடுக்கும் புகைப்படம் மற்றவர்களை மகிழ்விப்பதோடும், மலர்ச்சிப்பதோடும், மனதோடு பேசும்படியும் இருக்க வேண்டும். மனதை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும்.

இங்கு உள்ள அனைவருமே ஆர்வமிக்கவர்கள் தான் , ஆனால் நீங்கள் உங்கள் எழுத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றிர்களோ அவ்வளவு முக்கியத்துவம் புகைப்படம் எடுப்பதிலும் காட்டினால் கவிஞர்களாகிய நீங்கள் கலைஞர்களாகவும் காட்சியளிப்பீர்கள். 

அதேபோல் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளுவது என்பது எந்த பொருளை எங்கிருந்து எடுக்கிறோமோ அதை அங்கேயே வைத்தாலே போதுமானது. கொஞ்சம் ரசனையும் நேரமுமிருந்தால் வீட்டை மிக அழகாக காட்டலாம்.

வீட்டு பராமரிப்பு நேர்த்தியில்...

முதலிடம்:

திருமதி. மரு. சரயு

இரண்டாமிடம்:

திருமதி மரு. புனிதவதி
(விரைவில் சிலிண்டர் டியூபை குழாய் போட்டு மாற்றி அமையுங்கள்)

மூன்றாமிடம்:

திருமதி. உமா திரு
(அடுப்பாங்கரையை  மட்டுமே பதிவிட்டிருந்தாலும் பழமை மாறாமல் அங்கிருக்கும் அம்மியும் ஆடுகல்லும் அருமை!)

தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். நன்றி! 

~ஈரநெஞ்சம் மகேந்திரன்