Sunday, September 14, 2014

மழையால் ஒதுங்கிய கவிதை... மகி




வீட்டைச் சுற்றிலும் தண்ணீர்
இவர்கள் தொண்டைக் குழி மட்டிலும்
பாலைவனம்...

வாண்டுகள் வலை போட்டுத்தேடுகின்றனர்
மீன் தொட்டியையும், தொட்டிக்குள் இருந்த
மீனையும்...

குட்டிகளுக்கு விளையாட வீட்டுக்குள்ளேயே ஆறு
இறங்கி விளையாட கரை எங்கே...

மீனவர்கள் வீட்டை தேடியே
ஆறும் மீனும்...

படித்தது போதும் கொஞ்சநாள்
மழை பாடம் படிக்க,
வேடிக்கை பார்க்க, படிப்பு வாசம் படாத
தாத்தா பாட்டியெல்லாம் குடும்பத்துடன்
பேரன் படிக்கும் பள்ளி மாடியில்...

அண்ணாந்து நட்சத்திரம் ரசிக்கும்
கவிஞன் இன்று
ஹெலிகாப்டர் உணவுக்காக
அண்ணாந்து பார்க்கிறான்...

இந்துமா சமுத்திர கடலைவிட
காஷ்மீர்க்கு மழை கொடுத்த
வெள்ளம் பெரியது,

தென்னகத்தில் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் போல
இங்கே மழை நீரை குடிநீராக மாற்ற முடியுமா...

கழிவு நீர் கலந்த மழை நீர் வீட்டுக்குள்ளேயே
முட்டிக்கு மேல் நிற்க
எங்கு சிறுநீர் கழித்தால் என்ன டா குரல்...

கட்டி இருக்கும் உடை முதல் கொண்டு மழை
துவைத்துக் கொடுத்துவிட்டது
காயப்போட மின்னல் கொடி மட்டும் தான் மிச்சம்...

ஆங்காங்கே வைக்கோல் கன்றை மட்டும் விட்டு வைத்துவிட்டு
பசுவெல்லாம் மழை கொன்றது...

நீரில் சமாதியான கர்ப்பிணி வயிற்றில் மட்டும் தண்ணீர் இல்லை,
அவளை சுற்றிலும் தண்ணீர்...

சுடுகாடு தேடி மிதந்துவரும் பிணங்கள்
மனிதனுக்காக குழி வெட்டும் இடமெல்லாம்
மழை நீர் ஆக்கிரமிப்பு
மழை கொன்ற மனித உடலை புதைக்க
வெட்டியானும் இல்லை வெட்ட இடமும் இல்லை...

மழை போதாது என்று
தண்ணீரில் தெரியும் மேகத்தை பார்த்து
கண்களிலும் கண்ணீரின் மழை...

மூழ்கிக்கிடக்கும் தண்ணீர் லாரிகள்...
நீரில் மிதக்கும் பிளாஸ்டிக் குடங்கள்

மார்வாடி மழையால் மரித்துப் போனது அறியாது மார்வாடிக்
கடைக்கு மிதந்துவரும் பித்தளைக் குடங்கள்...

தபால் பெட்டிக்குள் தண்ணீர்
பட்டுவாடா நடப்பது எப்போது...
யாரோ எழுதிய கடிதம்
யாருக்கோ கொண்டு சேர்க்கும் மழை...

ஏற்கனவே கடனில் மூழ்கிப்போன வீடுகள்
இன்று மீண்டும் வெள்ளத்தில் மூழ்குகிறது...

கூடு கட்டின மரம் இருந்த இடம்
தெரியாமல் பறவைகள்
அல்லல்...

இதுதான் விதி என்பதா
தாமரை பூவிற்கு தண்ணீரிலேயே மரணம்..

பூந்தோட்டம் இருந்த இடம் காணோம்
பட்டாம் பூச்சிகள் கண்ணிலும் மழை...

நெல்வயலுக்குள் புகுந்ததால்
ஜோசியக் கிளி கூட
அவர்களோடு பட்டினிதான்...

மனிதன் பொதுக் கூட்டத்திற்கு தேதிக் குறிப்பிட்ட
அதே தேதியில் மழை வெள்ளம் நடத்தும்
இரங்கல் கூட்டம்...

கொஞ்சம் அதிகம் வேண்டிவிட்டார்கள் போல
கொட்டுகிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது
கோவிலுக்குள் இருக்கும் கடவுளுக்கும்
ஒதுங்க இடம் கிடைக்காமல் தவிக்கிறது...

மழைக் காட்சியை படம் பிடிக்க வைத்திருந்த கேமராக்களையும்
நீர் ஒப்பனை செய்ய , மின்னல் வந்து படம் பிடிக்கிறது...

தேர்தல் சமயத்தில் குடைசின்னம் கொண்ட கட்சிகளுக்கு
எதிர்க் கட்சிக்காரனே செய்யும் ஓசி பிரச்சாரம்...

ஒரு உண்மை உறுதியானது
" தண்ணீர் பந்தலுக்குள்ளும் தண்ணீர்...

மழைநீர் சேகரிப்புத் திட்டம்
உடைத்தெறிந்தது இந்த மழை வெள்ளம்...

என்ன தேவையோ தெரியவில்லை
சாலை மறியல் செய்யும் மழை...

மழை என்னும் ஒரே ஒரு திருடன் ஒரே நேரத்தில்
அனைத்து வீடுகளுக்குள்ளும் புகுந்து
உயிர் முதல் அனைத்தையும் களவாடி விட்டான்
தண்டிக்க ராணுவத்தால் கூட முடியாது...

மழை மிச்சம் வைத்த உயிர்களை
நிவாரண நெரிசல் சவ வேட்டையாடுகிறது...


~ மகி
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

1 comment:

Unknown said...

விவாதக்கலை வலைப்பூவில் தினம் ஒரு விவாதம் - வாதமாக எடுத்துக்கொள்ளப்படும். நண்பர்கள் & அன்பர்கள் தங்களின் வாதத்தை முன்வைக்கலாம்..
http://vivadhakalai.blogspot.com/

Post a Comment