Friday, September 18, 2015

நம் பாரம்பரிய நடனங்களை ஆடி அசத்தும் அனுஷா

நம் பாரம்பரிய நடனங்களை ஆடி அசத்தும் அனுஷா..!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


சாதிப்பதற்கு வசதியோ வயதோ ஒரு தடையாக இருப்பதில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் கோவை தீத்திபாளையத்தில் உள்ள ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஆனந்தன், ஜெயந்தி தம்பதியர்களின் மகளான 15 வயது சிறுமி அனுஷா பவித்ரா ஸ்ரீ. இவர் ஒரு அரசு பள்ளி மாணவியாக படிப்பில் முதல் மற்றும் இரண்டாவது இடங்களில் , அப்பள்ளியின் கதாநாயகியாக உலாவருவதோடு நமது தமிழ் கலாச்சார கலைகளை தன் கைவசப்படுத்தி வைத்திருக்கிறார்.





பரதம், அம்மன் நடனம், கரகாட்டம், பறை போன்றவை நம் பாரம்பரிய கலைகள் தான் என்றாலும், நடுத்தர மக்கள் எல்லாம் இந்த கலைகளை ரசிப்பதோடு மட்டும் தான் இருக்க முடியும் கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. அப்படியே கற்றுக்கொள்ள விரும்பினாலும் இந்த கலைகளை கற்றுத்தரும் ஆசிரியர்களும் மிகவும் குறைவு. இதனாலேயே தற்போது இந்த பாரம்பரிய கலைகள் முற்றிலும் அழிந்துவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். ஆண்டவனின் வரபிரசாதமாக அனுஷா எந்த குருவிடமும் பயிலாமல் இயல்பாகவே நாட்டுப்புற நடனம் போன்ற அனைத்து கலைகளிலும் கை தேர்ந்து விளங்கினார் என்றால் மிகையாகாது.
அனுஷா 6 வயது முதல் தொலைக்காட்சி மற்றும் சினிமாக்களில் வரும் நடனக்காட்சிகளை மட்டுமே கவனித்து அந்த வயது முதலே பள்ளிகளிலும் , விழாக்காலங்களில் தெருக்களிலும் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதோடு மட்டுமல்லாமல் தவறாமல் ஒவ்வொரு முறையும் முதல் பரிசை வென்று வந்துள்ளார். இதனை தொடர்ந்த கவனித்த பலரும் அவருக்கு முறையாக பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யும்படி அனுஷ்யாவின் பெற்றோருக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். அதை தொடர்ந்து அவரது ஆர்வத்தை உணர்ந்த பெற்றோர் அவருக்கு முறையாக அனைத்து கலைகளிலும் பயிற்சி அளித்துள்ளனர்.
சரஸ்வதி நாட்டிய பள்ளியில் முரளி என்ற ஆசிரியரிடம் முறையாக நடனம் கற்றுக்கொண்டுள்ளார். பள்ளி நடன நிகழ்ச்சிகளிலும் இவர் முதல் இடத்தை பிடித்து வருகிறார். தொடர்ந்து 5 வருடங்களாக மாவட்ட அளவிலான கிராமிய கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு முதல் இடத்தை மட்டுமே பிடித்து வருகிறார். இதில் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால் இவரது குடும்பத்தில் இதற்கு முன் யாருமே இது போன்ற நடன கலை பழகியவர் இல்லை.
கரகாட்டத்தின் முக்கிய அம்சமாக திகழ்வது சாகசத்தோடு கூடிய நடனம் தான். அதாவது ஆணி, கத்தி ஆகியவற்றின் மேல் நடனம் புரிவது, கண்ணாடி குவளை மற்றும் ஒற்றை தம்ளரின் மேல் நின்று நடனம் ஆடுதல் இப்படி. இதில் எல்லாவற்றிலும் கைதேர்ந்த அனுஷ்யா தொடர்ந்து 45 நிமிடம் விடாமல் கரகாட்டம் ஆடிக்கொண்டே இறுதியில் தரையில் இருக்கும் குண்டூசியை விழி இமையில் எடுத்து காட்டி பார்ப்பவர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துவிடுவார் .
அனுஷா நடனத்தில் சாதித்தது மட்டுமல்லாமல் அன்னை கலைக்கூடம் மூலம் நடிப்பும் கற்று வருகிறார். மேடை பல கண்டு தனது திறமைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். இவரது திறமை கண்டு பலரும் இவருக்கு ஊக்கமும் உதவியும் வழங்கி வருகின்றனர்.
உதவியாக வந்த நிதியைக் கொண்டு இவரது தாய் ஜெயந்தி அன்னை கலைக்கூடம் மூலம் அனுஷாவை வைத்து “அரசுப்பள்ளி” என்ற குறும்படம் ஒன்றை தயாரித்தார். இந்த குறும்படம் கோவையில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளிலும் உள்ள மாணவர்களுக்கு இலவசமாக காட்டப்பட்டுள்ளது. நல்ல வரவேற்பைப் பெற்ற "அரசுப்பள்ளி" குறும்படம் பார்த்த இயக்குனர் பேரரசு தனது அடுத்த படத்தில் இவருக்கு கண்டிப்பாக வாய்ப்பு அளிப்பதாக கூறியிருக்கிறார்.
 

இவர் கலைஞர் டிவியின் “ஓடி விளையாடு பாப்பா” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றிருக்கிறார். மேலும் கேரளாவின் “மலர்விழி மனோரமா” டிவி யின் 1+1=3 மற்றும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றிருக்கிறார். இதுவரை இவர் எதிலும் இரண்டாவது பரிசைகூட வென்றதில்லை, எல்லாவற்றிலுமே முதல் பரிசு மட்டுமே தான்.
பொருளாதாரத்தில் சொல்லும்படியான வசதி இல்லாத போதும் இவரது ஆர்வத்தை கண்டு இவரது பெற்றோர் தங்களால் முடிந்தவரை இவருக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர்.
இவர் தாய் ஜெயந்தி, “என் மகளுக்கு இயற்கையாகவே இப்படி ஒரு திறமை அமைந்திருப்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த சாதனைகளோடு அவள் படிப்பிலும் கெட்டிக்காரியாக இருந்து வருகிறாள்” என்று பெருமிதத்துடன் கூறினார்.
" கலையையும் வளர்க்கணும் கலைஞர்களையும் ஊக்கப்படுத்தணும் " மேல் நாட்டு மோகத்தில் நம் கலாச்சாரத்திற்கு சற்றும் ஒத்துவராத நடனங்களை மக்கள் மத்தியில் முகம் சுளிக்கும்படி ஆடுபவர்கள் தான் இக்காலத்தில் அதிகம். அனுஷா, அவரது பெற்றோர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் நம்நாட்டின் கலாசாரத்தை பறைசாற்றும் இது போன்ற கலைகளை அரசாங்கம் மட்டுமல்லாமல் மக்களும் ஊக்கப்படுத்தவேண்டும் என்பதே. இதற்காக நாம் பெரியதாக எதுவும் செய்யவேண்டியது இல்லைங்க நம்முடைய வீட்டில் நடக்கும் சுபகாரியங்களுக்கும் , கல்லூரி மற்றும் பள்ளி கலை விழாக்களிலும் இது போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்தாலே போதும். அவ்விழாக்களில் அனுஷா போன்ற இளம் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கலாமே..!
அனுஷா அலைபேசி எண் - 09629363067

~மகேந்திரன் 



Monday, September 07, 2015

மின்சாரம், எரிவாயு , குடிநீர் என தனக்குதானே திட்டமிட்டு 'தன்னிறைவு பெற்ற மனிதர்' ஸ்ரீதர்

ஒரே முறை முதலீடு ..! ஆண்டு முழுதும் பெருகும் லாபம் ..!

மின்சாரம், எரிவாயு , குடிநீர் என தனக்குதானே திட்டமிட்டு
'தன்னிறைவு பெற்ற மனிதர்' ஸ்ரீதர் .
``````````````````````````````````````````````````````````````````````````````````````

 

தற்போது இருக்கும் சூழ்நிலையில் ஒரு சராசரியான குடும்பத்தில் தண்ணீர், மின்சாரம், எரிபொருள் போன்றவற்றின் சிக்கனம் மற்றும் சேமிப்பு என்பது தவிர்க்க முடியாத நிலையில் இருந்து வருகிறது. எரிபொருள் மின்சாரம் போன்றவற்றை சிக்கனமாக பயன்படுத்துமாறு எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அது முழுமையாக மக்களிடையே சென்றடைவது இல்லை. அது மட்டும் இல்லாமல் அத்தியாவசிய தேவையாக இருப்பதால் இவற்றின் பயன்பாட்டைக் குறைப்பதற்கான வாய்ப்புகளே இல்லாமலும் இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் அவ்வப்போது அவற்றின் விலை ஏற்றத்தின் காரணமாகவும் நாம் தவித்து வருகிறோம் .

இத்தகைய சூழ்நிலையில் அனைவருக்கு வரம் போல ஒரு திட்டத்தை செயல்படுத்தி அதில் வெற்றியும் கண்டு வருகிறார் கோவையை சேர்ந்த திரு.ஸ்ரீதர்.

வீட்டு உணவு பொருட்களின் கழிவுகளை மட்டுமே கொண்டு எரிபொருட்களை தயாரித்து பயன்படுத்தி வருகிறார். சூரிய சத்தியை பயன்படுத்தி வீட்டிற்கு தேவையான மின்சாரத்தை பெற்றுக் கொள்கிறார். மழை நீரை முறையாக சேமித்து பல மாதங்களுக்கு குடிநீராகவும் பயன் படுத்திக் கொள்கிறார் . மாதம் முழுவதுமாக இதற்காக ஆகும் செலவு வெறும் 200 ரூபாய் மட்டுமே என்கிறார் இந்த இந்திய குடிமகன்.

பொருளாதார சிக்கனம் மற்றும் நாட்டின் மேம்பாட்டில் அக்கறையோடு எரிபொருள் , மின்சாரம் போன்றவற்றை இவர் வீட்டில் இருந்தபடியே வீட்டிலேயே உற்பத்தி செய்து அதன் மூலம் பெரும் பயன் பெற்று வரும் ஸ்ரீதர் . அது மட்டும் அல்லாமல் அவற்றை பற்றிய விழிப்புணர்வை கல்லூரி மாணவர்கள் உட்பட அனைவருக்கும்  கொடுத்துவருகிறார். இதை அறிந்து நேரடியாக நாமும் அவர் வீட்டிற்கு சென்று அவரிடம் விளக்கம் கேட்டபோது அவர் எம்மிடம் கூறியது அப்படியே உங்கள் பார்வைக்கு ...



1. வணக்கம் சார் சூரிய சக்தியால் மின்சாரம் உற்பத்தி செய்து பயன் படுத்த வேண்டும் என்று எப்படி உங்களுக்கு தோன்றியது , அதை பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க சார் ?

கடந்த ஆறேழு வருடத்திற்கு முன்பு தமிழ் நாட்டில் மின்சார பற்றாக்குறை ஏற்பட்டு அனைவரும் அவதிப்பட்டு வந்தது யாராலும் மறக்க முடியாது.  UPS பொருத்திப் பார்த்தோம் ஆனாலும் அதில் சேமிப்பதற்கும் கூட போதிய மின்சாரம் கிடைக்காமல் தட்டுப்பாடாக இருந்தது. அது மட்டும் இல்லாமல் அவ்வப்பொழுது மின்சார கட்டணம் உயர்ந்து வருவதும் பெரும் மன உளைச்சலாக இருந்து வந்தது. இந்த நிலையில் தான் நண்பர்களின் ஆலோசனை படி சோலார் சிஸ்டம் மூலம் வீட்டிலேயே மின்சாரம் தயாரித்துக் கொள்ளலாம் என்பது பற்றி தெரியவந்தது . முதலீடு அதிகமாக இருந்தாலும் இப்பொழுது அதன் பயன் உணர முடிகிறது. இப்பொழுது அதன் முதலீடு மிகவும் குறைந்து விட்டது . எந்த நேரமும் மின்சாரம் வீட்டில் உபயோகிக்க முடிகிறது , அது மட்டும் இல்லாமல் இப்பொழுது வீட்டின் தேவைக்கு போக மீதமுள்ள மின்சாரத்தை மின்வாரியத்திற்கு கொடுத்து அதன் மூலம் ஒரு தொகையும் பெற்றுக் கொள்கிறோம்.



2. சூப்பர் சார் , மழை நீரை எப்படி சேகரிக்கிறீங்க ? பின் அதை எப்படி பயன் பயன்படுத்தறீங்க அதை பற்றி சொல்லுங்களேன் ?

'நீரின்றி அமையாது உலகு' என்ற கூற்று முற்றிலும் உண்மையானது. மழையின் அளவு மிகவும் குறைந்து கொண்டு வருவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தானேங்க , குடி நீர் தட்டுப்பாடு என்பது நான் சொல்லியா தெரிய வேண்டும் . எங்க வீட்டு தரை மட்டத்தில் 15000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டியும், வீட்டின் மாடியில் அதே அளவு கொள்ளளவு கொண்ட மேல் நிலை தொட்டியும் வைத்து இருக்கின்றோம்,

மழை வரும் பொழுது ஒரு துளியும் வெளியேறி விடாமல், அப்படியே ஒரு இடத்திற்கு குழாய் மூலம் கொண்டுவந்து கூழாங்கற்கள், செங்கற்கள், கருங்கற்கள் (ஜல்லிக்கற்கள்), மரக் கரித்துண்டுகள், பாக்குஜல்லி, ஆற்று மணல், கல் உப்பு போன்றவற்றை கொண்டிருக்கும்  ஒரு தொட்டியில் அந்த நீரை செலுத்தி மெல்லிய துணி கொண்டு வடிகட்டி  கீழ் தொட்டியிலும் , மேல் தொட்டியிலும்  சேமித்து வைத்துகொள்கிறேன். பின்பு அதை குளிப்பதற்கும் , துணி துவைப்பதர்க்கும்  பயன்படுத்திக் கொள்கிறேன் . அது மட்டும் அல்ல   அதையே குடிப்பதற்கும் கூட பயன் படுத்திக் கொள்கிறேன்.

என்ன சார் யோசிக்கிறிங்க குழப்பமா இருக்கா . கண்தெரியாத தொலைவில் காட்டுக்குள் இருக்கும் நீர் அணையில் எவ்வளவோ மிருகங்கள் இறந்து விழுந்து அழுகிப்போய் கிடக்கிறது , துருப்பிடித்த குழாயில் தான் அந்த நீரும் வருகிறது. அதை கழுவவே முடியாத ராட்சச தொட்டியில் நிரப்பி அதைதான் நம் வீட்டிற்கு குடி நீர் பயன்பாட்டுக்காக வருகிறது . இப்போ சொல்லுங்க நாம் மழை நீரை சேமிப்பது எந்தவிதத்தில் குறை சொல்ல முடியும். நாங்கள் இப்பொழுது குடிக்கும் நீர் கூட கடந்த மூன்று மாதத்திற்கு முன் வந்த மழை நீர்தான். ஒரு விஷயம் சொல்லறேங்க நம் வீட்டிற்கு வரும் குடிநீர் நாம் பயன்படுத்தாமல் இருந்தாலும் ஒரு நாளைக்கு 3.50 ரூபாய் கட்டிக் கொண்டுதான் இருக்கின்றோம் , அதுபோக நாம் குடிப்பதற்கு உண்டான கட்டணம் தனி , இது எத்தனை பேருக்கு தெரியும் . ஆனால் நான் என் எல்லா தேவைக்கும் மழை  நீரை பயன் படுத்திக் கொண்டு  , அந்த மினிமம் கட்டணம் மட்டும் தான் கட்டிக் கொண்டு இருக்கின்றேன்.

நீங்க ஒன்னு கூட நினைக்கலாம் இந்த நீரை குடிப்பதற்காக பயன் படுத்துவதால் உடல்நல கேடு இருக்குமோ என்று. எங்கள் வீட்டில் நாங்கள் மூன்று பேர் சளி தொந்தரவு என்பது கூட இது நாள் வரை வந்தது இல்லை.



3. அருமை சார் நீங்க பயன்படுத்தும் எரிவாயு பற்றி சொல்லுங்க ?

வீட்டில் வீணாகும் உணவு கழிவுப் பொருட்களை பயன்படுத்தி மிகக் குறைந்த செலவில் எரிவாயு தயாரித்து பயன்படுத்த முடியும்ங்க நூடுல்ஸ், உருளை கிழங்கு , வெங்காயத் தோள் பழைய சாதம் மற்றும் கெட்டுப்போன பேக்கரி உணவு பொருட்கள் இது போதும் நம் வீட்டிற்கு தேவையான எரிவாயு எளிதில் தயாரித்துக் கொள்ளலாம் , இந்த மூலபொருட்கள் எல்லாம் விலையில்லா பொருட்கள்தானே எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும் என் வீட்டில் இப்போதைக்கு எட்டு வருடத்திற்கு தேவையான எரிவாயுவிற்கு தேவையான  மூலப்பொருட்கள் சேமித்து வைத்து இருக்கிறேன். இதனால் சுற்றுப்புற சூழல் எந்தவிதத்திலும் பாதிப்பதும் இல்லை ; எரிவாயு தட்டுப்பாடு என்பதே இல்லை. அதுபோக கல்லூரி மாணவர்கள் வேதியியல் துறைக்கு தேவையான எரிவாயும் இலவசமாக என்னிடம் இருந்து பெற்றுக் கொள்கிறார்கள்.

4. வாழ்த்துக்கள் சார் , உங்களது இந்த அரிய முயற்சியின் மூலமும் இதன் வெற்றியின் மூலமும் நீங்கள் பொதுமக்களுக்கும் அரசாங்கத்திற்கும் என்ன விழிப்புணர்வு அளிக்க விரும்புகிறீர்கள்?

இப்போது நான் செய்து வருவதை முழுமையாக அரசாங்கமும் செய்து வருமானால் தொடர்ந்து நீர்வளம், எரிபொருள் மற்றும் மின்சாரம் போன்றவற்றில் நம் நாடு தன்னிறைவு அடைவதோடு பிற நாடுகளுக்கும் கொடுக்க முடியும் . . எரிபொருட்கள் மற்றும் மின்சாரத்தை சிக்கனம் செய்ய எவ்வளவுதான் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் மிக அதிகமான தேவைகளின் காரணமாக சிக்கனம் என்பது சாத்தியமில்லாத ஒரு சூழ்நிலையில் குறைந்த செலவில் இவற்றை உற்பத்தி செய்வது தான் புத்திசாலித்தனமும் கூட , எரிபொருட்களுக்கு அரசாங்கம் மானியம் வழங்கி வருகிறது. இது போன்ற இயற்கை முறைகளை கையாளும்போது மானியத் தொகை செலவிலேயே நமது மொத்த தேவைகளையும் அதற்கு மேலும் அடைந்து விட முடியும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார் தன்னிறைவு மனிதர் திரு.ஸ்ரீதர்.

~மகேந்திரன்