Saturday, August 02, 2025
*வாரிசுச் சான்று* காலங்களைக் கடந்து வந்த உறவுப் பாலம்
Friday, May 23, 2025
சொல்லின் நாகரிகம் — “பிராமணர்” Vs “பார்ப்பனர்”
Thursday, April 17, 2025
ஒரு உருக்கமான கோரிக்கை... மயான தொழிலாளர்கள்
Tuesday, August 20, 2024
நீர்த்துப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் உடல் உறுப்பு தானங்கள்
Saturday, March 09, 2024
காலத்தின் கட்டாயம்
Tuesday, February 20, 2024
நமக்கும் முதுமை உண்டு
*நமக்கும் முதுமை உண்டு*
ஐக்கிய நாடுகள் சபையின் ‘மக்கள் தொகை நிதியம்’ என்ற அமைப்பு, ‘இந்தியா ஏஜிங் ரிப்போர்ட்’ என்ற பெயரில் கணக்கெடுப்பு நடத்தியது. அதில், இந்தியாவில் தற்போது 60 வயதுக்கும் மேற்பட்ட முதியோர்களின் எண்ணிக்கை, 14.9 கோடியாக உள்ளது. இது, மொத்த இந்திய மக்கள் தொகையில், 10.5 சதவீதமாக உள்ளது என, தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவைப் போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள வளரும் நாடுகளில், முதியோர் நலன் என்பது மக்களால் மட்டுமல்ல; அரசாங்கங்களாலும் கூட இரண்டாம் பட்சமாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது. குறிப்பிட்ட வயதுக்கு மேல், அவர்களுக்கு மருத்துவக் காப்பீடு, வங்கிக் கடனுதவி உள்ளிட்ட குடிமகன்களுக்கான அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுகின்றன.
முதியோர் நலன் சார்ந்த சட்டங்களோ, திட்டங்களோ அவர்களுக்கு உதவும் வகையில் இல்லை. அவர்களுக்கான சலுகைகளும் கூட பெயரளவிலேயே உள்ளன. சில திட்டங்கள் இருந்தாலும், அவை போதுமானவையாக இல்லை.
தமிழகத்தில் மட்டும் ஏறக்குறைய, 1,500 முதியோர் காப்பகங்கள் இருக்கலாம். இதில் பெரும்பாலானவை பணம் செலுத்தி, பராமரிக்கப் படுபவை ஆக இருக்கின்றன. முதியோர் காப்பகங்களில், லட்சக்கணக்கானோர் தங்களது கடைசிக் காலத்தை வலியுடன் கழிக்கின்றனர்.
காப்பகங்களில் வசிக்கும் முதியவர்கள் அனைவருமே பிள்ளைகளால் வீட்டை விட்டு துரத்தப்பட்டவர்கள் என்று சொல்லி விட முடியாது. வீட்டில் தனக்கான மரியாதை கிடைக்கவில்லை என்பதற்காக கோபித்துக் கொண்டு வெளியேறியவர்கள்; பிள்ளைகளுக்குப் பாரமாக இருக்க வேண்டாம் என்று தாமாகவே வெளியேறியவர்கள்; சில நேரங்களில் சில தவறுகளை செய்து விட்டு, மற்றவர்களை எதிர்கொள்ள தைரியம் இல்லாமல், வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள்; ‘என்னடா வாழ்க்கை’ என வெறுத்து, ஒரு நொடியில் எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு வந்தவர்கள் என, பல வகையினர் உள்ளனர்.
அவர்களில் பலரும், ஒரு காலத்தில் நல்ல நிலைமையில் இருந்தவர்கள்; நன்கு படித்தவர்கள்; நல்ல உத்தியோகத்தில் செல்வாக்கோடு வாழ்ந்தவர்கள்.
நரை, திரை, பிணி, மூப்பு, சாக்காடு யாவருக்கும் பொதுவானது என்பதை உணராமல், முதுமையும் தள்ளாமையும் வந்து விட்டது என்பதற்காக, அவர்களை மரியாதைக் குறைவாக நடத்துகிறது இச்சமூகம்.
ஒரு மணி நேரம் சாலையில் நின்று கவனித்தால், ஆதரவற்ற முதியோர் பலரும் நம் கண்ணில் தென்படுவர். வறுமை காரணமாக, தங்கள் வயதையும் மீறி உழைக்கும் முதியவர்கள் சிலரையும் கவனித்திருப்போம்.
சாலையோரம் சிறு கடைகள் நடத்தும் முதியவர்கள் தென்பட்டால், அவர்களிடம் ரெண்டு வார்த்தை பேசிப்பாருங்கள். அதற்காகவே காத்திருந்தது போல தங்கள் மொத்த வாழ்க்கையையும் கொட்டித் தீர்ப்பார்கள்.
ஒவ்வொருவருக்குப் பின்னாலும், ஓராயிரம் சோகக் கதைகள் இருக்கும்.
இளம் வயதில் எல்லாமே அவர்களது கட்டுப்பாட்டில் இருந்திருக்கும். வீட்டையே அவர்கள் தான் கட்டி ஆண்டிருப்பார்கள். அவர்கள் சொல்வதே முடிவு; அவர்கள் வைத்ததே சட்டம் என்று இருந்திருக்கும். அந்த வீட்டுக்காகவும் குடும்பத்துக்காகவும் நிறைய உழைத்திருப்பார்கள். தன்னுடைய சுக துக்கங்களை தியாகம் செய்திருப்பார்கள்.
நாட்கள் செல்லச் செல்ல, வயது முதிர்வு காரணமாக சம்பாதிக்க முடியாமல் போகும்போது, அவர்களால் எந்த வேலையும் செய்ய முடியாமல் போகிறபோது, சாதாரண வேலைகளுக்கு கூட, அடுத்தவர்களை எதிர்பார்க்கும் நிலை வரும்போது, வீட்டில் அவர்களுக்கான முக்கியத்துவம் ரொம்பவே குறைந்து விடுகிறது. அவர்களை பாரமாக, தேவையற்ற சுமையாக பலரும் கருத ஆரம்பித்து விடுகிறார்கள்.
அவர்கள் இயலாதவர்களாகி விட்டார்கள் என்ற ஒரே காரணத்துக்காக, நமக்கு செய்த அனைத்து நன்மைகளையும், நமக்காகப் பட்ட கஷ்டங்களையும் ஒரு நொடியில் துாக்கி எறிந்து விட்டு, முதியோர் இல்லத்தில் சிலர் விட்டு விடுகின்றனர்.
வசதி இல்லாதவர்கள் இலவச காப்பகங்களில் விடுகிறார்கள். சிலர் அவர்களைக் கைவிட்டுத் துரத்தி விடுகிறார்கள். அவர்கள் தெருவில் ஆதரவற்ற நிலையில் அலையும்போது மீட்கப்பட்டு, தொண்டு நிறுவனங்கள் நடத்தும் காப்பகங்களில் சேர்க்கப்படுகிறார்கள்.
வசதி படைத்தோர் தங்களது பெற்றோரை ‘பெய்டு ஹோம்’ என்ற அடிப்படையில், பணம் செலுத்தி தங்க வைக்கக்கூடிய காப்பகங்களில் சேர்த்து விடுகிறார்கள். அதன் மூலம் தங்களுடைய கடமையைச் சிறப்பாக செய்து விட்டதாகவும், அவர்கள் ஏதோ பெரிய மனது பண்ணி செலவு செய்து பார்த்துக் கொள்வதாகவும், பெருமிதம் கொள்கிறார்கள். இதுவுமேப் பெற்றோரைக் கைவிடுதல் தான்.
வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகள் மருத்துவமனைகளில் உயிருக்கு போராடும் பெற்றோரைப் பார்க்கக் கூட வருவதில்லை. அவர்கள் இறந்து விட்டால், உடலை அடக்கம் செய்யாமல், தாங்கள் வரும்வரை பாதுகாக்கச் சொல்கின்றனர்.
இன்னும் சிலரோ என்னால் வர முடியாது; பணம் அனுப்பி விடுகிறேன். நீங்களே அடக்கம் செய்து விடுங்கள் என்று கூறுகின்றனர். தங்கள் பெற்றோருக்கு தாங்கள் செய்ய வேண்டிய இறுதிச் சடங்கு மற்றும் இறுதி மரியாதையைக் கூட செய்ய வராமல் பணத்தைத் தேடி ஓடிக்கொண்டு இருக்கின்றனர்.
காப்பகங்களில் வசிக்கும் முதியோர்களை விட, வீடுகளில்
தனியாக வசிக்கும் முதியோர்களின் நிலை இன்னும் பரிதாபம். தனிமைக் கொடுமையால் தற்கொலை செய்து கொள்வோரும் உண்டு.
சிலர் வீட்டிலேயே இறந்து, யாருக்கும் தெரியாமல், உடலில் இருந்து துர்நாற்றம் வீசிய பிறகே, அக்கம் பக்கத்தினர் மூலம் பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் தெரியவரும் பரிதாபமான சூழல் காணப்படுகிறது.
காப்பகங்களில் இருக்கும் முதியோர்களைப் பார்த்தால், அவர்கள் நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருப்பதாகத் தோன்றும். இன்னும் சொல்லப்போனால் வீட்டில் சில நேரங்களில் சுடு சொற்கள், அவமானங்கள், புறக்கணிப்பைத் தாங்கிக் கொள்வதை விட, இதுவே மேல் என்று அவர்களே கூட நினைக்கக்கூடும்.
இங்கே அவர்களுக்கு பாதுகாப்பான உறைவிடம், உடைகள், நேரத்துக்கு உணவு, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைக்கிறது. தங்கள் வயதை ஒத்த நண்பர்களும் இருக்கிறார்கள். நடப்பது, சாமி கும்பிடுவது, செய்தித்தாள் மற்றும் புத்தகங்கள் படிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது என மகிழ்ச்சியாகவே இருப்பார்கள்.
வெளிப்பார்வைக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், உள்மனதுக்குள் அவர்களுக்கு தங்கள் குடும்பத்தை பிரிந்த கஷ்டம், பிள்ளைகள் பேரப்பிள்ளைகள், தங்கள் உறவினர்களைப் பார்க்க இயலாத ஏக்கம் அதிகமாகவே இருக்கிறது.
முதியோர் இல்லங்களில் எத்தனை வசதிகளை செய்து கொடுத்தாலும், ரத்த உறவுகளுக்கு ஈடாகாது. காப்பக வசதிகளால் மகிழ்ச்சி அடைந்தாலும், அவர்களைக் கைவிட்டவர்களுக்கு சாபமே மிஞ்சும். வயது முதிர்வு மற்றும் தள்ளாமை காரணமாக, அவர்கள் நமக்குத் தேவையில்லை என நினைக்கிறோம். இப்போது தான், அவர்களுக்கு, நாம் தேவை என்பதை நம் வசதிக்காக மறந்து விடுகிறோம்.
முதியோர்கள் நம்மிடம் பணத்தை எதிர்பார்ப்பதில்லை. குறிப்பிட்ட வயதுக்கு மேல் பணம், அவர்களுக்குப் பயன்படாமல் போய் விடும். நம்மிடம் எதிர்பார்ப்பது ஆறுதலான சில வார்த்தைகள். அதைக்கூட கொடுக்க நம்மில் பலருக்கு நேரமோ மனமோ இருப்பதில்லை.
பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் மீது நடத்தும் வன்கொடுமைகள் பற்றி எந்தப் பெற்றோரும் பெரும்பாலும் யாரிடமும் புகார் அளிப்பதில்லை. முதியோர் பாதுகாப்பு சட்டங்கள் இருப்பது தொடர்பான விழிப்புணர்வு இருந்தாலும் கூட தங்கள் பிள்ளைகள் என்ற பாசத்தாலும், அவர்கள் எந்த பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தினாலும் சகித்துக் கொண்டு வாழ்கின்றனர்.
அவ்வாறு உள்ள முதியோர்களைக் கண்டறிந்து அவர்களின் நலன் காக்க அரசாங்கம் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இளம் தலைமுறையினர் தங்கள் பெற்றோரை நல்ல முறையில் கவனித்துக்கொள்ள இது போன்ற நடவடிக்கைகள் ஒரு எச்சரிக்கையாக அமையும்.
வயதாகும்போது உடல் நல பாதிப்போடு மனநல பாதிப்பும் ஏற்படுகிறது. அதை புரிந்துகொண்டு, அவர்களை நடத்த வேண்டும். உணவு, உடை, உறைவிடம் மட்டும் வழங்கினால் போதாது. போதிய மருத்துவ வசதிகள் கிடைப்பதற்கு குடும்பத்தினரும், அரசாங்கமும் முயற்சியெடுக்க வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் நமது அரசாங்கம் கருவுற்றிருக்கும் பெண்கள், சிறு குழந்தைகள், வளர் இளம் பெண்கள் நலன் மற்றும் ஆரோக்கியத்தை கண்காணித்து பேணுவதுபோல், மூத்தக் குடிமக்களையும் கண்காணித்து அவர்களின் நலம் பேண முயற்சி மேற்கொண்டால், பலரும் பலனடைவர்.
முதியோர் நலனுக்கென்று தனியாக ஊழியர்கள் நியமித்து, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் முதியோரை வீட்டிலேயே சந்தித்து, அவர்களது அடிப்படை தேவைகளை நிறைவேற்ற, அரசே ஏற்பாடு செய்ய வேண்டும். வீடு தேடி மருத்துவம் திட்டத்தின் சேவையை முதியோரை சென்றடைகிறதா என்பதை பொது சுகாதாரத்துறை உறுதிப்படுத்த வேண்டும்.
தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இக்காலகட்டத்தில், மருத்துவமனை செல்ல இயலாத முதியோருக்கு, ‘வீடியோ கால்’ போன்ற வசதிகள் மூலமாக கூட மருத்துவர்களின் ஆலோசனை கிடைக்க வழிவகை செய்யலாம்.
பிள்ளைகள் குறைந்தபட்சம் ஒரு நாளில் குறிப்பிட்ட மணி நேரமாவது பெற்றோர்களுடன் நேரம் செலவிட வேண்டும். வெளியூர்களில் வசித்தால் கூட அலைபேசியில் தினம் ஒரு முறையாவது பேசி அவர்களை மகிழ்விக்கலாம்.
நம்மைத் துாக்கிச் சுமந்தவர்களை, சுமையாக நினைத்துத் துாக்கிப் போட்டு விடாமல், கொஞ்சமாவது மன நிறைவுடன் அவர்கள் தங்கள் கடைசிக் காலத்தைக் கழிப்பதற்கு, நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை சிந்தித்து செயல்படுவோம்!
இணையத்தில் வந்த ஒரு கதையில்
ஒரு முதியவர் மட்டும் தன்னந்தனியாக வசிக்கிறார். அக்கம் பக்கத்தினர் கூட அவரது வீட்டிற்கு வருவதில்லை. அவருக்கோ, வெளியே சென்று வரும் அளவுக்கு உடல்நலம் இல்லை. அவரது வீட்டுக்கு தினமும் வந்து செல்லும் ஒரே ஒருவர் பேப்பர் போடும் பையன் மட்டும்தான்.
வழக்கமாக, பேப்பர் போடுவதற்காக கதவோரம் வைத்திருக்கும் பெட்டி இல்லாததால், வீட்டுக்குள் எட்டிப் பார்க்கிறான் அந்தப் பையன். அவனை அழைத்து,
‘இனி, பேப்பரை என் கையிலேயே கொடு. கூடுதலாக பணம் வேண்டுமானாலும் தந்து விடுகிறேன்’ என்கிறார்.
‘பேப்பர் வாங்க வராமல், தனக்கு ஏதாவது நடந்து விட்டால் அக்கம் பக்கத்தில் சொல்லி விடு; என் பிள்ளையை தொடர்பு கொண்டு தெரிவித்து விடு’ எனக்கூறி, தனது வாரிசுகளின் கைப்பேசி எண்ணை, அந்த பையனிடம் தருவதாக அந்த கதை இருக்கும்.
அந்த அளவுக்கு, இரண்டு வார்த்தை பேசக்கூட ஆள் இல்லாமல், பல முதியவர்கள் இன்றைய இயந்திரத்தனமான உலகத்தில் வாழ்கிறார்கள். அவர்களது வலியை உணர, நமக்கும் முதுமை வரவேண்டும்.
ஒரு உண்மை சம்பவத்தை இங்கே பதிவு செய்கிறேன். நகரின் மையத்தில் நட்சத்திர வசதிகளோடு கூடிய ஒரு அப்பார்ட்மெண்ட். லட்சக்கணக்கில் பென்ஷன் வாங்கிக் கொண்டிருந்தாலும், தனியாக வசிக்கும் சூழலில் நிறைய முதியவர்கள் வசிக்கின்றனர்.
தேவையான உதவிகளை செய்து தரும், தனியார் நிறுவன ஊழியர், அவர்களை ஒருங்கிணைத்து ஒரு ‘வாட்ஸ் அப்’ குழு அமைத்திருந்தார். தினமும் ‘குட் மார்னிங்’, ‘குட் நைட்’ என குறுஞ்செய்தி போடும் வழக்கத்தை ஏற்படுத்தி வைத்திருந்தார்.
தினமும் மெசேஜ் போடக்கூடிய ஒரு முதியவர், ஒரு நாள் முழுவதும் எந்த பதிவும் போடவில்லை. சந்தேகப்பட்டு சென்றுபார்த்தபோது, திடீரென கை, கால்கள் இழுத்துக் கொண்டதால், துாக்கி விடக்கூட ஆளின்றி, தரையில் விழுந்து கிடந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ‘வாட்ஸ் அப்’ குழு இல்லாமல் இருந்திருந்தால், என்ன நடந்திருக்கும் என நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
இறுதியாகப் பிள்ளைகளுக்கு ஒரு வேண்டுகோள். கடைசி காலத்தில் உங்கள் பெற்றோரை நேசியுங்கள்; தனியாக தவிக்க விடாதீர்கள். அவர்கள் கால பொக்கிஷம். உரையாடுங்கள்; கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். பெற்றோருடன் உங்களது வாரிசுகளை விளையாட வையுங்கள். அவர்களிடம் கதை கேட்கச் சொல்லுங்கள்; அவர்களுக்கும் வரலாறு தெரியட்டும். நாளை நமக்கும் முதுமை உண்டு என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள்.
~ ஈரநெஞ்சம் மகேந்திரன்
Thursday, February 15, 2024
வாட்ஸ் அப் குழுவின்மூலம் மலர்ந்த மனிதம்
Sunday, October 01, 2023
நாங்க வளர்க்கிற நாய் போல தாங்க இந்த தெரு நாய்களும்
Saturday, June 24, 2023
இறுதி மரியாதை
Sunday, March 12, 2023
அட்சய பாத்திரம் இல்லா அன்னபூரணிகள்
Monday, January 23, 2023
குழந்தைகள் நட்ட மரக்கன்றுகள்
Wednesday, November 23, 2022
உயரம் 3 அடி மற்றவர்களுக்காக தேடுவது 6 அடி
கோயம்புத்தூர்ல கண்ணப்பநகர் அப்படின்னு சொன்னாலே எல்லாருக்கும் தெரிந்த ஒரே இடம் சுடுகாடு தாங்க , சென்னைக்கு எப்படி கண்ணம்மாப்பேட்டையோ அதே போல கோவைக்கு இந்த கண்ணப்பநகருங்க .

முன்ன பின்ன செத்தாதான் சுடுகாடு பத்தி தெரியும்னு சொல்லுவாங்க, அதனால நாம அங்க போய் பாக்கறதுக்கு வாய்ப்பு அதிகம் கிடைச்சு இருக்காது. அப்படியே போய் இருந்தாலும் நான் இன்னைக்கு சந்திச்ச இந்த நபரை சந்திக்க வாய்ப்பு இருந்திருக்காது . அப்படியே சந்திச்சு இருந்தாலும் நம் சூழ்நிலை காரணமாக மனதில் அவ்வளவாக பதிந்து இருக்காது. ஆனா யதேச்சையா இன்னைக்கு அவரை அந்த மாயானத்தில சந்திக்க வாய்ப்பு கிடைச்சது .
அவரை பார்த்து அண்ணா வணக்கமுங்க உங்களை ரொம்ப நாளா பார்த்துட்டு இருக்கேன் , உங்களோட பேசனும்னு நினைப்பேன் , ஆனா நேரம் கிடைக்கலை இன்னைக்கு தான் நேரம் ஒதுக்கி உங்ககிட்ட பேசனும்னு வந்தேன் நல்லா இருக்கீங்களா , உங்களை பத்தி சொல்லுங்க உங்களோட இந்த வேலையை பத்தி சொல்லுங்க அப்படின்னு அவர்ட்ட கேட்டேன் , அதற்கு அவர் கொஞ்சம் வெட்கத்துடன் ,...
"என்ன அண்ணா நீங்க ... நான் எல்லாம் ரொம்ப சாதாரண ஆள் தான் அண்ணா. என் பேர் வீரபத்திரன் பேர்ல தான் அண்ணா வீரம்.. ஆனா நிஜத்துல இங்க ஒன்னும் இல்லை .
என்னோட தாத்தா மிலிட்டரில வேலை பார்த்து ரிட்டயர்டு ஆனதும் இங்க வேலைக்கு வந்ததா சொல்றாங்க , அவருக்கு பிறகு எங்க அப்பா இந்த வேலை செய்துட்டு வந்தாரு . நாங்க கூடப்பிறந்தவங்க 6 பேரு நான் நாலாவது குழந்தையா பிறந்தேன் இப்போ வரைக்கும் குழந்தை உயரத்தில் தான் இருக்கேன் . ஒரு அண்ணன் மன உளைச்சல்ல தற்கொலை செய்துகிட்டாரு. மீதி ரெண்டு அண்ணன் ங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு தனியா போயிட்டாங்க. அக்காக்கு கல்யாணம் ஆயிடுச்சி , என்னுடைய தங்கச்சி தான் எங்க வம்சத்திலேயே அதிக படிப்பு படிச்சு இருக்கா ... (பன்னிரண்டாவது வரை ) மற்ற யாருமே படிக்கலை ...
கலெக்டருக்கு கூட படிச்சு பரிட்சை எழுதிடலாமுங்க ஆனா நான் மூணாவது வரைக்கும் படிக்கிறதுக்குள்ள எனக்கு நிறைய பேரு , நிறைய பரிட்சை வெச்சுட்டாங்க , அந்த வயசுல எனக்கு என்ன அண்ணா தெரியும் , பள்ளிக்கூடம் போகும் போதெல்லாம் கூட படிக்கும் பசங்க கூளையன் வந்துட்டான்னும் குட்டையன் வந்துட்டான்னு சொல்றதும், வெட்டியான் பையன் பக்கத்துல உட்காராதீங்கடானு ஒதுக்கி வைக்கிறதும் என்னால தாங்க முடியலைங்க... அப்போவே நிறைய நாள் பள்ளிக்கூடம் போகாம கட் அடிச்சுட்டு ஊர் சுத்தி இருக்கேன், அம்மாவும் அப்பாவும் எவ்வளவோ சமாதானப் படுத்தி படிக்க அனுப்புவாங்க , அங்க டீச்சருங்களே வெட்டியான் புள்ளைன்னு கூப்பிட்டு மனச காயப்படுத்த ஆரம்பிச்சதும் ஸ்கூல் புத்தகத்துக்கு எல்லாம் கொள்ளி வெச்சுட்டு இனி அந்த பக்கமே போக மாட்டேன்னு முடிவா சொல்லிட்டு ஊர் சுத்த ஆரம்பிச்சேன்.

கொஞ்சம் பெரியவனானதும் , இல்லை இல்லை கொஞ்சம் வயசு அதிகமானதும் எங்க அப்பா சுடுகாட்டுல அவரோட ஒத்தாசையா வேலை பாத்துட்டு இருக்க சொன்னார். ஊர் சுத்தறேன்னு இந்த வேலை செய்ய வெச்சுட்டாங்க . ஆனா அங்கேயும் சவத்தை கொண்டு வரவங்க டேய் குட்டையா இங்க வாடான்னும் வெட்டியான் இங்க வாடான்னு வார்த்தை கடப்பாரையால் குத்திட்டு இருந்தாங்க ...
வெறுப்பாகி , அப்பா இந்த வேலை எனக்கு வேணாம் ... வேற ஏதாச்சும் வேலைக்கு போறேன்னு சொல்லி ட்டு வேலை தேட போனேன் , யார்கிட்டேயும் நான் மயானத்துல வேலை செய்யறவன்னு சொல்லாம வேலை கேட்டேன் . ஆனா என்னுடைய உயரத்துக்கு எங்கேயும் யாரும் வேலை கொடுக்கலை , அப்படியே மனசு வந்து ஒரு சிலர் வேலை கொடுத்தாலும் உயரம் பத்தாததால என்னால வேலை செய்ய முடியல ...

ஒரு கட்டத்துல அப்பா எங்கேயோ காணாம போயிட்டாரு , எங்கே தேடியும் கிடைக்கவே இல்லை , மயானத்தில் வேலை செய்து கிடைக்கும் வருமானத்துல தான் எங்க குடும்பம் ஓடிட்டு இருந்துச்சு . இப்போ அவரு இல்லாம போனதால , வேற வழியே இல்லாம குடும்பத்துக்காக இந்த வேலை செய்ய ஆரம்பிச்சு இதோட 15 வருஷம் ஆகிடுச்சு மனசும் உடம்பும் நிறைய காயம் பட்டு பட்டு மரத்து போச்சு . எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு பொண்ணு பார்த்தாங்க , ஆனா இந்த வேலை செய்யும் எங்க குடும்பத்துக்கு நல்லது கெட்டதுக்கு கூட பத்திரிகை வைக்க மனசு வராதவங்க எனக்கு எப்படி பொண்ணு கொடுக்க முன் வருவாங்க . கல்யாணம் எல்லாம் கற்பனை தான் அதை விடுங்க அண்ணா ...

இன்னைக்கு வரைக்கும் யாருமே என் பெயரை சொல்லி கூப்பிட்டதே இல்லைன்னு நினைக்கிறேன் .., சவத்தை எடுத்து வர்ர சொந்தக்காரங்க சவத்துக்கு குழி போட்ட கூலியை கூட தூக்கி தான் போடுவாங்க , நான் ஏன்னு கேட்டா அது தான் முறைனு சொல்லுவாங்க , அதுக்கு பிறகு வெட்டியான் குட்டையான்னு வேற கூப்பிடுவாங்க பாருங்க.. அப்பல்லாம் ஊனம் எனக்கா இல்லை அவங்களுக்கான்னு மனசுக்குள்ள சிரிச்சுக்குவேன். ( ஆனா அவரை பார்க்கும் போது சிரிக்கிறது மாதிரி எல்லாம் தெரியலைங்க )

எவ்வளவோ பேர் என் மனசை காயப்படுத்தினவங்களுக்கும் கூட நான் சவக்குழி போட்டு இருக்கேன் , அப்போல்லாம் அவங்க மேல எனக்கு எந்த கோபமோ காழ்ப்புணர்ச்சியோ வந்ததில்லைங்க . இப்போ எல்லாம் இந்த தொழிலை நான் தெய்வமா மதிச்சு செய்துட்டு இருக்கேன் , ஆனா ஒருத்தரும் என்னை மனுசனா கூட மதிக்கிறது இல்லையேன்னு மனசோட ஏதோ ஒரு மூலைல அழுதிட்டு தான் இருக்குன்னு.." கண் கலங்கிட்டே சிரிச்சாரு பாருங்க . எனக்கு இதயத்துல இருந்து அவ்வளவு வலி வந்துருச்சு...

இவரு உயரம் மூன்றடி தான் ஆனா நமக்கெல்லாம் ஆறடி தேடி கொடுக்குறதே இவர் தாங்க . என்ன தான் , கோட்டையில கொடி கட்டி பறந்தாலும் என்னைக்காவது ஒரு நாள் இவரிடம் தானே சரணாகதி ஆகப்போறாங்க ...
அரிச்சந்திரன் இதே மயானத் தொழில் செய்தாலும் அவரை இன்றளவும் கொண்டாடும் இந்த சமுதாயம் தான் இவரைப் போன்றோரை மனதளவில் காயப்படுத்திக் கொண்டிருக்கிறது... என்னைக்கு தான் திருந்த போகிறார்களோ இந்த நடமாடும் சவங்கள் ..!!!
கண்ணீருடன்
ஈரநெஞ்சம் மகேந்திரன்