Thursday, March 25, 2021

இரண்டு இட்லி... சிந்தனை

ரெண்டு இட்லி!!

இரக்க குண பெண்மணி ஒருத்தி
தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் சுவர் மேல் வைப்பாள்...

அவ்வழி திரியும் ஒரு கூனல் முதுகு கிழவன் அதை எடுத்துக் கொண்டு
ஏதோ முனங்கிக் கொண்டே போவான்
இது அன்றாட வழக்கமாயிற்று

ஒரு நாள் மதில் அருகிலேயே நின்று
கிழவன் என்ன முனங்குகிறான் என்று செவிமடுத்து கேட்டாள்

அவன் முனகியது இதுதான்
நீ செஞ்ச பாவம் உன்கிட்டேயே இருக்கும்
நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும்

தினந்தோறும் இதையே சொல்லிக் கொண்டு போனான்
தினமும் இட்லி வைக்கிறேன் எடுத்துட்டு போறான்;
நீ மவராசி நல்லா இருக்கணும் என்று
கையெடுத்துக் கும்பிட்டு கை கால்ல விழவில்லைனாலும்
"இட்லி நல்லா இருக்கு என்று பாராட்டவில்லை என்றாலும்
 ரொம்ப நன்றி தாயே என்று சொல்லக் கூடவாத் தோணல 
ஏதோ,... "செஞ்ச பாவம் உன்கிட்டேயே இருக்கும்
செஞ்ச புண்ணியம் உனக்கே திரும்பும் என்று
தினம் தினம் உளறிட்டுப் போறானே'
என்று எண்ணி எண்ணி புலம்பினாள் அவள்.

'இவன் என்ன பித்தனா, இல்ல, சித்தனா, பரதேசி பய' என்று திட்டினாள்
'நன்றி கெட்ட கூனனை' நினைத்து
மன உளைச்சலுக்கு ஆளானாள்
நாளடைவில் அவளது கோபம் தலைக்கேறி
கொலை வெறியாக மாறியது
ஒருநாள் இட்லி மேல் விஷம் கலந்து செத்து தொலையட்டும் என
மதில் மேல் வைக்கப் போனாள்....

மனம் ஏனோ கலங்கியது
கை நடுங்கியது அவன் அப்படி இருந்தாலும் சே...நாம் ஏன் இப்படியாகணும் என்று
அந்த விஷம் கலந்த இட்லியை சாக்கடையில் எறிந்து விட்டு
வேறு நல்ல இட்லியை மதில் மேல் வைத்து விட்டு மனம் அமைதியானாள்.

வழக்கம் போல் கூனக் கிழவன் வந்தான்
இட்லியை எடுத்துக் கொண்டு
வழக்கம்போல
நீ செஞ்ச பாவம் உன்கிட்டேயே இருக்கும் 
நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும்
என்று சொல்லிக் கொண்டே சென்றான்!
அவனை அப்படியே அறையலாம் போலிருந்தது அந்த பெண்மணிக்கு

அன்று மதியம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தாள்
வாசலில் வாலிபன் ஒருவன்
கசங்கிய உடையோடு தள்ளாடிய படி நின்றிருந்தான்

வேலையோடுதான் திரும்புவேன் என்று சொல்லி விட்டு ஒரு மாதம் முன்பு வேலை தேடி வீட்டை விட்டு சென்ற அவளது ஒரே மகன்தான் அவன்!.

"அம்மா, வீட்டுக்கு திரும்பி வரும் போது
என் பர்ஸ் காணாம போச்சு கையில காசு இல்ல
தெரிஞ்சவங்க யாரும் கண்ணுல படல
மணிக் கணக்கில நடந்து வந்துட்டே இருந்தேன்
நல்ல வெய்யில் அகோரப் பசி வேறு
மயங்கி விழுந்துட்டேன்
கண் முழிச்சு பாத்தப்போ...
யாரோ ஒரு கூனமுதுகு கிழவன்
என்னை தூக்கி உட்கார வச்சு
ரெண்டு இட்லி கொடுத்து சாப்பிடச் சொன்னார்

இட்லி சாப்பிட்ட பிறகுதான் எனக்கு உயிரே வந்தது
இதைக் கேட்டதும் பேயறைந்தது போல் அதிர்ச்சி அடைந்தாள்

'விஷம் கலந்த இட்லியை கூனனுக்கு கொடுத்திருந்தால்...
அது என் மகனுக்கே எமனாக ஆகியிருக்குமே ஆண்டவா
என்று நினைத்து தாய் உள்ளம் பதைபதைத்தது கண்கள் பனித்தன..

"நீ செஞ்ச பாவம் உன்கிட்டேயே இருக்கும்
நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் "
...கூனன் முனகலின் பொருள் இப்போது நன்கு புரிந்தது!
உண்மைதான் ...

எல்லாருக்கும் எல்லாம் புரிவதில்லை...

புரியும் வேளையில் வாழ யாரும் இருப்பதும் இல்லை....

செய்த தர்மம் என்றும் நம்மை ஏதாவது ஒரு ரூபத்தில் காக்கும்

ஏதேனும் ஒரு தர்மம் செய்யும் சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள்

வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே.

Tuesday, March 23, 2021

மன சாட்சி... சிறுகதை





ஒருமுறை, கென்ய ஓட்ட பந்தய வீரர் எபெல் முடய், எல்லை குறியை அடைய சில மீட்டர் தூரம் தான் இருந்தது. 

ஆனால் குறியீடுகளை பார்த்து குழம்பி போய் இலக்கை அடைந்து விட்டதாக நினைத்து நின்று விட்டார்.

பின்னால் வந்த ஸ்பெயின் நாட்டின் ஐவன் பெர்னான்டஸ் இதை சுதாரித்து கொண்டு எபெலை தொடர்ந்து ஓட சொல்லி சத்தமிட்டார். எபெலுக்கு ஸ்பானிய மொழி தெரியாததால் இவர் சொன்னது புரியவில்லை.

இதை புரிந்து கொண்ட ஐவன் பெர்னான்டஸ், முடய்'யை இலக்குக்கு நேராய் உந்தி தள்ளினார்.

ஏன் இப்படி செய்தீர்கள் என்று பத்திரிக்கையாளர்கள் ஐவனிடம் கேட்டபோது, 

"என்றாவது ஒரு நாள் நாம் ஒருவரை ஒருவர் வெற்றிக்கு நேராய் உந்தி தள்ளுகிற ஒரு சமுதாயமாக மாறுவோம் என்பது தான் என கனவு" என்றார்...

ஏன் அந்த கென்னியரை வெல்ல விட்டீர்கள் என்று பத்திரிகையாளர் மறுபடியும் கேட்ட போது, "நான் அவரை வெற்றிபெற விடவில்லை, அவரே வெற்றிக்கு அருகில் வந்து விட்டார். இந்த பந்தயம் அவருடையது" என்றார்....

நீங்கள் வென்றிருக்கலாம் என்று பத்திரிகையாளர் மறுபடியும் கேட்ட போது, 

அந்த வெற்றியின் சிறப்பு என்னவாக இருக்கும்? 

இந்த பதக்கத்திற்கு என்ன மரியாதை இருக்கும்?

என் தாய் ..எனது குடும்பம் என்ன நினைப்பார்கள்?

நற்பண்புகள் ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லப்படுகிறது. 

நாம் நம் குழந்தைகளுக்கு எப்படி பட்ட பண்புகளை கற்று கொடுக்கிறோம்?
எந்த அளவுக்கு மற்றவர்களை நற்பண்புகளால் ஈர்க்கிறோம்? நம்மில் பலரும் மற்றவர்களின் பலவீனத்தில் உதவி செய்வதை விட அதை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறோம். 

சுயநலமாய் இருப்பதை விட்டு,ஒருவரை ஒருவர் வெற்றிக்கு நேராய் உந்தி தள்ளுவோம். நாம் எல்லாருமே வெற்றிக்கு தகுதி ஆனவர்கள்... 

என்று கூறி முடித்தார்.

 *நீதி:* *மனசாட்சியே இறைவனின் ஆட்சி..* *மனசாட்சியை கொல்லும்போதே/கேட்காமல் சுயநலமாய் செயல்படும்போதே இறைவன் அங்கிருந்து நீங்கிவிடுகிறார்.* *வெறுமனே தெய்வத்தை வணங்குவது மட்டும் பயனில்லை.*

Sunday, March 21, 2021

இனி உன்னை செல்லமான்னு கூப்பிட மாட்டேன் டி மா...

*இனி உன்னை செல்லமான்னு கூப்பிட மாட்டேன் டி மா...*

"செல்லம்மா...செல்லம்மா"  என்று அழைத்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான் அவன்.

"வந்துட்டிங்களா ..இங்க தான் இருக்கேன் நீங்க செல்லம்மா, செல்லம்மான்னு கூப்பிட்டு   என்  பேரே எனக்கு மறந்து போயிடுச்சு ...யாரு என்  பேர சொல்லிக் கூப்பிட்டாலும்  திரும்பி பாக்கறதே இல்ல யாரையோ கூப்பிடறாங்கன்னு கண்டுக்காம விட்டுடறேன்   "  என்றாள் அவள்.

"சரி டி மா  இனி உன்ன உன்  பேர சொல்லியே  கூப்பிடறேன் சரியா " என்கிறான் அவன்.

"வேணா வேணா    செல்லம்மான்னே கூப்பிடுங்க ... நீங்க செல்லமா கூப்பிடுற 'செல்லம்மா' ங்குற  பேர் நீங்க கூப்பிட்டு கூப்பிட்டு  என் ரத்தத்தில கலந்துடுச்சு தெரியுமா??... செல்லம்மான்னு நீங்க கூப்பிடுறப்போ அதுல உங்க  காதல் அப்படி வழிஞ்சு  வருது "  என்கிறாள் அவனை ஒரு கையால் வளைத்து மறு கையால் அவன் சட்டை பொத்தானை அவிழ்த்தபடி..  

"சரிடி செல்லம்மா"  என  அவன் அவளை இன்னும் இறுக்கமாக அணைத்து  முத்தமிட்டான்.

காதல் பொங்கி வழியும் தம்பதி அவர்கள் .. 

அவன் பணிக்கு செல்லும் நாட்களில், மதிய நேரத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் "சாப்பிட்டியா" என்று கேட்டுக் கொள்வார்கள். தான் சாப்பிடும் நேரத்தில்  அவளும் சாப்பிட வேண்டும் என்று அவனும், பணிகளுக்கு இடையே  புகைப்படம் எடுத்து அனுப்புவதும் . ஒவ்வொரு மணி நேரத்திற்கு பல குறுஞ்செய்திகளோடு   அத்தனை காதலையும் எண்ணங்களையும் பிரியங்களையும் பறிமாறிக் கொள்வார்கள். 

வேலை நேரங்களில் ஒரு முறையாவது அவனிடமிருந்து தொலைபேசி அழைப்பு அல்லது குறுஞ்செய்தி எதிர்பார்ப்பாள். இல்லை எனில் கோபம் தான். சண்டை தான் . 

"என்னை பத்தி  உங்களுக்கு நெனப்பே இருக்காதா " என அவனிடம் அவள் 
"இருக்கு டி  செல்லம்மா என் வேல அப்படி... புரிஞ்சுக்கோடி மா " என அவனும் .
"வேலையோடு இருக்க வேண்டியது தானே பின்ன என்ன ஏன் காதலிச்சிங்க  கல்யாணம் செஞ்சீங்க " என்று காதல் வாக்குவாதம் அவ்வப்போது சுவாரஸ்யத்தை கொடுக்கும்.

அப்படி ஒரு சிறிய இடைவெளியை கூட தாங்க முடியாத காதல் அவன் மேல் அவளுக்கு.

அவள் அவனிடம் தினமும் எதிர்பார்ப்பது  ஒரு முழம் பூ மட்டுமே.  

"இன்னிக்கி பூ வாங்கினிங்களா" வீட்டிற்கு வந்ததும் கேட்பாள்.
"ஆமா டி செல்லம்மா இந்தா" என்று அவன் தந்ததும் அதை வாங்கி தலையில் வைத்து அழகு பார்ப்பாள், தன்னவன்  வாங்கித் தந்தது என்ற மகிழ்ச்சியுடன். மறுநாள் வாடிய பூவை கூட தூக்கிப்
 போட மனம் வராது அவளுக்கு.

ஒரு சில நாளில் , "இல்ல டி  நேரமில்ல செல்லம்மா" என்று அவன் சொன்னால், அவனின் நிலை  தெரிந்தே கோபத்தை தொடர்வாள் காதல் நிறைந்த அவனது சமாதானத்தை எதிர்பார்த்தபடி.

ஒரு நாள் அவளது தோழி ஒருத்தி அவளிடம் , "நான் ஒரு புத்தகம் படிச்சேன். புதுமைப்பித்தன் சிறு கதைகள். அதுல "செல்லம்மாள்" ங்குற தலைப்புல ஒரு கதை  படிச்சேன். நல்லா இருக்கு  வாங்கி படி." என்றாள்.


வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அவனது தேவைகளை நிறைவேற்றி பின் அந்த புத்தகத்தை பற்றி சொல்கிறாள். " என் friendu  ஒருத்தி சொன்னா .. அவ ஒரு புக்  படிச்சாளாம் ... புதுமைப்பித்தன் சிறு கதைகளில்  என்  பெயர்    ( செல்லம்மா ) தலைப்பு கொண்ட ஒரு கதையாம் ரொம்ப நல்லா இருக்காம்.. வாங்கி தரிங்களா" என்கிறாள். 

"என்ன உன் பேர்ல  கதையா... என் செல்லம்மா பேர்ல கதையா.... நம்ம கதை போல காதல் கதையா.. நம்ம கதை போல காதல் நிறைந்தது இதுவரை இல்லை இனிமேலும் வராது டா" என்கிறான் அவன்.
"விளையாடாதிங்க வாங்கி தாங்க" என்று அவள் கொஞ்ச...
"என் செல்லம்மா பெயர் என்றால் விடுவேனா" என  அவளை இழுத்து முத்தமிட்டு அந்த புத்தகத்தை வாங்க செல்கிறான் அவன்.

கடைக்கு சென்று புத்தகத்தை கையில் வாங்கிய அவன்,  செல்லம்மாவுக்கு முன் நாம படித்து பார்த்து விடலாம் என படிக்கிறான். ஆவலோடு படிக்க தொடங்கிய அவன் முகம் படிக்க படிக்க வாடத் தொடங்குகிறது. கண்கள் கலங்கி அவனை அறியாமல் கண்ணீர் வழிகிறது. புத்தகத்தை வீட்டிற்கு எடுத்து செல்லாமல் தூக்கி எறிந்து விட்டு வருகிறான். 

வீட்டுக்கு வந்த அவனிடம்,"புக் எங்க" என்கிறாள்.
"இல்ல  நா வாங்கல " என்கிறான்
"ஏன் வாங்கல"  என வழக்கம் போல அவளுக்கு கோபம்,  சண்டை.
"வாங்கலைன்னா  விடு" என அவனும் கோபமாக பதிலளிக்க..
"ஆசைப் பட்டு ஒன்னு கேட்டேன் அத கூட வாங்கி கொடுக்க முடியாதா ? நம்ம காதலப் போல தான  இருக்கும் அந்த புக்குல , உங்களுக்கு என் மேல காதலே இல்லையா போங்க நான் கொடுத்து வெச்சது அவ்ளோ தான் " என்று சண்டைபோட்டபடியாக தனியாக போய் படுத்துக் கொண்டாள்  .

சற்று நேரத்தில் அவன் அவள் அருகே வந்து பார்க்கிறான் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்து இருந்தாள் .


அவன் உறங்கும் அவள் நெற்றியில் முத்தமிட்டு விட்டு பேசத் துவங்கினான் ( உறக்கத்தில் அவளுக்கு இவன் பேசுவது தெரியாது )

"அடியே  என் பேரழகி அந்த கதையில , நம்மளப் போல காதல் நிறைந்த தம்பதி பத்தி தான் இருந்துச்சு , . கல்யாணம் ஆன பின்னால தனிக்குடித்தனம்.. காதல்..  வேலை என அழகாக கதை செல்ல... திடீர்னு அந்த செல்லம்மாளுக்கு நோய் வந்து ... செலவு செய்ய பணம் இல்லாம கஷ்டப்பட்டு.. . கடைசியில அவ  செத்தே போறாள்" . 


"அதப் படிச்ச எனக்கு  கண்ணுல தண்ணி தண்ணியா அழுகை தான் டி வந்துச்சு . கதை தான்னாலும்  செல்லம்மாள் செத்துடுறாங்குற விஷயத்த என்னால தாங்கிக்க முடியல . என்னை பொறுத்தவரை செல்லம்மான்னா நீ மட்டும் தான், உன் ஒரு நொடி பிரிவும் என்னால தாங்கிக்க முடியாது   நான் வருத்தப்படறத  உன்னாலும் தாங்க முடியாது என்பது எனக்கு தெரியும். எல்லா பெண்களும் தன் கணவன் தன்னை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் கடைசிவரை அவன் துணை இருக்கணும்னு தான் நினைப்பாங்க.  ஆண்களும் அப்படித்தான்.  தன் மனைவி தன்னால் எந்த வேதனையும் படக்கூடாதுன்னு நினைப்பாங்க. அவள்  பிரிவை எந்த கணவனாலும் தாங்க முடியாது. உன்ன நான் இனி  இன்னும்  நல்லா பார்த்துக்குவேன் டி  செல்லம்மா...

இல்லை, *இனி உன்னை செல்லமான்னு கூப்பிட மாட்டேன் டி மா...* ". 

எனக் கூறி மீண்டும் அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்.

~மகி

அம்மா...

இரவு 11 மணி. சாலையில் ஓர் வாடகை டாக்ஸி வேகமாகச் சென்று கொண்டிருந்தது. 


ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, டாக்ஸி என கையசைத்து நிறுத்தினார். 

'தம்பி ஆஸ்பத்திரி போகனும்'.

'நான் சாப்பிட்டுட்டு,படுக்கப் போற நேரம்'.

'என் மகளுக்கு பிரசவ நேரம்பா, தயவுசெய்து வரமாட்டேன்னு சொல்லிடாதேப்பா’ என்றார் அப்பெண்மணி.

'நீங்க இவ்வளவு சொல்றதாலே வர்றேன். 500 ரூபா ஆகும்' என்றான் அந்த டாக்ஸி ஓட்டும் இளைஞன்.

அப்பெண்மணி, 500 ரூபா என்ன 1000 ரூபாய் கேட்டால் கூட தர சம்மதம் என்பது போல் வேக வேகமாக தலையாட்டி சம்மதிக்க, டாக்ஸி அவர்களுடன் மருத்துவமனைக்கு விரைந்தது.

டாக்ஸி ரெயில்வே கேட்டை நெருங்கவும், எச்சரிக்கை மணி ஒலிக்க கேட் மூடப்பட்டது.

அக்கர்ப்பினியின் முனகல் சற்று அலறலாக மாறியது. நல்ல வேளை அந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லை.

இரண்டு ரயில் வண்டிகள் எதிர் எதிர் திசையில் கடக்க, பத்து நிமிடத்தில் கேட் திறந்தது.

இப்போது டாக்ஸி, இன்னும் சற்று வேகமாக ஓடி மருத்துவமனையில் நின்றது.

நடுநிசியின் நிசப்தத்தைக் கிழித்தது, அப்பிரசவத் தாயின் அலறல். 

மூடிய விழிகளில் நீர் மல்க, அந்த நடுத்தர வயதுப் பெண்மணி கைகளைக் கூப்பி மகளுக்காக இறைவனிடம் வேண்டினாள்.

அந்த டாக்ஸி இளைஞனும் அமைதியாக அங்கே நின்றிருந்தான்.

சற்று நேரத்தில் சுகப் பிரசவம்.

'தம்பி, ரொம்ப நன்றிப்பா. இந்தா நீ கேட்ட பணம்’ என பணத்தை நீட்டினாள் அப்பெண்மணி.

'வேனம்மா. எங்கம்மா என்னைப் பெற எவ்வளவு வேதனைப் பட்டிருபாங்கன்னு, கடவுள் எனக்குப் புரிய வைச்சிருச்சு. பணத்தை நீங்களே வையிங்' என்று சொன்னபடி நடக்க ஆரம்பித்தான்.

ஏதோ யோசிக்க மொபைலை எடுத்து, ஒரு நம்பரை கண்டுபிடித்து டயல் பன்னினான்.

'ஹலோ முதியோர் இல்லமா'?

'ஆமா. என்ன இந்த நேரத்துல போன் பன்னுறீங்கே'?

'மன்னிக்கவும். நாளு நாளைக்கி முன்னாடி அனாதைன்னு சொல்லிட்டு, ஒருத்தவங்கள உங்க இல்லத்துல சேர்த்தேன் இல்லையா? அவுங்க அனாதை இல்லை. என்ன பெத்த தாய். நாளைக்கு காலையிலே வர்றேன், அவுங்கள கூட்டிட்டு போக' என்றான்.  

முதியோர் இல்ல பொறுப்பாளரின் அனுமதியைக் கூட கேட்காமல், மொபைலை கட் பன்னிவிட்டு வண்டியை தீர்க்கமான முடிவோடு ஸ்டார்ட் செய்தான்..!

Saturday, March 20, 2021

தாயும் தாரமும்...

தாய் - கருவில் சுமப்பவள்!
தாரம் - கழுத்தில் சுமப்பவள்!!
தாய் - பெத்தெடுப்பவள்!
தாரம் - தத்தெடுப்பவள்!!
தாய் - இதயத் துடிப்பு தந்தவள்!!
தாரம் - இயக்கத்தில் துடிப்பு தருபவள்!!
தாய் - அனைவருக்கும் முதல் தொட்டில்!
தாரம் - இரண்டாவது தொட்டில்!!
தாய் - உலகில் முதல் தெய்வம்!
தாரம் - தாய்க்கு நிகரான தெய்வம்!!
தாய் - பந்தய களம்வரை அழைத்து வருபவள்!
தாரம் - பந்தயத்தில் பங்கு பெறுபவள்!!
தாய் - உயிர்!
தாரம் - உடலும் உயிரும்!!
தாய் - நேற்று இன்று!
தாரம் - இன்று நாளை!!
தாய் - உலகின் தோற்றம்!
தாரம் - உலகின் வளர்ச்சி!!
தாரம் - இல்லாமல் அமையாது
சிறந்த தாய்மை!!!
தாய்மை - இல்லாமல் அமையாது
சிறந்த பெண்மை!!!
இயற்கையின் சிறப்பு பெண்மையின் படைப்பு....
பெண்மையின் சிறப்பு தாய்மையில் இருக்கு..!

கிழமைக்கு ஏது நேரம்.. காலம்..

*கிழமைக்கு ஏது நேரம்.. காலம்..!!* 

பக்கத்து வீட்டு சங்ரம்மாவின் ஐந்து வயது மகள்..
 
ப்ரியாவிடம் வந்து, ” தம்பிப் பாப்பாவுக்கு காய்ச்சல். அம்மா உங்ககிட்ட 100 ரூபா வாங்கிட்டு வரச் சொன்னாங்க ” என்று..

அந்த பிஞ்சு மழலை மொழியில் சொல்ல, ப்ரியாவிற்கு கோபம் தலைக்கேறியது.

“ஏண்டி… ஒங்கம்மாவுக்கு என்னக்கி காசு கேக்கறதுன்னு வெவஸ்தையேயில்ல. வெள்ளிக் கிழமயும் அதுவுமா, காலங்காத்தால. போடி, போய், ‘இல்லே’ன்னு சொல்லு” என்று சொல்லும்போதே..

“ஏய் ப்ரியா” என்று கூப்பிட்டபடி வந்தான், ப்ரியாவின் கணவன் அழகர்.

“போன மாசம் உங்கப்பாவுக்கு இருதய ஆபரேஷன் பண்ணினோமே… அன்னிக்கு என்ன கிழமை ?” என்று ப்ரியாவைக் கேட்க,

ப்ரியா, “வெள்ளிக் கிழமை” என்றாள்.

“ஆபரேஷனுக்கு டாக்டர் கட்டச் சொன்ன ஒரு லட்சத்த, நம்ம ரமேஷ், அவன் ஒய்ஃபோட நகைய அடமானம் வெச்சுக் குடுத்தான். 

‘வெள்ளிக் கிழமையாச்சே’ன்னு, ரமேஷோட பொண்டாட்டி நினைச்சிருந்தா, ஒங்கப்பா உயிரோட இருந்திருப்பாரா? இறந்திருப்பாரு. 

வெள்ளிக் கிழமையும், செவ்வாக் கிழமையும் உடம்புல உயிர் இருக்குற மட்டுந்தான். 

பர்ஸ்ல பணம் இருக்கு. 100 ரூபாயக் குடுத்தனுப்பு” என்றபடி, சாமி அறைக்குள் சென்றான் அழகர்.

Friday, March 19, 2021

நாம் ஏன் கோபத்தில் சத்தம் போடனும்...கோபம் வந்தா என்ன செய்வோம்?

*நாம் ஏன் கோபத்தில் சத்தம் போடனும்...கோபம் வந்தா என்ன செய்வோம்?*
யார் மேல நமக்கு கோபமோ, அவங்க கிட்ட சத்தம் போட்டு சண்டை பிடிப்போம்!! இல்லையென்றால் பேசாம அமைதியா இருந்துடுவோம்! ஆனா, எப்பவாவது யோசிச்சிருக்கோமா? யார் மேல நமக்கு கோபம் வந்தாலும் அவர்கள் நமக்கு மிக அருகில் தானே இருக்காங்க!

எதுக்கு ஊருக்கே கேட்கிற மாதிரி சத்தம் போடனும்? மெதுவா சொல்ல வேண்டியதை சொன்னாலே அவங்களுக்கு கேட்குமே! நானும் யோசிச்சதில்லைங்க!

ஆனா இந்த கதையைப் படித்தபிறகு??????

ஒரு துறவி கங்கையில் குளித்து விட்டுக் கரையேறும் சமயம், அவ்விடத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், சத்தம் போட்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்த துறவி, தன் சீடர்களிடம் திரும்பி சிரித்துக் கொண்டே கேட்கிறார்?

ஏன் மனிதர்கள் கோபத்தில் இருக்கும் போது ஒருவரை ஒருவர் பார்த்து சத்தம் போட்டு சண்டை பிடிக்கிறார்கள்? சீடர்கள் சில நிமிடங்கள் சிந்திக்கிறார்கள்…..பின்னர்..

சீடர்களில் ஒருவர்: கோபத்தில் நாம் அமைதியை இழக்கிறோம்! அதனால் சத்தமிடுகிறோம்!

துறவி: ஆனால், உனக்கு மிக சமீபத்தில் இருக்கும் நபரிடம், ஏன் சத்தமிடுகிறாய்? அவர்கள் உன்னருகில் தானே நிற்கிறார்கள்! நீ சொல்ல வேண்டியதை அவர்களுக்கு மட்டும் கேட்கும் விதமாக எடுத்துறைக்கலாமே!

ஒவ்வொரு சீடரும் ஒரு காரணம் சொல்கிறார்……

ஆனால், எந்த காரணத்திலும் அடுத்தவர்களுக்கு உடன்பாடில்லை! கடைசியாக துறவி பதில் கூறுகிறார்…..

எப்பொழுது இரு மனிதர்கள், ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்கிறார்களோ, அப்பொழுது அவர்களின் மனது இரண்டும் வெகு தொலைவுக்குச் சென்று விடுகிறது! எனவே தூரத்தில் இருக்கும் மனதுக்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே, சத்தமிடுகிறார்கள்!

மனது எவ்வளவு தூரம் விலகி இருக்கிறதோ, அவ்வளவு தூரம் இவர்கள் தங்கள் ஆற்றலை உபயோகித்து சத்தம் போட வேண்டியிருக்கும்! அப்பொழுது தானே தங்கள் கருத்து வெகு தொலைவில் இருக்கும் மனதைச் சென்றடையும்!

ஆனால் இதுவே, இரு மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பாக இருக்கும்போது என்ன நடக்கிறது?

அவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் சத்தமிடுவதில்லை! அமைதியாகவும், அன்பான முறையிலும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவார்கள்! காரணம் அவர்களின் மனது இரண்டும் வெகு சமீபத்திலே இருக்கும்! மனதிற்கு இடையேயான தூரம், மிகக் குறைவாக இருக்கும் அல்லது மனதிரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தே இருக்கும்!

துறவி தொடர்ந்து கூறுகிறார்…

இதைவிடவும் அதிகமாக ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும்போது என்ன நடக்கும்?

அவர்கள் ஒருவருக்கொருவர் சத்தமாக பேச தேவையிருக்காது! அவர்களின் மனதுகள் இரண்டும் கிசு கிசுப்பாக பேசுவதில் இருந்தே, அவர்களின் கருத்துகள் பரிமாறப்படும்! இன்னும் இன்னும் அன்பு அதிகமாகும் போது வார்த்தையே தேவைப்படாது! அவர்கள் கண்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும் போதே, மனதின் எண்ணங்கள் வெளிப்பட்டு விடும்!

துறவி கடைசியாக சீடர்களைப் பார்த்து கூறுகிறார், அதனால் நீங்கள் ஒருவருடன் ஒருவர் வாதிடும் போது,

*”உங்கள் மனதுகள் இரண்டும் தொலைவாகப் போய் விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்!*

*மனதின் தொலைவை அதிகப்படுத்தும் வார்த்தைகளை உபயோகப்படுத்தாதீர்கள்!”*

*அப்படி செய்யாமல் போனால், “ஒரு நாள் உங்கள் மனங்களிரண்டின் தூரம் கொஞ்ஞம் கொஞ்ஞமாக அதிகமாகி, கடைசியில் ஒன்று சேரும் பாதையே அடைக்கப்பட்டு விடும் நிலை வந்து விடும்!”.*

Thursday, March 18, 2021

மாணவர்கள்

*தினம் ஒரு குட்டிக்கதை* .



ஒரு ஆசிரியர் பாடவேளையின் இறுதியில் மாணவிகளை உற்சாகமூட்டுவதற்காக ஒரு சிறிய பரீட்சையை நடத்தினார்.

அதில் வெற்றி பெறும் மாணவிக்கு புதியதொரு காலணி(செருப்பு) வழங்கப்படும் என்றும் கூறினார்.அனைத்து மாணவிகளும் மிகுந்த சந்தோஷத்துடன் பரீட்சையை எழுதினர். 

இறுதியில் அவர்களது விடைகளை பரிசீலித்துப் பார்க்கும் பொழுது அவர்கள் அனைவரது விடைகளும் சரியாக இருந்தது.
ஆசிரியை யாருக்கு பரிசினை வழங்குவது என்று சிந்தித்து விட்டு, குலுக்கல் முறையில் இப்பரிசு கொடுக்கப்படும். எல்லோரும் ஒரு துண்டு தாளில் அவரவர்  பெயரை எழுதி  ஒரு பெட்டியில் போடுமாறு கூறினார்.

அனைவரும் எழுதிப் போடவே ஆசிரியை அப்பெட்டியைக் குலுக்கி அதில் ஒரு சீட்டை  எடுத்தார். அதில் தமிழ்ச்செல்வி என்ற மாணவியின் பெயர் காணப்படவே அம்மாணவிக்கு அப்பரிசு வழங்கப்பட்டது.

அம்மாணவி தான் அவ்வகுப்பில் மிகவும்  ஏழ்மையான  மாணவி. பல காலமாகவே தேய்ந்து போயிருந்த காலணிகளை அணிந்து வந்த இம்மாணவிக்கோ எல்லையில்லா மகிழ்ச்சி.

பின்னர் அவ்வாசிரியை சந்தோஷத்துடன் வீட்டுக்கு வர  ஆசிரியை நடந்த சம்பவத்தை கணவரிடம் கண்ணீருடன் கூறினார். கணவனும் சந்தோஷப்பட்டார்.

எனினும் அவ்வாசிரியை வழக்கத்துக்கு மாறாக தொடர்ந்தும் கண்ணீர் வடிக்கவே கணவர் மீண்டும் காரணம் கேட்க  " நான் வீட்டுக்கு வந்து அப்பெட்டியிலுள்ள அனைத்து  காகிதங்களை பிரித்துப் பார்த்தேன். அதில் அனைத்து மாணவிகளும் தங்களது பெயர்களை எழுதாமல் வகுப்பில் ஏழை  மாணவியாகிய "தமிழ்ச்செல்வி" இன் பெயரையே எழுதியிருந்தனர்." என்று பதிலளித்தார்.

 *நீதி* 

*"தன்னை விட பிறரை முற்படுத்தும் பிள்ளைகளாக, சுயநலமற்றவர்களாக தமது பிள்ளைகளை வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்"*

மழைகளில் எத்தனை வகைகள் உள்ளன என தெரியுமா? தெரிந்து கொள்வோம்.

*தெரிந்து கொள்வோம்...*

*மழைகளில் எத்தனை வகைகள் உள்ளன என தெரியுமா..??* 

தமிழில் 14 வகையான மழை உண்டு...

1. மழை

2. மாரி

3. தூறல்

4. சாரல்

5. ஆவி

6. சோனை

7. பெயல்

8.. புயல்

9. அடை(மழை)

10. கன(மழை)

11. ஆலங்கட்டி

12. ஆழிமழை

13. துளி மழை

14. வருள் மழை

*இயற்கை நுனித்த மழை:*

வெறுமனே மழைக்குப் பல பெயர்கள் அல்ல. இவை ஒவ்வொன்றுக்கும் வேறுபாடு உண்டு.

*மழை என்னும் சொல்:*

‘மழ’ என்பது உரிச்சொல் ஆகும். ‘மழ களிறு’ என்பதற்கு ‘இளமையான களிறு’ என்று பொருள். ‘மழவர்’ என்பதற்கு ‘இளைஞர்கள்’ என்று பொருள். அந்த உரிச்சொல் புறத்து பிறப்பதே
‘மழை’ என்னும் சொல் ஆகும். இளமையின் அலட்டல் போல், காற்றில் அலைந்து அலைந்து பெய்வதால், புதுநீர் உகுப்பதால் ‘மழை’ எனக் காரணப்பெயர் பெற்றது.

*அடை மழை:*

அடை என்பதை ஆங்கிலத்தில் ‘Thick’ எனக் கூறுவர். இடைவெளியின்றி பார்வையை மறைக்கும் படி பெய்யும் மழை அடை மழை ஆகும். அடைமழை என்பது வினைத்தொகை. அடைத்த மழை, அடைக்கின்ற மழை, அடைக்கும் மழை என்று கூறுகிறோம். விடாமல் பெய்வதால் ஊரையே ‘அடை’த்து விடும் மழை. அடைத்துக் கொண்டு பெய்வதாலும் அடை மழை எனப் பெயர் பெற்றது. கன மழை வேறு. அடை மழை வேறு. அடை மழையில் நீர் பெரும் ஓடைகளையும், குளம், ஏரிகளையும் நிரப்பும் வகையில் இருக்கும்.

*மாரி:*

இள மென்மையாக அலைந்து காற்றாடி போலப் பெய்வது ‘மழை’ ஆகும். தாய்ப்பால் போலச் சீராகப் பெய்வது ‘மாரி’ ஆகும். அதனால் தான் மாரியம்மன் எனத் தெய்வத்தைத் தமிழ் மக்கள்
அழைக்கவும் செய்தார்கள். தமிழ் மொழி பிறமொழி போல் அல்லாது வாழ்வியல் மிக்கது. காற்றின் பாதிப்பு இல்லாமல் வெள்ளச் சேதங்கள் இன்றி மக்கள் இன்னலடையாமல் பெய்யும் நிலப்பரப்பு அனைத்தும் ஒரே அளவு நீரைப் பெறுமாறு சீராகப் பெய்வது ‘மாரி’ ஆகும். அதனால் தான் இலக்கியங்களில் ‘மாதம் மும்மாரி பெய்கிறதா’ எனக் கேட்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

*பிற மழைகளுக்கான விளக்கம்:*

*ஆவி:* ஆங்காங்கே விழும் ஒற்றை மழைத்துளி ‘ஆவி’ எனப்படுகிறது. இந்த வகை மழையில் உடலோ, உடையோ உடனே நனையாது.

*தூறல்:* காற்று இல்லாமல் தூவலாகப் பெய்யும் மழை ‘தூறல்’ ஆகும். புல், பூண்டின் இலைகளும், நம் உடைகளும் சற்றே ஈரமாகும். ஆனால் விரைவில் காய்ந்து விடும்.

*சாரல்:* பலமாக வீசும் காற்றால் சாய்வாக அடித்து வரப்படும் மழை ‘சாரல்’ எனப்படும். மழை பெய்யுமிடம் ஓரிடமாகவும், காற்று அந்த மழைத்துளிகளைக் கொண்டு சென்று வேறிடத்திலும் வீசி பரவலாக்குவதை ‘சாரல்’ என்பர். சாரல் என்பது மழையில் பட்டுத் தெறித்து விழும் மழை எனச் சிலர் கூறுவது முற்றிலும் தவறு. (சாரலடிக்குது ஜன்னல் காத்து என்பதைக் கவனிக்கவும்) சாரல்--சாரம் என்பன சாய்வைக் குறிக்கும் சொற்கள். மலைச்சாரல் என்பது மலையின் சரிவான பக்கத்தைக் குறிக்கும். அதை மலையில் பட்டுத் தெறிக்கும் நீர் எனத் தவறாகப் பொருள் கொண்டு விட்டனர். சாரல் மழை என்பது சாய்வாய் காற்றின் போக்குக்கும் வேகத்துக்கும் ஏற்ப பெய்யும் மழை என்பதே பொருள். சாரல் மழையில் மழை நீர் சிறு ஓடையாக ஓடும். மண்ணில் நீர் தேங்கி ஊறி இறங்கும்.

*கன மழை:* இந்த வகை மழையில் துளிகள் பெரிதாக எடை அதிகம் கொண்டதாக இருக்கும்.

*ஆலங்கட்டி மழை:* திடீரென வெப்பச்சலனத்தால் காற்று குளிர்ந்து மேகத்தில் உள்ள நீர் பனிக்கட்டிகளாக உறைந்து, மழையுடனோ அல்லது தனியாகவோ விழுவதே ‘ஆலங்கட்டி மழை’ ஆகும். இவ்வாறு பனி மழை பெய்ய சூடோமோனஸ் சிரஞ்சி என்ற பனித்துகள்களை உண்டாக்கும் பாக்டீரியாவும் ஒரு காரணமாகும். புவி வெப்ப மயமாதலினால் இந்த பாக்டீரியா முற்றிலும் அழிந்து விடக்கூடும் என அறிவியலாளர்கள் அஞ்சுகின்றனர்.

*பனி மழை:* பனித் துகள்களே மழை போலப் பொழிவது ‘பனி மழை’ ஆகும். இது பொதுவாக இமயமலை ஆல்ப்ஸ் போன்ற மலைப்பகுதிகளில் பொழியும்.

*ஆழி மழை:* ஆழி என்றால் கடல். இது கடலில் பொழியும் மழையைக் குறிக்கும். இதனால் மண்ணுக்குப் பயனில்லை. ஆனால் இயற்கை சமன்பாட்டின் ஒரு பகுதி இம்மழை ஆகும்.

ஐந்து நிமிடங்களில் பத்து வினாக்களுக்கு பதில் எழுத முடியுமா? சிந்தனை கதைகள்.



*ஐந்து நிமிடங்களில் பத்து வினாக்களுக்கு பதில் எழுத முடியுமா..??*

ஒரு நிறுவனம், வேலைக்கு ஆட்கள் தேவை என்று அறிவித்தது...

அதன்படி நிறைய நபர்கள் நேர்காணலுக்கு வந்திருந்தார்கள். அனைவரையும் ஒரு அரங்கத்தில் உட்கார வைத்தார்கள். அனைவரிடமும் வினாத்தாள்களும், விடைத்தாளும் வழங்கப்பட்டது...

இப்பொழுது அந்த நிறுவன மேலாளர் பேசினார்..

இந்த வினாத்தாளில் பத்து கேள்விகள் உள்ளது. உங்களுக்கு ஐந்து நிமிடம் நேரம் ஒதுக்கப்படும். அதற்க்குள் இந்த வினாக்களுக்கு நீங்கள் பதிலலிக்க வேண்டும். தகுதியுடைய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலை வழங்கப்படும் என்றார்.

ஐந்து நிமிட நேரம் ஆரம்பமானது..

நேரம் குறைவாக உள்ளது என்று அனைவரும் வேகமாக பதில் எழுதினர். நேரம் முடிந்த பின், அனைவரிடமும் விடைத்தாளை வாங்கினார் மேலாளர்.

விடைத்தாளை வாங்கும் போது ஒவ்வொருவரும் நேரம் குறைவாக கொடுத்து விட்டீர்கள். எங்களால் ஐந்து கேள்விகளுக்கும், ஏழு கேள்விகளுக்கும் பதில் எழுத முடிந்ததே தவிர, அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுத முடியவில்லை என்றனர்.

அதில் இருவர் மட்டும் எந்த பதிலும் எழுதவில்லை என்று வெற்றுத்தாளை மேலாளரிடம் கொடுத்தனர்.

அதன்பின், அந்த நிறுவன மேலாளர் சொன்னார்...

விடைத்தாளில் பதில் எழுதாத இவர்கள் இருவர் மட்டும் இந்த நிறுவனத்தில் வேலை செய்ய தகுதியானவர்கள். மற்றவர்கள் வீட்டிற்கு செல்லலாம் என்றார்.

அனைவருக்கும் ஒரே ஆச்சரியம், அனைவரும் ஒரு சேர அந்த நிறுவனமேலாளரிடம் கேட்டனர். வினாக்களுக்கு சரியான பதிலளித்த எங்களுக்கு வேலை இல்லை என்கிறீர்கள். எந்த வினாக்களுக்கும் பதில் அளிக்காத அந்த இருவருக்கு மட்டும் எப்படி வேலை கொடுத்தீர்கள் என்றனர்.

(இந்த இடத்தில் நமக்குள் தோன்றும் கேள்வியும் இதுதான். பதில் அளித்தவர்கள் இருக்க, பதில் அளிக்காதவர்களுக்கு வேலையா?)

அதற்கு அந்த மேலாளர் சொன்னார், எல்லோரும் அந்த பத்தாவது கேள்வியை படித்துப் பாருங்கள் என்றார்..

படித்துப் பார்த்த அனைவரும் பதிலேதும் பேச முடியாமல் வீட்டிற்கு சென்றனர்.

அந்த பத்தாவது கேள்வி இது தான்..!

*10) மேற்கண்ட எந்த வினாக்களுக்கும் நீங்கள் பதில் அளிக்க வேண்டாம்.? என்பதாகும்.*

இது சிரிக்க வேண்டிய விஷயம் அல்ல. நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம், இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி வினாத்தாள் முழுவதையும் படித்திருந்தால் வேலை நிச்சயம் கிடைத்திருக்கும் அல்லவா?

Yes...!

இந்த நவீன யுகத்தில் பிள்ளைகளை படி படி என்று படிக்கச் சொல்லி நிறைய மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்று நினைக்கிறோமே தவிர, நம் பிள்ளைகள் நல்ல புத்திசாலியாக வளர வேண்டும் என்று யாருமே நினைப்பதில்லை..!

*பல நிலைகளில் இப்படித்தான் ஏமாறுகிறோம் பொறுமையாளர்கள் கூட புறக்கணிக்கப்படுகிறார்கள்.!!*

Tuesday, March 16, 2021

அரசாங்கம் மக்களுக்கு பணம் கொடுத்தால், காமராஜர் சொன்னது.

பணம்...பணம்...பணம்!
*உழைக்காமலேயே அது ஏழை மக்கள் என்றாலும்கூட, இலவசமாக பணம் கொடுக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தினால் என்னவாகும்?*

படிக்காத மேதை காமராஜர் இந்தக் கேள்விக்கு,
அந்தக் காலத்திலேயே ஒரு நிகழ்ச்சியில் தெளிவாக பதில் சொல்லி இருக்கிறார்..

#பெருந்தலைவர் #காமராஜர் முதலமைச்சராக இருந்த காலம்.

தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை நீரேற்று நிலையத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் காமராஜர் தனக்கே உரிய பாமர பாணியில் பேசியது...

" நாட்ல இருக்கிற எல்லாருக்கும் பணம் வேணும்...

ஏதாச்சும் இயலாமையைச் சொல்லி 
அரசாங்கம் பண உதவி பண்ணனும்னு கேட்கிறாங்க...
எனக்கு ஒன்னும் பிரச்னை இல்லை....

பண நோட்டு அடிக்கிற மிஷின் அரசாங்கத்துகிட்டதான் இருக்கு...

எவ்வளவு வேண்டுமானாலும் அச்சடிக்கலாம்னேன்.

அடிச்சு,  உங்க இஷ்டப்படியே ஆளுக்கு ஒரு மூட்டை பணம் வீடு வீடா போய் கொடுத்துடுவோம்னேன்.

அப்போ,
பணம் இல்லாதவங்களே நாட்டிலே கிடையாதுன்னு நிலை வந்துரும்...
சரியா..?

இப்போ யாரும் வேலைக்குப் போகவேண்டிய அவசியம் இருக்காதுன்னேன்.

பசிக்கும்...

 கடைத்தெரு பக்கம் போனீங்கன்னா எல்லா கடையும் பூட்டிக் கெடக்கும்...!
அரிசி, பருப்பு, உப்பு, புளி, மொளகா, எண்ணெய் ஒன்னும் கெடைக்காது!
ஓட்டல் இருக்காது!

விவசாய வேலைக்கு ஆள் வராது...
 கூப்பிட்டா
ஒரு வேலைக்கும் ஒருத்தனும் வரமாட்டான்...
எப்படி வருவான்னேன்..?

பணம் வேணும்னுதானே உழைக்கிறாங்க....
கட்டு கட்டா பணம் வீட்ல இருக்கும் போது எவன்தான் வேலைக்கு வருவான்னேன்..?

பணத்தை தலைமாட்டில் வச்சுக்கிட்டு,
வயித்துல ஈரத் துணியைப் போட்டுக் கிட்டு சும்மா கெடக்க வேண்டியதுதான்...!

நாடே தூக்கம் வராம கெடக்கும்...

இப்போ அது மதிப்புள்ள பணம் இல்லை...
 வெத்து பேப்பர்தான்னேன்!

*உழைப்புதான் பணம்ன்னேன்...*

பொருளாதாரத்திற்கு ஆதாரமே உழைப்புதான்...

உழைப்பு இல்லாமல் ஒன்னுமே கெடைக்காது... 
பள்ளிக்கூடத்துல முக்கியமா இதைத்தான் நம்ம பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கணும்.

கல்வி, ஆரோக்யம்
இதுக ரெண்ட தவிர அரசாங்கம் எதையும் இலவசமா தரக்கூடாது.

உழைப்பு இல்லாமல்,
 கட்டு கட்டா பணம் குடுத்தால் நாட்டோட பொருளாதாரமே சீர்கெட்டு  கந்தலாகிப் போகும்னேன்..!"

பொருளாதாரப் படிப்பு படிக்காமல்,
 நாட்டு நிலையையும் நாட்டு மக்கள் நாடித்துடிப்பையும் மட்டுமே படித்த ஒரு பாமர மனுஷன்,
 படிக்காத மேதை  சொன்னதை இப்போது நினைத்தாலும் கண்ணீர் வருகிறது.

இந்தியர்கள் ஏன் உணவை கையில் சாப்பிடுகிறார்கள் ?

*இந்தியர்கள் ஏன் உணவை கையில் சாப்பிடுகிறார்கள்  ? 

  
கைகளில் உணவு பிசைந்து சாப்பிடுவதிலும் தனி ருசி இருக்கிறது. 

நம் இந்தியர்களுக்கு எத்தனை விலை உயர்ந்த ஸ்பூன்களில் சாப்பிட்டாலும் கைகளில் பிசைந்து சாப்பிட்டால்தான் உண்ட திருப்தி இருக்கும். 

அந்த திருப்தி எவ்வாறு வருகிறது என்பது தெரியுமா?

ஆயுர்வேதம் நம் கைகள்தான் உடலின் மிகப் பெரிய வரம் என்கிறது. 

ஒவ்வொரு விரலும் ஒவ்வொன்றைச் சொல்கின்றன. 

அதாவது கட்டை விரல் நெருப்பையும், 

ஆள் காட்டி விரல் காற்றையும்,

 நடுவிரல் ஆகாயத்தையும், 

மோதிர விரல் நிலத்தையும், 

சிறுவிரல் நீரையும் கொண்டிருக்கின்றன. 

இவை மூன்றையும் ஒன்று சேர்த்து சாப்பிடும் போது உணவின் சுவை மூளையை எட்டுகிறது. 

அந்த உணவை தொடும் உணர்வு கவனச் சிதறல் இல்லாமல் உணவின் ருசி, மணம் அறிந்து உண்ண வைக்கும். இதைத் தவிர...

ஜீரண சக்தியை அதிகரிக்கும் : நம் உள்ளங்கைகளில் ’நார்மல் ஃப்ளோரா’ () என்கிற பாக்டீரியா இருக்கிறது. 

அது சுற்றுச் சூழல் பாதிப்பால் உட்செலுத்தப்படும் சில கிருமிகளை அழிக்க வல்லது. 

அதேபோல் அந்தக் கிருமியால் வாய், தொண்டை மற்றும் குடல் ஆகியவை பாதுகாக்கப்படுகிறது.

 மேலும் இது ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.

அதிகமாக உணவு உட்கொள்வதைத் தவிர்க்கலாம் : 

பொதுவாக கைகளில் சாப்பிடும்போது மெதுவாகவே உண்போம். 

அதனால் நீங்கள் மென்று உண்ணும் போது வயிறு அதை விரைவாக ஜீரணித்து விடும்.

. இதனால் உங்களுக்கும் அந்த உணவு போதுமானதாக இருக்கும். 

இதனால் அதிகமாக உண்ண மாட்டீர்கள். 

அதேபோல் நாம் கைகளை குவித்து சாப்பிடத் துவங்கும் போதே, மூளை நம் உடலுக்கு ஜீரண சக்திக்கான கட்டளையை அனுப்பிவிடும். 

உடனே கல்லீரலும் ஜீரண சக்திக்கான ரசாயனத்தை உற்பத்தி செய்ய ஆரம்பித்துவிடும்.

உடல் நோய்கள் வராது : 

கைகளில் சாப்பிடுவது உடல் தசைகளுக்கான உடற்பயிற்சி போன்றது. 

இதனால் இரத்த ஓட்டம் சீராகிறது. 

உடல் சுறுசுறுப்பு அடைகிறது. 

உடல் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது. 

அதுமட்டுமின்றி இரத்தக் கொதிப்பு நோயும் குறைவதாகக் கூறப்படுகிறது. 

அதேபோல் பல நோய்கள் கைகளின் மூலமாகவும் உடலுக்குப் பரவுகின்றன. 

இதனால் குறைந்தது உணவு உண்பதற்காகவே ஒரு நாளைக்குக் 3 முறையாவது  கைகளைக் கழுவும் பழக்கம் கொண்டிருப்போம். 

இதனாலேயே நோய்த் தொற்றுக் கிருமிகள் அழிந்துவிடுகின்றன.

தகவல்கள் : இந்தியாவில் மட்டுமல்லாமல் ஆப்பிரிக்கா, மத்தியக் கிழக்கு நாடுகள் ஆகிய இடங்களிலும் கைகளில்தான் உணவை உட்கொள்கிறார்கள்.

 அமெரிக்காவிலும் கைகளில் உண்பதால் ஏற்படும் நன்மைகளைத் தெரிந்து கைகளில் உண்ண, பழகி வருகிறார்கள். 

அதேபோல் அமெரிக்க ரெஸ்டாரண்டுகளில் கிடைக்கக் கூடிய இந்திய உணவுகள், மெக்ஸிகன் உணவுகள், மத்திய கிழக்கு உணவுகளை அமெரிக்கர்கள் உண்ணும்போது கைகளில்தான் உண்ணுகிறார்கள்.

Monday, March 15, 2021

இது தான் வாழ்க்கை

 குருவே! என் வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லை என்றான் சீடன் ஒருவன்.




குரு அவனை ஒரு தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு பட்டாம்பூச்சிகள் அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தன. "இதோ இவற்றில் ஒன்றைப் பிடித்து வா"! என்று குரு அவனிடம் சொன்னார். 


அவன் பட்டாம் பூச்சியைத் துரத்தித் துரத்தி ஓடினான். ஆனால், அவனால் ஒன்றையும் பிடிக்க முடியவில்லை.


"பரவாயில்லை வா நாம் இந்தத் தோட்டத்தின் அழகை ரசிக்கலாம்" என்ற குரு, அவனைத் தோட்டத்தின் நடுவில் அழைத்து வந்தார். 


இருவரும் அங்கு அமைதியாக நின்று, தோட்டத்தின் அழகைக் கண்குளிரப் பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் அவர்களைச் சுற்றியும் பட்டாம்பூச்சிகள் பறக்கத் தொடங்கின. 


சற்று நேரத்துக்கு முன்பு அவன் பிடிக்கத் துரத்திய பட்டாம்பூச்சி, இப்போது அவன் கைகளிலே வந்து அமர்ந்தது. 


குரு சிரித்தபடி அவனிடம் சொன்னார்:


"இதுதான் வாழ்க்கை! மகிழ்ச்சியைத் தேடி துரத்துவது அல்ல வாழ்க்கை. நாம் வாழ்க்கையை அமைதியாய் ரசிக்கும்போது மகிழ்ச்சி நம்மிடம் தானே வந்து சேர்ந்து விடும்"!



மறப்போம் மன்னிப்போம்






டென்ஷனே இல்லாம சிரிச்சுக்கிட்டு எப்பவுமே மகிழ்ச்சியுடன் இருக்கணும்னு ஆசையா? 

ஆசை மட்டும் இருந்தா பத்தாது.அதுக்கு சில செயல்களை நாம் செய்து தான் ஆகணும். அப்ப தான், நம்மால டென்ஷன் இல்லாம இருக்க முடியும். என்ன, அது..?  

முதலில்,உங்களுக்கு யாராவது தெரிந்தோ,
தெரியாமலோ தீங்கு செய்யும் போது, அந்தத் தவறை மன்னித்து, மறந்து விடுங்கள்.

அதை மனதில் தேக்கி வைக்காதீர்கள்.தவறு செய்வது மனித இயல்பு. போன முறை அவன் தவறு செய்யும் போது மன்னித்தேன்; இனி என்னால் முடியாது என்று கூறாதீர்கள். 

நீங்கள் பிறரை மன்னிக்க, மன்னிக்க உங்கள் மனம் பண்படும். அதுமட்டுமல்லாமல் உங்களால் நிம்மதியாகவும் இருக்க முடியும். 

இதற்கு மருத்துவரீதியாகவும் நல்ல பலன் உண்டு.
”மறப்போம் மன்னிப்போம்’ என்பதை தாரக மந்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். 

இல்லையெனில் மன்னிக்க முடியாமல் இருக்கும் அவரைப் பார்த்த உடனே அவர் மீது கோபம் வந்து அந்த கோபம் டென்ஷனாக மாறி ரத்த அழுத்ததை உங்களுக்கு கொண்டு வந்து சேர்த்து விடும். 

இந்த ரத்த கொதிப்பு உங்களுக்கு பலவிதமான நோய்களை ஏற்படுத்தும். இதனால் நம் ஆரோக்கியம் தான் பாதிக்கிறது. 

அதேபோல், நீங்கள் செய்யும் தவறுகளுக்கு மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்கத் தயங்காதீர்கள்.

தெரிந்தோ, தெரியாமலோ பல வகைகளில் நாம் தவறு செய்கிறோம் .அப்படி செய்யும் போது அவரிடம் மன்னிப்புக் கேட்கத் தயங்காதீர்கள்.

வயது வித்தியாசம் பார்க்காமல் உங்கள் தவறை மட்டும் மனதில் கொண்டு மன்னிப்புக் கேளுங்கள். 

அப்படிக் கேட்கும் போது உங்கள் எதிரி நிச்சயம் பெருந்தன்மையாக நடந்து கொள்வார். அப்படி மன்னிக்காவிட்டாலும், கவலையை விடுங்கள்.

உங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட போதே 
நீங்கள் மன்னிக்கப்பட்டு விட்டதாக உள்ளூர நம்புங்கள்.

இதனால் மன அமைதி கிடைக்கும். தவறு செய்யும் நமக்கு மன்னிக்கும் மனப்பான்மை மற்றும் மன்னிப்புக் கேட்கும் தன்மை ஆகிய இரண்டும் வேண்டும்.

ப்ளீஸ், தாங்க்யூ, ஸாரி, வணக்கம், வாங்க போன்ற சொற்களையும் அடிக்கடி தேவையான இடத்தில் தவறாமல் பயன்படுத்துங்கள். அவை உங்களை பண்புள்ளவராகக் காட்டும். 

ஆம்.,நண்பர்களே..,

என்ன இதெல்லாம் செய்ய நீங்க ரெடியா? அப்படின்னா இனிமே நோ டென்ஷன்! 
வாழ்க்கையை ஆனந்தமாய் ஜாம்,ஜாம் என்று கழியுங்கள்.


தமிழ் மாதப் பெயர்கள் எப்படி வந்தன?

 

*தமிழ் மாதப் பெயர்கள் எப்படி வந்தன?*



ஆங்கில மாதங்கள் ஜனவரி, பிப்ரவரி தொடங்கி டிசம்பரில் முடிகிறது. அதேபோல், தமிழ் மாதப் பெயர்கள் சித்திரை, வைகாசி என தொடங்கி பங்குனி என முடிகிறது.

சித்திரை:

சித்திரை மாசத்தில் சித்ரா நக்ஷத்திரத் தன்றுதான் பௌர்ணமி வரும். அதனால் சித்திரை மாசம் என்றானது.

வைகாசி:

விசாக சம்துமந்தமான வைசாகம்.விசாக நக்ஷத்திரத்தில் பெரும்பாலும் பௌர்ணமி ஏற்படுகிற மாசம் தான் வைசாகி. மதுரை என்பது மருதை என திரிவது போல் சமஸ்கிருத வைசாகி தமிழில் வைகாசி ஆயிற்று.

ஆனி:

அனுஷ நக்ஷத்திர சம்மந்தமானது ஆனுஷீ.அந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுகிற மாசம் ஆனுஷீமாசம். தமிழில் ஷ என்ற எழுத்து உதிர்ந்து ஆனி என்றாயிற்று.

ஆடி:

ஆஷாட நக்ஷத்திரத்தில் பூர்வ ஆஷாடம்,உத்தர ஆஷாடம் என்று இரண்டு. பூர்வம் என்றால் முன்,உத்தரம் என்றால் பின்.பூர்வ / உத்தர ஆஷாடம் என்பதில் உள்ள அந்த ர்வ என்ற கூட்டெழுத்து சிதைந்தும்.ஷ உதிர்ந்தும் தமிழில் பூராடம் உத்திராடம் என்கிறோம். இந்த இரு நக்ஷத்திரங்களில் ஒன்றில் பௌர்ணமி வரும் மாதம் ஆஷாடி.இதில் ஷா உதிர்ந்து ஆடி ஆயிற்று.

ஆவணி:

ச்ராவணம் என்பது ச்ரவண நக்ஷத்திரத்தை குறிக்கும். முதலில் உள்ள ச்ர அப்படியே தமிழில் drop ஆகி வணத்தை ஓணம் என்கிறோம். அது மஹாவிஷ்னுவின் நக்ஷத்திரமாதலால் திரு என்ற மரியாதை சொல்லை சேர்த்து திருவோணம் என்கிறோம். அனேகமாக பௌர்ணமி ச்ராவண நக்ஷத்திரத்தில் வருவதால் ச்ராவணி எனப்படும். இதில் சமஸ்கிருதத்திற்கே உரிய ச்,ர என்ற கூட்டெழுத்து போய் ஆவணி மாதமாயிற்று.

புரட்டாசி:

ப்ரோஷ்டபதம் என்பதற்கும் ஆஷாடம் என்பதற்கும் ஆஷாடம் போலவே பூர்வமும் உத்தரமும் உண்டு. பூர்வ ப்ரோஷ்டபதம் தான் தமிழில் பூரட்டாதி ஆயிற்று. அஷ்ட என்பது அட்ட என திரிந்தது. உத்திர ப்ரோஷ்டபதம் என்பது உத்திரட்டாதி ஆயிற்று. இந்த நக்ஷத்தில் பௌர்ணமி ஏற்படுவதால் ப்ரோஷ்டபதி என்பது திரிந்து புரட்டாசி ஆயிற்று.

ஐப்பசி:

ஆச்வயுஜம்,அச்வினி என்பதை அச்வதி என்கிறோம். அதிலே பௌர்ணமி வருகிற ஆச்வயுஜீ அல்லது ஆச்வினீ தான் திரிந்து ஐப்பசி ஆயிற்று.

கார்த்திகை:

க்ருத்திகை நக்ஷத்திரம் தான் கார்திகை. இந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுவதால் அது கார்த்திகை மாதமாயிற்று.

மார்கழி:

மிருகசீர்ஷம் என்பது மார்கசீர்ஷி என்றாயிற்று. இதில் பெரும்பாலும் பௌர்ணமி வரும் மாதம் மார்கசீர்ஷி என்றாயிற்று. அதில் சீர்ஷி என்பது மறுவி மார்கழி என்றாயிற்று.

தை:

புஷ்யம் தான் தமிழில் பூசம் .புஷ்ய சம்மந்தமானது பௌஷ்யம். புஷ்யத்திற்கு திஷ்யம் என்றும் பெயர்.பௌர்ணமி திஷ்யத்திலே வரும் மாதம் தைஷ்யம். அதிலே கடைசி மூன்று எழுத்துக்களும் போய் தை என்றாயிற்று.

மாசி:

மக நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வருவதால் மாகி என்றாயிற்று. இதில் கி என்பது சி -யாக மருவி மாசி ஆயிற்று.

பங்குனி:

பூர்வ பல்குனியை பூரம் என்றும் உத்தர பல்குனியை உத்திரம் என்கிறோம். இந்த இரு நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வருவதால் பல்குனி எனப்படும். அதில் ல எழுத்து மருவி பங்குனி ஆயிற்று.

#ஸ்ரீம்_மகேஷ்சுவாமிஜீ.#ஓம்சிவசிவஓம்
#திருச்சிற்றம்பலம்...#திருச்சிற்றம்பலம்

காரடையான் நோன்பு

 *பங்குனி மாதம் பிறக்கும் நேரமும், மாசி மாதம் முடியும் நேரமும் கூடுகின்ற தருணம்தான் காரடையான் நோன்பு எனும் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து பலவிதமான முறையில் சரிதங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.*

சத்தியவானுக்கும் சாவித்திரிக்கும் திருமணம் நடந்தேறியது. பின்னர் கணவனுடன் அவனுடைய நாட்டுக்குச் சென்றாள் சாவித்திரி. கண் பார்வை அற்ற கணவனின்  தாய், தந்தையரைப் பேணிக் காத்தாள். இந்த நிலையில், மன்னன் ஒருவன் சத்தியவானை நாடு கடத்தினான். தாய், தந்தை மற்றும் மனைவி சாவித்திரி  முதலானோருடன் காட்டில் குடில் அமைத்து வாழ்ந்துவந்தான். 


காட்டில் மரம் வெட்டி, நாட்டிற்குள் சென்று விற்றுப் பிழைப்பு நடத்திவந்தான். சாவித்திரிக்கு மட்டுமே அவனது வாழ்நாளின் இறுதி நாள் தெரியும். வேறு எவருக்கும் அவனின் ஆயுள் விவரம் தெரியாது. அதனால் அன்றைய தினம் அவன், மரம் வெட்டக் கிளம்பும்பொழுது தானும் உடன் வருவதாகச் சொன்னாள் சாவித்திரி.  மாமியார், மாமனாருக்கு உணவு தயாரித்துக் கொடுத்துவிட்டு சத்தியவானுடன் புறப்பட்டாள்.


காட்டில் நல்ல முதிர்ந்த மரத்தைத் தேர்ந்தெடுத்த சத்தியவான் அதனை வெட்டத் தொடங்கினான். அருகே இறை தியானத்தில் இருந்தாள் சாவித்திரி. மதிய வேளை  வந்தது. இருவரும் சாப்பிட்டார்கள். உண்ட களைப்பில் சாவித்திரியின் மடியில் அப்படியே தலைவைத்துப் படுத்தான். தூங்கியவன் அப்படியே ஒரேயடியாகக் கண் மூடினான். இறந்துபோனான். யம தர்மன், சத்தியவானின் உயிரைக் கொண்டுசெல்வதை சாவித்திரியால் பார்க்க முடிந்தது.


மடியில் தலை வைத்து இருந்த சத்தியவானின் தலையை இறக்கித் தரையில் வைத்துவிட்டு, கண்ணில் தெரிந்த யமனின் பின்னே சென்றாள் சாவித்திரி. பின்  தொடரும் காலடிச் சத்தம் கேட்ட யமன் திரும்பிப் பார்த்தான். சாவித்திரி கை கூப்பினாள்.


பத்தினிப் பெண்களால் மட்டுமே தன்னைக் காண முடியும் என்பதால், என்னைக் காணும் வல்லமை பெற்ற நீ தீர்க்க சுமங்கலியாக வாழ்க என வாழ்த்தினான்  யமதர்மன். கணவன் உயிர் மீள இந்த வரம் ஒன்றே போதும். ஆனாலும் தனது மாமியார், மாமனாருக்கு பார்வை திரும்ப வேண்டும் என்றும், தனக்கும்  சத்தியவானுக்கும் நூறு பிள்ளைகள் பிறக்க வேண்டும் என்றும் வரம் பெற்றாள் சாவித்திரி. ‘அப்படியே ஆகட்டும்’ என அருளினான் யம தருமன்.


உடனே விழித்தெழுந்தான் சத்தியவான். இருவரும் வீட்டிற்குத் திரும்பிய தருணத்தில், இருட்டத் தொடங்கியது. அன்றைய தினம் மாசி மாதத்தின் கடைசி நாள். பங்குனி மாதமும் பிறக்கத் தொடங்கியிருந்தது. இரு மாதமும் கூடும் நேரம் அது. அதுவே காரடையான் நோன்பு என்று கொண்டாடப்படுகிறது. விரதம் அனுஷ்டிக்கப்  படுகிறது.

Saturday, March 13, 2021

கொடும்பாளூர் மூவர் கோயில் கட்டுரை eerammagi

 கொடும்பாளூர் இப்படி ஒரு ஊரைப் பற்றி  கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஊரின் சிறப்புகளைப் பற்றி தான் இங்கே சொல்கிறேன் ...





கல்கி எழுதிய பொன்னியின் செல்வனில் நாயகியாக வரும் ராஜராஜனின் மனைவி வானதி கொடும்பாளூரைச் சேர்ந்தவள் என்பதும் ,

சிலப்பதிகாரத்தில், கோவலனும் கண்ணகியும் பூம்புகாரிலிருந்து மதுரை நகருக்கு  இக்கொடும்பாளூர் வழியே சென்றதாகவும் குறிப்புகள் உள்ளது, சிலப்பதிகாரத்தில் இவ்வூர் கொடும்பை என குறிப்பிடப் படுகிறது.

முந்தையசோழநாட்டின் தலைநகரான உறையூரிலிருந்து பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரைக்குச்செல்லும் வழியில் இவ்வூர் அமைந்துள்ளது.

தமிழ் இலக்கியம் , வரலாறு படித்தவர்களுக்கு இவ்வூர் பற்றித்  தெரியும், 

திருச்சியிலிருந்து மதுரை செல்லும் வழியில் விராலிமலையை அடுத்து10 கிமீ தொலைவில் புதுக்கோட்டை மாவட்டத்தில்  இவ்வூர் அமைந்துள்ளது. 


இந்த ஊரில் மற்றொரு சிறப்பு மூவர் கோவில் ...



ஆமாம் இந்த மூவர் கோவிலை பற்றித்தான் இந்த கட்டுரை .


இந்த கொடும்பாளூர்  ஊருக்கு சென்றால்  இரண்டு கற்றளியை காணலாம் . 

இந்த  கற்றளி என்கிற வார்த்தை உங்களுக்குப் புரிந்திருக்க வாய்ப்பு குறைவு. கற்றளி என்றால்  கோயில் கட்டிடக் கலை குறித்து தெரிந்தவர்களுக்கும், தமிழகத்தில் கோயில்களின் பரிணாம வளர்ச்சி குறித்து தெரிந்தவர்களுக்கும் இந்த கற்றளிப் பற்றி நன்கு தெரிந்திருக்கும் . 


கற்றளி என்பது கற்களால் கட்டப்பெற்ற கோயில்களைக் குறிப்பதாகும். இவை கற்கோயில்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இம்முறையில் கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி கட்டப்பெற்றன. இம்முறையில் சுண்ணம் கலவைக் கூட பயன்படுத்தப் பெறவில்லை.


இக்கற்றளிகள் அமைப்பது கி.பி ஏழாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து தொடங்கப் பெற்றது. செங்கற்கள் கொண்டு அமைக்கப் பெற்ற கோயில்களும், மரக் கோயில்களும் பிற்காலத்தில் அரசர்களால் கற்றளிகளாக மாற்றப்பட்டன. தஞ்சை பெரிய கோவில் ,  மாமல்லபுரம் கோவில்கள்  கற்றளிக் கோவில்கள் ஆகும்.




அப்படி கற்களை கொண்டு  அடுக்கி கட்டப்பட்ட கோவில் தான் (கற்றளி) இந்த மூவர் கோவில். இந்த கோவில் பார்ப்பதற்கு மாமல்லபுரம் கோவிலைப் போன்ற தோற்றத்தைக் கொண்டே இருக்கும் . கி.பி 10 ஆம் நூற்றாண்டில் , கொடும்பாளூரை ஆண்ட வேளிர் குல அரசரான  பூதிவிக்கிரமகேசரி என்பவரால் இந்த  மூவர் கோயில் கட்டப்பட்டது.


பிரம்மாண்ட படைப்பாக எழும்பியிருக்கும் இக்கற்றளியை ,  பூதி விக்ரம கேசரி  தனது பெயராலும், தனது மனைவியர் வரகுணவாட்டி, கற்றளை பிராட்டியார் ஆகியோரது பெயராலும் மூன்று கற்றளிகளை எழுப்பி வைத்தார்  என்று கூறப்படுகிறது.  எனவேதான்   இக்கோவிலுக்கு "மூவர் கோவில்' எனும் பெயர் வந்தது,  இது அங்குள்ள சுவற்றில்  அம்மன்னனின் கல்வெட்டு மூலமாக அறியமுடிகிறது. அது மட்டுமல்ல இம் மன்னனுக்கு பராந்தக வர்மன், ஆதித்த வர்மன் என இரு மகன்கள்  இருந்ததை அங்கு இருக்கும்  வடமொழிக் கல்வெட்டின் வாயிலாக நாம் அறிய முடிகிறது.





இந்த கோவிலை  மூவர் கோவில்  என்று குறிப்பிட்டாலும் ஐவர் கோவில் என்றும் கூறப்பட்டு வருகிறது, இதற்கு காரணம்  இக்கோயிலுக்கு சற்று கிழக்கே ஐந்தலை என்று ஐந்து கோயில்கள் இருந்துள்ளன. இவை அழிந்து தற்போது அடித்தளம் மட்டுமே காணப்படுகிறது.



மூன்று கோயில்களிலும் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.  (தற்பொழுது இருக்கும் இரண்டு கோவிலில் ஒரு கோவிலில் மட்டும் சிவ லிங்கம் உள்ளது , மற்றொரு கோவில் கருவறையில் எந்த சிற்பமும் இல்லை )  இம் மூன்று கோயில்களும் காலபோக்கில் ஒரு பக்கம்  இடிந்து உள்ளது .  தற்போது அதன் அடித்தளம் மட்டுமே உள்ளது. 




இக் கோயிலானது தாமரை மலர் போன்ற பீடத்தின்மீது அமைக்கப்பட்டுள்ளது.  மகா மண்டபத்தை அடுத்து நந்தி மண்டபம், பலிபீடம் அமைந்து இருந்ததற்கான சுவடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன.  பிரகாரச் சுற்றில் பரிவார தேவதைகளுக்காகக் கட்டப்பட்டிருந்த  சந்நிதிகளும் அஸ்திவாரங்கள் மட்டுமே இன்று தென்படுகிறது. கோவிலுக்கு அருகில்  வட்ட வடிவில் நேர்த்தியாக அமைந்த படிக்கிணறு இன்று வரை எந்த சேதாரமும் இல்லாமல்  அமைந்துள்ளது.   இக்கோயிலைச் சுற்றி பெரிய திருமதில் இருந்தற்கான தடயம் மட்டுமே எஞ்சியுள்ளது.











மூலவர் விமானத்தின் கற்கள் ஒன்றின் மீது ஒன்றாக அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. ஒரு கல்லின்மீது மற்றொரு கல்லை அடுக்கி அந்த பாரத்தைக் கொண்டு விமான உட்பகுதி கூம்பு போல காணப்படுகிறது.  



கோவில் பிரகாரத்தைச் சுற்றி  புராணக் கதைகளுக்கு ஏற்றவாறு சிற்பங்கள் செதுக்கப்பட்டு உள்ளன. அவற்றுள் அர்த்தநாரீசுவரர், வீணாதர தட்சிணாமூர்த்தி, காலந்தக மூர்த்தி, பிக்ஷாடன மூர்த்தி, கஜசம்ஹார மூர்த்தி, திரிபுராந்தகர், ஆலிங்கனமூர்த்தி, கங்காதர மூர்த்தி உள்ளிட்ட சிற்பங்கள் உள்ளன.







அர்த்தநாரீசுவரர் சுவாமி சிலை பெரும்பாலான கோவில்களில் காண முடியாது , ஆனால் இங்கு மிக தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருப்பதைக் காண முடியும்.



மற்றொரு இடத்தில் யாளியின் வாய்க்குள் மனித உருவம் , யாளியின் வாய்க்குள்ளேயும்  மனிதன் சண்டை போடுகிறான். இது போன்ற சிற்பங்கள் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்துகின்றன . 





கோவிலை நான் படம் பிடித்து உங்கள் பார்வைக்கு வைத்திருக்கிறேன், படத்தை மட்டும் பார்க்காமல் நேரிலும் ஒரு முறை சென்று வாருங்கள், உங்கள் குழந்தைங்களை அவசியம் அழைத்துக்கொண்டு செல்லவேண்டிய இடமாக உள்ளதால் அவர்களையும் அழைத்துச் செல்லுங்கள். நம் முன்னோர்களின் கலைநயம் மற்றும் வரலாறு பற்றி அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது நமது கடமையும் கூட .

நான் சொன்ன செய்திகளை விட இன்னும் நிறைய செய்திகள் அங்கே நேரில் கண்டு தெரிந்து கொள்ளலாம்.


ஒரு முக்கியமான தகவலையும் சொல்லி விட்டு இந்த கட்டுரையை முடிக்கிறேன் .


அந்த ஊரில்   விரிந்து பரந்த நிலப்பரப்பில் சுற்றிலும் பசுமை போர்த்திய வயல்கள் அமைந்திருக்க, "மூவர் கோவில்'  கம்பீரமாகக் காட்சியளித்து நிற்கின்றன. இக்கோவில் தஞ்சை பெரிய கோவில் எழுப்பப்படுவதற்கு முன்னோடியாக விளங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




~ஈரநெஞ்சம் மகேந்திரன்