Wednesday, September 07, 2016

ஒரு மலரின் வாழ்க்கை ஒருநாள் தான் என்றாலும் மணம் வீசி மகிழ்விக்கிறது

ஒரு மலரின் பயணம்  :
~~~~~~~~~~~~~~~~
ஒரு மலரின் வாழ்க்கை ஒருநாள் தான் என்றாலும் மணம் வீசி மகிழ்விக்கிறது .
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


இறக்கும் நேரம் தெரிந்து விட்டால்
வாழும் காலம் முழுவதும்
நரகம் ஆகிவிடும் ...
அதனால்தான் இறக்கும் நேரத்தை
இறைவன் மறைத்து வைத்தான்.

பிறக்கும் அனைத்து உயிர்களுக்கும் மரணம் என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று தான் . ஆனால் அந்த மரணம் எந்த ரூபத்தில் எப்போது வரும் என்று யார் அறிவார் ?

ஆனால் இங்கே ஒரு தேவதை தான் ஜனிக்கும் முன்பே இறக்கும் தேதியை குறித்து வைத்துக் கொண்டு ஜனித்தவள். ஆயினும் தான்
வாழும் நாட்களில் கலைக்காக தன்னை அர்பணித்துக் கொண்டு தான் வாழும் ஒவ்வொரு நாளினையும் கொண்டாடிக்கொண்டு இருக்கிறாள் .

கடலூர் மாவட்டம், சாவடி பகுதியை சேர்ந்த தம்பதியர் அமிர்தராஜ், ஜீவா. இவர்களது ஒரே மகள் ஏ.ஜே. ஏஞ்சலின் செரில், வயது 15. தந்தை அமிர்தராஜ் தனியார் ஊழியர். தாய் ஜீவா தனியார் பள்ளி ஆசிரியை.  இவர்கள் தங்கள் முதல் பெண்  குழந்தையை  ‘பெயர்’ தெரியாத ஒரு கொடூர நோயால் ஒரு வயதிலேயே பறிகொடுத்தார்கள் . அந்த குழந்தையின் இறப்பில் மருத்துவர்கள்  கொடுத்த மற்றொரு அதிர்ச்சியூட்டும் தகவல் , அடுத்ததும் பெண் குழந்தையே  பிறந்தால் இதே நோய் தாக்கும் என்பது தான் .

அமிர்தராஜ்  ஜீவா தம்பதியர்கள் மருத்துவர்கள் அறிவுறுத்தியதை மனதில் கொண்டு பயத்துடனே வாழ்ந்து வந்தார்கள் .  10 வருடம்  கழித்து  ஜீவா கருவுற்று 90 நாட்கள் கழித்து ஒரு பரிசோதனையில் கரு பெண் குழந்தை என்றும் அவளுக்கும் இதே கொடிய நோய் இருப்பதும்  மருத்துவர்கள் உறுதி படுத்தினர். மேலும் ஆறுதலாக  மருத்துவர்கள்  தற்போது தமிழகத்தில் வேலூரில் உள்ள CMC மருத்துவமனையிலும், சென்னை ராமசந்திரா மருத்துவமனையிலும் மட்டுமே  மருத்துவர்களும் சிகிச்சையும்  உள்ளது என்றனர். மேலும் இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் மருந்து மாத்திரை எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்  . இடையில் நிறுத்தக் கூடாது. அதுவும் உயிர் பிழைக்க  அல்ல மரண தேதியை தள்ளி போட மட்டுமே  என்றனர்.   குழந்தையின் மீது உள்ள ஆசையிலும் கடவுள் மீது உள்ள நம்பிக்கையிலும் கருக்கலைப்பு செய்யாமல் குழந்தை பெற்றனர்.

  இந்த நோயில், நான்கு வகை உள்ளது. ( இதிலும் அரிய வகை பாதிப்புதான் ஏஞ்சலின் செரிலுக்கு உள்ளது )  . இந்த நோய் இருந்தால், ரத்தத்தில் உள்ள உப்பு தன்மை சிறுநீரில் வெளியேறி விடும். சிறுநீரில் வெளியேறாமல் இருக்கவே, மாத்திரை சாப்பிட்டு வரவேண்டும். உடலில் ரத்தத்திலுள்ள வெள்ளை அணுவும் குறைவாக இருக்கும். மாத்திரை நிறுத்தி  விட்டால் ரத்தத்திலுள்ள வெள்ளை அணு குறைவாக இருக்கும் காரணத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்  , அதனால் வெளியிலிருந்து தாக்கும் நோய் பாதிப்பும் அதிகமாக இருக்கும். ஒரு கட்டத்தில், நீர்த்தன்மை முழுமையாக போய், வாந்தி பேதி ஏற்பட்டு  உயிழப்பு ஏற்படும் .  இந்த நோய் வந்து விட்டால் பூரண குணமடைய முடியாது மரணத்தை தள்ளி போடமட்டுமே தற்பொழுதுள்ள   சிகிச்சையில் முடியும்.

அமிர்தராஜ் மற்றும்  ஜீவா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டதால் அவர்களது பெற்றோர் வீட்டில் ஆதரவு இல்லை . மேலும்  போதிய வசதி படைத்தவர்கள் இல்லை என்றாலும் இருவரும் ஏஞ்சலின் செரில் பிறந்தநாள் முதல் தங்களது உழைப்பில்  பெரும் தொகையை தனது குழந்தைக்காக செலவிட்டு கவனித்து வருகிறார்கள் . அவளுக்கென்று எது விருப்பமோ அதில் இவர்களும் கவனத்தை செலுத்தி அவளுக்கு விருப்பமானது அனைத்தும் செய்து கொடுத்து வருகின்றனர்.

தற்பொழுது ஏஞ்சலின் செரில் வயது 15  ,  அவள் விருப்பப்படி பரத நாட்டியம், மேற்கத்திய நடனம், கிராமிய நடனம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, சிலம்பம் என கலைகள் பலவும் கற்றுக் கொண்டு பல மேடைகளை அலங்கரித்து வருகிறாள் .

கடலூர் செயிண்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி பள்ளியில் 11ம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறாள். படிப்பில் எப்போதுமே முதல் மாணவி தான். 

 

சமீபத்தில் IAS சகாயம் அவர்கள் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில்  ஏஞ்சலின் செரிலுடைய நடன நிகழ்ச்சி நடைபெற்றது . அதைப் பார்த்து சகாயம் அவர்கள் ஏஞ்சலின் செரில் பற்றியும் அவளது நடனத்தைப் பற்றியும் புகழ்ந்து இனி வரப்போகும் காலங்களில் எங்களது குழுவின் நிகழ்ச்சிகள் யாவிற்கும் ஏஞ்சலின் செரிலின் நடனம் கண்டிப்பாக இருக்கும் என்று  கூறியதும் ஏஞ்சலின் செரில் பெரும் உற்சாகம் அடைந்துள்ளாள்.

அது மட்டும் இல்லாமல் வைகை நண்பர்கள் உதவியால் மலேசியாவில் உள்ள தமிழ்  கலை சங்கம்  ஒன்றில்   ஏஞ்சலின் செரில் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடும் செய்து வருகிறது.

 

இந்தியாவில் டெல்லி மும்பை போன்ற நகரங்களில்  நடந்த கலை நிகழ்ச்சிகளுக்கு  இவளது நடனம்  சிறப்பு அந்தஸ்த்தை கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை .

எல்லாவற்றுக்கும் மேலாக கடலூரில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து அசத்தி வருகிறாள்.

 

மருத்துவ ரீதியான பல கஷ்டங்கள் தனக்கிருந்தும்  மரணத்தின் தேதி தெரிந்தும் அவற்றையெல்லாம் வென்று எப்போதும் சிரித்த முகத்துடனும் மற்றவர்களை உற்சாகமூட்டும்  வார்த்தை ஜாலங்களை கொண்டும்  கலகலவென சுற்றித்திரியும் இந்த தேவதையிடம் நாம்  கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம்.

ஏஞ்சலின் கூறும் போது, 
" வாழ்க்கை இவ்வளவுதான் தெரியும். நானும் வாழ்ந்து என்  கலையால் மற்றவர்களையும் மகிழ்வித்து பார்க்கலாம். நடனம் என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும் .  டாக்டர்கள் என்னை யோகா கத்துக்க  சொன்னாங்க , அதில்  எனக்கு அவ்வளவா ஆர்வம் இல்லை . நடனம் கத்துக்க  ஆசைப்பட்டேன் , அம்மா அப்பா அதற்கு முறையான குருக்களை கொண்டு எனக்கு கற்றுக் கொடுக்க ஏற்பாடும் செய்து கொடுத்தார்கள் . இப்போ நிறைய மேடைகளில் என்னுடைய நடன நிகழ்ச்சி நடந்து வருகிறது. என்னுடைய நடனத்தை பார்த்து என்னை பிறர் உற்சாகப்படுத்துவது  எனக்கும் என் பெற்றோருக்கும் மேலும் சந்தோஷத்தைக் கொடுக்கிறது . நான் இருக்கும் வரைக்கும் அவங்களை கண் கலங்காம பார்த்துக் கொள்ளணும் என்று ஆசை படறேன் . என்னுடைய மருத்துவ செலவிற்கே ஏகப்பட்ட கடன் வாங்கி இருக்காங்க அது கொஞ்சம் வருத்தமாக இருக்கு . நான் அழும் போதும் வலியால் துடிக்கும் போதும் என்னுடைய அம்மா அப்பா வருத்தப்படுவதை பார்ப்பது தான் என் மற்ற வலிகளை விட பெரும்  வலியாக  இருக்கும் . என்னுடைய வளர்ச்சியில்  மட்டுமே அவங்க பெரும் சந்தோஷப்படறாங்க . 

எனக்கு  என் வாழ்நாளில் ஒருமுறையாவது ராகவா லாரன்ஸ் மாஸ்டர் கூட சேர்ந்து டான்ஸ் பண்ணனும்னு ஒரு ஆசை இருக்கு . என் ஆசையை பற்றி அவருக்கு மெயில் கூட அனுப்பியிருக்கேன் .

( ""Ragava Lawrence uncle,
    நான் "ஏஞ்சல்" கடலூரில் இருந்து, கனவு காணுங்கள் என்ற கலாம் அவர்கள் கூறியதை போல் நான் கனவு காண்கிறேன் உங்களுடன் நடனமாட......
          Uncle நான் பரதம், கதக், கோலாட்டம், கும்மி, கிராமிய நடனம்,கரகம்,கோகாலி, பொய்க்கால் குதிரை,ஒயிலாட்டம் மற்றும் சிலம்பம் ஆடுவேன்.......
    உங்களுக்கு western பிடிககும் என்பதால் இப்போது அந்த வகுப்பிற்கும் போகிறேன் please uncle என் ஆசை கனவு எல்லாம் நீங்க தான்.
          என்னை பார்பீர்களா????"" ) 

இது தான் என்னுடைய மெயில்

 அவரிடம் போய் சேர்ந்ததான்னு தெரியல. இப்போது என்னைப் பற்றிய இந்த கட்டுரை மூலமாவது தெரிந்துக் கொண்டு என் ஆசையை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன். "

ஏஞ்சலினின் அம்மா ஜீவா கூறும் போது , " எங்களுக்கு எல்லாமே அவள் தாங்க . இவள் எப்போது கண் மூடுவாள் என்பது தெரியாது . ஆனால் அது வெகு தொலைவில் இல்லை என்பதை நினைச்சா ரொம்பவே கஷ்டமா இருக்கு .  அவளுடைய சந்தோஷம் தான் எங்களுக்கு இப்போதிருக்கும் ஒரே ஆறுதல் . அவள் இவ்வளவு சிறப்பு வாய்ந்தவளா வருவாள் என்று நினைத்தும் கூட பார்க்கவில்லை. சில மருத்துவர்கள் இவள் இன்னும் உயிரோடு இருப்பதே ஆச்சர்யமாக இருக்கிறது என்பார்கள் . எல்லாம் கடவுளின் ஆசிர்வாதம்.  எங்களுக்கு நிறைய கடன் இருக்கிறது மாதத்திற்கு இவளுடைய மருத்துவ செலவே 10,000 தாண்டும் போதிய வருமானம் இல்லை என்றாலும் இவளுக்காக நாங்கள் இன்னும் எவ்வளவோ செய்யலாம். தமிழக அரசிடமும பிற தன்னார்வலர்களிடமிருந்தும்   இவளுக்கு என்று தனி சலுகைகளை எதிர்பார்க்கிறோம் .  அது  இவளுடைய கலை வளர்ச்சிக்கும் மன மகிழ்ச்சிக்கும் இன்னும் கொஞ்சம் ஊக்கமாக இருக்கும்  என்பது திண்ணம் " .

இந்த சின்னஞ்சிறு பெண் வாங்கியிருக்கும் பட்டங்களில் சில :-
நாட்டிய பேரொளி
நாட்டிய தேவதை 
நடன மயில்
நாட்டிய சுடர்மணி
பெஸ்ட் சைல்ட்
கிராமத்து மயில்
வளர் இளம் மணி
Inline image 1
இந்த தேவதையை நீங்களும் ஊக்கப்படுத்த எண்ணினால் தொடர்பு கொள்ளுங்கள் 9092142475 ஜீவா ( நாட்டிய தேவதை ஏ.ஜே. ஏஞ்சலின் செரில் அவருடைய தாயார் )

~ஈரநெஞ்சம்

Sunday, June 12, 2016

சிங்கார சென்னை..!!!..???



பெயருக்கு ஏற்ற மாதிரியே அதிகரிக்கும் மேம்பாலங்களும், வித விதமான பூங்காக்களும், தெருவுக்கு ஒரு கல்லூரி; வீதிக்கு ஒரு பள்ளி, உலகத் தரம் வாய்ந்த கண் கவரும் ஷாப்பிங் மால்களும், விண்ணை தொடும் கட்டிடங்களும், பொழுது போக்கு அம்சங்கள் கொண்ட இடங்களும், உலகமே வியக்கும் சினிமா உலகம், உலகத்தின் இரண்டாவது (மெரினா)பெரிய கடற்கரை, பணப் புழக்கம் நிறைந்த பெருநகரத்தில் நிறைந்து வழிகிறது. எலெக்ட்ரிக் ரயில்கள், பறக்கும் ரயில்களுக்கு மத்தியில், இன்னும் விரைவில் தமிழக அரசு அறிவித்துள்ள மோனோ ரயில்களும் சென்னை மாநகரில் வலம்வர இருக்கிறது.



பிரமிக்கவைக்கும் இந்த மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஒரு புறம் இருந்தாலும் வந்தோரை எல்லாம் வாழ வைக்கும் தமிழ் நாட்டின் தலைநகராம் சென்னையில் ஒரு திருஷ்டிப் போல் வசிக்க இருப்பிடம் இன்றி லட்சக்கணக்கான மக்களும் வீதியில் வசிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

நொடிக்கு நொடி மாற்றங்கள் கொண்டிருக்கும் சென்னையில் சாலைகளிலும், தெருக்களிலும், நடைபாதைகளிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களின் வாழ்வில் இந்த மாற்றங்கள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை. சொல்லப்போனால் இந்த மாற்றங்களால் அந்த மக்கள் மேலும் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதே உண்மை.

யார் இந்தத் தெருவோரவாசிகள்?
அவர்கள் ஏன் அங்கே வசிக்கிறார்கள்?
அவர்களது தேவைகள் தான் என்ன?
பரபரப்பு நிறைந்த சாலையில், கடந்து செல்லும் பாதையில் நீங்கள் பல முறை சலனமின்றிக் அவர்களை கண்டும் காணாமலும் கடந்து சென்றிருப்பீர்கள். கொஞ்சம் கவனித்து பாருங்கள் பெரும் சாலைச் சந்திப்புகளிலோ, பளபளப்பான மால்களின் அருகிலோ அவர்கள் உங்கள் கண்ணில் பட்டிருக்கும் ஞாபகம் வரும்.
ஆம் அவர்கள் தான் நடைபாதைவாசிகள். நடைபாதைகள் சுருங்கிக்கொண்டிருக்கும் சென்னையில் நடைபாதைகளே வீடுகளாகக் கொண்டிருக்கும் மக்கள்.

இவர்கள் யார் ? ஏன் இங்கெல்லாம் வசிக்கிறார்கள் ?
பலர் இவர்களை பிச்சைக்காரர்கள் என நினைத்ததுண்டு, ஆனால் இவர்கள் பிச்சைக் காரர்கள் அல்ல... தலைமுறை தலைமுறைகளாகத் தெருவோர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பாவி மக்கள் அவர்கள். இவர்கள் கடுமையான உழைப்பாளிகள். பிரம்மாண்டமான சென்னையை உருவாக்கியதில் இவர்கள் பங்கு மிக முக்கியமானது. ஆனால் இவர்களுக்கு இங்கே தங்க இடம் கொடுக்கவில்லை இந்த சென்னை.

ஒவ்வொரு இடங்களிலும் இவர்களது உழைப்பு இல்லாமல் சென்னை பெயர் பெறவில்லை என்பதே உண்மை. தொழிற் சாலைகளில் சுமை ஏற்றி இறக்குதல், கடைகளில் எடுபிடி வேலைகள் செய்தல், வீடுகளில் பாத்திரம் கழுவுதல், சுத்தம் செய்தல், தெருக்களைச் சுத்தம் செய்தல் முதலான பல பணிகளை இவர்கள் செய்கிறார்கள். செருப்புத் தைத்தல், சைக்கிள் பழுது பார்த்தல், குடை, பிளாஸ்டிக் பொருட்களில் ஏற்பட்ட பழுதுகளை நீக்குதல், விலை குறைந்த பொருட்களை நடைபாதைகளிலும் ரயில்களிலும் விற்பனை செய்தல், தெருவோர மற்றும் தள்ளுவண்டி உணவகங்கள் நடத்துதல், ரிக்ஷா ஓட்டுதல், மீன்பாடி வண்டி எனப்படும் பொருட்களை ஏற்றிச்செல்லும் மூன்று சக்கர வாகனம் ஒட்டுதல் போன்ற தொழில்களையும் செய்துவருகிறார்கள். இவர்களில் முக்கால்வாசி பேர் மூன்று நான்கு தலைமுறைகளுக்கு முன் பிழைப்புத் தேடிச் சென்னைக்கு வந்தவர்கள். எல்லோருக்கும் வழி காட்டும் இவர்களுக்கு வசிக்க இடம் தரவில்லை சென்னை.


இவர்களில் சிலரிடம் இவர்களை பற்றி கேட்ட பொழுது :

“இப்டித்தான் நெரிய பேரு வந்து கேட்டுக்கினு போறாங்க, ஆனா எங்களுக்கு ஒரு நல்லதும் நடக்கறதில்ல. ஓட்டு வாங்க வராங்க, வூடு தரேன்னு வாக்குறுதி கொடுக்குற MLA வுக்கு வாக்கை நெறவேத்துறதுக்கு மனசு இல்லை . பொறந்ததுலேர்ந்து தங்கறதுக்கு வூடில்லாம நாங்க இங்கதான் கஷ்டப்பட்டுக்கினு கெடக்கோம். எங்களுக்கு ஒரு வூடு குடுக்க ஒரு அரசாங்கமும் இன்னும் வரலை.”
இவர்களது துயரம் பட்டியல் இட்டால் அது எண்ணிலடங்காதது. உணவு, உறக்கம், கழிப்பிடம், பாதுகாப்பு என மிக முக்கியமான அத்தியாவசிய தேவைகள் இவர்களுக்கு துளி அளவு சதவிகிதம் கூட கிடைத்தது இல்லை.


கழிப்பிடம் :
~~~~~

கழிப்பறை கட்ட அரசாங்கமே மானியம் வழங்கி வரும் சூழலில் வீடே இல்லாத இவர்களுக்கு, கழிப்பறைத் தேவைகள் பெரும் சிரமமாகவே இருக்கிறது. நெடுந்தூரம் நடந்து திறந்திருக்கும் மாநகராட்சி கழிப்பிடங்களை தான் பயன்படுத்த முடியும் அங்கும் சுத்தம் சுகாதாரம் எதுவும் இவர்களுக்கு கவலை இல்லை , கழிப்பிடங்களையே குளியலறைகளாகவும் உபயோகிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அங்கு குளிப்பதிலும் அபாயம் உள்ளது, சில காமுகர்கள் தெரியாமல் வருவது போல் வேண்டுமென்று எட்டி பார்ப்பது இங்குள்ள பெண்கள் பெரும் அவஸ்தைகளுக்கு உள்ளாகின்றனர். அது மட்டும் இல்லாமல் மாநகராட்சி கழிப்பிடங்களை இரவு ஏழு அல்லது எட்டு மணிக்குள் மூடிவிடுவது இவர்களுக்குப் பெரிய பிரச்சினையாக உள்ளது. இரவு நேரங்களில் ஆண்கள் ஒதுக்குப்புறத்தில் சமாளித்துக் கொள்கிறார்கள். ஆனால் பெண்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகிறார்கள்.

இரவு நேரத்தில் சாலையில் உறங்கும் பொழுது பெரும் வீட்டில் வசிக்கும் சில காமுகர்கள் வேண்டுமென்று குடித்து விட்டு பெண்களை உல்லாசத்திற்கு அழைப்பதும், பெண்கள் படுத்திருக்கும் சாலையில் பெண்களுக்கு அருகில் வந்து படுத்துக்கொண்டு சில்மிஷத்தில் ஈடுபடும் இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடிவது இல்லை .


விபத்துகள் :
~~~~~

பல படங்களில் இந்த காட்சியை நாம் கண்டிருப்போம். சாலையோரம் தூங்கிக்கொண்டிருக்கும் மக்கள் மீது லாரி ஏறுவதுபோல, ஆனால் அதை பற்றியும் சாலையில் படுத்திருப்பவர்களைப் பற்றியும் நாம் என்றாவது சிந்தித்து இருக்கிறோமா? சென்னையில் இது போன்ற விபத்துகள் பல இடங்களில் அவ்வப்போது நடக்கின்றன. காவல் நிலையங்களில் இதற்கான வழக்குகள் ஏராளமாக தேங்கி இருக்கிறது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான நீதி கிடைப்பதும் இல்லை.


மழைக்காலத்தில் :
~~~~~

மழைக்காலங்களில் இவர்களின் பிரச்சினைகள் சொல்ல முடிவதில்லை . சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு மட்டும் அல்ல ஒவ்வொரு வெள்ள காலங்களிலும் பெருமளவிற்கு உயிர்களை பறிக்கொடுக்கின்றனர்.
படுப்பதற்கு இடம் இல்லாமல் ஒவ்வொரு மேம்பாலங்கள் , பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என சென்று இரவு முழுவதும் குழந்தைகளுடன் நின்றபடியே அவதிப்படுகிறார்கள். சிறிய இடம் கிடைத்தால் போதும் குழந்தைகளை ஒன்றின் மேல் ஒன்று படுக்க வைத்து உறங்க செய்வதைப் பார்க்கும் பொழுது வேதனை நெஞ்சை அடைக்கிறது. இதில் ரயில் நிலையங்களில் உள்ள அதிகாரிகளும் போலீஸ்காரர்களும் பார்த்தால் அடித்து துரத்திவிடுவார்கள் .


படிப்பு :
~~~~~

பெரும்பாலுமான பெற்றோர்களுக்கு தங்களைப் போன்று பிள்ளைகளும் அவர்களது சந்ததிகளும் கஷ்டங்களை அனுபவிக்கக் கூடாது என்ற எண்ணம் உள்ளதால் தங்களது குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற ஏக்கம் அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கும் படிப்பதில் ஆர்வம் அதிகம் இருக்கிறது. இதனால் அருகில் உள்ள அரசு, மாநகராட்சி பள்ளிகளில் சேர்த்து விடுகின்றார்கள்.
ஆனால் ரோட்டில் அமர்ந்து படிப்பதில் பெரும் பிரச்சினைகள் இருக்கிறது. அதையும் தாண்டி பத்தாம் வகுப்பிற்கு வந்ததும் ஜாதி சான்றிதழ் தேவைப்படுகிறது. வீட்டிற்கே வழி இல்லை ஜாதி சான்றிதழுக்கு எங்கே போக என்று படிப்பிற்கு முற்றுப் புள்ளி வைக்கிறார்கள். இப்படித்தான் பல மொட்டுக்கள் கல்வி சோலையில் மலர்வதற்கு முன்பே கருகி விடுகின்றன என்பது நிதர்சனம்.

இந்த கட்டுரையில் இவர்களை பற்றி நான் எழுதியது மிக மிகக் குறைவுதான் ஆனால் இவர்களது துயரம் சுதந்திர காலத்திற்கு முன்பிருந்தே இருக்கின்றது என்றால் நீங்கள் கொஞ்சம் உங்கள் மனதோடு சிந்தித்து பாருங்கள்.
இதெல்லாம் இவர்கள் சுதந்திர காலத்தில் இருந்தே அனுபவிக்கற கொடுமை. வீடு கிடைக்கும் நாள் தான் இவர்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும் நாள்.


வழக்கு :
~~~~~

இவர்களுக்கு முழுமையான முகவரி இல்லாததினால் பல முடிக்கப்படாத வழக்குகள் இவர்களின் மீது சுமற்றப்பட்டு சூழ்நிலை கைதிகளாகவும் உள்ளார்கள். ஆனால் இவர்களது குறைக்கேட்க எந்த சீமானும் இதுவரை செவி கொடுத்தது இல்லை. இதனால் அளவற்ற இழப்பு மற்றும் சூழ்நிலை கைதிகளாகி இவர்களே சமூக விரோதிகளாக மாறும் கொடுமையும் ஏற்படுகிறது. உயிர், உடைமை, மானம், கற்பு என எதற்குமே பாதுகாப்பு இல்லாத இந்த அவலநிலையில் வாழும் இந்த மக்கள் நிலை என்று மேன்மை அடையுமோ அன்று தான் அது உண்மையான ஜனநாயகமாக இருக்கும்.

இதை விட பெரும் சமூகக் கொடுமை என்னவென்றால் சாலையோரம் வசிக்கும் இவர்களைப் பற்றிய முழு கணக்கெடுப்பு இதுவரை எடுத்து முடிக்கப்படவில்லை. இந்த அப்பாவி மக்களிடம் உடல் உறுப்பு திருடும் அவலமும் நடந்தேறிவருகிறது. இவர்களது குழந்தைகள் ஏராளமானோர் காணாமல் போனது உண்டு, அதைப் பற்றியும் வழக்குகள் பதிவானது இல்லை. நம் நாட்டில் முகவரி உள்ளவர்கள் மட்டும் தான் இந்திய பிரஜை என்ற வகுக்கப்படாத சட்டம் உள்ளது போலும்.


*** இவர்களை பற்றி கூறி இவர்களுக்கு ஒரு விடிவு காலம் கிடைக்க நாமும் சிறு துரும்பாக இருக்க வேண்டும் என்று நண்பர்கள் பலரிடம் கூறியதில் .
பலர் கருத்துக்கள் கூறினார்கள் அதில் சில :

* இவர்களை நாம் திருத்தி வீட்டு நடுவில் வைக்க முடியாதுங்க ரோட்டை தேடித்தான் போவார்கள் இவர்கள் இப்படித்தான்.

* இவர்களில் பலருக்கு பாலியல் தொழில் உள்ளது. அதனால் சாலையே இவர்களுக்கு போதிய இடமாக இருக்கிறது.

* இவர்களுக்கு வீடு இருக்குங்க ஆனா அதை வாடகைக்கு கொடுத்து விட்டு ரோட்டுல வந்து உட்கார்ந்துக் கொள்வார்கள்.

* இவர்களில் சிலருக்கு அரசாங்கத்தால் வீடுகள் ஒதுக்கப்பட்டும் உள்ளது. ஆனால் சென்னையை விட்டு ஒதுக்குப் புறமாக கொடுக்கப்பட்டு இருப்பதால், இவர்கள் வாழ்வாதாரத்தைத் தேடி தினமும் சென்னைக்கு வர வேண்டிய சூழ்நிலையில் இருப்பதால் கிடைக்கும் கூலியில் பாதிக்கும் மேல் பயணத்திற்கே செலவாகி விடுகிறது.

* உங்களுக்கு எதுக்கு இந்த வேலை.

* இவங்க ரோட்டில் இருக்கும் போது அவசர எடுபிடி வேலைக்கு ஆட்களை தேடி அலைய வேண்டியது இல்லைங்க.

* பரிதாபமானவர்கள் இவர்களுக்கு ஏதாவது நல்லது நடந்தாக வேண்டும்.

* இவர்கள் சாலையில் இருப்பதால் விபத்துகள் அதிகரிக்கிறது.

* அரசு இவர்கள் மீது அலட்சியம் காட்டி வருகிறது.
இலவசமாக கிடைக்கும் எந்த அரசு சலுகையும் இவர்களுக்கு கிடைப்பதில்லை. காரணம் முழுமையான முகவரி இல்லாததால் அடையாள ஆவணங்கள் பெற முடிவதில்லை.

* இவர்களுக்கென்று போராட யாரும் இதுவரை இல்லை. இவர்களுக்குள்ளாகவே அமைப்புகளை நிறுவி இவர்கள் இவர்களது மேம்பாட்டிற்காக போராடுகிறார்கள்.

ஆனால் தீர்வுகள் தான் இல்லை.

எங்களுடைய இந்த பதிவின் நோக்கம் எல்லாம் இதுதான் "ஒரு தாய் மக்கள்", "ஒன்றே குலம்", "ஒரே ரத்தம்" என்பதெல்லாம் பலருக்கு வார்த்தை வழியிலும், எழுத்து வழியிலும் மட்டுமே உள்ளது.

அரசாங்கம் இவர்களுக்கு என்று தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, தொலைநோக்குப் பார்வை கொண்டு இவர்களுக்கு கூடு கட்டிக் கொடுத்தால் மட்டும் போதாது. மீண்டும் இவர்கள் சாலைக்கு குடி வராமல் தடுக்க வேண்டும்.

மக்களுக்காக வாழ்பவர்களே; மக்களோடு வாழ்பவர்களே; இவர்களோடும் ஒரு நாள் வாழ்ந்து பாருங்கள்..! இவர்கள் துயரம் புரியும்.

பல உயிர்களை பறிகொடுத்தாலும் நம்பிக்கையை பறிகொடுக்காமல் வாழும் இவர்களை ஏமாற்றி வாழும் தரமற்ற குணத்தோடு நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் ?

~மகேந்திரன் பழனிசாமி

Monday, January 18, 2016

கபடிக்கு ஒரு மின்னல் வீராங்கனை


!!! தர்ஷினி மாற்று மாற்றுதிறனாளி அல்ல மின்னல் வேக வீராங்கனை !!!
மனதில் திடமிருந்தால் மலைகள் கூட தடைகள் செய்யாது என்பதை நிரூபிக்கு வகையில் தன் குறைகளை கடந்து சாதித்திருக்கிறாள் 15 வயது சிறுமி தர்ஷினி .
கோவை சுந்தராபுரம் பகுதியில் கூலி வேலை செய்து வரும் திரு.பாலகிருஷ்ணன், திருமதி.ஜெயந்தி தம்பதியினரின் மூன்றாவது மகள் தர்ஷினி . பிறவி முதலே காது கேட்கும் திறனும் பேசும் திறனும் இல்லாதவர் , இருந்தும் யோகா மற்றும் நடனம் பயிற்சி பெற்ற தர்ஷினியின் சிறப்பு அம்சம் ஒரு கபடி வீராங்கனை. தனிப்பட்ட முறையிலும் குழுவாகவும் எண்ணற்ற போட்டிகளில் வெற்றிக் கோப்பைகளை வென்றுள்ளார்.

  
ஆறாம் வகுப்பு படிக்கும் போது விஸ்வநாதன் கபடி பயிற்சியாளரிடம் கபடி விளையாட்டில் பயிற்சி மாணவியாக சேர்ந்த தர்ஷினி அப்போதே கல்லூரி அளவிலான போட்டிகளில் கலந்துக் கொள்ளும் அளவிற்கு விளங்கினாள் .
பயிற்சியாளர் விஸ்வநாதன் கூறும் பொழுது கபடி விளையாட்டுக்கு கிடைத்த மின்னல் வேக வீராங்கனை தான் தர்ஷினி . இவள் என்னிடம் வரும் பொழுது தர்ஷினி ஆறாம் வகுப்பு மாணவி, பெற்றோர்கள் இவளுக்கு காது கேட்காது பேசமுடியாது . இவள் தொலைகாட்சியில் கபடி விளையாடுவதை கண்டு அதில் ஆர்வம் இருப்பதை தெரிவித்தாள். இவளுக்கு கபடிக் கற்றுக் கொடுங்கள் என்று முறையிட்டனர்.
மாணவியாக சேர்த்துக் கொண்ட ஆரம்பத்தில் இவளுக்கு பயிற்சி கொடுப்பது கடினமாக இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் ஆரம்பத்திலேயே இவள் ஒரு ஆண் விளையாட்டு வீரரை போல ஆறாம் வகுப்பு படிக்கும் இந்த சின்ன குழந்தையிடம் வேகம் இருப்பதை கண்டேன். ஆனால் கபடி விளையாட்டில் கபடி என்ற வார்த்தை உச்சரிப்பது மிகவும் அவசியம் அதுவும் மூச்சு விடாமல் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் . இவளால் பேசமுடியாதே என்று வருத்தப்பட்டவேளையில் தொடர்ந்து இரண்டு மாதம் தானாக முயற்சி செய்து கபடி என்ற வார்த்தை மட்டும் உச்சரிக்க கற்றுக் கொண்டு களத்தில் இறங்க தகுதிப் பெற்றாள்.
அதனை தொடர்ந்து முறையான பயிற்சியின் மூலம் பல உள்ளூர் போட்டிகளில் கலந்து சாதனைபடைத்து வருகிறாள் . தர்ஷினியின் பெற்றோர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் , அவர்களுக்கு இவளது திறமை பற்றியும் கபடி போட்டிகளைப் பற்றியும் பெரும் அளவில் அறியாதவர்கள் , இவள் குவித்து வரும் வெற்றிக் கோப்பைகளை கண்டு ஆச்சரியமும் சந்தோசமும் அடைவார்கள் , ஆனால் வெளியூர் போட்டிகள் வரும் போது இவளை அனுப்ப தயக்கம் காட்டுவார்கள் . அப்போதெல்லாம் அவர்கள் காலில் விழாத குறையாக கெஞ்சிக் கேட்டு சம்மதம் வாங்கி அழைத்துப் போவோம்.
இவள் களத்தில் இறங்கும் போதே இந்த பெண்தானா இப்படி என்று ஆச்சர்யம் படும் அளவில் இவளது வேகம் இருக்கும் . இவளது ஆட்ட வேகத்தைக் காண தனி ரசிகர்கள் ஏராளம் உள்ளனர் .
காது கேட்கும் கருவி ஒன்று இவளுக்கு இருந்தால் இவளது திறமை முழு அளவில் வெளிப்படுத்தி விடலாம் , பொதுவாகவே நம்மூரில் கிரிக்கெட் விளையாட்டிற்கு இருக்கும் ஒரு முக்கியத்துவம் மற்றப்போட்டிகளுக்கு இருக்காது , அப்படிப் பட்ட போட்டிகளில் ஒரு மாற்றுத் திறனாளியான ஒரு இளம் பெண் சாதித்தாள் என்ன சாதிக்காவிட்டால் என்ற எண்ணம் தான் இருக்கும் போல . பலரிடமும் இவளுக்கு காது கேட்கும் கருவிக்கு உதவி கேட்டு இதனால்வரை யாரும் முன் வரவில்லை .இவளது திறமை கண்டு அரசும் கூட எந்த முக்கியத்துவமும் இவளுக்கு கொடுத்தது இல்லை .
தர்ஷினியின் அம்மா ஜெயந்தி கூறும் பொழுது " எங்கள் வீடு நிறைய இவள் வென்று வாங்கி வந்த கோப்பைகளும் மெடல்களும் தான் நிறைந்து இருக்கிறது. எல்லோரும் சொல்கிறார்கள் உங்கள் பெண் மிகவும் அருமையாக விளையாடி வருகிறாள் .எல்லோர் பெற்றோர்களுக்கும் இருக்கும் தயக்கம் தான் எங்களுக்கும் ,இவளுக்கு இருக்கும் குறைகளால் இவளை வெளி மாநிலங்களுக்கு அனுப்ப கொஞ்சம் பயமாக இருக்கும் . சில வருடங்களுக்கு முன் செஞ்சிலுவை சங்கத்தில் இருந்து தர்ஷினியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கேட்டவர்களிடம் அப்போது அனுப்ப மறுத்து விட்டோம் . அதன் பிறகுதான் போகப்போக இவளது உண்மையான திறமை பற்றி தெரிய வந்தது . அதன் பிறகு இவள் பெற்ற பல வெற்றிகளின் போதும் அவளது திறமையை கண்டு வியந்த பலரும் அவளுக்கு உதவுவதாக சொல்வார்கள். ஆனாலும் செய்தவர்கள் யாரும் இல்லை. அவரது பயிற்சியாளர் மட்டுமே போட்டிகளுக்கு செல்லும்போது அழைத்து செல்ல உதவுவார்.
தற்போது கோவை CCM அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் தர்ஷினி படிப்பிலும் சோடை போகவில்லை. படித்துக் கொண்டே கபடியிலும் வெற்றி பெற இவரது தனிப்பட்ட ஆர்வமே காரணமாக இருந்துள்ளது. இப்போதும் சில நேரங்களில் இப்படிப்பட்ட பெண்ணை வெளியே அனுப்ப ஏதும் ஆபத்து நேர்ந்து விடுமோ என்று பயம் கொண்டாலும் . தங்கள் பெண்ணின் திறமை ஓரிடத்தில் முடங்கி விடக்கூடாது என்றும், இவளது ஆர்வத்தையும் திறனையும் ஊக்குவிக்க வேண்டும் என்றும் தர்ஷினிக்கு அனைத்து வகையிலும் ஆதரவு தந்து உறுதுணையாக இருந்து அவள் முன்னேற்றத்திற்கு வழிவகை தேடி வருகின்றனர்.
இப்படி பட்ட ஒரு மின்னல் வேக வீராங்கனை தர்ஷினிக்கு ஈரநெஞ்சம் அறக்கட்டளை இந்த பொங்கல் தினத்தில் காது கேட்கும் கருவி வழங்கியதில் பெருமை அடைகிறது .


முடிந்தால் நீங்களும் இந்திய அணிக்கு ஒரு மின்னல் வீராங்கனை தர்ஷினி கிடைக்க ஒரு துரும்பாக இருக்கலாமே .
மேலும் விபரம் பெற உதவி செய்ய தர்ஷினியின் பயிற்சியாளர் விஸ்வநாதன் 9842264193 . பெற்றோர் பாலகிருஷ்ணன் ஜெயந்தி 9629370528 .
~ஈரநெஞ்சம் அறக்கட்டளை
www.facebook.com/eeranenjam/

ஈரநெஞ்சம் அறக்கட்டளையின் பொங்கலோ பொங்கல்

!!! அனைவருக்கும் ஈரநெஞ்சம் அறக்கட்டளையின் பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!!

 
கோவை மருதமலை அடிவாரத்தில் வசித்து வரும் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களோடு மற்றும் அவர் குடும்பத்தார்களோடும் ஈரநெஞ்சம் அறக்கட்டளை இன்று 16/01/2016 பொங்கல் விழா சிறப்பித்தது . இந்த விழாவில் கோவை மாநகராட்சி ஆதரவற்றோர் காப்பகத்தில் வசிக்கும் முதியவர்களும் கலந்துக் கொண்டனர்.
 

தொழுநோயாளிகள் என்பவர்கள் ஒதுக்கப்பட்டவர்கள் அல்ல அவர்களும் சமுதாயத்தில் அங்கத்தினர் என்பதனை வலியுறுத்தும் வகையிலும், ஆதரவற்றவர்கள் என்று யாரும் இல்லை எல்லோருக்கும் ஆதரவு உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் உறவினர்களால் ஒதுக்கப்பட்ட முதியோர்களையும் மகிழ்விக்கும் வகையில் அமைந்த இந்த பொங்கல் விழா அனைவரையும் பெரும் மகிழ்ச்சியில் திளைக்கச் செய்தது .
விழாவில் மேலும் சிறப்பு அம்சமாக ஈரநெஞ்சம் அறக்கட்டளை தொழு நோயாளிகளைப் பற்றி கட்டுரையாக வெளியிட்ட
"இவர்கள் தீண்டத்தகாதவர்கள் அல்ல"
https://www.facebook.com/eeranenjam.organization/posts/475262285932065
 

கட்டுரை வாயிலாக ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பாக உறுப்பினர் கார்த்திக் தொழுநோயாளிகள் சங்கத்திற்கு ரூபாய் 15000 நன்கொடை வழங்கியதும். 



 

கோவை சுந்தராபுரம் சேர்ந்த இளம் கபடி வீராங்கனையான தர்ஷினி என்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பாக காது கேட்கும் கருவி வழங்கியது அனைவரின் மனதிற்கும் திருப்தியளித்தது.
~ஈரநெஞ்சம்