Tuesday, October 11, 2022

நம்ம ஊர் நாசா ஜெயலெட்சுமி பற்றி தெரியுமா

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் 
நம் தமிழ் நாட்டின் பெருமையை நாசா வரை கொண்டு சென்ற பெண் குழந்தையான ஜெயலட்சுமி...


பெண் குழந்தைகளுக்கான உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களுக்கான அதிகாரத்தைப் பெறவும், பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கவும்,  அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கவும் , அவர்களுக்கு நேரும் பிரச்சினைகளைத் தடுக்கவும்   அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தில்   ஐக்கிய நாடுகள் சபை  2011-ம் ஆண்டு  தீர்மானத்தை நிறைவேற்றியது , அதன்படி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11-ம் நாள், ‘சர்வதேச பெண் குழந்தைகள் தினம்’ கொண்டாடப்படுகிறது.  

பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்பதை மையமாக கொண்டு இந்தநாளில் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த +2 தேர்வெழுதி நல்ல மதிப்பெண்கள் பெற்று கல்லூரி படிப்பை தொடரும் 18 வயதான ஜெயலட்சுமியை ஊக்கப்படுத்துவதற்கான ஒரு பதிவு ஆகும் 

ஆமாம் யார் இந்த ஜெயலட்சுமி ... 
பழுதடைந்த  வீடு,  குடும்பத்தை விட்டு வெளியேறிய பொறுப்பற்ற தந்தை ,  மனநிலை பாதித்த  தாய், தாயையும் கவனித்துக் கொண்டு  தன்னுடைய தம்பியின் கல்வி முதல் பாதுகாப்பு வரை பொறுப்பேற்று பெரும்  குடும்ப சுமை கொண்ட  பின்னணியில் வாழ்ந்து வரும்   மாணவி தான் ஜெயலட்சுமி.

வறுமையான குடும்ப பின்னணி இருந்தபோதும் ,  இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறாள் இச்சிறு பெண் ... 

மிக கடினமான  குடும்பச் சூழலில் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து, சர்வதேசத் தேர்வில் கலந்துகொண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா செல்லக் கடந்த ஆண்டு தேர்வானார் ஜெயலட்சுமி.   நாசா ஜெயலட்சுமி என இப்போது புதுக்கோட்டையே கொண்டாடுகிறது ...

நாசா சென்று வர பலரும் உதவ முன்வந்திருக்கின்றனர் .  ஒரு சமூக அமைப்பு ஜெயலட்சுமி யிடம்  "பாப்பா உனக்கு நாங்க பெருசா ஏதாவது செய்யணும் , என்ன வேணும் கேள் எதுவாக இருந்தாலும் நாங்க உனக்கு செய்கிறோம்" என்று வாக்கு கொடுத்தனர். 

அதற்கு ஜெயலட்சுமி கேட்ட உதவி என்ன தெரியுமா , "ஐயா எனக்கு இப்போதைக்கு நாசா சென்றுவர தேவையான உதவி கிடைத்து இருக்கிறது. ஆனால் எங்கள் ஊரில்  யார் வீட்டிலும் கழிப்பிட வசதி முறையாக இல்லை.  அதனால் எல்லோரும் மிகவும் சிரமப்படுகிறோம். முடிந்தால் எங்கள் ஊருக்குத் தேவையான கழிப்பிட வசதி செய்து கொடுங்கள்" என்று கேட்டு இருக்கிறாள். அந்த அமைப்பினர் அவளது இந்த வேண்டுகோளை எந்த மறுப்பும் தெரிவிக்காமல் ஏற்று, அவள் வசிக்கும் புதுக்கோட்டை அருகே இருக்கும் ஆதனங்கோட்டையில்  126 கழிப்பறைகள் கட்டிக் கொடுத்திருக்கின்றனர்.

இது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுங்களா :

'வறுமையிலும் செம்மை' காத்து, தனக்கென்று எதுவும் கேட்காமல் ஊருக்கான தேவையை கேட்டு பூர்த்தி செய்த அவளது மனித நேய குணத்தை  போற்றும் விதமாக 'கனவு மெய்ப்படும்' என்ற தலைப்பில் மகாராஷ்டிர மாநிலத்தில்  7ஆம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் ஜெயலட்சுமி  இடம்பெற்றிருக்கிறாள் . 

நம் நாசா ஜெயலட்சுமியின் குடும்ப வளர்ச்சிக்கு நம்மாலும் கூட உதவ முடியும்...

ஆமாம் அவளது அன்றாட குடும்பத் தேவைக்காக தினமும் மாலையில் மொத்தமாக முந்திரி பருப்பை வாங்கி சுத்தம் செய்து பாக்கெட்டுகளாக்கி விற்பனை செய்யும்  குடிசை தொழில் செய்து தான் தனது குடும்பத்தை கவனித்து வருகிறாள் சிறுமி ஜெயலட்சுமி .
 அவளது இந்த தொழிலை நாமும் ஊக்கப்படுத்தலாம் .

அதற்கு நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஜெயலட்சுமியின் அலைபேசியின்  +91 70948  16102  இந்த  எண்ணுக்கு அழைத்து நமக்கு தேவையான தரமான முந்திரி பருப்புகளை ஜெயலட்சுமியிடமே வாங்கி கொள்ளலாமே. சுயநலமாய்  யோசிக்காமல் சுயமாக சம்பாதித்து  வாழ்ந்து காட்டணும் என்ற வைராக்கியம் கொண்ட ஜெயலட்சுமிக்கு இது பெரிய உதவியாக இருக்கும் .

முந்திரி பருப்பிற்கு ஆர்டரை பதிவு செய்ய  ஜெயலட்சுமிக்கு கால் செய்யும் பொழுது அவளுக்கு வாழ்த்துச் சொல்ல மறந்துடாதிங்க .

நன்றி 

~ஈரநெஞ்சம் மகேந்திரன்

Sunday, October 09, 2022

தேசிய விளையாட்டு, தேச தந்தை பற்றிய உண்மை தெரியுமா..?

இந்தியாவின் தேசிய விளையாட்டு என்ன?
வடிவேலு படத்தின் மங்குனி அமைச்சர் போல கேள்வி கேட்கிறார்களே என்று நினைத்தேன். ஆனால்  இந்த கேள்விக்கு பதிலை ஆராயும்போது...

எனக்கு அதிர்ச்சி ஆக இருந்தது...
உங்களுக்கும் அதிர்ச்சியாக தான் இருக்கும். இது பற்றி நிறைய தகவல் சொல்கிறேன் .

ஹாக்கி  ( வளைதடிப் பந்தாட்டம் )  தான் இந்தியாவின் தேசிய விளையாட்டு என்பதை நாம் பள்ளிக்கு சென்ற காலத்தில் படித்திருக்கின்றோம் .


பொது அறிவு சம்மந்தப்பட்ட அனைத்து புத்தகத்திலும் இது உள்ளது. போட்டித் தேர்வுகளில் கூட, ஹாக்கி எங்கள் தேசிய விளையாட்டு என்பதே ஏற்றுக்கொள்ளப்பட்ட விடை.

ஆனால் அதெல்லாம் உண்மை இல்லை என்ற  இந்த பதிலை நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும் .

ஆமாம்  எந்தவொரு விளையாட்டையும் இந்திய தேசிய விளையாட்டு என்று அறிவிக்கவில்லை என தகவல் அறியும் உரிமை  சட்டத்தின் கீழ் இந்த கேள்விக்கு முன்னாள் மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் பதிலளித்துள்ளது.

ஹாக்கியை ஒரு தேசிய விளையாட்டு என்று இந்திய அரசு எப்போது அறிவித்தது என்று ஐஸ்வர்யா  என்ற சிறுமி பிரதமர் அலுவலகத்தில் கேட்ட கேள்விக்கு ,  ஆவணங்களில் இதுபோன்ற பதிவு எதுவும் கிடைக்கவில்லை என்று மத்திய இளைஞர் அமைச்சகத்தின்  செயலாளர்  பதிலளித்துள்ளார்.

"ஹாக்கி எங்கள் தேசிய விளையாட்டு என்று அமைச்சகத்தின் எந்தவொரு அதிகாரப்பூர்வ உத்தரவையும் அறிவிப்பையும் நான் காணவில்லை. இது பொதுவான விளையாட்டாக தான் அறியப்படுகிறது," என்று  கூறியுள்ளார்.

இதற்கு முன்பு,  ”தேசத்தந்தை” என காந்தியை அழைக்கலாம் என்று வெளியிடப்பட்ட அரசாணையைத் தனக்கு அளிக்குமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்திருந்தார் ஐஸ்வர்யா.

அதற்கு   அப்போதைய பிரதமர் அலுவலகம், இதுபற்றிக் கருத்து தெரிவிக்கத் தங்களிடம் எந்தத் தகுந்த பதிவுகளும் இல்லை என்று கூறி அந்த மனுவை உள்துறை அமைச்சகத்துக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது. அந்த மனு திரும்பவும் தேசிய ஆணை காப்பகத்துக்கு (National Archives of India) மாற்றப்பட்டது. ஆனால் அங்கும் அதற்கான எந்தப் பதிவுகளும் கிடைக்கவில்லை. ஆகவே காந்திக்கு ”தேசத்தந்தை” என்கிற பட்டம், இந்திய அரசால் வழங்கப்பட்ட தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தது மத்திய அரசு.

அதுமட்டுமில்லாமல் தேசிய ஆணைக்காப்பகத்தின் அப்போதைய உதவி இயக்குனர் காந்தியை மகாத்மா என்று அழைப்பதற்கான ஆவணம் எதுவும் கிடைக்கவில்லை என்று ஐஸ்வர்யாவுக்கு பதில் அளித்திருந்தார்.  

காந்தி தான் தேசத்தந்தை என்பதற்கு ஆவணங்கள் எதுவுமில்லை. அத்தோடு  ,  “ இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 18(1)-ன் படி இந்திய அரசால் யாருக்கும் எந்தவிதமாகவும் பட்டம் அளிக்க முடியாது. கல்வித்துறையைச் சார்ந்தவர்கள் மற்றும் இராணுவத்தினருக்கு மட்டுமே பட்டங்கள் வழங்க முடியும்” என்றும் ஐஸ்வர்யாவுடைய தகவல் அறியும் உரிமை மனுவுக்கு (RTI) மத்திய அரசு பதிலளித்திருக்கிறது. இதனால்  அரசு ஆவணங்களின்படி காந்திக்கு ”தேசத்தந்தை” என்கிற பெயரை இந்திய அரசு வழங்கவில்லை என்பதே உண்மை.

பின் எப்படி தேசத்தந்தை என்கிறோம்...
1944-ம் ஆண்டு சிங்கப்பூர் வானொலியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் மகாத்மா காந்தியைத் தேசத்தந்தை என்று அழைத்ததாக வரலாறு கூறுகிறது. அதுவே, தொடர்ந்து மக்கள் காந்தியைத் தேசத்தந்தை என அழைக்க வித்திட்டது...

உண்மை நிலை இதுதான்...

அந்தமான் செல்லுலார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த சாவர்க்கர், அங்கிருந்து புல் புல் பறவை மீது ஏறி சொந்த ஊருக்கு சென்று மீண்டும் யாருக்கும் தெரியாமல் சிறைக்கு சென்றுவிடுவார் என்று கர்நாடக மாநில 8ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிருப்பதை கண்ட நாம் ,
பாட புத்தகத்தில் எழுதியவரை விட்டுவிட்டு சாவர்க்கர் அவர்களையும் , பாவம்  புல்புல் பறவையை கூட விட்டு வைக்காமல் கிண்டலும் கேலியும் செய்தோம் . ஆனால் தேசிய விளையாட்டு ஹாக்கி என்றும் , தேசத்தந்தை மகாத்மா காந்தி என்றும் தேசத்தில் உள்ள அத்தனை கோடி பாடப்புத்தகங்களிலும் இருப்பதை கோடானுகோடி பேர் படித்து நடைமுறை படுத்தியிருக்கிறோம் .  சரி அதை விடுங்க இப்போ இதைப் பற்றி பேசினால் நான் அரசியல் பேசுறேன்னு சொல்லி சிலர் என்னை தாக்க ஓடிவந்து விடக்கூடும் .


நாம ஹாக்கி விளையாட்டுக்கு வருவோம் :

"இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி" என்ற வதந்தி எப்படி இந்தியா முழுவதும் பரவியது தெரியுமா ..?
1928 முதல் 1956 வரை இந்திய ஹாக்கியின் பொற்காலம் என்று சொல்லலாம் . அந்த காலக்கட்டத்தில் இந்தியா 6 தங்கம் தொடர்ந்து கைப்பற்றியது. அதற்கு மேலாகவும் கூட இருக்கும் .

அதன் கொண்டாட்டத்தில் நம் தேசம் முழுவதும் மூழ்கி இருந்தது. அந்த காலத்தில் ஹாக்கி க்கு இந்திய மக்களிடையே ஏக வரவேற்பு இருந்தது.  அதனால் இந்திய மக்கள் ஹாக்கி தான் தேசிய விளையாட்டு என்று தங்களுக்குள் பரப்பிக்கொண்டுள்ளனர். உண்மை என்னவென்றால்  இந்தியாவுக்கென்று தனியாக தேசிய விளையாட்டு என்ற ஒன்று கிடையாது .

இன்னொன்றும் இங்கே சொல்லிக் கொள்கிறேன்... இந்தியாவிற்கு என்று தனியாக தேசிய மொழியும் கிடையாது.

~ மகேந்திரன்