Wednesday, November 23, 2022

உயரம் 3 அடி மற்றவர்களுக்காக தேடுவது 6 அடி

 கோயம்புத்தூர்ல கண்ணப்பநகர் அப்படின்னு சொன்னாலே எல்லாருக்கும் தெரிந்த ஒரே  இடம் சுடுகாடு தாங்க , சென்னைக்கு எப்படி  கண்ணம்மாப்பேட்டையோ அதே போல கோவைக்கு  இந்த கண்ணப்பநகருங்க .

முன்ன பின்ன செத்தாதான் சுடுகாடு பத்தி தெரியும்னு   சொல்லுவாங்க, அதனால நாம அங்க போய் பாக்கறதுக்கு வாய்ப்பு அதிகம் கிடைச்சு  இருக்காது. அப்படியே  போய் இருந்தாலும்  நான் இன்னைக்கு சந்திச்ச  இந்த நபரை சந்திக்க வாய்ப்பு இருந்திருக்காது . அப்படியே சந்திச்சு  இருந்தாலும் நம் சூழ்நிலை காரணமாக மனதில் அவ்வளவாக பதிந்து இருக்காது. ஆனா யதேச்சையா இன்னைக்கு  அவரை அந்த மாயானத்தில சந்திக்க வாய்ப்பு கிடைச்சது .


அவரை பார்த்து அண்ணா வணக்கமுங்க உங்களை ரொம்ப நாளா பார்த்துட்டு இருக்கேன் , உங்களோட பேசனும்னு நினைப்பேன் , ஆனா நேரம் கிடைக்கலை இன்னைக்கு தான் நேரம் ஒதுக்கி உங்ககிட்ட பேசனும்னு வந்தேன்   நல்லா இருக்கீங்களா , உங்களை பத்தி சொல்லுங்க உங்களோட இந்த வேலையை பத்தி சொல்லுங்க அப்படின்னு அவர்ட்ட கேட்டேன் , அதற்கு அவர் கொஞ்சம் வெட்கத்துடன் ,...



"என்ன அண்ணா நீங்க ...  நான் எல்லாம் ரொம்ப சாதாரண ஆள் தான் அண்ணா. என் பேர் வீரபத்திரன் பேர்ல தான் அண்ணா வீரம்.. ஆனா நிஜத்துல இங்க ஒன்னும் இல்லை .

என்னோட தாத்தா மிலிட்டரில வேலை பார்த்து ரிட்டயர்டு ஆனதும் இங்க  வேலைக்கு வந்ததா சொல்றாங்க , அவருக்கு பிறகு எங்க அப்பா இந்த வேலை செய்துட்டு வந்தாரு .  நாங்க கூடப்பிறந்தவங்க 6 பேரு நான் நாலாவது  குழந்தையா பிறந்தேன் இப்போ வரைக்கும் குழந்தை உயரத்தில் தான் இருக்கேன் . ஒரு அண்ணன் மன உளைச்சல்ல தற்கொலை செய்துகிட்டாரு. மீதி ரெண்டு அண்ணன் ங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு தனியா போயிட்டாங்க.  அக்காக்கு கல்யாணம் ஆயிடுச்சி ,  என்னுடைய தங்கச்சி தான் எங்க வம்சத்திலேயே அதிக படிப்பு படிச்சு இருக்கா ... (பன்னிரண்டாவது வரை ) மற்ற யாருமே படிக்கலை ... 




கலெக்டருக்கு கூட படிச்சு பரிட்சை எழுதிடலாமுங்க ஆனா நான்  மூணாவது வரைக்கும் படிக்கிறதுக்குள்ள எனக்கு நிறைய பேரு ,   நிறைய பரிட்சை வெச்சுட்டாங்க , அந்த வயசுல எனக்கு என்ன அண்ணா தெரியும் , பள்ளிக்கூடம் போகும் போதெல்லாம்  கூட படிக்கும் பசங்க கூளையன் வந்துட்டான்னும் குட்டையன் வந்துட்டான்னு சொல்றதும், வெட்டியான் பையன் பக்கத்துல உட்காராதீங்கடானு ஒதுக்கி வைக்கிறதும் என்னால தாங்க முடியலைங்க... அப்போவே நிறைய நாள் பள்ளிக்கூடம் போகாம கட் அடிச்சுட்டு ஊர் சுத்தி இருக்கேன், அம்மாவும் அப்பாவும் எவ்வளவோ சமாதானப் படுத்தி படிக்க  அனுப்புவாங்க , அங்க டீச்சருங்களே வெட்டியான் புள்ளைன்னு கூப்பிட்டு மனச காயப்படுத்த ஆரம்பிச்சதும் ஸ்கூல் புத்தகத்துக்கு எல்லாம் கொள்ளி வெச்சுட்டு இனி அந்த பக்கமே போக மாட்டேன்னு முடிவா சொல்லிட்டு ஊர் சுத்த ஆரம்பிச்சேன்.

கொஞ்சம் பெரியவனானதும் , இல்லை இல்லை கொஞ்சம் வயசு அதிகமானதும்  எங்க அப்பா சுடுகாட்டுல அவரோட ஒத்தாசையா வேலை பாத்துட்டு இருக்க சொன்னார்.  ஊர் சுத்தறேன்னு இந்த வேலை செய்ய வெச்சுட்டாங்க . ஆனா அங்கேயும் சவத்தை கொண்டு வரவங்க  டேய் குட்டையா இங்க வாடான்னும் வெட்டியான் இங்க வாடான்னு வார்த்தை கடப்பாரையால் குத்திட்டு இருந்தாங்க ...


வெறுப்பாகி , அப்பா இந்த வேலை எனக்கு வேணாம் ... வேற ஏதாச்சும் வேலைக்கு போறேன்னு சொல்லி ட்டு வேலை தேட போனேன் , யார்கிட்டேயும் நான் மயானத்துல வேலை செய்யறவன்னு சொல்லாம வேலை  கேட்டேன் . ஆனா என்னுடைய உயரத்துக்கு எங்கேயும் யாரும் வேலை கொடுக்கலை , அப்படியே மனசு வந்து ஒரு சிலர் வேலை கொடுத்தாலும்  உயரம் பத்தாததால என்னால வேலை செய்ய முடியல ...

ஒரு கட்டத்துல அப்பா எங்கேயோ காணாம போயிட்டாரு ,  எங்கே தேடியும் கிடைக்கவே இல்லை ,  மயானத்தில் வேலை செய்து கிடைக்கும் வருமானத்துல தான் எங்க குடும்பம் ஓடிட்டு இருந்துச்சு .  இப்போ அவரு இல்லாம போனதால , வேற வழியே இல்லாம  குடும்பத்துக்காக  இந்த வேலை செய்ய ஆரம்பிச்சு இதோட 15 வருஷம் ஆகிடுச்சு மனசும் உடம்பும் நிறைய காயம் பட்டு பட்டு மரத்து போச்சு . எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு பொண்ணு பார்த்தாங்க , ஆனா இந்த வேலை செய்யும் எங்க குடும்பத்துக்கு நல்லது கெட்டதுக்கு கூட பத்திரிகை வைக்க மனசு வராதவங்க எனக்கு எப்படி பொண்ணு கொடுக்க முன் வருவாங்க  . கல்யாணம் எல்லாம் கற்பனை தான்  அதை விடுங்க அண்ணா ...

இன்னைக்கு வரைக்கும் யாருமே என் பெயரை சொல்லி கூப்பிட்டதே இல்லைன்னு  நினைக்கிறேன் ..,  சவத்தை எடுத்து வர்ர சொந்தக்காரங்க சவத்துக்கு குழி போட்ட  கூலியை கூட தூக்கி தான்  போடுவாங்க , நான் ஏன்னு கேட்டா அது தான் முறைனு சொல்லுவாங்க , அதுக்கு பிறகு  வெட்டியான் குட்டையான்னு வேற கூப்பிடுவாங்க  பாருங்க.. அப்பல்லாம் ஊனம் எனக்கா  இல்லை அவங்களுக்கான்னு  மனசுக்குள்ள சிரிச்சுக்குவேன்.  ( ஆனா அவரை பார்க்கும் போது  சிரிக்கிறது மாதிரி எல்லாம் தெரியலைங்க  ) 

எவ்வளவோ பேர் என் மனசை காயப்படுத்தினவங்களுக்கும் கூட நான் சவக்குழி போட்டு  இருக்கேன் , அப்போல்லாம் அவங்க மேல  எனக்கு எந்த கோபமோ காழ்ப்புணர்ச்சியோ வந்ததில்லைங்க .  இப்போ எல்லாம் இந்த தொழிலை நான் தெய்வமா  மதிச்சு செய்துட்டு இருக்கேன் , ஆனா ஒருத்தரும் என்னை மனுசனா கூட மதிக்கிறது இல்லையேன்னு மனசோட ஏதோ ஒரு மூலைல  அழுதிட்டு தான் இருக்குன்னு.."  கண் கலங்கிட்டே சிரிச்சாரு பாருங்க .  எனக்கு இதயத்துல இருந்து அவ்வளவு வலி வந்துருச்சு...

இவரு உயரம் மூன்றடி தான்   ஆனா நமக்கெல்லாம் ஆறடி தேடி கொடுக்குறதே இவர் தாங்க . என்ன தான் , கோட்டையில கொடி  கட்டி பறந்தாலும்   என்னைக்காவது  ஒரு நாள்   இவரிடம் தானே சரணாகதி ஆகப்போறாங்க   ...

அரிச்சந்திரன் இதே மயானத் தொழில் செய்தாலும் அவரை இன்றளவும் கொண்டாடும் இந்த சமுதாயம் தான் இவரைப் போன்றோரை மனதளவில் காயப்படுத்திக் கொண்டிருக்கிறது... என்னைக்கு தான் திருந்த போகிறார்களோ இந்த நடமாடும் சவங்கள் ..!!!


கண்ணீருடன் 

ஈரநெஞ்சம் மகேந்திரன்



Thursday, November 10, 2022

உங்களுக்கு புண்ணியமா இருக்கட்டும் எங்களை அப்படி கூப்பிடாதீங்க

*உங்களுக்கு புண்ணியமா இருக்கட்டும் எங்களை அப்படி கூப்பிடாதீங்க*
~~~~~~~~~~~~~~~~~~~


"ஏன் டா மா நீ இன்னைக்கு ஸ்கூலுக்கு  போகலை ...?"
 "சார் இனிமே நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன் என்னை எல்லோரும் _*வெட்டியான் வீட்டு பிள்ளை*_ன்னு கிண்டல் பண்றாங்க நான் இனி போகமாட்டேங்க" . 

ஆமாங்க இது நான் மிகவும் மதிக்கும் மயானத்தில் பணிபுரியும் என் சகோதரி போன்ற வைரமணியின் பேத்தி தான் அந்த சிறுமி. பள்ளியில் இவங்க குடும்பத்தொழிலை சக மாணவர்கள்  ஏளனமாக பேசியது அந்த பிஞ்சு மனதில் அவ்வளவு காயத்தை உண்டாக்கி உள்ளது. 

_*விபரம் தெரியாத குழந்தைகள் மட்டும் இல்லைங்க விபரம் தெரிந்த படித்த மேதாவிகள் முதல் படிக்காதவர் வரை பலரும் இப்படித்தான் மரியாதை குறைவாக பிறர் மனதை புண் படுத்தி பேசுவதே நாகரிகமாக எண்ணி பெருமைபட்டுக்கொள்கிறார்கள்.*_

நீங்கள் யாரும் கவனித்து இருக்கீங்களா , ஏன் அதில் நீங்கள் கூட ஒருவராக இருந்திருக்கலாம் ,  மயானத்தில்  நாம் மதிக்கும் மாண்பான நம் குல வழக்கப்படி சடங்கு சம்பிரதாயங்கள் செய்கிறோம் ... ஒரு சடங்கு முடிந்ததும் அந்த  தொழிலாளியை  இறந்தவரின் உறவினர்கள்  அழைக்கும்  தோரணை இருக்கிறதே... மனித நேயம் உள்ளவர்கள் கண்டிப்பாக வருந்த கூடும்  . " எங்க டா அந்த வெட்டியானை வர சொல்லு .. எங்க டா போயிட்ட , என்ற உரத்த குரலில் கத்துவதும் , இல்லங்க சாமி இங்கே தானுங்க இருக்கேன் என்று  அந்த  மயான தொழிலாளி  தன் தோளில் இருந்த துண்டை தன் கையில் ஏந்தி கூனி நிற்பதும்  உனக்கு எவ்வளவு கூலி , ஐயா 3000 ங்க   என்று கூற ... இந்தா இவ்வளவு தான் இது போதும் என்று பேரம் பேசுவதற்கு கூட தகுதியற்றவர்களாக எண்ணி ஒன்றுக்கு பாதியாக கூலி கொடுத்து விரட்டிவிடும் நிகழ்வு நடந்து கொண்டு தான் இருக்கிறது.  அந்த கூலி கொடுப்பது கூட எப்படி என்று அனைவருக்கும் தெரியும். ஒரு வேட்டியை தரையில் விரித்து வைத்துக் கொண்டு அதில் அந்த பணத்தை தூக்கி போடுவார்கள் , அந்த மயான தொழிலாளி சற்று தள்ளி இருந்து வேட்டியில் இருக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு செல்வார். 

அது சரி வெட்டியானை வெட்டியான்னு கூப்பிடாம எப்படி கூப்பிடுறது ன்னு உங்களுக்கு தோணலாம்... அவரின் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டு பெயர் சொல்லி அழைக்கலாமே... அதனால் அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள் தெரியுமா..!  நீங்கள் அவர்கள் பார்த்த வேலைக்கு தான் கூலி தருகிறீர்கள் , பிச்சை கிடையாது அதை மனதில் வைத்துக் கொண்டு அவர்கள் கையில் பணத்தை கொடுங்கள்... அப்படி பெரியவர்கள் நடந்து கொள்வதைப் பார்த்து சிறியவர்களும் அவர்களை மதிக்க கற்றுக் கொள்வார்கள் ..


மனித உடல்களை எரிப்பதற்கும் , அடக்கம் செய்வதற்கும் மட்டும் நாம் அவர்களை பயன் படுத்திக் கொள்வது இல்லை. எங்காவது இறந்து கிடக்கும் விலங்குகளை அகற்றவும் (மாடு, ஆடு, பூனை, நாய்) சாலை விபத்தால் இறந்த உடல்களை அகற்றவும், இரயிலில் அடிபட்டு இறந்த விலங்குகள் மற்றும் மனித உடல்களை அகற்றவும்  பயன் படுத்திக் கொள்கிறோம் . இதற்கு அவர்களுக்கு அளிக்கப்படுவது 100 லிருந்து 150 ரூபாய் மற்றும் ஒரு குவாட்டர் பாட்டில் சரக்கு அவ்வளவு தான்.

அது மட்டுமின்றி பிணவறைகளில் பிரேத பரிசோதனையில் உதவி செய்யவும் பல நாட்களாகப் பல மாதங்களாக யாராலும் வாங்கப்படாத உடல்களை நல்லடக்கம் செய்ய இன்னும் சில நேரங்களில் இயற்கை சீற்றத்தால் இறந்த உடல்களை எல்லாம் அகற்றவும்  நீரில் மூழ்கி இறந்து போன அழுகி கிடக்கும் சடலம் எடுப்பதும் என  பயன் படுத்திக் கொள்கிறோம் .

ஒரு கேள்வி? ஏன் பல தலைமுறைகளாக தொடர்ந்து ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களே இந்த தொழிலை செய்து கொண்டு வரவேண்டும்? ஒரு மயான தொழிலாளியின் மகன் ஏன் ஒரு மருத்துவராகவோ, மாவட்ட நிர்வாகியாகவோ, ஒரு மந்திரியாகவோ, ஒரு ஆகக் கூடாது. முதலமைச்சராகவோ ஏன் ஆகவில்லை? ஏன் அவர்கள் குடும்பம் சொந்த வீடு, நல்ல உணவு, நல்ல உடை என்ற ஒரு வாழ்க்கையை வாழ இயலவில்லை? கல்வி பெற அவர்களை நாம் அழைக்கும் அந்த பெயர் முட்டுக்கட்டையா?

ஆம் வெட்டியான் என்ற அந்த ஒற்றை வார்த்தையில் தான் அவர்களை ஒதுக்கியும் , ஒடுக்கியும்  முன்னேற விடாமல் மயானத்திற்குள்ளேயே வைத்து இருக்கிறோம் .  இந்த தொழிலுக்கு அவ்வளவு சுலபமாக யாரும் வந்து விட முடியாது , அந்த வேலையை செய்திடவும் முடியாது. இவர்கள் சமுதாயத்தில்  முன்னேறிவிட்டால் என்ன என்ன விபரீதம் நடக்கும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று .


ஒன்று தெரியுமா தாழ்த்தப்பட்ட இனத்தவர்கள் தான் இந்த மயான தொழிலாளர்கள் , ஆனால் இந்த தொழில் செய்வதால் சக தாழ்த்தப்பட்ட இனத்தவர்கள் அதாவது இவர்களுடைய உறவினர்களே  இவர்களிடம் நெருங்குவது இல்லை... எவ்வளவு பெரிய  சாபக்கேடு இது. 

ஒரு குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டால் அவருக்கு கொள்ளி வைப்பதை அவ்வளவு முக்கியத்துவமாக பார்க்கிறோம். ஆனால் கொள்ளி வைத்து முடித்ததும் அனைத்து உறவினரும் அங்கிருந்து சென்று விட்ட பிறகு , இந்த மயான தொழிலாளர் குடும்பத்தில் உள்ள பெண்கள் குழந்தைகள் என யாவரும் பிணத்தை சரியாக பார்த்து பார்த்து எரிப்பது யாருக்கு தெரியும். 

தொடர்ந்து பிணங்களை எரிப்பதால் அவர்களில் பலரும் சுவாச சம்பந்தமான நோய்வாய்ப்படுகிறார்கள்.  25 பிணம் எரிக்கும் தொழிலாளர்களில் ஒருவர் கண்டிப்பாக நுரையீரல் பாதிப்புக்குள்ளாகின்றார். பல காரணங்களுக்காக இறந்து போன உடல்களையும் சில சிதைந்து போன எரிந்து போன உடல்களையும் தகனம் செய்யும் போது இவர்கள் மன ரீதியான பாதிப்புக்குள்ளாவது எத்தனை பேருக்கு தெரியும் .

பிணம் எரிக்கும் தொழில் செய்யும் ஊழியர்களுக்கான பணி நியமனம், மாதச்சம்பளம், மருத்துவப் பரிசோதனை முறைகள், தடுப்பு ஊசிகள், எரிப்பதற்கான தற்காப்பு சாதனங்கள் பெறுவது போன்ற எதற்கும் இவர்களுக்கு வழி தெரியாது.


அரசு தரப்பில் 

அரசு தரப்பில் இவர்களுக்கான நலத்திட்டங்கள் என்று பார்த்தால் மிகவும் விரல்விட்டு எண்ணும் அளவிற்கே உள்ளது. நடைமுறையில் இத்திட்டங்கள் உள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம், திரு.ஸ்டாலின் அவர்கள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த போது சென்னை மாநகராட்சியில் நிரந்தரப் பணியில் இல்லாமல் தற்காலிகப் பணியில் இருந்த 173 பிணம் எரிக்கும் தொழிலாளிகளுக்கு ‘மயான உதவியாளர்கள்’ என்று பணிநியமனக் கடிதம் வழங்கப்பட்டது. மாதச் சம்பளமாக ரூ.5,000 வழங்குமாறும் பணி நியமனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இம்மயான உதவியாளர்களுக்கு சென்னை மாநகராட்சியில் பணிநியமனம் அளித்தது போல கூடிய விரைவில் தமிழகம் முழுவதும் கிராமங்களில் இருக்கும் பிணம் எரிக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்த 173 தொழிலாளர்களின் தற்போதைய நிலை என்ன என்பதுக் குறித்த சரியான விவரமும் தற்போது இல்லை. இதைத் தொடர்ந்து, “மயான பணியாளர்கள்  சங்கம்" என்று ஒரு சங்கம் நிறுவப்பட்டு அதன் முதல் மாநில அளவிலான மாநாடு, 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மதுரையில் நடந்தது . இம்மாநாட்டில், பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. மாத ஊதியம், வெட்டியான் என்ற பெயரை நீக்குவது ,  மயான  தொழில் செய்யும் பெண்களுக்கான பிரசவ கால உதவித்தொகை, மருத்துவக் காப்பீடு, தடுப்பூசிகள் போடுவது, மருத்துவ பரிசோதனைகள், மாற்றுத் தொழில் வழங்குவது போன்றவை.

ஆனால், அதற்குப் பின் அந்த சங்கத்தைப் பற்றியோ கோரிக்கைகள் பற்றியோ தொடர்ந்து செய்திகள் வரவில்லை என்பதே உண்மை. இத்தொழிலாளர்கள் பலருக்கு இச்சங்கத்தைப் பற்றியே தெரியவில்லை. இந்த மாநாடு அப்போது  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலவாரிய அமைச்சராக இருந்த திருமதி.ஏ. தமிழரசி அவர்களின் முன்னிலையில் நடந்தது என்பது கூடுதல் தகவல்.

அரசாங்கத்தில் வேலை பார்க்கும்  தலைமை பதவியில் இருப்பவரில் இருந்து கடை நிலை ஊழியர் வரை அனைவரும் சம்பளம் சார்ந்த மற்றும் சம்பளம் சாராத பல உதவியைப் பெறும் நிலையில், (மயானங்களில்) தலைமுறை தலைமுறையாக பணிபுரியும் ஊழியர்களில் நிலைதான் என்ன?  முதலில் சக மனிதர்கள் இவர்களையும் மனிதர்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறோமா ? 
மயானங்களைப் பராமரிப்பது, மயானங்களை ஏற்படுத்துவது, அரசாங்கம் மற்றும் அரசாங்கங்களின் பணி என்றால் மயான பணியாளர்களை நியமிப்பது அவர்களுக்கான சலுகைகள் வழங்குவதும் அரசாங்கத்தின் பணி தானே.



தலைமுறை தலைமுறையாக இப்பணியைச் செய்யும் தொழிலாளிகளின் இன்றைய தலைமுறையினருக்காக கல்வி உதவி, மாற்றுத் தொழிலுக்கான உதவிகளையும் அரசாங்கம் மனதில் கொள்ள வேண்டும் . பிணம் எரிப்பதைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பவர்களின் மனநிலை பாதித்து குடிப்பழக்கத்திற்குப் பலியாகாமல் இருக்க மனநிலை நிபுணர்களைக் கொண்டு சிறப்பு கலந்தாய்வு கூட வழங்கலாம் என்பது  என்னுடைய   தாழ்மையான வேண்டுகோள்.

ஐந்தறிவு படைத்த யானைகளுக்குப் புத்துணர்வு அளிக்கப் புத்துணர்வு முகாம் நடத்தும் போது, இறந்து போன நமது உறவினரையும் நமது நண்பர்களையும் நமது உற்றார்களையும் சீராக தகனம் செய்யும் நம் மயான தொழிலாள நண்பர்களுக்கான அனைத்து அடிப்படை மற்றும் நிதி வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்துவது நம்மைப்போன்று ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கடமை அல்லவா..! எங்கேயோ உலகத்தின் மூலையில் யாருக்கோ நடக்கும் அநீதி கண்டு சமூக ஊடகங்களில் பொங்கி எழும் இளைஞர்கள் இது போன்ற நம் வாழ்வியலில் கட்டாயம் இருக்க வேண்டிய இவர்களுக்காகவும் கொஞ்சம் நேரம் ஒதுக்கலாமே... இளைஞர்கள் தம் வீட்டில் உள்ள சிறு பிள்ளைகளுக்கு இது போன்றவர்கள் மனதை புண்படுத்தி பேசக்கூடாது என அறிவுறுத்தலாம். இளைஞர்கள் நினைத்தால் கண்டிப்பாக நல்ல மாற்றம் உருவாகும்...

இப்படி எல்லாம் எழுதி விட்டு அந்த மயான தொழிலாளி வைரமணி அவர்களிடம் கொண்டு போய் படித்து காட்டினால் , அந்த வைரமணி என்ன சொன்னாங்க தெரியுமா. 

" இத்தனை ஆண்டு காலம் எந்த மனிதர்களும் எங்க முகம் பார்த்து பேசியது இல்லை . ஊருக்குள்ள என்ன நடக்குதுனே தெரியாது , வரவங்க போறவங்க எல்லாம் எங்களை வெட்டியான் வெட்டியான்னு தான் கூப்பிடறாங்க அதுவே இன்னும் மாத்திக்க தெரியாத இந்த மனுசங்க தானா எங்களுக்கு இவ்வளவு உதவி செய்ய போறாங்க . எங்களை எல்லாம் முன்னேறவே விட மாட்டாங்க சார்  நீங்க ஏனுங்க சார் வெட்டியா இப்படி எழுதிட்டு உங்க நேரத்தை கெடுத்துட்டு இருக்கீங்க ,

( கோவை சங்கனூர் பகுதியில் உள்ளது மையானத்தில் பணிபுரியும் பழனியம்மாள் கூறுவதை கேளுங்க )




முதலில் அந்த வெட்டியான்னு சொல்றதை நிப்பாட்ட சொல்லுங்க சார் . நாங்களும் எங்க குழந்தைகளும் வருங்கால தலைமுறைகளும் நல்லா இருப்போம். உங்களுக்கு புண்ணியமா போகட்டும் "

இனி வெட்டியான்னு கூப்பிடாதிங்க...

~ ஈரநெஞ்சம் மகேந்திரன்