Friday, June 18, 2021

திருநங்கைகள் பற்றிய உண்மைகள்

குலை நடுங்கி, மனதை உறைய வைக்கும் மூன்றாம் பாலினத்தவர் பற்றிய பதிவு. மன தைரியம் உள்ளவர்கள் மட்டும் படியுங்கள்.


இயற்கை ஆண் பெண் என்ற பாலினத்தை மட்டுமல்ல, மாற்றுப்பாலினத்தைச் சேர்ந்தவர்களையும்தான் படைத்து வந்து கொண்டிருக்கிறது. ஆனால் மாற்றுப் பாலினத்தவரைவிட  ஆண் பெண் என்ற பாலினத்தைச்  சார்ந்தவர்கள் பெரும்பான்மையானவர்களாக அந்த காலம் தொட்டு இருப்பதால் அவர்கள் செய்வதுதான் சரி என்றும், மூன்றாம் பாலினத்தவர்கள் செய்வது தவறு என்று சொல்லி அவர்களைத் தண்டித்து வந்தார்கள். அதுமட்டுமல்ல அது சரி என்று நியாயம் கற்பித்து வந்ததால், அதுவே நமக்கும் சமீப காலங்கள் வரை நியாயமாக இருந்து வந்தது. அதனால் என்னவோ சமீப காலங்கள் வரை மூன்றாம் பாலினத்தவரை மரபுக்கு எதிராகச் செயல்படுவதாகவே நாம் கருதி வந்து இருக்கிறோம். உண்மையைச் சொல்லப் போனால் நாம்தான் இயற்கையின் மரபிற்கு எதிராகச் செயல்பட்டு வந்து இருக்கிறோம்...

மேலை நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக அங்குத் தனிப்பட்டவரின் உரிமைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல மற்றவர்களின் தனிப்பட்ட உரிமைகளில் தலையிடுவதும் தவறு என்று கருதப்படுகிறது. அதன் காரணமாக அங்கு மூன்றாம் பாலினத்தவர்கள் வெளிப்படையாகச் செயல்பட ஆரம்பித்து இருக்கிறார்கள். இவர்களுக்கு உதவுவதற்காக அரசும் பல சட்டங்களை அமுல் படுத்தி வருகிறது,நமது நாட்டிலும் சிறிதளவு அவர்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது என்று சொல்லாம்.


 
மனமும் உடலும் ஒன்றுக்கொன்று ஒத்துழைக்க வேண்டும் .அப்படி இல்லை என்றாலே பிரச்சனைகள்தான் .இங்கு நாம் மனம் என்று சொல்வது மூளையைக் குறிக்கிறது. மூளைதான் மனம். மூளையின் கட்டளையை உடலின் உறுப்புகள் நிறைவேற்ற வேண்டும், இதுதான் ஆரோக்கியத்துக்கு அடிப்படை. ஆனால் மூன்றாம் பாலினத்தவர்களுக்கோ உடலும் மனமும் மாறுபடுகிறது .அதனால்தான் அவர்களுக்கு பால்மாற்று சிகிச்சை  தேவைப்படுகிறது,

பிறக்கும்போது ஆண் உடலோடு பிறந்த ஒருவர் பெண் மனதோடு இருந்தாலோ, பெண் உடலோடு பிறந்த ஒருவர் தன்னை முழுக்க முழுக்க ஆணாக உணர்ந்தாலோ அவருடைய உடலே அவருக்கு எதிரியாகத்தானே இருக்கும்? ஒருவர் தன்னுடைய உணர்வுக்கும் மனத்துக்கும் பொருத்தமான உடலைப் பெறுவதற்கு மருத்துவ அறிவியல் வழங்கியிருக்கும் கொடைதான் பால் மாற்று அறுவை சிகிச்சை.இதற்கு அதிக செலவும் காலமும் தேவைப்படும்...


நான் சிறுவனாக இருக்கும் போது கேள்விப்பட்டது  ஆண் உடலோடு பிறந்த ஒருவர் பெண் மனதோடு இருந்தால் அவர்களிடம் மற்றைய மூன்றாம் பாலினத்தவர் பேசி சரி செய்து மும்பைக்குக் கூட்டிப் போய் அவருக்கு மதுவோடு கூடிய விருந்து கொடுத்து அவர்கள் மயக்கத்தின் உச்சியில் இருக்கும் போது அவரின் பிறப்பு உருப்பை அறுத்து எடுத்துவிடுவார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கின்றேன்..அதை நினைத்தாலே மனம் நடுங்குகிறது.

இப்போதும் அறுவை சிகிச்சைக்கும் லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுவதால் நம் இந்தியாவிலோ வெறும்  ஆணுறுப்பு லோக்கல் அனஸ்தீசியா மூலமாக நீக்கப்படுதல் (Casteration) மட்டுமே செய்யப்படுகிறது. அதுவும் அரசு அங்கீகாரமில்லாதவர்களால் முறையான மருத்துவச் சிகிச்சை அனுபவம் இல்லாதவர்களால்  இல்லீகலாக செய்யப்படுகிறது. இதன்படி செய்துகொள்வது நரக வேதனையை விட கொடுமாரானது என்றாலும் அவர்கள் துணிந்து செய்து கொள்ளத்தான் செய்கிறார்கள். ஆனால் இது புரியாமல்  நாம் அதில் சில பேர் செய்யும் தவறுகளால் அந்த பாலினத்தவர்களையே கேலி செய்வது மற்றும் இழிவாக நடத்துவதைதான்  நாம் இன்னும் தொடர்கிறோம்.


மாற்றுபாலினம் என்பது  மனநோய் அல்ல பல உயிரியல் அடிப்படையிலான காரணங்களால் மாறுபட்ட பால் அடையாளம் ஒருவரின் பிறப்பில் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு கட்டத்துக்குப் பிறகு மாற்றுப் பாலினத்தவராக உணரத் தொடங்கும் நபர் உடலளவிலும் தன்னை மாற்றிக்கொள்ள விரும்புகிறார். அதற்கு வழி செய்வதுதான் இந்தப் பால் மாற்று அறுவைசிகிச்சை.

எந்தவொரு திருநங்கை/திரு நம்பிகளும்  மற்றவர்களைப் போல் சமூகத்தில் சமத்துவத்துடன் வாழத்தான் விரும்புகின்றனர். ஆனால் சமூகமோ இன்னும் அவர்களை அங்கீகரிக்க மறுத்துக் கொண்டுதான் இருக்கிறது. வாழ்க்கை முழுவதும் தங்கள் அடையாளத்தை மாற்றிக்கொள்வதற்கான அறுவை சிகிச்சைக்குப் பணம் சேர்ப்பதற்காகப் போராட வேண்டியிருக்கிறது. மனதளவில் தன்னைப் பெண்ணாக/ஆணாக உணர ஆரம்பித்துவிட்டவர்களுக்கு  எப்படிபட்டாவது  சிகிச்சை செய்து  மன உணர்வுக்கேற்றவாறு உடலளவிலும் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதுதான்  அவர்களின் நோக்கமாக இருக்கிறது. இதை வீட்டிலும் சொல்ல முடியாது, அப்படியே சொன்னாலும் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு குடும்பத்தார்களிடம் விழிப்புணர்வோ புரிதலோ கொஞ்சம் கூட இல்லாமல் அவர்களை அப்படியே  புறக்கணிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். வீட்டில் இந்த நிலை என்றால் சமூகத்தைப் பற்றிச் சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன?

அதனால் அவர்கள்  சூழ்நிலையின் காரணமாக மாற்று வழியின்றி வீட்டைவிட்டு வெளியேறி தங்களைப் போன்ற மூன்றாம் பாலினத்தவர்களுடன் சேருகிறார்கள். மேலும் வேலை வாய்ப்புகளில் புறக்கணிப்படுவதால் தாங்கள் சிகிச்சை செய்துகொள்வதற்காக  குறுக்கு வழிகளைத் தேடுகிறார்கள்,   அதனால் பிச்சை எடுப்பதிலிருந்து  பாலியல் தொழில் செய்வது வரை என்று  தவறான பாதைக்குத் தள்ளப்படுகிறார்கள்.


 

 
இவர்களின் வேதனைகளைக் களையத் தமிழக அரசும்   சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை உள்ளிட்ட சில முக்கியமான அரசு மருத்துவமனைகளில், பாலின வழிகாட்டி மையம்'  என்ற துறை மூலம் இலவசமாக அறுவைசிகிச்சை செய்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்படுத்தியுள்ளது. இதை பற்றி பலர் அறியாமல் இருக்கிறார்கள்.

இந்த மையத்தில் சிகிச்சை பெற வருபவர்கள்  முதலில் மனதளவில் தயாராகிவிட்டார்களா என்பதை மனநல மருத்துவர்கள் பரிசோதிக்கிறார்கள், அதன் பின்   சம்பந்தப்பட்ட நபரிடம் பேசி முழுமனதாகச் சம்மதிக்கும் பட்சத்தில்தான் சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகளைத் மருத்துவர்கள் தொடங்க ஆரம்பிக்கிறார்கள் . மேலும் சட்ட ரீதியான பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்க்க, நோட்டரி பப்ளிக் ஒருவரிடம் அனுமதி பெற்று வரவும் செய்கிறார்கள்.

அதன்பின் ஆணாக இருந்து பெண்ணாகவோ, பெண்ணாக இருந்து ஆணாகவோ மாறுவதற்கான அடிப்படையான ஹார்மோன் சிகிச்சைகளைத் தொடங்குகிறார்கள். அந்த சிகிச்சையை நாளமில்லாச் சுரப்பிகள் மருத்துவர் வழங்குவார்.சில  காலத்துக்கு, மாற விரும்பும் பாலினத்தவர்களின் உடைகளை தொடர்ந்து  அணிந்து வாழ செய்கிறார்கள். அதன் பின்னும் , தன் பாலினத்தை மாற்றிக்கொள்ள அவர்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லாதபட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தொடங்குகிறார்கள்

அடுத்ததாக, லேசர் சிகிச்சைமூலம் முடிகளை அகற்றுவதற்கான சிகிச்சைகளைத் தோல் மருத்துவர் மேற்கொள்வார். அவர்களின் உடல் உறுப்புகளில் தொற்றுப் பாதிப்பு ஏதும் இருக்கிறதா என்பதை பாலியல் நோய் மருத்துவர் பரிசோதனை செய்வார்.

சிகிச்சை செய்வதற்கு உடல்நிலை தயாராக இருக்கிறதா என்பதை ஒரு பொதுநல மருத்துவர் பரிசோதனை செய்வார். இறுதியாக, பிளாஸ்டிக் சர்ஜன், மகளிர் நல மருத்துவரின் ஆலோசனையோடு அறுவைசிகிச்சையை  மேற்கொள்வார்கள். அறுவைசிகிச்சை முடிந்ததும், சிறுநீரகம் சம்பந்தமான சோதனைகள் செய்யவேண்டியது அவசியம் என்பதால். அதனைச் சிறுநீரக அறுவைசிகிச்சை நிபுணர் மேற்கொள்வார். அறுவைசிகிச்சை செய்தால், உடலளவில் மட்டும்தான் மாற்றம் ஏற்படும். அவர்களின் குரல் அப்படியேதான் இருக்கும். குரல்வளத்தை மாற்றுவதற்கான சிகிச்சைகளைக் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் மேற்கொள்வார். இப்படிப் பல சிறப்பு மருத்துவர்கள் ஒரு சேர ஒரே இடத்தில் செயல்படுவதுதான் இந்த மையத்தின் சிறப்பு. இது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பான சிகிச்சை முறை தான். ஆனால் இது பற்றி இன்னும் பலர் அறியாமல் இந்தியாவிலே  அங்கீகாரமின்றி அதனால் முறையான பாதுகாப்பும் இன்றி நடக்கிறது கேஸ்ட்ரேசன். அது இதையும் விடப் பல மடங்கு கொடுமையானது

நண்பர்களே நாம் மூன்றாம் பாலினத்தவர்களை நோக்கும் போது கேலியாகப் பார்க்கும் பார்வையோடு வளர்க்கப்பட்டு விட்டோம்.. ஆனால் இனியும் அப்படித் தொடராமல் அவர்களையும் நம்மைப் போல  மனது கொண்ட இனத்தவர்கள் என்று மதித்து நடத்துவோம். இப்படிப்பட்டவர்கள் உங்கள் குடும்பத்தில் ,உறவுகளில் அல்லது நட்பு வட்டாரங்களிலிருந்தால் அவர்களைக் கேலியாகவோ அனுதாபத்துடனோ பார்க்காமல் அவர்களை சக மனிதர்களாக மதித்து நம்மால் ஆன உதவிகளைச் செய்து அனைவரும் மகிழ்வாக இருப்போம்.

நீங்கள் இப்படி மூன்றாம் பாலினத்தவர்களைக் கண்டால் அவர்களுக்கு இப்படி இலவச சிகிச்சை அளிக்கும் மையம் இருப்பதை அவர்களுக்குத் தெரியவில்லை என்றால் எடுத்துச் சொல்லுங்கள்

நண்பர்களே இதுவரை நீங்கள் படித்தது உங்களை குலை நடுங்கி மனதை உறைய வைக்கும் செய்தி அல்ல இங்கே கிழே நான் இணைத்து இருக்கும் வீடியோத்தான்  உங்கள் குலையை நடுங்கச் செய்து மனதை உறைய வைக்கும் அதனால்தான் அப்படி ஒரு எச்சரிக்கை.

https://youtu.be/bQcT0_VqS7I அறுவை சிகிச்சை

Thursday, June 17, 2021

கை வீசம்மா கை வீசும் குட்டீஸ் பாட்டுக்கு சொந்தக்காரர்.

"கை வீசம்மா கை வீசு...!"

"நிலா நிலா ஓடி வா...!"

"சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு...!"

இவையெல்லாம் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட குழந்தைப் பாடல்கள்.

இவைகளை இயற்றியவர் "மயிலை சின்னத்தம்பி பிள்ளை ராஜா" என்கிற எம்.சி.ராஜா!

குழந்தைகளுக்கு அவர் எழுதிய விடுகதைகளும் சிறப்பானவை. உதாரணத்திற்கு சில;

1) காட்டில்  ஒரு துளி ரத்தம்.அது என்ன?
(விடை: குன்றிமணி)

2)போவான் வருவான்.
ஒற்றைக் காலில் நிற்பான்.அவன் யார்?
(விடை:கதவு)

3)கொக்கு நிற்க, குளம் வற்றும்.அது என்ன?
(விடை: அகல்விளக்கு)

காமராஜருக்கு முன்பே  "பெருந்தலைவர்" என்று அழைக்கப்பட்டவர் இவர்!

பெரும் அரசியல் தலைவராகவும் இருந்துக்கொண்டு, சிறார் இலக்கியத்திலும் கவனம் செலுத்தியுள்ளார்!

சிறார் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர் என்று சொல்லலாம்.

வேலூர்,ஊரீஸ் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தவர் என்பது தனிப்பட்ட மகிழ்ச்சி!!