Monday, November 24, 2014

புனிதம் தொலைத்த கங்கை மாதவி வம்ச நாயகியின் கதை



மாதவி வம்ச நாயகியின் கதை 

பஞ்சனை படுக்கைகளிலும் மலர் தூவிய மஞ்சத்திலும் மட்டுமே புரண்ட விலைமாது இன்று புழுதி புரள மாய்ந்து கிடக்கிறாள் .

பல மூர்க்கர்கள் உறவாடிய உடல் இன்று பல நோய்கள் உறவாடி அவள் மூச்சை மூர்சையாக்கி விட்டது.
அன்று ஆசையாசையாய் ஆபரணங்கள் அலங்கரித்த உடல் இன்று ஈக்களும் , எறும்புகளும் அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.

வாசனாதி திரவியங்கள் பூசி மணமணத்த உடல் இன்று புழுபுழுத்து துர்நாற்றம் வீசிக்கிடக்கிறது .

உயிரோடு இருந்தபோது பல ஆயிரம் கொடுத்து பல கைகள் தொட்டு அனுபவித்த உடல். இன்று ஆயிரக் கணக்கில் கொடுத்தாலும் தொட்டு தூக்கி குழிக்குள் போட ஒருவரும் முன் வருவதற்கு இல்லை .

விதைத்தவன் தண்ணீர் ஊற்றாமலா போவான் ? படைத்தவன் இந்த உடலையும் சுமக்க ஒரு புண்ணியவானை அனுப்பிவிட்டான் . சுடுகாடு வரை சென்று சேர்ந்தது அவ்வுடல் . அவ்வுடலுக்கு கொள்ளி வைத்து விட்டு அப்புண்ணியவான் திரும்பினான்... அரூப வடிவில் வந்தாள் அவள்...

அப்பெண் அவரிடம்...

ஐயா உங்களுக்கு மிகவும் நன்றி ... என்றாள்.
யாரம்மா நீ உனக்கு ஏன் இந்நிலை ... என்று அவர் கேட்டார் .

ஐயா நான்,
மாதவி வம்ச நாயகி நான் ... அவளைப் போலும் என் அழகிற்கு பஞ்சமில்லை கணவனின் அன்பிற்கும் பஞ்சம் இல்லை.
அன்பின் அடையாளமாய் ஒரு குழந்தை. என்று அழகான குடும்பம் எனது. செய்யாத பிழைக்கு பலியான கணவனை பிரிந்து வாழும் கொடிய நிலை உருவானது. பசித்த பிள்ளைக்கு உணவளிக்க முடியாத தருணத்தில் குழந்தை பசிக்கு உணவு பெற மனித பசிக்கு இரையாக என் உடலை நானே விலைப் பேசி கொடுக்க துவங்கினேன். அதனால் என் பிள்ளைக்கு மூன்று வேளை உணவும் நல்ல கல்வியும் கொடுக்க முடிந்தது .
எந்த சூழலிலும் என் நிலை என் மகளை சூழ்ந்துவிடக் கூடாது என தான் யார் என அவளுக்கு தெரியாமலே வளர்த்தேன். மாதவியின் மகளுக்கு "மணி மேகலை" என்றொரு காப்பியம் இருக்கிறது . ஆனால் என் மகளுக்கு "விபச்சாரி மகள்" என்ற அடைமொழி தான். அவளையும் விலை பேசும் மனித உருவம் கொண்டு அலையும் நரிகள் கூட்டம் ஒன்றா இரண்டா .

பெண்ணின் அடிமைத்தளையை உடைத்தெறிய வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்தவனும், என்னை அடிமை நாயைப்போல் பயன் படுத்தியிருக்கிறான் .

கந்து வட்டிக்காரனும், என்னை கசக்கி அனுபவித்து விட்டு கடன் சொல்லி விட்டு போயிருக்கிறான் .

ஜாதி வெறிப் பிடித்த மனிதனும் என்னிடம் வெறிக்கொண்டு பாய்ந்து
அனுபவித்திருக்கிறான்... என்றே அரற்றினாள்.

இதைக் கேட்ட அப்புண்ணியவான் ,
ஒரு நிலைக்கு மேல் நீ திருந்தியிருக்கலாமே ... என்றார்

திருந்துவதா திருந்த நினைத்தாலே இந்த சமுதாயமும் என்னைத் தீண்டி ருசிப்பார்த்த ஓநாய்கள் கூட்டமும் என்னை திரும்ப விடவில்லை.

போலீசாரால் கைது செய்யப் பட்ட போதெல்லாம் பத்திரிக்கைக் காரர்களால் "விபச்சார அழகி" என்னும் அடைமொழியுடன் செய்தியாக்கினால் தான் அவர்களுக்கு வியாபாரம் . பெண்களை தாயாக மதிக்கும் நம் நாட்டில் எங்களுக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதை இது தான்.
இப்படி எங்களைப் பற்றி எழுதினால்தான் பத்திரிக்கைக்கு வியாபாரம். என்னிடம் படுத்த ஆண்களை பற்றி ஒன்றும் எழுதியது இல்லை. அவர்களின் பெயர்களை கூட போடுவது இல்லை. எங்களுக்கு ஏன் இந்த நிலை என்று கூட சொன்னது இல்லை.

காட்டிக்குள் இரைத்தேடி அலையும் விலங்குகளைக் காட்டிலும் , நாட்டுக்குள் பெண் தேகம் தேடி அலையும் விலங்குகள் அதிகம்.

எனக்கும் என் குடும்பத்திற்கும் பொருள்கள் வாங்க வேண்டுமென்றால் விற்பதற்கு என்னுடல் இருந்தது. இப்போது நிரந்தரமாக பிணமாக இருக்கும் நான் அன்று இரவு பகலாக கட்டில் மேல் பிணமாகவோ , அல்லது நடிக்கும் கருவியாகவோ இருந்தால் தான் என் பிள்ளைக்கு பால் வாங்க பணம். நிர்வாணம் மட்டுமே ஆடையாக உடுத்தி பழக்கப்படுத்தப் பட்டவள். தேகம் மேயும் மாந்தர் செய்த காயங்களை மறைப்பதற்காக நூலாடை அணியவேண்டும்.

ஆசை பட்டு இந்த தொழிலுக்கு வந்திருந்தால் கூட வேஷம் போட்டு காலம் ஓட்டி இருப்பேன். வேதனையில் வந்தவள் தூறல் சிந்தாத வானம் இருக்கும் என் கண்ணீர் சிந்தாத நாட்கள் இல்லை. என்னை வேசி என்று ஏசும் எவரைப் பற்றியும் கவலைப் பட்டதே இல்லை .என் மீது கல்லெறிய எவருக்கும் தகுதியும் இல்லை.

உலகமே சேர்ந்து பெண்ணின் பெருமையை உயர்த்துவது எவ்வளவு பெரிய நாடக செயல் ? விதவை, விபச்சாரி, முதிர்கன்னி , மலடி ,ஓடுகாலி , ஒழுக்கங்கெட்டவள் இது போன்ற புனைபெயர் எந்த ஆண்களுக்கும் இல்லையே.  அப்படி என்றால் என்னிடம் வந்தவர்கள் எல்லாம் புனித மகான்களோ.? ஒரு பெண் தன் கணவனை மட்டும் எண்ணியும், ஒரு ஆண் தன் மனைவியை மட்டுமே எண்ணியும் உள்ளன்போடு வாழ்ந்தாலே என்னை போன்றவர்கள் தோன்றப் போவது இல்லையே. 

போகட்டும்,
என்னுடைய எதிர்பார்ப்பு எல்லாம் என் சந்ததிகளுக்கும் இந்த சமுதாயம் வேசி வேடம் அணிவித்திடக் கூடாது. நான் என் வேதனையை சொல்லி என்னை உத்தமியாக்கிக் கொள்ளவில்லை என்னால் கூட எத்தனையோ குடும்பம் சீரழிந்து உள்ளது . மனுஷியாக என்னை ஏற்காவிட்டாலும் சரி என்னுள்ளும் மனம் என்ற ஒன்று உள்ளது என்பதை ஏற்ககூடாதா ? செய்த பாவங்களுக்கு பாவமன்னிப்பு கேட்கவில்லை. பாவத்திற்கு தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும் . அதை தான் அனுபவித்தேன்...  என்று வருந்தினாள் அப்பெண்.

அப்போது அந்த புண்ணியவான் :
இல்லை அம்மா உன் பாவங்கள் இன்றோடு தீர்ந்தது அம்மா , ஆமாம் உன் போன்றோர் இல்லையெனில் இந்த சமூகம் இன்னும் இன்னும் சீரழிந்து போயிருக்கும். இப்போதே தாய்க்கும், பெற்றெடுத்த மகளுக்கும், உடன்பிறந்தவளுக்கும் வித்தியாசம் தெரியாத உன்மத்தர்கள் இங்கே அதிகரித்து விட்டனர். தாரத்தை இழந்து, தன்னிச்சையைத் தீர்க்க முடியா ஆண்களுக்கு  நீதான் அம்மா ஆறுதல். உன் போன்ற உத்தமிகள் இல்லையென்றால் நிலை என்னவாகும் , நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லையம்மா .

இன்னும் இன்னும் இது போல் உள்ளத்தாலும் உடலாலும் தினம் தினம் செத்து சமூகத்திற்கு நீ ஆற்றிய பணி அளப்பரியது .பாவத்தை சுமப்பவன் கடவுளல்ல பாவத்தை தீர்த்தவர்களே தெய்வமாகிறார்கள். நீ இங்கேயே  நரகத்தை முழுமையாய் அனுபவித்து விட்டாய். இனி உனக்காக சொர்க்கம் அதோ அங்கே திறந்திருக்கிறது என்று தாயே உன்னை வணங்குகிறேன்...என்றார் . 

அவளது ஆத்மா மகிழ்வுடன் காற்றோடு கலந்தே மறைந்தது...!

~மகி

Sunday, November 23, 2014

உலகம் அழியப்போகும் இன்னும் சில தினங்களில்



வானம் உடையுமா ?
நிலா மண்ணில் விழுமா ?
கடல் கரைத்தாண்டுமா ?
எரிமலை வீட்டின் அடுப்புக்குள் புகுமா ?
இமயம் இல்லாமல் போகுமா ?
இந்த பூமி உருண்டு ஓடுமா ?

இந்த பூமிக்கு முடிவு எப்படி இருக்கும்
என மனிதர்களுக்கு பெரும் பயம் கலந்த ஆவல் !

அடுத்தநாள் நாளிதழில்
இன்னும் இரண்டு நாளில்
நிலா உடையும்
உடைந்து
நிலா துகள்கள் பாறைகள் பூமியை தாக்கும்
என அறிவிப்பு...

மண்ணை பார்த்து நடந்த பெண்களும்
பெண்ணை பார்த்து நடந்த ஆண்களும்
இரண்டு நாளாக நிலாவை பார்த்தபடியே நடக்கிறார்கள்...

நிலாவைப் பற்றி வர்ணித்த பேனாக்கள் எல்லாம்
இப்போது நிலாவை பற்றி வரலாறு எழுத ஆரம்பித்தது....

நிலா கவிஞர்கள் கண்ணில்
நிலா பெரும் பாரத்தை தூக்கி வைத்தது...

பெண்ணை நிலா என கூறியவர்கள்
நிலா தான் பெண் என மாற்றி பேச ஆரம்பித்தனர்...

இரண்டு நாள் கழிய சில மணிநேரம்
பாக்கியாக வந்தது

கிட்டத்தட்ட பூமியின் முடிவு
உறுதியானது.

நிலா உடையும் சத்தம்
நீலாம்பூர் வரை செவி அடைத்தது...

அனைத்து தொழிற்சாலையும்
விடுமுறை அறிவிக்கப்பட்டுவிட்டது...

வெளியூர் வேலை வாசிகள்
முண்டியடித்து குடும்பத்துடன் சேர்ந்து போக
பேருந்தைத் தேடி...

பங்களாவாசிகள் பதுக்காத மீதிப் பணத்தை
பதுக்க பாதாளம் தேடி...

சில காதல் வாசிகள்
இறுதி முத்தத்தைத் தேடி...

போதை வாசிகள்
மரண வலி தெரியக் கூடாது என
டாஸ்மாக் தேடி...

பாச வாசிகள்
இறுதி கட்ட பாசம் காட்ட
தொலை பேசி தேடி...

ஆன்மீக வாசிகள்
சிறப்புப் பிரார்த்தனை என
தேவாலயம் , கோவில், மசூதி தேடி...

சாலை எங்கிலும்
மக்கள் நெரிசல் சாலை விதிகளை மீறி
மாரத்தான் ஓட்டம்...

டாஸ்மாக்கில் குடிக்கும் கணவனை
வீட்டிற்கு வரச்சொல்லி அழுகை...

துடிக்கும் இதயம் எல்லாம் துடி துடிக்க
ஆரம்பித்துவிட்டது...

முன் பதிவு செய்து கட்டிக்கொண்ட
கல்லறையில் அடுத்தவன் புகுந்துவிட கூடாது
என தன் கல்லறையை தேடி...

இன்னும் சில நிமிடம் தான்
என அறிவிப்பு வந்தது...

தொலைகாட்சி சிறப்பு செய்தி

அழிவைப் பற்றி அறிவிப்பு வாசிப்பாளர்
கடைசி நிமிடம் என தெரிந்தும் முகத்தில் மேக்கப்பும்
புது சேலையும் செயற்கையாய் ஒட்டி வைத்த சிரிப்புடன்...

போக்குவரத்து நெரிசலில் சிக்கி நடந்தே வீட்டிற்கு
ஓடும் ஒபாமாவையும்...

தூய்மை இந்தியாவிற்காக
விளம்பரத்திற்கு நடிக்க
வந்த நடிகைகளையும் நடிகர்களையும்
மரணபயம் முகத்தில் விளையாட
விளக்குமாறை கீழே போட்டுவிட்டு ஓடுவதை
காட்டிக்கொண்டு இருந்தது...

நிலா பாறைகள் பூமியை நோக்கி
கண்ணில் தெரியும் தூரம்...

சில நொடிகள்

உலகமே மரண பயம் வாயை அடைத்துகொண்டது
பூமியெங்கும் சப்தம் நின்று நிசப்தம் பரவியது...

வீட்டை தேடும் பதட்டத்தில்
ஒரு தாய் தன் கைக் குழந்தையை மறந்தாள்...

குழந்தை பசிக்கு அழுதது
பூமியின் நிசப்தத்தால் அழுகை
சிங்காநல்லூரில் இருந்து சிங்கப்பூர்வரை
எதிரொலித்தது...

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த
பசு ஒன்று குழந்தை அருகில் வந்தது
குழந்தை பசுமாட்டின் காலைபிடித்து
மடிதேடி வாய் வைத்தது...!

~மகி

Saturday, November 22, 2014

ஒரு சேவையின் எதிரொலி

ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM" Services 
*********************************************************************
(381 / 21-11-2014)
" Ashish Acharya " மற்றும் அவரது நண்பர்களுக்கு ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் "

உலகம் முழுவதும் இருந்து பல கோடி மக்கள் புண்ணியம் தேடி வரும் ஒரு தெய்வ ஸ்தலம் , திருப்பதி திருமலை அடிவாரத்தில் அலிப்பெரி பகுதியில் பெண் ஒருவர் ஆதரவற்ற நிலையில் ( HIV ) நோயால் பாதிக்கப்பட்டு உடல் முழுவதும் காயங்களுடனும் எறும்புகள் ஊற பார்ப்பதற்கே பரிதாபமாக இருப்பதைக் கண்ட பாண்டிச்சேரியில் இருந்து வந்து நடைப்பயணமாக சாமி தரிசனம் செய்ய வந்த பாண்டியில் சமஸ்க்ருதம் p.hd மாணவர்களான ஆஷிஷ் 26 ( Ashish ) மற்றும் அவரது நண்பர் ஷர்மா ( sharma ) திருமலை கோவில் தரிசனம் செல்வதை தவிர்த்துவிட்டு அந்த பெண்ணை மீட்டு பெரும் முயற்சிக்குப் பின் திருப்பதி கதி காலனி ஜகன் மாதா சர்ச் , மதர் தெரசா மிஷினரியில் சேர்த்தனர் .

இதை பற்றி ஆஷிஷ் மற்றும் அவரது நண்பர்கள் கூறும் பொழுது.

" முதலில் நாங்கள் ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் , அந்த அறக்கட்டளையின் செயல் பாடுகள் அதன் பணியின் உந்துதலாலேயே எங்களுக்கும் இந்த உணர்வு ஏற்பட்டு இந்த பெண்ணை நாங்கள் பாதுகாக்கும் முயற்சியை மேற்கொண்டோம்.

முன்னதாக நாங்கள் பாண்டிச்சேரியில் இருந்து திருமலை கோவிலுக்கு தரிசனம் செய்ய 18 / 11 /2014 அன்று திருப்பதி வந்தோம் 19 ஆம் தேதி மலை ஏறுவதற்காக அடிவாரம் வரும் பொழுது இந்த பெண் சாலை ஓரமாக இருப்பதை பார்த்து நெஞ்சம் பதைத்தது. இந்த பெண்ணுக்கு உதவ வேண்டும் என்று தோன்றியது அதனால் 108 ஆம்புலன்ஸ் அழைத்தோம் அவர்கள் வந்து இந்த பெண்ணை பார்த்து நாங்கள் இதுவரை இந்த பெண்ணை தொடர்ந்து நான்குமுறை மருத்துவமனையில் சேர்த்து விட்டோம் ஆனால் மருத்துவ மனையில் இருந்து இந்த பெண்ணை வெளியே கொண்டுவந்து போட்டுவிட்டு போய்விடுகிறார்கள் . இனியும் நாங்கள் இந்த பெண்ணை அழைத்து சென்றால் எங்களைத்தான் திட்டுவார்கள் என்று உதவ மறுத்துவிட்டு சென்று விட்டனர். இதனால் இந்த பெண்ணிற்கு உதவுவதில் சிக்கல் ஏற்பட்டது . கோவை ஈரநெஞ்சம் அறக்கட்டளை செய்து வரும் சேவை மற்றும் பணிகளைப் பற்றியும் தொடர்ந்து முகநூல் மற்றும் பத்திரிக்கை வாயிலாக நாங்கள் கவனித்து வருவதால் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு தொடர்பு கொண்டு அவர்கள் அளித்த வழிமுறைகள் படி நாங்கள் இந்த பெண்ணை திருப்பதி கதி காலனியில் உள்ள ஜகன் மாதா சர்ச் , மதர் தெரசா மிஷினரியில் சேர்த்தோம் . அதன் பிறகு கோவிலுக்கு செல்ல நேரம் இல்லாததால் மீண்டும் திருப்பதியில் இருந்து பாண்டிச்சேரிக்கு வீடு திரும்பினோம் " என்று தெரிவித்தார் .

"சாமி தரிசனம் இவர்கள் செய்யாவிட்டாலும் இவர்களின் சேவையை தரிசிக்க அந்த சாமியே இறங்கி வந்திருக்கும்."

நன்றி
~ஈரநெஞ்சம்

https://www.facebook.com/eeranenjam

On behalf of Eeranenjam Trust we are expressing our best wishes to Mr. Ashish Acharya and his Friends.

Tirupathi temple is a very famous and lot people coming there for praying. In foothills of Tirupathi Thirumalai, Alipperi area, Mr. Ashish 26 years and his Sharma who were students of Sanskrit Ph.D from Pondicherry were found a lady, HIV patient with lot of wounds and insects in her body. Mr. Ashish and his friend Mr. Sharma came for praying by walk from Pondicherry. But after seeing that lady they cancelled to go to temple and taken efforts to rescue the lady. After a lot of efforts they admitted her in Jaganmatha Church Mother Therasa missionary in Thirupathi Gathi Colony.

Mr. Ashish and his friends told , “First we wish to say thanks to Eeranenjam trust, as their service activities and helping tendency only encourage us to do this help to that lady.

We came from Pondicherry to To Thirupathi on 18-11-2014 and we planned to go to temple on 19-11-2014. Before that we have seen that lady in foot hills and we felt pained and decided to help her. We called to 108 Ambulance. They came and see her lady, and told that they have admitted her in hospital many times, but they left away her. If they admitted her again, they felt that hospital people will scold them. So, they are not ready to take her to hospital.

So, we unable to help her . As we are watching the helping activities and services of Eeranenjam Trust, Coimbatore thru Facebook and daily magazines, we were calling them and asked advised to help her. As per their advice we have admitted her in in Jaganmatha Church Mother Therasa missionary in Thirupathi Gathi Colony. Then we don’t have time to go temple, we have returned to our home.”

They may miss their chance to see and pray God, but God will come to see them due to their helping service.

Thanks
Eeranenjam.