Showing posts with label அனாதை இல்லம். Show all posts
Showing posts with label அனாதை இல்லம். Show all posts

Sunday, March 21, 2021

அம்மா...

இரவு 11 மணி. சாலையில் ஓர் வாடகை டாக்ஸி வேகமாகச் சென்று கொண்டிருந்தது. 


ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, டாக்ஸி என கையசைத்து நிறுத்தினார். 

'தம்பி ஆஸ்பத்திரி போகனும்'.

'நான் சாப்பிட்டுட்டு,படுக்கப் போற நேரம்'.

'என் மகளுக்கு பிரசவ நேரம்பா, தயவுசெய்து வரமாட்டேன்னு சொல்லிடாதேப்பா’ என்றார் அப்பெண்மணி.

'நீங்க இவ்வளவு சொல்றதாலே வர்றேன். 500 ரூபா ஆகும்' என்றான் அந்த டாக்ஸி ஓட்டும் இளைஞன்.

அப்பெண்மணி, 500 ரூபா என்ன 1000 ரூபாய் கேட்டால் கூட தர சம்மதம் என்பது போல் வேக வேகமாக தலையாட்டி சம்மதிக்க, டாக்ஸி அவர்களுடன் மருத்துவமனைக்கு விரைந்தது.

டாக்ஸி ரெயில்வே கேட்டை நெருங்கவும், எச்சரிக்கை மணி ஒலிக்க கேட் மூடப்பட்டது.

அக்கர்ப்பினியின் முனகல் சற்று அலறலாக மாறியது. நல்ல வேளை அந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லை.

இரண்டு ரயில் வண்டிகள் எதிர் எதிர் திசையில் கடக்க, பத்து நிமிடத்தில் கேட் திறந்தது.

இப்போது டாக்ஸி, இன்னும் சற்று வேகமாக ஓடி மருத்துவமனையில் நின்றது.

நடுநிசியின் நிசப்தத்தைக் கிழித்தது, அப்பிரசவத் தாயின் அலறல். 

மூடிய விழிகளில் நீர் மல்க, அந்த நடுத்தர வயதுப் பெண்மணி கைகளைக் கூப்பி மகளுக்காக இறைவனிடம் வேண்டினாள்.

அந்த டாக்ஸி இளைஞனும் அமைதியாக அங்கே நின்றிருந்தான்.

சற்று நேரத்தில் சுகப் பிரசவம்.

'தம்பி, ரொம்ப நன்றிப்பா. இந்தா நீ கேட்ட பணம்’ என பணத்தை நீட்டினாள் அப்பெண்மணி.

'வேனம்மா. எங்கம்மா என்னைப் பெற எவ்வளவு வேதனைப் பட்டிருபாங்கன்னு, கடவுள் எனக்குப் புரிய வைச்சிருச்சு. பணத்தை நீங்களே வையிங்' என்று சொன்னபடி நடக்க ஆரம்பித்தான்.

ஏதோ யோசிக்க மொபைலை எடுத்து, ஒரு நம்பரை கண்டுபிடித்து டயல் பன்னினான்.

'ஹலோ முதியோர் இல்லமா'?

'ஆமா. என்ன இந்த நேரத்துல போன் பன்னுறீங்கே'?

'மன்னிக்கவும். நாளு நாளைக்கி முன்னாடி அனாதைன்னு சொல்லிட்டு, ஒருத்தவங்கள உங்க இல்லத்துல சேர்த்தேன் இல்லையா? அவுங்க அனாதை இல்லை. என்ன பெத்த தாய். நாளைக்கு காலையிலே வர்றேன், அவுங்கள கூட்டிட்டு போக' என்றான்.  

முதியோர் இல்ல பொறுப்பாளரின் அனுமதியைக் கூட கேட்காமல், மொபைலை கட் பன்னிவிட்டு வண்டியை தீர்க்கமான முடிவோடு ஸ்டார்ட் செய்தான்..!