Tuesday, March 16, 2021

அரசாங்கம் மக்களுக்கு பணம் கொடுத்தால், காமராஜர் சொன்னது.

பணம்...பணம்...பணம்!
*உழைக்காமலேயே அது ஏழை மக்கள் என்றாலும்கூட, இலவசமாக பணம் கொடுக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தினால் என்னவாகும்?*

படிக்காத மேதை காமராஜர் இந்தக் கேள்விக்கு,
அந்தக் காலத்திலேயே ஒரு நிகழ்ச்சியில் தெளிவாக பதில் சொல்லி இருக்கிறார்..

#பெருந்தலைவர் #காமராஜர் முதலமைச்சராக இருந்த காலம்.

தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை நீரேற்று நிலையத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் காமராஜர் தனக்கே உரிய பாமர பாணியில் பேசியது...

" நாட்ல இருக்கிற எல்லாருக்கும் பணம் வேணும்...

ஏதாச்சும் இயலாமையைச் சொல்லி 
அரசாங்கம் பண உதவி பண்ணனும்னு கேட்கிறாங்க...
எனக்கு ஒன்னும் பிரச்னை இல்லை....

பண நோட்டு அடிக்கிற மிஷின் அரசாங்கத்துகிட்டதான் இருக்கு...

எவ்வளவு வேண்டுமானாலும் அச்சடிக்கலாம்னேன்.

அடிச்சு,  உங்க இஷ்டப்படியே ஆளுக்கு ஒரு மூட்டை பணம் வீடு வீடா போய் கொடுத்துடுவோம்னேன்.

அப்போ,
பணம் இல்லாதவங்களே நாட்டிலே கிடையாதுன்னு நிலை வந்துரும்...
சரியா..?

இப்போ யாரும் வேலைக்குப் போகவேண்டிய அவசியம் இருக்காதுன்னேன்.

பசிக்கும்...

 கடைத்தெரு பக்கம் போனீங்கன்னா எல்லா கடையும் பூட்டிக் கெடக்கும்...!
அரிசி, பருப்பு, உப்பு, புளி, மொளகா, எண்ணெய் ஒன்னும் கெடைக்காது!
ஓட்டல் இருக்காது!

விவசாய வேலைக்கு ஆள் வராது...
 கூப்பிட்டா
ஒரு வேலைக்கும் ஒருத்தனும் வரமாட்டான்...
எப்படி வருவான்னேன்..?

பணம் வேணும்னுதானே உழைக்கிறாங்க....
கட்டு கட்டா பணம் வீட்ல இருக்கும் போது எவன்தான் வேலைக்கு வருவான்னேன்..?

பணத்தை தலைமாட்டில் வச்சுக்கிட்டு,
வயித்துல ஈரத் துணியைப் போட்டுக் கிட்டு சும்மா கெடக்க வேண்டியதுதான்...!

நாடே தூக்கம் வராம கெடக்கும்...

இப்போ அது மதிப்புள்ள பணம் இல்லை...
 வெத்து பேப்பர்தான்னேன்!

*உழைப்புதான் பணம்ன்னேன்...*

பொருளாதாரத்திற்கு ஆதாரமே உழைப்புதான்...

உழைப்பு இல்லாமல் ஒன்னுமே கெடைக்காது... 
பள்ளிக்கூடத்துல முக்கியமா இதைத்தான் நம்ம பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கணும்.

கல்வி, ஆரோக்யம்
இதுக ரெண்ட தவிர அரசாங்கம் எதையும் இலவசமா தரக்கூடாது.

உழைப்பு இல்லாமல்,
 கட்டு கட்டா பணம் குடுத்தால் நாட்டோட பொருளாதாரமே சீர்கெட்டு  கந்தலாகிப் போகும்னேன்..!"

பொருளாதாரப் படிப்பு படிக்காமல்,
 நாட்டு நிலையையும் நாட்டு மக்கள் நாடித்துடிப்பையும் மட்டுமே படித்த ஒரு பாமர மனுஷன்,
 படிக்காத மேதை  சொன்னதை இப்போது நினைத்தாலும் கண்ணீர் வருகிறது.
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment