Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Friday, April 23, 2021

இராவணன் போல தான் வேணும் அம்மா




கர்ப்பமாக இருந்த தாய், தன் மகளிடம் கேட்டாள்...
"உனக்குத் தம்பி வேண்டுமா, அல்லது தங்கை வேண்டுமா?" என்று...

மகள், "தம்பி வேண்டும்" என்றாள்.

"யாரைப் போல் தம்பி இருக்க வேண்டும்?" என்று தாய் கேட்க, "ராவணனைப் போல் இருக்க வேண்டும்" என்றாள் மகள்.

திடுக்கிட்ட தாய், "உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா என்ன? ராமனைப் போல் ஒரு சகோதரன் வேண்டும் என்று சொல்லாமல், ராவணனைப் போல் வேண்டும் என்கிறாயே!" என்றாள்.

"அம்மா! நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? உடன் பிறந்த சகோதரி அவமானப்பட்டாள் என்பதற்காக, ராவணன் தன் அரியணை, ராஜ்ஜியம், உயிர் அனைத்தையும் இழந்தானே! தன் எதிரியின் மனைவியைச் சிறை பிடித்த போதிலும், அவளை ஒரு போதும் தீண்டவில்லையே! ஆனால் ராமன், யாரோ ஒருவன் சொன்னான் என்பதற்காக, கர்ப்பவதியாக இருந்த தன் மனைவியை ஒதுக்கி வைத்தானே! அவளை தீக்குளித்துத் தன் புனிதத்தை நிரூபிக்கச் செய்தானே!

உனக்கு வேண்டுமானால் ராமனைப் போல் மகன் பிறக்கட்டும். ஆனால் எனக்கு ராவணன் போன்ற சகோதரன் தான் வேண்டும்" என்றாள் மகள்.

தாயால் பதில் கூற முடியவில்லை. அதிர்ந்து போனாள்.

இக்கதை ஒரு விவாதத்தைத் துவக்கலாம். ஆனால் கதையின் உட்பொருளைக் கூர்ந்து நோக்கினால், ஒரு உண்மை புலப்படும்.இவ்வுலகில் நல்லவர், கெட்டவர் என்பது நாம் நம் தனிப்பட்ட அனுமானங்களால் முடிவு செய்வதே.

கேளிக்கைகளில் திளைப்பவன் என்பதால்,
ஒருவன் கெட்டவன் என்றில்லை.
கோவிலுக்குச் செல்பவன் என்பதால்,
ஒருவன் நல்லவனும் இல்லை.

கோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழையும் சரி, கோவிலுக்கு உள்ளே இருக்கும் பணக்காரனும் சரி - கேட்பதென்னவோ பிச்சை தான்.

நம் எண்ணங்கள் தராசின் முள் போல் இருத்தல் வேண்டும்.

Saturday, April 03, 2021

பந்தமின்றி இருத்தல்







ஒரு நாட்டின் ராஜா ஒவ்வொரு நாள் இரவும் நகர்வலம் வருவான். அப்போது அவன் தினமும் ஒரு இளைஞன் மரத்தடியில் அசைவின்றி சிலைபோல அமர்ந்திருப்பதை போல பார்ப்பான். அவனுக்கு அமைதியாக அந்த இளைஞன்
அமர்ந்திருப்பதை பார்க்க மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.

அவனால் தனது ஆர்வத்தை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதனால் ஒருநாள் தனது குதிரையை நிறுத்தி
இறங்கி, “இளைஞனே, உனது தியானத்தைக் கலைத்ததற்காக என்னை மன்னித்துக் கொள்.” என்றான்.

அந்த இளைஞன் தனது கண்களை திறந்து, இங்கே எந்த மன்னிப்புக்கும் இடமே இல்லை, நான் தியானம் செய்யவில்லை, இங்கே தியானம்தான் இருக்கிறது – யாரும் அதை தொந்தரவு செய்ய முடியாது. ஆனால் உனது ஆர்வம் எதுவோ அதை பூர்த்தி செய்துகொள். என்றான்.

அரசன், “நீங்கள் எனது அரண்மனைக்கு வர வேண்டும். நான் உங்களை கவனித்துக் கொள்வேன். இந்த மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களதுதவத்தினாலும், உங்களது பொலிவினாலும், அமைதியினாலும் நான் ஈர்க்கப்பட்டு விட்டேன்.அமைதியாக இந்த மரத்தடியில் நீங்கள் அமர்ந்திருப்பதை பார்த்தால் ஒரு புத்தரை பார்ப்பது போல இருக்கிறது. நான்தான் இந்த நாட்டின் அரசன், நான் உங்களை எனது அரண்மனைக்கு அழைக்கிறேன்.”  என்றான்.

இப்படித்தான் காட்டுமிராண்டிதனமான மனம் வேலை செய்கிறது. அரசன் அந்த இளைஞனை தனது அரண்மனைக்கு வருமாறு அழைக்கிறான் – ஆனால் அவனது ஆழ் மனதில் இவர் தனது அழைப்பை ஏற்றுக் கொள்ளக் கூடாதென தோன்றுகிறது. ஏனெனில் அப்போது அவர் அரண்மனையையும் ஆடம்பரத்தையும் விரும்புகிறார் என ஆகி விடுமென
பயப்படுகிறான்.

ஆனால் அந்த இளைஞன் எழுந்து நின்று, “போகலாம்” எனக் கூறுகிறான்.

இப்போது உடனடியாக அந்த சூழ்நிலையே மாறுகிறது. அரசனின் மனம், “நான் இப்போது என்ன செய்வது?  அரசனின் விருந்தாளியாக இருப்பதற்கு, அரண்மனையில்  இருக்கும் சுகங்களைஅனுபவிப்பதற்கு இவர் ஆர்வமாக இருப்பது போல தோன்றுகிறதே, இவர் உண்மையான துறவியேஅல்ல.” என நினைக்கிறது. எந்த அளவு ஒருவர் தன்னை
துன்புறுத்திக் கொள்கிறாரோ அந்த அளவு அவர் ஒரு துறவி என்பது பழமையான ஒரு கருத்து.
வசதியின்றி இருப்பது மதம். நோய், பசி, என தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ள ஆயிரம்
வழிகள்…….. அப்போது ஒரு சிறப்பான துறவி. அரசனின் மனதில் இந்த இளைஞன் தனது
துறவிதன்மையிலிருந்து கீழிறங்கி விட்டார். ஆனால் இப்போது ஒன்றும் செய்ய முடியாது.
தனது வார்த்தையிலிருந்து மாற முடியாது.

ஆனால் இந்த இளைஞன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் எதுவும் பேசவில்லை. அரசன் அரண்மனையின் சிறப்பான இடத்தை கொடுத்து நல்ல  வேலையாட்களைஅமர்த்தி இளைஞனை கவனித்துக்கொள்ள இளம்பெண்களை ஏற்பாடு செய்தான். துறவி இது ஒவ்வொன்றையும் ஏற்றுக் கொள்ள கொள்ள அரசனின் மனதில் தனது துறவிதன்மையிலிருந்து கீழிறங்கி கொண்டே வந்தான். என்ன வகையான துறவி இவர்?  அழகான மிகப் பெரிய படுக்கையை ஏற்றுக் கொண்டார். அரண்மனையின் சிறப்பான உணவு வகைகளை உண்டார்.

அரசன், “கடவுளே, மடையன் நான். இவன் என்னை ஏமாற்றிவிட்டான். இவன் வலை விரித்து பிடித்துவிட்டான். நான் ஒவ்வொரு நாள் இரவும் போகும் வழி அறிந்து அந்த இடத்தில் ஒரு புத்தரைப் போல அமர்ந்து என்னை ஏமாற்றும் வகை அறிந்து என்னை வீழ்த்தியிருக்கிறான். நானும் ஏமாந்து விட்டேன். இப்போது இவனை மெல்லவும் முடியாது,
துப்பவும் முடியாது. அரண்மனைக்குள் வந்துவிட்டான். மிகவும் ஏமாற்றுக்காரன் இவன்.” என்று நினைத்தான்.

ஆனால் இப்படிப்பட்ட மனநிலையோடு எவ்வளவு நாள் தாக்கு பிடிக்கமுடியும்?

ஆறு மாதம் கழித்து ஒருநாள் அதிகாலையில் தோட்டத்தில் உலாவியபடி பேசிக் கொண்டிருக்கையில், அரசன், ஒரு விஷயம் உங்களிடம் கேட்க வேண்டும். அது என்னை துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. என்னால் அதிலிருந்து விடுபட முடியவில்லை. அதனால் ஆறு மாதங்களாக சரியாக தூங்கக் கூட முடியவில்லை. என்றான்.

இளைஞன், நீ எதை வேண்டுமானாலும் கேட்கலாம். என்று கூறினான்.

நான் இப்படி உங்களிடம் கேட்கக்கூடாது. ஆனாலும் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று எனக்கு தெரிய வேண்டும். நீங்களும் அரண்மனையில்தான் இருக்கிறீர்கள், எல்லா சுகங்களையும் அனுபவிக்கிறீர்கள், உங்களுக்கும் எனக்கும் உள்ள வேறுபாடு என்ன?

என்றாவது ஒருநாள் இந்த கேள்வி வரும் என்று எனக்குத் தெரியும். உண்மையில் நான் இங்கே வருவதற்காக மரத்தடியில்
எழுந்து நின்றபோதே அது உன்னுள் எழுந்து விட்டது. நீ தைரியசாலி அல்ல. நீ இந்த கேள்வியை அப்போதே கேட்டிருக்க வேண்டும். ஆறு மாதங்கள் தேவையின்றி உனது தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை, ஆறு மாதங்களை வீணடித்திருத்த வேண்டியதில்லை. நான் உனது கேள்விக்கு பதிலை இங்கு சொல்ல போவதில்லை. நீ என்னுடன் உனது எல்லையை தாண்டி வர வேண்டும். என்றான் இளைஞன்.

அந்த இடம் ஒன்றும் அதிக தூரம் இல்லை. சில மைல் தூரத்தில் உள்ள நதிகரைதான் அரசனின் எல்லை.

அரசன், அங்கே போக வேண்டிய தேவை என்ன? நீங்கள் எனக்கு இங்கேயே பதில் கூறுங்கள்.என்றார்.

இளைஞன், இல்லை, அவசியம் இருக்கிறது. என்றார்.

இருவரும் நதியை கடந்தனர். கரையை கடந்தவுடன் இளைஞன் நான் தொடர்ந்து போகப் போகிறேன். என்னுடன் வர நீங்கள் தயாரா இதுதான் என் பதில் என்றார்.

அரசன், “என்னால் எப்படி வர முடியும்?  என்னுடைய அரண்மனை, என்னுடைய அரசாங்கம், என்னுடைய
மனைவி, என்னுடைய குழந்தைகள்……. ஆயிரக்கணக்கான கவலைகளும் பிரச்னைகளும் எனக்கு
உள்ளன. என்னால் எப்படி உங்களோடு வர முடியும்?” என்றான்.

இளைஞன், வித்தியாசத்தை பார்த்தாயா, நான் போகிறேன். எனக்கு அரண்மனை, குழந்தைகள், மனைவி, பிரச்னைகள் என
எதுவும் இல்லை. நான் அரண்மனையில் எவ்வளவு மகிழ்வோடு இருந்தேனோ அதே மகிழ்வோடுமரத்தடியிலும் இருப்பேன் – இம்மியளவும் கூடவும் குறைவும் இல்லாமல். நான் காட்டில்இருந்தாலும் சரி, அரண்மனையில் இருந்தாலும் சரி எனது விழிப்புணர்வு அதேதான். என்றார்.

தான் இவ்வளவு மோசமாக நினைத்ததை எண்ணி அரசன் மிக வருந்தினான். அவன் இளைஞனின் காலில் விழுந்து, இப்படி
நினைத்ததற்காக  என்னை மன்னித்து விடுங்கள். என்னை நினைத்தால் எனக்கே கேவலமாக இருக்கிறது. என்றான்.

இளைஞன், அப்படி நினைக்காதே. நீ மன்னிப்பு கேட்டு கண்ணீர் விடுவதால் திரும்பி வருவதற்கு எனக்கு எந்தவிதமான
தயக்கமும் இல்லை. ஆனால் நீ திரும்பவும் கடவுளே, என்னை இவன் திரும்பவும் ஏமாற்றிவிட்டானோ என்று நினைக்க ஆரம்பித்துவிடுவாய். நான் திரும்பவும் வருவதில் எனக்கு எந்த வித கஷ்டமும் இல்லை. ஆனால் உன் மீதுள்ள கருணையால் நான் வரப் போவதில்லை. என்னைபோகவிடு. இந்த முழு உலகமும் பரந்து விரிந்திருக்கிறது, எனக்கு எதுவும் பெரிதாகதேவையில்லை. ஒரு மரநிழல் மட்டுமே போதுமானது. எதுவாக இருந்தாலும் சரியே. என்றார்.

ஆனால் அரசன், இல்லை, இல்லை. நீங்கள் வராவிட்டால் நான் மிகவும் கவலைப்படுவேன், காயப்பட்டுப்போவேன், நான் என்ன செய்துவிட்டேன் என வருத்தப்பட்டுப் போவேன். என்று வலியுறுத்திச் சொன்னான்.

அந்த மனிதர், நீ இப்போது என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிட்டாய். நான் வருவதில் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை என நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஆனால் நினைவில் வைத்துக் கொள், என்ன வித்தியாசம் என திரும்பவும் உனக்கு தோன்ற ஆரம்பித்துவிடும், என்றார்...

Thursday, March 25, 2021

இரண்டு இட்லி... சிந்தனை

ரெண்டு இட்லி!!

இரக்க குண பெண்மணி ஒருத்தி
தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் சுவர் மேல் வைப்பாள்...

அவ்வழி திரியும் ஒரு கூனல் முதுகு கிழவன் அதை எடுத்துக் கொண்டு
ஏதோ முனங்கிக் கொண்டே போவான்
இது அன்றாட வழக்கமாயிற்று

ஒரு நாள் மதில் அருகிலேயே நின்று
கிழவன் என்ன முனங்குகிறான் என்று செவிமடுத்து கேட்டாள்

அவன் முனகியது இதுதான்
நீ செஞ்ச பாவம் உன்கிட்டேயே இருக்கும்
நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும்

தினந்தோறும் இதையே சொல்லிக் கொண்டு போனான்
தினமும் இட்லி வைக்கிறேன் எடுத்துட்டு போறான்;
நீ மவராசி நல்லா இருக்கணும் என்று
கையெடுத்துக் கும்பிட்டு கை கால்ல விழவில்லைனாலும்
"இட்லி நல்லா இருக்கு என்று பாராட்டவில்லை என்றாலும்
 ரொம்ப நன்றி தாயே என்று சொல்லக் கூடவாத் தோணல 
ஏதோ,... "செஞ்ச பாவம் உன்கிட்டேயே இருக்கும்
செஞ்ச புண்ணியம் உனக்கே திரும்பும் என்று
தினம் தினம் உளறிட்டுப் போறானே'
என்று எண்ணி எண்ணி புலம்பினாள் அவள்.

'இவன் என்ன பித்தனா, இல்ல, சித்தனா, பரதேசி பய' என்று திட்டினாள்
'நன்றி கெட்ட கூனனை' நினைத்து
மன உளைச்சலுக்கு ஆளானாள்
நாளடைவில் அவளது கோபம் தலைக்கேறி
கொலை வெறியாக மாறியது
ஒருநாள் இட்லி மேல் விஷம் கலந்து செத்து தொலையட்டும் என
மதில் மேல் வைக்கப் போனாள்....

மனம் ஏனோ கலங்கியது
கை நடுங்கியது அவன் அப்படி இருந்தாலும் சே...நாம் ஏன் இப்படியாகணும் என்று
அந்த விஷம் கலந்த இட்லியை சாக்கடையில் எறிந்து விட்டு
வேறு நல்ல இட்லியை மதில் மேல் வைத்து விட்டு மனம் அமைதியானாள்.

வழக்கம் போல் கூனக் கிழவன் வந்தான்
இட்லியை எடுத்துக் கொண்டு
வழக்கம்போல
நீ செஞ்ச பாவம் உன்கிட்டேயே இருக்கும் 
நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும்
என்று சொல்லிக் கொண்டே சென்றான்!
அவனை அப்படியே அறையலாம் போலிருந்தது அந்த பெண்மணிக்கு

அன்று மதியம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தாள்
வாசலில் வாலிபன் ஒருவன்
கசங்கிய உடையோடு தள்ளாடிய படி நின்றிருந்தான்

வேலையோடுதான் திரும்புவேன் என்று சொல்லி விட்டு ஒரு மாதம் முன்பு வேலை தேடி வீட்டை விட்டு சென்ற அவளது ஒரே மகன்தான் அவன்!.

"அம்மா, வீட்டுக்கு திரும்பி வரும் போது
என் பர்ஸ் காணாம போச்சு கையில காசு இல்ல
தெரிஞ்சவங்க யாரும் கண்ணுல படல
மணிக் கணக்கில நடந்து வந்துட்டே இருந்தேன்
நல்ல வெய்யில் அகோரப் பசி வேறு
மயங்கி விழுந்துட்டேன்
கண் முழிச்சு பாத்தப்போ...
யாரோ ஒரு கூனமுதுகு கிழவன்
என்னை தூக்கி உட்கார வச்சு
ரெண்டு இட்லி கொடுத்து சாப்பிடச் சொன்னார்

இட்லி சாப்பிட்ட பிறகுதான் எனக்கு உயிரே வந்தது
இதைக் கேட்டதும் பேயறைந்தது போல் அதிர்ச்சி அடைந்தாள்

'விஷம் கலந்த இட்லியை கூனனுக்கு கொடுத்திருந்தால்...
அது என் மகனுக்கே எமனாக ஆகியிருக்குமே ஆண்டவா
என்று நினைத்து தாய் உள்ளம் பதைபதைத்தது கண்கள் பனித்தன..

"நீ செஞ்ச பாவம் உன்கிட்டேயே இருக்கும்
நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் "
...கூனன் முனகலின் பொருள் இப்போது நன்கு புரிந்தது!
உண்மைதான் ...

எல்லாருக்கும் எல்லாம் புரிவதில்லை...

புரியும் வேளையில் வாழ யாரும் இருப்பதும் இல்லை....

செய்த தர்மம் என்றும் நம்மை ஏதாவது ஒரு ரூபத்தில் காக்கும்

ஏதேனும் ஒரு தர்மம் செய்யும் சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள்

வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே.

Sunday, March 21, 2021

இனி உன்னை செல்லமான்னு கூப்பிட மாட்டேன் டி மா...

*இனி உன்னை செல்லமான்னு கூப்பிட மாட்டேன் டி மா...*

"செல்லம்மா...செல்லம்மா"  என்று அழைத்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான் அவன்.

"வந்துட்டிங்களா ..இங்க தான் இருக்கேன் நீங்க செல்லம்மா, செல்லம்மான்னு கூப்பிட்டு   என்  பேரே எனக்கு மறந்து போயிடுச்சு ...யாரு என்  பேர சொல்லிக் கூப்பிட்டாலும்  திரும்பி பாக்கறதே இல்ல யாரையோ கூப்பிடறாங்கன்னு கண்டுக்காம விட்டுடறேன்   "  என்றாள் அவள்.

"சரி டி மா  இனி உன்ன உன்  பேர சொல்லியே  கூப்பிடறேன் சரியா " என்கிறான் அவன்.

"வேணா வேணா    செல்லம்மான்னே கூப்பிடுங்க ... நீங்க செல்லமா கூப்பிடுற 'செல்லம்மா' ங்குற  பேர் நீங்க கூப்பிட்டு கூப்பிட்டு  என் ரத்தத்தில கலந்துடுச்சு தெரியுமா??... செல்லம்மான்னு நீங்க கூப்பிடுறப்போ அதுல உங்க  காதல் அப்படி வழிஞ்சு  வருது "  என்கிறாள் அவனை ஒரு கையால் வளைத்து மறு கையால் அவன் சட்டை பொத்தானை அவிழ்த்தபடி..  

"சரிடி செல்லம்மா"  என  அவன் அவளை இன்னும் இறுக்கமாக அணைத்து  முத்தமிட்டான்.

காதல் பொங்கி வழியும் தம்பதி அவர்கள் .. 

அவன் பணிக்கு செல்லும் நாட்களில், மதிய நேரத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் "சாப்பிட்டியா" என்று கேட்டுக் கொள்வார்கள். தான் சாப்பிடும் நேரத்தில்  அவளும் சாப்பிட வேண்டும் என்று அவனும், பணிகளுக்கு இடையே  புகைப்படம் எடுத்து அனுப்புவதும் . ஒவ்வொரு மணி நேரத்திற்கு பல குறுஞ்செய்திகளோடு   அத்தனை காதலையும் எண்ணங்களையும் பிரியங்களையும் பறிமாறிக் கொள்வார்கள். 

வேலை நேரங்களில் ஒரு முறையாவது அவனிடமிருந்து தொலைபேசி அழைப்பு அல்லது குறுஞ்செய்தி எதிர்பார்ப்பாள். இல்லை எனில் கோபம் தான். சண்டை தான் . 

"என்னை பத்தி  உங்களுக்கு நெனப்பே இருக்காதா " என அவனிடம் அவள் 
"இருக்கு டி  செல்லம்மா என் வேல அப்படி... புரிஞ்சுக்கோடி மா " என அவனும் .
"வேலையோடு இருக்க வேண்டியது தானே பின்ன என்ன ஏன் காதலிச்சிங்க  கல்யாணம் செஞ்சீங்க " என்று காதல் வாக்குவாதம் அவ்வப்போது சுவாரஸ்யத்தை கொடுக்கும்.

அப்படி ஒரு சிறிய இடைவெளியை கூட தாங்க முடியாத காதல் அவன் மேல் அவளுக்கு.

அவள் அவனிடம் தினமும் எதிர்பார்ப்பது  ஒரு முழம் பூ மட்டுமே.  

"இன்னிக்கி பூ வாங்கினிங்களா" வீட்டிற்கு வந்ததும் கேட்பாள்.
"ஆமா டி செல்லம்மா இந்தா" என்று அவன் தந்ததும் அதை வாங்கி தலையில் வைத்து அழகு பார்ப்பாள், தன்னவன்  வாங்கித் தந்தது என்ற மகிழ்ச்சியுடன். மறுநாள் வாடிய பூவை கூட தூக்கிப்
 போட மனம் வராது அவளுக்கு.

ஒரு சில நாளில் , "இல்ல டி  நேரமில்ல செல்லம்மா" என்று அவன் சொன்னால், அவனின் நிலை  தெரிந்தே கோபத்தை தொடர்வாள் காதல் நிறைந்த அவனது சமாதானத்தை எதிர்பார்த்தபடி.

ஒரு நாள் அவளது தோழி ஒருத்தி அவளிடம் , "நான் ஒரு புத்தகம் படிச்சேன். புதுமைப்பித்தன் சிறு கதைகள். அதுல "செல்லம்மாள்" ங்குற தலைப்புல ஒரு கதை  படிச்சேன். நல்லா இருக்கு  வாங்கி படி." என்றாள்.


வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அவனது தேவைகளை நிறைவேற்றி பின் அந்த புத்தகத்தை பற்றி சொல்கிறாள். " என் friendu  ஒருத்தி சொன்னா .. அவ ஒரு புக்  படிச்சாளாம் ... புதுமைப்பித்தன் சிறு கதைகளில்  என்  பெயர்    ( செல்லம்மா ) தலைப்பு கொண்ட ஒரு கதையாம் ரொம்ப நல்லா இருக்காம்.. வாங்கி தரிங்களா" என்கிறாள். 

"என்ன உன் பேர்ல  கதையா... என் செல்லம்மா பேர்ல கதையா.... நம்ம கதை போல காதல் கதையா.. நம்ம கதை போல காதல் நிறைந்தது இதுவரை இல்லை இனிமேலும் வராது டா" என்கிறான் அவன்.
"விளையாடாதிங்க வாங்கி தாங்க" என்று அவள் கொஞ்ச...
"என் செல்லம்மா பெயர் என்றால் விடுவேனா" என  அவளை இழுத்து முத்தமிட்டு அந்த புத்தகத்தை வாங்க செல்கிறான் அவன்.

கடைக்கு சென்று புத்தகத்தை கையில் வாங்கிய அவன்,  செல்லம்மாவுக்கு முன் நாம படித்து பார்த்து விடலாம் என படிக்கிறான். ஆவலோடு படிக்க தொடங்கிய அவன் முகம் படிக்க படிக்க வாடத் தொடங்குகிறது. கண்கள் கலங்கி அவனை அறியாமல் கண்ணீர் வழிகிறது. புத்தகத்தை வீட்டிற்கு எடுத்து செல்லாமல் தூக்கி எறிந்து விட்டு வருகிறான். 

வீட்டுக்கு வந்த அவனிடம்,"புக் எங்க" என்கிறாள்.
"இல்ல  நா வாங்கல " என்கிறான்
"ஏன் வாங்கல"  என வழக்கம் போல அவளுக்கு கோபம்,  சண்டை.
"வாங்கலைன்னா  விடு" என அவனும் கோபமாக பதிலளிக்க..
"ஆசைப் பட்டு ஒன்னு கேட்டேன் அத கூட வாங்கி கொடுக்க முடியாதா ? நம்ம காதலப் போல தான  இருக்கும் அந்த புக்குல , உங்களுக்கு என் மேல காதலே இல்லையா போங்க நான் கொடுத்து வெச்சது அவ்ளோ தான் " என்று சண்டைபோட்டபடியாக தனியாக போய் படுத்துக் கொண்டாள்  .

சற்று நேரத்தில் அவன் அவள் அருகே வந்து பார்க்கிறான் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்து இருந்தாள் .


அவன் உறங்கும் அவள் நெற்றியில் முத்தமிட்டு விட்டு பேசத் துவங்கினான் ( உறக்கத்தில் அவளுக்கு இவன் பேசுவது தெரியாது )

"அடியே  என் பேரழகி அந்த கதையில , நம்மளப் போல காதல் நிறைந்த தம்பதி பத்தி தான் இருந்துச்சு , . கல்யாணம் ஆன பின்னால தனிக்குடித்தனம்.. காதல்..  வேலை என அழகாக கதை செல்ல... திடீர்னு அந்த செல்லம்மாளுக்கு நோய் வந்து ... செலவு செய்ய பணம் இல்லாம கஷ்டப்பட்டு.. . கடைசியில அவ  செத்தே போறாள்" . 


"அதப் படிச்ச எனக்கு  கண்ணுல தண்ணி தண்ணியா அழுகை தான் டி வந்துச்சு . கதை தான்னாலும்  செல்லம்மாள் செத்துடுறாங்குற விஷயத்த என்னால தாங்கிக்க முடியல . என்னை பொறுத்தவரை செல்லம்மான்னா நீ மட்டும் தான், உன் ஒரு நொடி பிரிவும் என்னால தாங்கிக்க முடியாது   நான் வருத்தப்படறத  உன்னாலும் தாங்க முடியாது என்பது எனக்கு தெரியும். எல்லா பெண்களும் தன் கணவன் தன்னை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் கடைசிவரை அவன் துணை இருக்கணும்னு தான் நினைப்பாங்க.  ஆண்களும் அப்படித்தான்.  தன் மனைவி தன்னால் எந்த வேதனையும் படக்கூடாதுன்னு நினைப்பாங்க. அவள்  பிரிவை எந்த கணவனாலும் தாங்க முடியாது. உன்ன நான் இனி  இன்னும்  நல்லா பார்த்துக்குவேன் டி  செல்லம்மா...

இல்லை, *இனி உன்னை செல்லமான்னு கூப்பிட மாட்டேன் டி மா...* ". 

எனக் கூறி மீண்டும் அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்.

~மகி

Thursday, March 18, 2021

ஐந்து நிமிடங்களில் பத்து வினாக்களுக்கு பதில் எழுத முடியுமா? சிந்தனை கதைகள்.



*ஐந்து நிமிடங்களில் பத்து வினாக்களுக்கு பதில் எழுத முடியுமா..??*

ஒரு நிறுவனம், வேலைக்கு ஆட்கள் தேவை என்று அறிவித்தது...

அதன்படி நிறைய நபர்கள் நேர்காணலுக்கு வந்திருந்தார்கள். அனைவரையும் ஒரு அரங்கத்தில் உட்கார வைத்தார்கள். அனைவரிடமும் வினாத்தாள்களும், விடைத்தாளும் வழங்கப்பட்டது...

இப்பொழுது அந்த நிறுவன மேலாளர் பேசினார்..

இந்த வினாத்தாளில் பத்து கேள்விகள் உள்ளது. உங்களுக்கு ஐந்து நிமிடம் நேரம் ஒதுக்கப்படும். அதற்க்குள் இந்த வினாக்களுக்கு நீங்கள் பதிலலிக்க வேண்டும். தகுதியுடைய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலை வழங்கப்படும் என்றார்.

ஐந்து நிமிட நேரம் ஆரம்பமானது..

நேரம் குறைவாக உள்ளது என்று அனைவரும் வேகமாக பதில் எழுதினர். நேரம் முடிந்த பின், அனைவரிடமும் விடைத்தாளை வாங்கினார் மேலாளர்.

விடைத்தாளை வாங்கும் போது ஒவ்வொருவரும் நேரம் குறைவாக கொடுத்து விட்டீர்கள். எங்களால் ஐந்து கேள்விகளுக்கும், ஏழு கேள்விகளுக்கும் பதில் எழுத முடிந்ததே தவிர, அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுத முடியவில்லை என்றனர்.

அதில் இருவர் மட்டும் எந்த பதிலும் எழுதவில்லை என்று வெற்றுத்தாளை மேலாளரிடம் கொடுத்தனர்.

அதன்பின், அந்த நிறுவன மேலாளர் சொன்னார்...

விடைத்தாளில் பதில் எழுதாத இவர்கள் இருவர் மட்டும் இந்த நிறுவனத்தில் வேலை செய்ய தகுதியானவர்கள். மற்றவர்கள் வீட்டிற்கு செல்லலாம் என்றார்.

அனைவருக்கும் ஒரே ஆச்சரியம், அனைவரும் ஒரு சேர அந்த நிறுவனமேலாளரிடம் கேட்டனர். வினாக்களுக்கு சரியான பதிலளித்த எங்களுக்கு வேலை இல்லை என்கிறீர்கள். எந்த வினாக்களுக்கும் பதில் அளிக்காத அந்த இருவருக்கு மட்டும் எப்படி வேலை கொடுத்தீர்கள் என்றனர்.

(இந்த இடத்தில் நமக்குள் தோன்றும் கேள்வியும் இதுதான். பதில் அளித்தவர்கள் இருக்க, பதில் அளிக்காதவர்களுக்கு வேலையா?)

அதற்கு அந்த மேலாளர் சொன்னார், எல்லோரும் அந்த பத்தாவது கேள்வியை படித்துப் பாருங்கள் என்றார்..

படித்துப் பார்த்த அனைவரும் பதிலேதும் பேச முடியாமல் வீட்டிற்கு சென்றனர்.

அந்த பத்தாவது கேள்வி இது தான்..!

*10) மேற்கண்ட எந்த வினாக்களுக்கும் நீங்கள் பதில் அளிக்க வேண்டாம்.? என்பதாகும்.*

இது சிரிக்க வேண்டிய விஷயம் அல்ல. நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம், இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி வினாத்தாள் முழுவதையும் படித்திருந்தால் வேலை நிச்சயம் கிடைத்திருக்கும் அல்லவா?

Yes...!

இந்த நவீன யுகத்தில் பிள்ளைகளை படி படி என்று படிக்கச் சொல்லி நிறைய மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்று நினைக்கிறோமே தவிர, நம் பிள்ளைகள் நல்ல புத்திசாலியாக வளர வேண்டும் என்று யாருமே நினைப்பதில்லை..!

*பல நிலைகளில் இப்படித்தான் ஏமாறுகிறோம் பொறுமையாளர்கள் கூட புறக்கணிக்கப்படுகிறார்கள்.!!*

Monday, March 15, 2021

இது தான் வாழ்க்கை

 குருவே! என் வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லை என்றான் சீடன் ஒருவன்.




குரு அவனை ஒரு தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு பட்டாம்பூச்சிகள் அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தன. "இதோ இவற்றில் ஒன்றைப் பிடித்து வா"! என்று குரு அவனிடம் சொன்னார். 


அவன் பட்டாம் பூச்சியைத் துரத்தித் துரத்தி ஓடினான். ஆனால், அவனால் ஒன்றையும் பிடிக்க முடியவில்லை.


"பரவாயில்லை வா நாம் இந்தத் தோட்டத்தின் அழகை ரசிக்கலாம்" என்ற குரு, அவனைத் தோட்டத்தின் நடுவில் அழைத்து வந்தார். 


இருவரும் அங்கு அமைதியாக நின்று, தோட்டத்தின் அழகைக் கண்குளிரப் பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் அவர்களைச் சுற்றியும் பட்டாம்பூச்சிகள் பறக்கத் தொடங்கின. 


சற்று நேரத்துக்கு முன்பு அவன் பிடிக்கத் துரத்திய பட்டாம்பூச்சி, இப்போது அவன் கைகளிலே வந்து அமர்ந்தது. 


குரு சிரித்தபடி அவனிடம் சொன்னார்:


"இதுதான் வாழ்க்கை! மகிழ்ச்சியைத் தேடி துரத்துவது அல்ல வாழ்க்கை. நாம் வாழ்க்கையை அமைதியாய் ரசிக்கும்போது மகிழ்ச்சி நம்மிடம் தானே வந்து சேர்ந்து விடும்"!



Thursday, May 09, 2013

காயம் ~ கதை

“ரொம்ப வலிக்கிது அம்மா”.

கண்களில் கண்ணீர் மல்கத் தன் காலில் இருந்த காயத்திற்கு மருந்து போட்டுக் கொண்டிருந்த அம்மாவிடம் கூறினாள் அமுதா.
"கொஞ்சம் பொறுத்துக்கோ செல்லம். சீக்கிரம் ஆறிடும்" என்று மகளைத் தேற்றினாள் அம்மா.
அப்போது வீட்டு  வாசலில் வந்து நின்ற நண்பரை வரவேற்றார் அப்பா. உபசரிப்பை ஏற்ற நண்பர்  “வீடு ரொம்ப சுத்தமா இருக்கு. பிள்ளைகளும் ரொம்ப மரியாதையா நடந்துக்குறாங்க. பிள்ளைகளை ரொம்ப நல்லா வளர்த்திருக்கிறீங்க சார்” என்று பாராட்டினார்.
அப்பாவின் கண்களில் பெருமிதம். “ஆமாம் சார்...    என் பிள்ளைகள் எல்லாம் என் பேச்சைத் தட்டவே மாட்டாங்க. நான் அவங்களை ரொம்ப ஒழுக்கமா வளர்த்திருக்கேன்” என்று கூறினார்.
தன் வளர்ப்பின் சிறப்பினை மேலும் எடுத்துரைக்க அமுதாவை அழைத்தார் அப்பா. " அமுதா... இங்கே வா" என்று கூப்பிட்டார். அப்பாவின் குரல் கேட்டதும் வேகமாய் அவர் முன் தோன்றினாள் அமுதா. “பாத்தீங்களா சார்... கூப்பிட்ட குரலுக்கு உடனே என் பிள்ளைங்க வந்து நிப்பாங்க” என்று பெருமையாய்க் கூறினார் அப்பா. மேலும் அவளிடம் 'போய்  உன்னோட இங்கிலீஷ் நோட்ட எடுத்துக்கிட்டு வா” என்று கூறினார். அப்பாவின் கட்டளையை கேட்டதும் காற்றாய்ப் பறந்தாள்  அமுதா. உடனே தன் அறைக்கு வேகமாய் சென்று தன் புத்தகங்களை புரட்டி அப்பா கேட்ட ஆங்கில நோட்டு புத்தகத்தை தேடினாள். “இப்போ ஏண்டி இப்படி அவசரப்படுற? பொறுமையா தேடு. ஏன் என் புக்ஸ் எல்லாம் கலைக்கிற?” என்று அக்காவை திட்டினாள் இலக்கியா. அதை கொஞ்சம் கூட காதில் வாங்காமல் மீண்டும்  வேகமாய் சென்று அப்பாவின் முன் நின்றாள் அமுதா.
புத்தகங்களை வாங்கி புரட்டி பார்த்த நண்பர்.. "அடடா... கையெழுத்து ரொம்ப நல்லா இருக்கே" என்று அமுதாவை பாராட்டினார். “இருக்காத பின்ன .. என் வளர்ப்பு அப்படி”  என்று நண்பரிடம்  பெருமையாக சொன்னார் அப்பா. சிறிது  நேரம் பேசிவிட்டு நண்பர் விடை பெற்றுக்கொண்டார். அப்பாவும் தன் அறைக்குள் சென்று விட்டார்.
வீட்டில் நிசப்த்தம் நிலவியது. மெதுவாக  மீண்டும் அம்மாவிடம்    வந்தால் அமுதா. "அம்மா... வலிக்கிது மா".. என்று அழுதுகொண்டே கூறினாள். "ஆமாம்.. இப்படி  கூப்பிட்ட உடனே விழுந்து அடிச்சி ஓடினா  அப்படித்தான் வலிக்கும். உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா?" என்று திட்டினாள் அமுதாவின் அக்கா கவிதா.


 "இல்ல அக்கா... கூப்பிட்ட உடனே போகலான அப்பா அடிப்பார். என்னால வலி தாங்க முடியாது.
நேற்றைக்கு கால்ல வச்ச சூடு இன்னும் வலிக்கிது... 
 என்னலே தாங்க முடியல. அப்பாவுக்கு கோபம் வந்தா இன்னும் அடிப்பார். அதான் அக்கா வேகமாப்  போனேன்" என்று அழுதுகொண்டே கூறினாள் அமுதா. "இப்படிச் சின்னப் பிள்ளைகளை மிரட்டி, அடிச்சி பயத்தினாலே  
கிடைக்கிற மரியாதையைத்  தான்உன் புருஷன் ஊரெல்லாம்  
பெருமையா நான் நல்லா புள்ள வளர்த்திருக்கேன்னு சொல்லிக்கிட்டு  
திரியிறாரு. ஆண்டவன் என்னைக்கு தான் இந்த மாதிரி ஜென்மங்களுக்கு நல்ல புத்தி கொடுப்பானோ" என்று மருமகனைக் கடிந்து கொண்டாள் பாட்டி.  
அதைக் கேட்டவுடன் அமுதா " பாட்டி... எங்க அப்பாவைத் திட்டாதே.  
உன்னையா அடிச்சாரு? எனக்கு தானே சூடு வச்சாரு. பேசாம இரு". என்று பாட்டியை அதட்டினாள். "ஆமாம் இதுல  ஒன்னும்   
குறைச்சல்  இல்ல. இப்படியே  நீ  காலம்  முழுக்க  அடி வாங்கிகிட்டே  இரு "  என்று கூறினாள் பாட்டி. 
"பரவாயில்லை  நான் பாத்துக்கறேன்   என் அப்பாவைத் திட்டாதே".  
என்று பதில் சொல்லிவிட்டுத் தன் காயத்திற்கு மருந்து தடவினாள்  
அமுதா.  
பக்கத்து அறையில் இருந்து அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த அப்பாவின் கண்களின்  ஓரம் கண்ணீர்த் துளி கசிந்தது.  
தன் மகளின்  காலில்  தான்  வைத்த  சூடு இதயத்தில்  உரைத்தது  அவருக்கு!

~தமிழ் செல்வி

Wednesday, September 05, 2012

என் நெருங்கிய நண்பர் ஒருவர் எனக்காக கூறிய கதை .

Photo: ஒரு ஊரில் முனிவர் இருந்தார் , அவருக்கு பொதுமக்கள் பழம் உணவு என கொடுத்துவந்தனர் முனிவர் நல்ல உபதேசங்களை மக்களுக்கு கூறிவந்தார் , முனிவரை பிடிக்காத ஒருவர் முனிவர் முன் வந்து தகாத வார்த்தைகளால் ஏசிவந்தார், ஆனால் முனிவர் அந்தநபர் கூறுவதை கண்டுக்கொள்ளாமல் இருப்பார் , இப்படியே பலமுறை அந்த நபர் தகாதவார்தையால் திட்டு பேசுவதையும் , முனிவர் கண்டுக்கொள்ளாமல் இருப்பதையும் கவனித்த பொதுமக்கள் முனிவரிடம் கேட்டார்கள்:

"அந்த நபர் உங்களை இப்படி திட்டி வருகிறார் நீங்கள் என் கண்டுக்கொள்ளாமல் இருகின்றீர்கள்" என்று

அதற்க்கு முனிவர் : "நீங்கள் கொடுத்த பழம் , உணவு எல்லாம் நான் வாங்கிக்கொண்டேன் , நான் வாங்கிகொண்டதால் அது எனக்கு பயனாகிற்று , ஒருவேளை நான் வாங்காமல் இருந்தால் அது உங்களுக்கே பயனாகி இருக்கும் இல்லையா ,
அது போலதான்
அந்த நபர் கூறியது எல்லாம் நான் வாங்கிகொள்ளவே இல்லை அது அவருக்கே பயனாக   இருக்கட்டும் என்று விட்டு விட்டேன்" என்றார்,
முனிவர் கூறியதை கேட்டதும் அந்த ஊர் போது மக்கள் யாரையும் தீய தகாதவார்தையால் திட்டுவதை நிறுத்திவிட்டார்கள்..!
~ என் நெருங்கிய நண்பர் ஒருவர் எனக்காக கூறிய கதை .
~மகேந்திரன்

Friday, November 18, 2011

"காதல்"

அதே மேடை
அதே கதை
நடிகர்கள் மற்றும் மாற்றபடுகிறது..!
"காதல்"