Wednesday, August 20, 2025

“சடங்குகள் ஒற்றுமைக்கு வழிவகுக்கட்டுமே”

பாரம்பரியமும் ஒற்றுமையும்: குடும்பச் சடங்குகளில் ஒருமித்த நிலைப்பாடு அவசியம்.


"பாரம்பரியம்" என்பது வெறும் பழைய வழக்கமல்ல; அது குடும்பங்களின் ஒற்றுமைக்கும் சமூகத்தின் ஒழுங்குக்கும் அடித்தளமாக இருந்து வந்திருக்கிறது. ஆனால், காலம் மாறும்போது, பாரம்பரியம் பிளவுகளின் காரணமாக மாறிவிடும் நிலை அதிகரித்து வருகிறது. சடங்குகள் என்பது வெறும் சம்பிரதாயம் மட்டுமல்ல; அது ஒரு ஒற்றுமையின் வெளிப்பாடு. இந்த உணர்வு சிதைந்துபோகும்போது, குடும்ப உறவுகளும் பலவீனமடைகின்றன.

 *திருமணச் சடங்குகளில் குழப்பங்கள்* 
​திருமண நிகழ்வுகளில், "தாய்மாமனுக்கா? சம்பந்திகளுக்கா?" என்ற கேள்விகளில் கூட கருத்து வேறுபாடுகள் உருவாகின்றன. யாருக்கு முன்னுரிமை? யார் என்ன சடங்கு செய்ய வேண்டும்? என்ற போட்டி மனப்பான்மை, மகிழ்ச்சி நிறைந்த நிகழ்வையே சில நேரங்களில் மனக்கசப்பாக மாற்றுகிறது. ஒரு புதிய குடும்பம் உருவாகும் இந்த புனிதமான தருணத்தில், அன்பையும், மரியாதையையும் பரிமாறிக்கொள்ள வேண்டியவர்கள், அதிகாரப் போட்டியால் மோதிக்கொள்கிறார்கள்.

 *இறப்பு சடங்குகளில் பிரிவினைகள்* 
​அன்புக்குரியோர் மறைந்தபின் நடைபெறும் ஈமச் சடங்குகளில் கூட, "யார் சடங்குகளைச் செய்ய வேண்டும்?", "யாருக்குத் தலைமை உரிமை?" என்ற விவாதங்களில் உறவினர்கள் மோதிக் கொள்கிறார்கள். துக்கத்தில் ஒன்றிணைய வேண்டிய குடும்பம், இவ்வாறான சீரமைப்பில்லாத நிலைகளால் பிளவுபட்டு விடுகிறது. இது, அன்புக்குரியோரை இழந்த துயரத்தை விட அதிக மன வேதனையை அளிக்கிறது.

 *பாரம்பரிய மாற்றமும் புதிய வழிகாட்டுதலும்* 
​முன்னோர் தலைமுறையில் பின்பற்றப்பட்ட சில சம்பிரதாயங்கள் காலப்போக்கில் மறந்து போயிருக்கலாம். ஆனால், ஒவ்வொரு சமூகமும் தங்கள் தேவைக்கு ஏற்ப வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து, அதை அனைவரும் பின்பற்ற வேண்டும். இப்படி ஒருமித்த நிலைப்பாடு உருவானால் தான், பாரம்பரியத்தின் உண்மையான அர்த்தம் நிலைத்திருக்கும். சடங்குகளின் உண்மையான நோக்கமான அன்பு, மரியாதை, மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். இது, எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு தெளிவான பாதையை அமைத்துக் கொடுக்கும்.

​சடங்குகள் என்றால் அது ஒரு "சடங்கு" மட்டுமல்ல; அது ஒரு ஒற்றுமையின் வெளிப்பாடு. நதி பாயும் பாதையில் சிதறல்கள் இருந்தாலும், அதன் ஓட்டம் ஒருமித்ததாக இருக்கும். அதுபோல, குடும்ப உறவுகளும் வேறுபாடுகளுடன் இருந்தாலும், ஒற்றுமை தான் அவர்களை முன்னோக்கி நகர்த்தும் சக்தியாக இருக்க வேண்டும்.

 *ஒற்றுமையே உண்மையான சடங்கு; அன்பே உயர்ந்த மரபு.*

~ மகேந்திரன்

Saturday, August 16, 2025

தாயும் தந்தையும் ஆனவர்கள்

*_தாயும் தந்தையும்_* *_ஆனவர்கள்_* 
“தாய்க்குப் பின் தாரம், தந்தைக்குப் பின் தந்தையின் இடத்தை இட்டு நிரப்ப யாருமில்லை” என்று சொன்னாலும், சில பிள்ளைகள் தாயுமானவர்களாகவும், தந்தைமானவர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

சிறு வயதில் பெற்றோரை இழந்தோ அல்லது பொறுப்பற்ற பெற்றோரால் கைவிடப்பட்டோ வளர்ந்த பிள்ளைகள் அல்லது மிகவும் வறுமையான குடும்ப சூழ்நிலையில் இருப்பவர்கள் அவர்களுடைய உடன் பிறந்தவர்களை காப்பாற்ற தாய் தந்தை பாசத்துடன் நிற்பதுண்டு. குறிப்பாக, பெண் குழந்தைகளுக்கு அக்கா தாயாகவும், ஆண் குழந்தைகளுக்கு அண்ணன் தந்தையாகவும் ஆகிவிடுகிறார்கள்.

இளம் வயதிலேயே அக்காவிற்கு திருமணம் செய்து வைக்கத் தம்பிகள் தங்கள் கனவுகளைத் தியாகம் செய்கின்றனர். பலர் தங்கள் சொந்த திருமணத்தை கூட தள்ளிப் போட்டு, குடும்ப பாரத்தை சுமக்கின்றனர். அதேபோல் தனது சகோதரனுக்கோ சகோதரிக்கோ பிறந்த பிள்ளைகளை தன் பிள்ளைகளாகவே வளர்க்கும் அக்காக்கள் பல குடும்பங்களில் உண்டு. 


நோய்வாய்ப்பட்ட பெற்றோரை கவனித்துக் கொள்வதற்காக தங்களுடைய வாழ்வின் சுக துக்கங்களை கூட பாராமல் தங்கள் வாழ்வின் சிறந்த ஆண்டுகளை தியாகம் செய்து, கண்ணும் கருத்துமாக பெற்றோரைப் பார்த்துக் கொள்ளும் பல பிள்ளைகள் உள்ளனர். பல இடங்களில் பெற்றோர் வாங்கிய கடனை அடைப்பதும் பிள்ளைகளின் தலையில் விழுகிறது. உடன் பிறந்தவர்களின் படிப்பு திருமணம் வேலை அவர்களுடைய நல்வாழ்வு இதற்காக கடன்பட்டு அந்தக் கடனை தன் வாழ்நாள் முழுக்க அடைத்துக் கொண்டிருப்பவர்கள் எத்தனையோ பேர்.

வெளிநாடு சென்று வாழ்வில் உயர வேண்டும் படிப்பு வேலை காதல் திருமணம் என்ற பல கனவுகளையும் கைவிட்டு, குடும்பத்தின் சுமையை சுமந்து நிற்கும் பிள்ளைகள் ஏராளம். சிலர் தங்கள் விருப்பங்களை முழுவதும் ஒதுக்கி வைத்து, தம்பி தங்கை வாழ்க்கை செழிக்க வேண்டும் என்பதற்காக அயராது உழைக்கின்றனர். இன்னும் ஒரு படி மேலே போய் குடும்பத்திற்காக உடன் பிறந்தவர்களுக்காக திருமணமே செய்து கொள்ளாமல் தன்னுடைய அத்தனை உழைப்பையும் குடும்பத்துக்கே அர்ப்பணித்தவர்கள் பலரை நம் வாழ்க்கையில் சந்தித்திருப்போம்.

ஆனால் இந்த தியாகத்தின் மறுபக்கம், அவர்கள் உள்ளத்தில் மழையாய் கொட்டும் ஆதங்கத்தை யாரும் காண முடியாது. அதை அவர்கள் வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் தங்கள் மனதின் ஆசைகளை அடக்கிக் கொள்ளும் வேதனை, சமூகத்தில் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. ஒருநாள் அவர்கள் வாழ்வு சிதைந்த பின்னரே, அவர்களது உளவியல் துன்பம் வெளிப்படும்.

இவ்வாறு, தாயும் தந்தையும் ஆன பிள்ளைகள், நம் சமூகத்தில் மறைந்திருக்கும் அன்றாட வீரர்கள். வெளிச்சத்துக்கு வராத கதாநாயகர்கள்.


இன்றைய காலகட்டத்திலும் பெற்றோர் இடத்தை பிள்ளைகள் நிரப்பும் சூழல் குறையவில்லை. அவர்களின் உழைப்பும், அர்ப்பணிப்பும் தான் பல குடும்பங்களை கரை சேர்த்திருக்கிறது.
இவர்களின் தியாகத்தை புரிந்து கொண்டு, நாமும் அவர்களை ஆதரிக்க வேண்டும். அப்படி யாராவது உங்கள் குடும்பத்திலோ அக்கம்பக்கத்திலோ இருந்தால் அவர்களைப் போற்றாவிட்டாலும் கூட அவர்களை காயப்படுத்தாமல் அன்போடும் அரவணைப்போடும் கவனித்துக் கொள்வோம்.

~ மகேந்திரன் 

Saturday, August 02, 2025

*வாரிசுச் சான்று* காலங்களைக் கடந்து வந்த உறவுப் பாலம்

*வாரிசுச் சான்று* காலங்களைக் கடந்து வந்த உறவுப் பாலம்



“வாரிசுச் சான்றிதழ்... சிலருக்கு அது வெறும் அரசாங்க ஆவணம் தான். ஆனால் அறிவழகனுக்கு அது – தந்தையிடமிருந்து கிடைத்த இறுதி ஆசீர்வாதம்!”

கந்தசாமி தன் வாழ்நாள் முழுவதும் ஒரு உழவனாய், வியர்வைத் துளிகளை நிலத்தில் சிந்தி, கடினமாக உழைத்து ஒரு பைசாவைக் கூட வீணாக்காமல் பாடுபட்டு சேர்த்த சொத்துகளைப் பிள்ளைகளுக்கு நியாயமாக பிரித்துக் கொடுத்திருந்தார்.

அவருக்கு ஐந்து பிள்ளைகள் – மூன்று மகள்கள், இரண்டு மகன்கள். தன் உழைப்பால் வந்த செல்வத்தைப் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து பிரச்சனை இல்லாமல் பிரித்துக்கொள்ள வேண்டும்; தனது காலத்துக்கு பின் சண்டை சச்சரவுகள் வரக்கூடாது என்பதில் உறுதியுடன் இருந்தார். ஆனால், விதி வலியது. அவரது இரண்டாவது மகள் எதிர்பாராத விதமாக முன்னரே இவ்வுலகைவிட்டு மறைந்தார்.

கந்தசாமியின் மறைவுக்குப் பின், எஞ்சியிருந்த இரண்டு மகள்களும், மூத்த மகனும்,
"அப்பா நமக்கு தரவேண்டிய சொத்துக்களை ஏற்கனவே பிரித்துக் கொடுத்து விட்டார். இனி அப்பா பெயரில் இருந்து நமக்கு எதுவும் வர வேண்டியது இல்லை. வாரிசுச் சான்றிதழ் என்பது வெறும் காகிதம்; அதற்கான தேவையும் இல்லை; அலைந்து திரிந்து வாங்க வேண்டிய அவசியமும் இல்லை என்று கூறி ஒதுங்கிக்கொண்டனர்.

அவர்களின் பார்வையில், பாகப்பிரிவினை முடிந்த பிறகு, ஒரு புதிய ஆவணம் பெறுவது அவசியமற்ற ஒன்றாக தோன்றியது. ஒருவேளை, தங்கள் தந்தையின் பெயரில் வங்கியில் நிறைய பணமோ வேறு எதுவும் சொத்துகளோ இருந்திருந்தால், இந்தச் சான்று வாங்க ஆர்வம் காட்டி இருப்பார்களோ என்னவோ? சொத்துக்கள் அவரவர் பெயரில் வந்துவிட்டாலும் கூட என்றேனும் ஒரு நாள் இந்த சான்று தேவைப்படலாம் என்பதும் அவர்களுக்கு புரியவில்லை.

ஆனால், இளைய மகன் அறிவழகனின் மனசு அத்தனை சீக்கிரம் ஒப்பவில்லை. அவனுக்கு அந்தச் சான்றிதழ் வெறும் காகிதம் அல்ல, ஒரு குடும்பத்தின் வரலாறு ஒரு தலைமுறையின் அடையாளம் 

 கந்தசாமி என்ற மனிதனின் வேர்களும் விழுதுகளும் இவர்கள்தான் என்று உலகுக்கு காட்டக்கூடிய அதிகாரப்பூர்வமான ஆவணம் என்பதை உணர்ந்து எப்படியாவது தன் தந்தைக்கு வாரிசு சான்றை வாங்கி விட வேண்டும் என்று அறிவழகன் உள்ளம் உருகினான்.

 தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரது பெயரும் இடம்பெறும் அந்தச் சான்று தான் தன் அப்பா கொடுத்ததிலேயே மிகப்பெரிய சொத்து என்று நம்பினான். 

வாரிசுச் சான்றிதழ் பெறுவது அறிவழகனுக்கு ஒரு தவம் போலவே இருந்தது. அறிவழகனின் எந்த முயற்சிக்கும் மற்ற மூன்று பிள்ளைகளும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை 
 உடன்பிறந்தவர்கள் தங்கள் அடையாள அட்டைகளை வழங்க மறுத்தனர். அவர்களுக்கு அதன் உண்மைத் தேவை புரியவில்லை.
"ஒற்றுமை இல்லை – ஆதாரங்கள் இல்லை – ஆதரவும் இல்லை" என்று அவர்கள் கைகழுவினாலும், அறிவழகனின் முயற்சி ஓயவில்லை.

தந்தையின் மீதான அன்பு, இந்தச் சான்றிதழைப் பெற்றே தீர வேண்டும் என்ற வைராக்கியமாக அவன் நெஞ்சில் வேரூன்றியது.

அண்ணன், அக்காக்களுக்குத் தெரியாமல், கண்ணீரும் வியர்வையுமாய் பல இடங்களுக்கு அலைந்தான். ஒரு துப்பறிவாளனைப் போல, வீட்டின் மூலை முடுக்குகளில் எப்போதோ எதற்காகவோ விட்டுச்சென்ற அவர்களின் அடையாள அட்டைகளின் நகல்களைத் தேடிப் பிடித்தான்.

இந்தத் தேடலின் போது 
தந்தையுடனும், குடும்பத்தினருடனும் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படங்கள், பள்ளிக் காலச் சான்றிதழ்கள், தந்தையின் கையெழுத்துகள் பதிந்த பழைய கடிதங்கள் என ஒவ்வொரு துகளையும் தேடித் திரட்டினான்.

ஜெராக்ஸ் நகல்கள் கூட அவனுக்குத் தந்தையின் நினைவுகளாய், உறவுகளின் சுவாசமாய் தோன்றின. ஒவ்வொரு தாளிலும் தன் குடும்பத்தின் உயிர் துடிப்பதை உணர்ந்தான்.

கிடைத்த ஆவணங்களை முறையாகத் தயார் செய்து, நம்பிக்கையுடன் வருவாய்த்துறை அலுவலர்களை பார்க்கச் சென்றான் அங்கே இருந்த அதிகாரி அறிவழகன் சமர்ப்பித்த ஆவணங்களைத் தீவிரமாக ஆராய்ந்தார்.

இவை எல்லாமே நகல்களாக இருக்கிறதே? அசல் ஆவணங்கள் இல்லையா? அரசு விதிகளின் படி அசல் ஆவணங்கள் அவசியம் என்று விண்ணப்பிக்கும் இடத்தில் ஆரம்பித்து உயர் அதிகாரி வரை திருப்பி அனுப்பினர். 

ஏன் உங்களுடன் பிறந்தவர்கள் அசல் ஆவணங்களை தர மறுக்கிறார்கள், உங்களுக்குள் ஏதாவது சொத்து பிரச்சனையா, நீங்கள் சொல்லும் வாரிசு விவரங்கள் உண்மைதானா என்று அறிவழகனை சந்தேக கண்ணோட்டத்தோடு பார்த்தார்கள்.

அறிவழகன் கண்களில் நீர் அரும்பியது.

> “ஐயா… இந்த வாரிசு சான்றிதழில்,
எங்கள் அப்பாவின் முகம், மனம், விருப்பங்கள் — எல்லாம் நான்கே வரிகளில் தெரிகிறது.
 தன்னுடைய பிள்ளைகள் நால்வரும் ஒற்றுமையோடு இருக்கணும் என்பதே அவருடைய ஒரே ஆசையாக இருந்தது.
ஆனால்... காலம் அவருடைய ஆசையை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து விட்டது.


 இந்த சான்றிதழில் 
அவருடைய எல்லா பிள்ளைகளின் பெயர்களும் ஒரு வரிசையில், ஒரே ஆவணத்தில் இருக்கும் போது, தன்னுடைய பிள்ளைகள் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற அவருடைய ஆசை இங்கேயாவது நிறைவேறட்டும் என்று அரசு அலுவலர்களிடம் மன்றாடினான். என் தந்தையின் வாரிசு பற்றி நான் அளித்த விவரங்கள் அனைத்தும் உண்மை, எங்கு வேண்டுமானாலும் விசாரித்துக் கொள்ளலாம் என்று உறுதிப்பட தெரிவித்தான்.

இந்த விண்ணப்பத்தில் நான் குறிப்பிட்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் உண்மையே இதில் ஏதேனும் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் அதற்கு முழு பொறுப்பையும் நான் ஏற்கிறேன், மேலும் இந்த அரசு ஆவணத்தை தவறான முறையில் பயன்படுத்த மாட்டேன் என்று உறுதிமொழி எழுதிக் கொடுத்த பிறகே அவனது மனுவை ஏற்றுக் கொண்டார்கள்.

 பொதுவாக சொத்துக்கள் பணம் இவற்றை பெறுவதற்காகத்தான் வாரிசு சான்று வாங்க பலரும் வருவார்கள். என் அப்பாவின் நினைவாக இந்த வாரிசு சான்றை ஒப்புதல் அளியுங்கள் என்று அறிவழகன் பரிதாபமாக கேட்டபோது அறிவழகனின் மனநிலையை அந்த விசாரணை அதிகாரி புரிந்து கொண்டார்.

அந்த உணர்வை மனதில் ஏற்றி, தயக்கமின்றி வாரிசுச் சான்றிதழ் வழங்க ஒப்பமிட்டார்கள்.

 வருவாய்த் துறையின் அனைத்து படிநிலைகளையும் கடந்து ஒரு வழியாக வாரிசு சான்று அறிவழகன் கைக்கு வந்து சேர்ந்தது. 

அதில், இறந்த அக்காவின் பெயரும், தன் தந்தை சிறுபிள்ளையாக இருக்கும் போது 70 வருடங்களுக்கு முன் மறைந்துபோன தாத்தா-பாட்டியின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.

அவர்களின் பெயரைக் கூட இன்று நினைத்துப் பார்க்க யாரும் இல்லாத சூழலில், அந்தச் சான்றிதழில் அவர்களின் பெயர்கள் மிளிர்வது அறிவழகனை மெய்சிலிர்க்க வைத்தது.

 மேலும் அந்தச் சான்று அறிவழகன் குடும்ப வரலாற்றின் சின்னமாக, உறவுகளின் பாலமாக மாறியது.

தனியே நின்று போராடி, தனது குடும்பத்தின் அடையாளத்தை கையில் கொண்டுவந்த அறிவழகன், அந்தச் சான்றிதழை வாழ்நாள் முழுக்க தந்தையின் ஆசீர்வாத சுடராக ஏந்திக்கொண்டான்

 அது வெறும் சான்றிதழ் அல்ல — காலங்களைக் கடந்து வந்த உறவுப் பாலம்!

~ மகேந்திரன்

Friday, May 23, 2025

சொல்லின் நாகரிகம் — “பிராமணர்” Vs “பார்ப்பனர்”

> சொல்லின் நாகரிகம் — “பிராமணர்” Vs “பார்ப்பனர்”


மொழி என்பது வெறும் வார்த்தைகளின் தொகுப்பல்ல; அது ஒரு சமூகத்தின் எண்ணங்கள், உணர்வுகள், நாகரிகம் மற்றும் பண்பாட்டின் பிரதிபலிப்பாகும். ஒரே சொல், வேறுபட்ட சூழல்களில் வேறுபட்ட உணர்வுகளைத் தூண்டக்கூடும். சில சொற்கள் மரியாதைக்குரியவையாக இருக்கலாம்; சில நேரங்களில் அதே சொல் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்து எள்ளலாக ஏற்கப்படும்.

"பிராமணர்" மற்றும் "பார்ப்பனர்" என்ற இரு சொற்களின் பயன்பாடு இதற்குச் சிறந்த உதாரணம்.
இந்த இரு சொற்களின் உண்மை உருவும், சமூக மனநிலையுடன் ஏற்படும் தாக்கங்களும், எது நாகரிகம் எனும் கேள்விக்கான நுட்பமான பதிலும் பற்றிய ஒரு சுருக்கமான சிந்தனையை இந்தக் கட்டுரைச் சொல்லுகிறது.


> சொல்லின் நாகரிகம் — சொல்லின் மரியாதையும் மனநிலையும்

மொழியில் ஒரு சொல் துல்லியமான பொருளைக் கொடுப்பது முக்கியம் தான். ஆனால் அதே சமயம் அந்தச் சொல்லின் பாவனை எப்படி இருக்கிறது என்பதும் நாகரிகத்தின் ஒரு அளவுகோல். "பிராமணர்" மற்றும் "பார்ப்பனர்" என்ற சொற்கள் இதற்குப் பதிலளிக்கின்றன.

பிராமணர் – மரியாதைக்குரிய மரபுச் சொல்

சமஸ்கிருதத்தின் “ப்ரஹ்மன்” என்பதிலிருந்து வந்த "பிராமணர்" என்பது வேதங்களில் தேர்ந்தவர்கள், யாக யஜ்ஞங்களில் ஈடுபடுவோர் என மரபாகப் போற்றப்பட்ட ஒரு சமூகத்தைக் குறிக்கும் சொல். தமிழ் வரலாற்றுச் சான்றுகளில், கல்வி உரைகளில் இது மரியாதைசொல்லாகவே பயன்படுத்தப்படுகிறது.

பார்ப்பனர் – நாட்டுப்புற வழக்குச் சொல்

“பார்ப்பனர்” என்பது பார்ப்பான் என்ற சொல்லின் பன்மை. இது தமிழகத்தில் பேசுமொழியில் வழக்கமாக இருந்தாலும், பல இடங்களில் நக்கலோடு, இழிவுடன் பயன்படுவதும் உண்டு. குறிப்பாக சமூகநீதியை பேசும் சூழலில், இது எள்ளல் கொண்ட வார்த்தையாகவும் தோன்றும்.

> தமிழைத் தமிழால் கொச்சையாக்கக் கூடாது

"பார்ப்பனர்" என்பது தமிழ்ச் சொல் என்றும் இல்லை என்றும் இரு வேறு கருத்துக்கள் நிலவுகிறது. பார்ப்பனர் என்ற வார்த்தை இலக்கியங்களில் கூட பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கு வரலாற்று அடிப்படையும் உண்டு. ஆனால், இன்று சிலர் அந்தச் சொல்லை  இழிவாகப் பயன்படுத்தும் சூழல் நிலவி வருகிறது 

> இதை விட வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், தமிழில் உள்ள சொற்களை நாமே கொச்சையாக்கும் நிலைக்கு நாம் வந்துவிட்டோம் என்பதே! 

ஒரு மொழி அதன் சொற்கள் மூலமாகவே உயர்கிறது. அந்த சொற்கள் தான் அந்த மொழியின் நாகரிகத்தையும், நம்மைச் சமூகத்தின் முன் எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்துகிறோம் என்பதையும் தீர்மானிக்கின்றன. ஒரு மொழியில் உள்ள சொற்கள் மரியாதையுடன் பயன்படுத்தப்பட வேண்டும்; தவறான பாவனைகள் அந்த மொழியின் மதிப்பையும் குலைக்கும். 

 வேண்டுமென்றால் தமிழ் சொல்லான அந்தணர்கள் என்ற வார்த்தையை கூட பயன்படுத்திக் கொள்ளலாமே.

> பிராமணர் என்பதும், பார்ப்பனர் என்பதும், சொற்கள் மட்டுமே. ஆனால் அவற்றைச் சொல்லும் வாயும், சொல்லப்படும் சூழலும் தான் உண்மையான நாகரிகத்தைக் குறிக்கின்றன. துல்லியத்துடன் மரியாதை கலந்த வார்த்தைப் பயன்பாடே நம் தமிழ் மரபிற்கும் சமூக ஒற்றுமைக்கும் வழிகாட்டும்.

~ ஈரநெஞ்சம் மகேந்திரன் 

Thursday, April 17, 2025

ஒரு உருக்கமான கோரிக்கை... மயான தொழிலாளர்கள்

வாழ்வைப் போலவே நம் இறப்பும் மரியாதையாக இருக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புவார்கள். 

இறுதி மரியாதைக்கு பின்னும் ஒரு வாழ்வின் முடிவை மரியாதையாக முடிக்கும் தோழர்கள் தான் மயானத்தொழிலாளர்கள்.

மயானம் மட்டுமல்ல மரியாதையும் தேவை – மயானப் பணியாளர்களுக்கான குரல்............
ஈரநெஞ்சம் அறக்கட்டளை

இன்றைய சமூகத்தில் மாற்றத்திற்கான ஆரம்பம், மனங்களிலிருந்து உருவாகிறது. வார்த்தைகளும் அதன் பிரதிபலிப்பாக அமைந்துள்ளன. முன்னேற்றம் என்றால் தொழிலில் மட்டும் அல்ல; பொருளாதாரத்தில் மட்டுமல்ல. இறுதிநிலை  பணியாளர்களாக இருந்தாலும் அவர்களையும் மனித நேயத்தோடு கண்ணோக்கி அவர்களும் மனிதர்கள் தான் என்று உணர்வதில்  தான் மனித குலத்தின்  உண்மையான வளர்ச்சி இருக்கிறது.

தற்போதும் பலர் மயானங்களில் பணியாற்றும் நபர்களை "வெட்டியான்" என்றே அழைக்கின்றனர். இந்தச் சொல்லின் பின்னணியில் பாழ்மையாகவே படும் ஒரு வரலாறு இருக்கலாம். ஆனால் இன்று இந்தச் சொல், அந்த தொழிலின் பெருமையை காட்டாமல், ஒரு தரப்பினரை ஒதுக்கி வைக்கும் வசைச்சொல்லாகவே 
பரவலாக நடைமுறையில் உள்ளது. மயான தொழிலாளர்கள் எவ்வளவுதான் அறிமுகமானவர்களாக இருந்தாலும் அவர்களது பெயர் தெரிந்திருந்தாலும் கூட வெட்டியான் என்றே அழைக்கிறார்கள். குறைந்தபட்ச மரியாதையும் மனித நேயமும் இல்லாமல் தான் அவர்களை நடத்துகிறார்கள் என்று மயானத் தொழிலாளர்கள் பலரும் வேதனை தெரிவிக்கின்றனர்.

நாம் மற்ற சமூக பிரிவுகளை மரியாதையுடன் "துப்புரவுப் பணியாளர்", "மாற்றுத்திறனாளி", "திருநங்கை" என அழைக்க ஆரம்பித்திருக்கிறோம். பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை கூட "பாலியல் தொழிலாளர்கள்" என்று தான் கூறுகிறோம். அதேபோல் இடுகாட்டில் இறுதி அடக்கம் செய்வதன் மூலம்  சமூகத் தூய்மை பணியில் தங்களது கடின உழைப்பைத் தரும் மயானப் பணியாளர்களும் அந்த மரியாதைக்கு தகுதியானவர்கள் தான்.

ஒரு உயிரின் பயணத்தின் கடைசி கட்டத்தைக் கையாண்டு, மரியாதையுடன் பூமிக்குள் புனிதமாக இணைத்திடும் பணியில் இவர்களின் பங்கு தீர்க்கமாயுள்ளது.

மரணம் தான் நிஜம். அந்த நிஜத்திற்குத் துணையாக இருப்பவர்கள், நம் வாழ்க்கையிலும் முக்கியமானவர்கள். இவர்களின் பணியை எத்தனை பேரால் செய்ய முடியுமென்று யோசித்தீர்களா? எத்தனை பேரால் அந்த மனஉறுதி, கட்டுப்பாடு, கருணை, பொறுமை கொண்டு இந்தப் பணியை செய்ய முடியும்?

எனவே தான் ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பில், நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம் –
"வெட்டியான்" எனும் பழமை வாய்ந்த ஆனால் இன்றைய சூழலில் தவறாக பயன்படுத்தப்படக் கூடிய  சொல்லை நீக்கி "மயானப் பணியாளர்" அல்லது மயான உதவியாளர்கள் என்ற மரியாதைமிக்க சொல்லை நாம் அனைவரும் பயன்படுத்த வேண்டும்.

இந்தப் பெயர் மாற்றம் என்பது ஒரு தொடக்கம் மட்டும்தான். சமூக மாற்றத்தின் வித்து சிறிய விதையாக இருந்தாலும் நாளை பெரும் விருட்சமாக மலரும் என்பதில் ஐயமில்லை.

வார்த்தையை மாற்றினால் 
மரியாதையும் மாறும்  
மயானத் தொழிலாளர்களின் 
வாழ்வும் மாறும். 

-ஈரநெஞ்சம் அறக்கட்டளை 

Saturday, February 22, 2025

விதைகளே பேராயுதம் சொல்கிறார் வீரமுத்து.

மாடித்தோட்டம், இயற்கை விவசாயம் என்றெல்லாம் தினமும் ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் தொடங்குகின்றனர். 
ஆனால் அதை முழுமையாக வெற்றிகரமாக செய்து காண்பிப்பவர்கள் வெகு சிலரே.

அப்படி ஒருவர் தான் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் மாஞ்சான் விடுதி ஊராட்சி மழவராயன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்து என்ற பெண்மணி ஆவார்.

42 வயதான இவர் கடந்த
2021 ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்து வருடங்களாக தனது வீட்டு மொட்டை மாடியில் மாடித்தோட்டம் அமைத்து அதில் இயற்கை முறையில் கீரை வகைகள் காய்கறிகள் பழங்கள் மலர்கள் மூலிகைகள் மற்றும் அழகு தாவரங்கள் உள்ளிட்ட அனைத்தையும்
வெற்றிகரமாக சாகுபடி செய்து வருகிறார்.

இந்த எண்ணம் எப்படி தோன்றியது என்று கேட்டபோது கோவிட் லாக்டவுன் சமயத்தில் வீட்டிற்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைப்பதற்கு மிகவும்
சிரமமாக இருந்தது. அப்போதுதான் முதன்முதலில் சிறிய அளவில் தொட்டிகளில் காய்கறிச்செடிகள் வைக்க ஆரம்பித்தேன் என்று கூறுகிறார்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இவர் தன்னுடைய மூன்று பிள்ளைகளை கணவரின் இறப்புக்குப் பிறகு சிங்கிள் மதர் ஆக இருந்து வளர்த்து வருவதோடு 11 வருடங்களாக தமிழக அரசின் வருவாய்த் துறையில் கிராம நிர்வாக அலுவலராக அரசுப் பணியிலும் இருக்கிறார் என்பதுதான்.
சாதாரணமாக சமையல், வீட்டு வேலை அலுவலக வேலை இவற்றை செய்வதே பெரும்பாடாக இருக்கும் போது வீட்டில் உள்ள பெரியவர்கள் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் பிள்ளைகள் என அனைவரையும் பராமரித்துக் கொண்டு இயற்கை விவசாயத்தையும் சிறப்புடன் செய்து எல்லா பெண்களுக்கும் ஒரு முன் உதாரணமாக திகழ்கிறார். 

இதற்கெல்லாம் உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்று கேட்டால் ஒவ்வொரு நாளும் அலுவலகத்திற்கு செல்வதற்கு முன்பும் அலுவலகம் விட்டு வந்த பிறகும் சில மணி நேரங்கள் மாடித்தோட்டத்துக்காக செலவு செய்வேன் என்று சாதாரணமாக கூறுகிறார். கேட்கும் நமக்குத் தான் ஆச்சரியமாக இருக்கிறது.

 750 சதுர அடிகள் கொண்ட இவரது மாடித்தோட்டத்தில்
 எந்தவிதமான செயற்கை உரங்களோ பூச்சிக்கொல்லி மருந்துகளோ இல்லாமல் முற்றிலும் இயற்கை முறையில் அமிர்த கரைசல், மீன் அமிலம், 
பஞ்சகவ்யம், வேப்பெண்ணெய் கரைசல், மண்புழு உரம், இலை மக்கு உரம், ஆடு மாடு சாணங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட உரம் போன்றவற்றையே பயன்படுத்துகிறார்.

இடம் சிறியதாக இருந்தாலும் இவரது தோட்டத்தில் பழங்களில் 28 வகையும், மூலிகையில் 15 வகையும்,
கீரையில் 12 வகையும், பூக்களில் 8 வகையும், காய்கறியில் 15 வகையும், கிழங்குகளில் 10 வகையும் இருப்பதாக கூறி நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். 

 அதிலும் குறிப்பாக திராட்சை, கும்குவாட் ஆரஞ்ச், பேஷன் ஃப்ரூட், மல்பெரி, காந்தாரி மிளகாய், நெய் மிளகாய், கொடி உருளை, மூக்குத்தி அவரை 
லகடாங் மஞ்சள்
சிம்ரி மஞ்சள்,கருப்பு இஞ்சி,கருமஞ்சள், மா இஞ்சி, மலேசியன் கோவைக்காய், மலேசியன் மிளகாய் என்று அபூர்வமான தாவர வகைகளை வைத்து வளர்த்து வருகிறார்.
100 க்கும் மேற்பட்ட பைகளில் செடிகள் உள்ளது. அதற்கு தண்ணீர் ஊற்றவே 2 மணி நேரம் ஆகிறது. செடிகளுக்கு நோய் தாக்கம் ஏற்படுவதும் கோடை காலத்தில் கடுமையான வெயிலை சமாளிப்பதும் சவாலான விஷயம் என்று குறிப்பிடுகிறார்.

இவ்வளவு சிரமப்பட்டு இதை செய்ய வேண்டுமா என்ற கேள்விக்கு எங்கள் குடும்பத்திற்கு நஞ்சில்லா காய்கறிகள்
பதப்படுத்தப்படாத பழங்கள் குறைந்த செலவில் கிடைக்கிறது, உடலுக்கும் ஆரோக்கியம் என்கிறார்.
  
    வெற்றிகரமான மாடித் தோட்டத்தை தொடர்ந்து நிவிஸ் கார்டன் என்ற பெயரில் யூடியூப் சேனல், வாட்ஸ் அப் குரூப், முகநூல் பக்கம் போன்றவற்றையும் அமைத்து நிர்வகித்து வருகிறார்.

 மாடித்தோட்டம் அமைப்பது இயற்கை விவசாயம் செய்வது இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்துவது போன்றவற்றையும் பரவலாக நிறைய பேருக்கு காணொளிகள் மூலம் சொல்லிக் கொடுக்கிறார். நிறைய பேருக்கு ஆலோசனைகள் கொடுப்பவராகவும் இருக்கிறார்.

 மேலும் அவரை தொடர்பு கொண்டு எங்களுக்கு விதைகள் வேண்டும் என்று கேட்பவர்களுக்கு தனது மாடி தோட்டத்தில் இருந்து சேகரிக்கப்பட்டு பக்குவப்படுத்தப்பட்ட விதைகளை இலவசமாகவே கொரியர் மூலம் அனுப்பி வைக்கிறார். 

 மேலும் தமிழ்நாடு அளவில் நடக்கக்கூடிய மரபுசார் காய்கறிகள் திருவிழா மற்றும் கண்காட்சிகளில் கலந்து கொள்கிறார். இதன்மூலம் மரபுசார் விதை சேகரிப்பாளர்களோடு தொடர்பு கொண்டு நிறைய தகவல்களை தெரிந்து கொள்வதாக கூறுகிறார்.

இவரது முயற்சிகள் பற்றி கேள்விப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலையில் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த மாணவர்கள் கிராமங்களில் தங்கி நேரடியாக விவசாய அனுபவங்களை பெறும் *கிராமப்புற வேளாண் பணி திட்டத்தின்* ஒரு பகுதியாக
இவரது மாடித்தோட்டத்தை நேரில் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

 மேலும் அலுவல் ரீதியாக இவரது கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இவர் இயற்கை முறையில் பாரம்பரிய ரகங்களையும் தனது மாடி தோட்டத்தில் வளர்ப்பது குறித்துக் கேள்விப்பட்டு மிகுந்த ஆச்சரியம் அடைகின்றனர். 

 இவரும் தனது பணிப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு ஆர்கானிக் ஃபார்மிங் பற்றி குறிப்புகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருவதோடு பாரம்பரிய ரகங்களை அவர்களது விவசாய நிலங்களில் வளர்ப்பதற்கும் ஊக்கமளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 மேலும் வீரமுத்து அவர்களிடம் பேசியபோது 

 *" *விதைகளே பேராயுதம்"* என்ற நம்மாழ்வார் அய்யாவின் அறிவுரை படி விதை பரவலாக்கம் செய்து வருகிறேன்.

எனது தேவைக்கு அதிகம் விளையும் காய்கறி , பழங்கள் , விதைகளை பிறருக்கு பகிர்ந்து வருகிறேன்.

வருங்கால தலைமுறைக்கு மரபு விதைகளை கொண்டு சேர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

*"நாளைய உணவிற்கு இன்றே விதை விதைப்போம்"*

     *"அனைவரும் இயற்கை விவசாயத்தை நேசிப்போம்"*

 என்று கூறுகிறார்.

 அன்றாடம் அதிகரித்து வரும் காய்கறிகள் பழங்களின் விலை உயர்வு, விதவிதமான நோய்கள், சுற்றுச்சூழல் பாதிப்பு என்று இருக்கும் இன்றைய காலகட்டத்தில்...
 நமது வீட்டிலேயே இது போல இயற்கை முறையில் மாடித் தோட்டம் அமைப்பதால் செலவு குறைவதோடு மட்டுமல்லாமல் நல்லதொரு உடற்பயிற்சியாகவும் மன அழுத்தத்தை குறைக்கும் காரணியாகவும் இருக்கும். 

 நாட்டின் பொருளாதாரம் தன்னிறைவு பெற இது போன்ற சிறிய முயற்சிகளை நமது இல்லத்தில் இருந்தே தொடங்குவோம்.

மாடித்தோட்டம் பற்றி கூடுதலான தகவல்களை தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இவரது நிவிஸ் கார்டன் என்னும் youtube சேனலில் சென்று பார்க்கலாம்.
 
https://youtube.com/@veerasaravanan-?si=vtRZOtbyA7TbOWGD

~ ஈரநெஞ்சம் அறக்கட்டளை 

Monday, February 17, 2025

இமைகளின் காதல்

*இமைகளின் காதல்* 

என் காதலியின் புகைப்படத்தை கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருக்கும் வேளையில், 'நீ உன் காதலியைப் பார்க்க வேண்டும் என்பதற்காக எங்களைக் கட்டித் தழுவ விடாமல் தடுப்பது நியாயமா' என்று என்னைப் பார்த்துக் கேட்டன என் இமைகள்.

இது என்னடா புதுத் தடங்கல் என்று பதைத்தபடி, என் இமைகளிடம் கேட்டேன்  ‘ஏன்... நீங்களும் காதலிக்கிறீர்களா' என.

'ஆம்... பிறந்ததில் இருந்தே நாங்கள் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம். அதனாலேயே நீ விழித்திருக்கும்போது நொடிக்கு ஒரு முறையும், நீ தூங்க ஆரம்பித்தால், கண் விழிக்கும் வரையும் கட்டித் தழுவி முத்தமிட்டபடியே இருப்போம்' என்றன இமைகள்.

ஊரார் காதலை ஊட்டி வளர்த்தால், தன் காதல் தானே வளரும் என்கிற ஆசையில் என் கண்களை கொஞ்சம் மூடி, இமைகள் இரண்டையும் கட்டித் தழுவ விட்டேன்.

மூடிய கண்களுக்குள் 
உள்ளே ஓங்கி வளர்ந்து காட்சி தந்தாள் என் காதலி.

அதற்குள் அறைக்குள் வந்த என் காதலி நான் வரும்வரை காத்திருக்காமல் எப்படி நீ உறங்கலாம் என்று என்னிடம் சண்டை போடுகிறாள் 😒

~மகி ~

Sunday, February 16, 2025

காதல் என்பது மண்டியிட்டு ரோஜாக்களை நீட்டுவது அல்ல

*காதல் என்பது மண்டியிட்டு ரோஜாக்களை நீட்டுவது அல்ல* 
காதல் என்பது மண்டியிட்டு ரோஜாக்களை நீட்டுவதில் இல்லை. அது ஒரு ஆழமான உணர்வு, இரண்டு இதயங்கள் ஒன்றையொன்று புரிந்து கொண்டு, மதித்து, அன்பு செலுத்துவதில் உள்ளது. ரோஜாக்கள் ஒரு அழகான அடையாளம், ஆனால் அவை காதலின் சாராம்சத்தை வரையறுக்க முடியாது.

புரிதல்: ஒருவரை ஒருவர் முழுமையாகப் புரிந்து கொள்வது, அவர்களின் எண்ணங்கள், உணர்வுகள், கனவுகள் மற்றும் பயங்களை அறிந்து கொள்வது.

மரியாதை: ஒருவரை ஒருவர் மதிப்பது, அவர்களின் தனித்துவத்தை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கருத்துக்களைப் பாராட்டுவது.

நம்பிக்கை: ஒருவரை ஒருவர் நம்புவது, அவர்களின் மீது நம்பிக்கை வைப்பது, அவர்கள் எப்போதும் தங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று நம்புவது.

தியாகம்: ஒருவருக்காக ஒருவர் தியாகம் செய்ய தயாராக இருப்பது, அவர்களின் மகிழ்ச்சிக்காக தங்கள் சொந்த தேவைகளை விட்டுக்கொடுப்பது.

பொறுமை: ஒருவரை ஒருவர் சகித்துக்கொள்வது, அவர்களின் தவறுகளைப் பொறுத்துக்கொள்வது, அவர்களுக்கு ஆதரவாக இருப்பது.

மகிழ்ச்சி: ஒருவரோடு ஒருவர் இருக்கும்போது மகிழ்ச்சியாக உணர்வது, வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் ஒன்றாக அனுபவிப்பது.

காதல் என்பது ஒரு பயணம், அது எப்போதும் எளிதானது அல்ல. ஆனால், உண்மையான காதல் என்பது தடைகளைத் தாண்டி, ஒருவரை ஒருவர் மேலும் நெருக்கமாகக் கொண்டு செல்லும்.

எனவே, காதலை ரோஜாக்களுடன் மட்டும் ஒப்பிட்டு விடாதீர்கள். காதல் என்பது ஒரு ஆழமான மற்றும் சிக்கலான உணர்வு, அது வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.

~ மகி