Showing posts with label பசி. Show all posts
Showing posts with label பசி. Show all posts

Thursday, February 15, 2024

சாப்டியா

சாப்டியா..
இந்த சொல் உதிரும்போதே
மனதோரம்
மலர்ந்து விடுகிறது நேசம்

இந்தச் சொல்
ஆறுதலை தருவதற்கு முன்பே
அன்பைப் பெற்றுவிடுகிறது

இந்தச் சொல்
கருணையை வழங்கியதற்காக
கண்கள் கண்ணீரை
பரிசளித்துவிடுகிறது

பசியை
சீண்டிப்பார்க்கும் சொல்தான்
என்றாலும்
அக்கறையை அள்ளித்தரும்
அழகில்
மண்ணில் இன்னும் ஈரம் இருக்கிறது என்ற நம்பிக்கை

இயலாமைக்கு தன்மானத்தை
பசி பந்தி வைக்கும்போதும்
இந்தச் சொல்
மனதை நிறைத்து விடுகிறது

ஒற்றைச் சொல்தான்
ஓராயிரம் செல்களை
தட்டி எழுப்பி கட்டிக்கொள்ளும்
மந்திரம் கொண்டது
மனிதம் நிறைந்தது.

இது கேள்விதான்
என்றாலும்
நான் இருக்கிறேன் என்ற பதிலை
சொல்லாமல் சொல்கிறது

பசி அறிந்த தாயின் சாயலை
இந்தச் சொல்
இழுத்து வரும்போது
மறந்து போன
அம்மாவும் அப்பாவும் 
இணைந்தல்லவா வருவார்கள்.

இது சொல் அல்ல
உயிரை தாலாட்டும் உணர்வு
உறவை வளர்க்கும்
உரிமையின் கீதம்
ஆமாம்
மனிதம் கேட்கும்
கடவுளின் கருணை. 🙏

 *சாப்டியா*

Sunday, March 12, 2023

அட்சய பாத்திரம் இல்லா அன்னபூரணிகள்



பசி என்பது எவ்வுயிர்க்கும் பொதுவான ஒரு உணர்வு தான். ஆனால் பணமில்லாத போது ஏற்படும் பசி அவமானமாகி விடுகிறது.  

எத்தனை கோடி பணமிருந்தாலும் அதைப் பசிக்கு  உண்ண முடியாது என்பதை அவ்வப்போது பேரிடர் காலங்களில் பெரும் பணக்காரர்களையும் பசிக்கு கையேந்த வைத்து அவர்கள் ஆணவத்தை தலையில் கொட்டி சுட்டிக்காட்ட தவறுவதில்லை இயற்கை.

உண்டியலில் காணிக்கை செலுத்துவதை விட பசியோடு இருப்பவருக்கு உணவு அளிப்பதே
கடவுளுக்கு மகிழ்ச்சியானது என்று கூறிய வள்ளலாரின் வழி நின்று ஆன்மீகப் பணியோடு பசிப்பிணி போக்கும் அறப்பணியையும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வரும் புதுக்கோட்டையில் வசிக்கும் பேரிளம் பெண்கள் இருவர் தற்கால மணிமேகலைகளாக
வாழ்ந்து வருகின்றனர்.

புதுக்கோட்டையில் எல்லைப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி பணியாளராக பணிபுரிந்து வரும் கம்மங்காட்டைச் சேர்ந்த பெரியநாயகி (வயது 56) தனது பதினெட்டாவது வயதில் வள்ளலாரே தன் கனவில் தோன்றி தன்னை ஆட்கொண்டதாக கூறுகிறார். திருமணமே செய்து கொள்ளாமல்  சிறு வயதில் இருந்தே புதுக்கோட்டை பல்லவன் குளக்கரையில் அமைந்துள்ள வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்திலேயே தங்கி ஆன்மீகச் சேவை செய்து வருகிறார். கடவுள் பக்தியில் சிறந்து விளங்கும் இவர் மேடைகளில் பரவசமூட்டும் பக்தி பாடல்களையும் பாடி வருகிறார். இவர் தனது கம்பீரக் குரலில் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை என்று பாடும் போது கல் மனமும் கரைந்து விடும்.


இவரைப் போலவே திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள கணக்கம்பட்டியைச் சேர்ந்த முத்துலட்சுமி(வயது 62) என்பவரும் இறைத் தேடல் காரணமாக திருமண பந்தத்தை மறுத்து துறவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இறைவனுக்கும் இரப்போருக்கும் தொண்டு செய்வதையே குறிக்கோளாக வைத்திருந்த குடும்பத்தில் அவரது தாயார் மற்றும் சகோதரனின் மறைவுக்குப் பிறகு புதுக்கோட்டைக்கு வந்து வள்ளலார் மடத்திலேயே தங்கி விட்ட முத்துலட்சுமி அம்மாள் முழு நேர பணியாக உணவு தயாரித்து வழங்கும் சேவையை செய்து வருகிறார். 

வள்ளலார் மடத்தில் அவ்வப்போது விசேஷ தினங்களில் மட்டும் செய்யப்பட்டு வந்த அன்னதான சேவை, இவர்கள் இருவரின் ஆத்மார்த்த அர்ப்பணிப்பை பார்த்து அரிசி, பருப்பு மற்றும் பணமாகவும் நன்கொடை சற்றே அதிகரிக்கவும் அன்னதானத்தை விரிவுபடுத்தி ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கும் மேலாக தினந்தோறும் உணவு சமைத்து வழங்கி  வருகின்றனர்.


எட்டுக்கு பத்து என்ற அளவில் இருக்கும் ஒற்றை அறையில் வசிக்கும் இருவரின் நாளும் அதிகாலை 3 மணிக்கே தொடங்கி விடுகிறது. உதவிக்கு என்று ஆட்கள் யாரும் இல்லாமலேயே இருவரும் இணைந்து நொய்யரிசி, பாசிப்பருப்பு, சீரகம் வெந்தயம் சேர்த்து கஞ்சி காய்ச்சி காலை   6 மணி முதல் 8 மணி வரை வழங்குவதோடு அன்னலட்சுமிகளாக அறுசுவை உணவையும் காலை 9 மணிக்குள் தயார் செய்து விடுகின்றனர். உணவு சமைப்பதற்கு தேவையான பொருட்கள் காய்கறிகள் வாங்குவது முதல் சமைப்பது சுத்தம் செய்வது என்று அனைத்து பணிகளையும் அவர்கள் இருவருமே செய்கின்றனர்.  முன்பெல்லாம் 12 மணி வாக்கில் தயார் செய்யப்பட்ட மதிய உணவு கோவிட் பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு 9 மணிக்குள்ளாகவே செய்யப் படுகிறது. எத்தனையோ ஏழை எளியோர் நோயாளிகள் முதியோர்கள் இங்கே வந்து சாப்பிடுவதும் உண்டு பாத்திரத்தில் வாங்கி செல்பவர்களும் உண்டு.
 கோவிட் பெருந்தொற்று காலத்திலும் கூட உணவு தயாரித்து வழங்கும் சேவையை ஒரு நாள் கூட விடாமல் செய்து வந்துள்ளனர். இன்னும் சொல்லப்போனால் ஊரடங்கு அதைத் தொடர்ந்த வேலையின்மை, கடையடைப்பு போன்ற காரணங்களினால் இங்கு உணவு தேடி வருவோரின் எண்ணிக்கை வழக்கத்தை விட பெருந் தொற்று காலத்தில் அதிகமாகவே இருந்துள்ளது. உலகமே கோவிட் தொற்றுக்கு பயந்து வீடுகளுக்குள் சிறைப் பட்டு கிடந்தபோதும் இவர்கள் இருவரும் துணிச்சலுடன் உணவு தயாரித்து வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. 
உணவு தயாரித்து வழங்கும் பணிக்கு என்று எந்த  ஊதியமோ பிரதிபலனோ எதிர்பார்க்காமல் இதை ஒரு சேவையாக நினைத்தே இருவரும் செய்து வருகின்றனர்.
உதவும் மனப்பான்மை கொண்ட தன்னார்வலர்கள் தானமாக வழங்கும் பணம், மளிகை பொருட்கள், காய்கறிகள் இவற்றை வைத்தே தினம் தோறும் அன்னதானம் வழங்கப்படுகிறது.. ஒவ்வொரு நாளும் 200க்கும் மேற்பட்ட ஏழை எளியவர்கள் ஆதரவற்றவர்கள் இங்கு வந்து பசியாறி செல்கின்றனர்.

ஏதோ பிறந்தோம் ஏனோ தானோ என்று வாழ்ந்தோம் என்றில்லாமல் இந்தப் பிறவி எடுத்ததற்கு பலனாக இச்சேவையை செய்து வருவதாக இருவரும் ஒருமித்த குரலில் கூறுகின்றனர். தங்களின் கடைசி மூச்சு வரை வறியோரின் பசியை வயிறாரப் போக்கும் புனிதப் பணியை செய்ய வேண்டும் என்பதே தங்களின் லட்சியம் என்றும் கூறுகின்றனர். 


பசியோடு இருக்கும் ஒருவருக்கு உணவு கொடுப்பது உயிர் கொடுப்பதற்கு சமம். அன்னதானம் செய்வதற்கு ஆயிரம் பேர் ஆயிரமாயிரம் பொன் பொருள் கொடுத்தாலும் அதை சாப்பிடும் அன்னமாக மாற்றும்  கைகளின் உழைப்பு பெரும்பாலும் பகட்டான மனிதர்களின் விளம்பர வெளிச்சத்தில் காணாமல் போய்விடுகிறது.

உணர்வுகளைக் நெறிப்படுத்த இயலாமல் மிருகங்களாய் வாழும் எத்தனையோ மனிதர்க்கு நடுவே பருவ வயதிலேயே தவ வாழ்வு வாழ்ந்து உணவு தயாரிக்கும் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு உணவு சமைத்து பரிமாறுகின்ற வாழும் பெண் சித்தர்களாகிய இவர்களின் போற்றுதலுக்குரிய பணியை மகளிர் தினத்தில் பாராட்டுவதில் பெரு மகிழ்வு கொள்கிறோம்...

~ ஈரநெஞ்சம் மகேந்திரன்

Sunday, May 29, 2022

இன்று மே-28 உலக பட்டினி தினம் ...

இன்று மே-28 உலக  பட்டினி தினம் ...
இன்று எனக்கு நேர்ந்த  ஒரு அனுபவத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்துக்கொள்ள விருப்பப்படுகிறேன் . இது ஒரு விழிப்புணர்வு  பதிவாகவும் இருக்கும் என்றே நினைக்கிறேன் .

இன்று மாலை 5 மணிக்கு என் பணி முடிந்து வீட்டிற்கு செல்ல  வெளியே வந்ததும் நான் அதிரும் படியான, அருவெறுப்பான ஒரு காட்சியை பார்க்க நேர்ந்தது.

 என் எதிரே இருந்த குப்பை  தொட்டியில் கிடந்த எச்சில் இலையில் இருந்த உணவுகளை ஒருவர்  வழித்து வழித்து எடுத்து அந்த  குப்பை  தொட்டிக்கு   அருகே கீழே அமர்ந்து இருந்த தன் மனைவிக்கு கொடுத்து தானும் அந்த எச்சில் உணவை உண்ணும்   காட்சியை கண்டு என் மனமும் கண்களும் கலங்கியது .

அவர்கள் அந்த உணவை உண்ணும்  அதே நேரத்தில்   தெரு நாய் ஒன்று அந்த குப்பை தொட்டிக்குள் தாவி குதித்து எதையோ  திங்க ஆரம்பித்தது. நாயும் மனிதனும் ஒரே குப்பை தொட்டியில் உணவிற்கு போட்டி போட்டு கொண்டு ...
ஐயோ ..!
என்ன கொடுமை இது..!

அந்தக் காட்சியை கண்டதும் என் கண்களும் , கால்களும், மனமும் அந்த இடத்தை விட்டு நகர வில்லை...
 அடுத்த நொடி  என்னை அறியாமலேயே  வாய் விட்டு  கத்தி விட்டேன் "ஐயா இங்கே வாங்க அங்கே என்ன செய்யறீங்க" என்று . என் குரலைக் கேட்டதும் அந்த வழியில் சென்றவர்கள் எல்லோரும் திரும்பி பார்க்கும்படி ஆகிவிட்டது.  நான் இவரைத்
 தான் கூப்பிடுகிறேன் என்று தெரிந்ததும் அவரவர் அவர்களது போக்கில் செல்ல ஆரம்பித்து விட்டனர் . அந்த நாயும் ஓட்டம் பிடித்துவிட்டது  . 

ஆனால் , குப்பைத் தொட்டியில் உணவை எடுத்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர் மட்டும் திரும்பவே இல்லை. மீண்டும் அவரருகே சென்று "என்ன செய்யறீங்க இங்கே" என்று கேட்டதும் அவர் தன் தலையை கவிழ்த்தி அழ ஆரம்பித்துவிட்டார் . "பசிக்கின்றதா" என்றேன் "ஆமாம் " என்றார் . 
"என்னோடு வரிங்களா உங்களுக்கு சாப்பாடு வாங்கி தரேன்" என்றதும் மௌனமாகவே நின்றார். அவர் முதுகில் லேசாக தட்டி 'வாங்க போகலாம் , வண்டியில் ஏறுங்க" என்றேன். கண்கள் கலங்கியவாறே வண்டியில் ஏறிக்கொண்டார்.

அடுத்த தெருவில் ஒரு அசைவ உணவகம் இருந்தது. உள்ளே நான் செல்ல அவர் உள்ளே வராமல் வெளியவே நின்றார். "அட வாங்க அண்ணே... உள்ள போகலாம்" என்றேன். அவர் கண்கலங்கியவாறே என்னை பின் தொடர்ந்து உள்ளே வந்தார். உள்ளே வந்தவர் தரையில் உட்கார "டேபிளில் உட்காருங்க" என்று நான்  சொன்னேன். அந்த டேபிள் சர்வர் என்னிடம், "அண்ணே அவரை இங்கே உட்கார சொல்லாதீங்க வெளியவே நிற்க சொல்லுங்க . அவர் உடை உடல் எல்லாம் எவ்வளவு அழுக்காக இருக்கு பாருங்க , மற்ற வாடிக்கையாளர்கள் இவரை பார்த்தால் சங்கடப்படுவார்கள்" என்றார். எனக்கு அந்த சர்வர் சொன்னதை கேட்டதும் கோபம் வந்தது . 

அங்கு நடந்ததை பார்த்துக்கொண்டு அதே டேபிளில்  அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மற்றொரு வாடிக்கையாளர்  , அந்த சர்வரிடம், "பரவாயில்லை அவரை சாப்பிட சொல்லுங்க. நான் ஒன்றும் சொல்ல மாட்டேன்"  என்றார். 
ஒருவழியாக அவருக்கு சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தேன். சுட சுட  வந்த பிரியாணியை இலையில்  போட்டு அந்த சர்வர் பரிமாற ஆரம்பித்தார். கண்ணில் கண்ணீர் வழிய துடைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பிக்கும் முன் தயக்கத்துடன் "ஐயா,  என் மனைவியும் பட்டினியா இருக்கா" ... என்றார் . சர்வரிடம் இன்னொரு சிக்கன் பிரியாணி பார்சல் சொல்லி விட்டேன். நீங்க சாப்பிட்டு போகும் போது அவங்களுக்கு எடுத்துட்டுப் போயிடலாம்." என்றேன். அவர் கண்களில் கண்ணீர் நிற்கவே இல்லை. துடைத்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தார். பில் வந்தது ஒரு பிரியாணி 90  இரண்டு பிரியாணிக்கு 180 என்று இருந்தது .

நான் பணம் எடுத்து கொடுக்கும் முன் அருகில் சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்த நபர் "அண்ணா ஒரு பிரியாணிக்கு நான் பணம் கொடுத்துவிடுகிறேன்" என்று 90 ரூபாயை கொடுத்துவிட்டு சென்றார் . நான்  மீதம் 90 ரூபாயை எடுத்து கவுண்டரில் கொடுக்கவும் அந்த உணவகத்தில் உள்ள கேஷியர், "40 ரூபாய் மட்டும் கொடுங்க அண்ணா . அடுத்தவர் பசியை தீர்க்கும் உங்கள் இந்த பணியில் எங்கள் பங்காக மீதியை நாங்கள் கழித்து கொள்கிறோம் " என்றார். 

 ஒருவரது பசியை போக்குவதில் எவ்வளவு சந்தோசம் நிறைந்து இருக்கிறது என்று , அந்த கேஷியர் என் முன்னே மற்றவரிடம் சொல்லும் போது அவர் முகத்தில் 100 வாட்ஸ் பல்ப் எரிந்தது. 

இன்று உலக பட்டினி தினம் இந்த நாளில் நான் முன்னெடுத்த இந்த சிறிய பணியில்  என்னோடு கைகோர்த்து வந்த அவர்களை  கட்டாயம் என்னால் எப்போதும்...  ஏன் உங்களாலும் கூட மறக்க முடியாது. 

இது போன்று நிகழ்வை குறும்படங்களில்  பார்த்து இருக்கின்றேன். ஆனால் அது எல்லாமே நடிகர்கள் நடிப்பில் எடுக்கப்பட்ட காட்சியாக இருக்கும் . ஆனால் என் நிஜ வாழ்வில் நடந்தது எனக்கு பெரும் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் கொடுத்திருக்கிறது.

மனிதம் இன்னும் மரித்து விடவில்லை... இது போன்ற சிலரின் வடிவில் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. 

தனியொரு மனிதனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம் ! இது பாரதியின் வரிகள். இதன் அர்த்தம் நமக்கு புரிந்தால் மட்டும் போதாது. நம் அடுத்த தலைமுறைக்கு , அதாவது நம் பிள்ளைகளுக்கு, பேர பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுப்போம்.

நம் திருவள்ளுவர் எழுதிய குறள் ஒன்று உங்கள் பார்வைக்காக இங்கே தருகிறேன்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

அதன் பொருள் :-
பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது. அதுவே, நாம் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்ப நாம் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும்.

-ஈரநெஞ்சம் மகேந்திரன்.

Tuesday, July 17, 2018

அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவு..! கோவை முதியோர் இல்ல அம்மாக்களின் பேரன்பு


அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவு..! கோவை முதியோர் இல்ல அம்மாக்களின் பேரன்பு


 

``டி
பன் வந்துருச்சு…" எனச் சொல்லிக்கொண்டே தட்டுடன் துள்ளிச் செல்கிறான், 8-ம் வகுப்பு சச்சின்.
அடுத்த சில நிமிடங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று கூடுகிறார்கள். ``டேய் சாய்… இன்னிக்கு இட்லியாம்" என்கிற 6-ம் வகுப்பு சுரேஷ், தனது உற்சாகத்தை மற்ற மாணவர்களுக்கும் கடத்துகிறான்.
 ``பாட்டிகள் வந்து பரிமாறுவாங்க. எல்லாரும் வரிசைல நில்லுங்க" என ஒழுங்குப்படுத்துகிறார் பள்ளியின் தமிழ் ஆசிரியர்.



கோவை, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அன்றாடம் காணும் காட்சி இது. அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் கான்வென்ட் என்று பெயர் எடுத்த இந்தப் பள்ளியில், தற்போது 300 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், குடிசைப் பகுதியிலிருந்து வருபவர்கள். இவர்களின் பெற்றோர்கள், விடியலிலேயே கிளம்பி கூலி வேலைக்குச் சென்று வியர்வையைச் சிந்தினால்தான் அன்றைய தினம் அரை வயிற்றுக்கு ஏதாவது கிடைக்கும்.
புத்தகம், மதிய சத்துணவு, சைக்கிள் என அரசு வழங்கினாலும், குடும்பச் சூழ்நிலையால் இவர்களில் பெரும்பாலானோருக்குக் காலை உணவு என்பது கானல் நீர்தான். அந்தக் கவலையை நீக்கி, நேச மழையைப் பொழிந்துவருகிறது, `ஈர நெஞ்சம்' அறக்கட்டளை. அந்த முதியோர் இல்லத்துக்குச் சென்றோம்.
சகுந்தலாஅந்தப் பள்ளிக்கு அருகில் இயங்கிவருகிறது, ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்குச் சொந்தமான முதியோர் இல்லம். பெற்றெடுத்து வளர்த்த பிள்ளைகளால் `பாரம்' எனத் தூக்கி வீசப்பட்ட இந்த முதியோர்களுக்கு,  சில நல்ல உள்ளங்களின் உதவியால், வாழ்வு நகர்ந்துகொண்டிருக்கிறது. அப்படித் தங்களுக்குக் கிடைக்கும் உணவின் ஒரு பகுதியை இந்த மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்குத் தினமும் பரிமாறுகிறார்கள் இந்த அம்மாக்கள்.
``எனக்கு 65 வயசு ஆகுது கண்ணு. ஒரே ஒரு பையன். வீட்டு வேலை செஞ்சு தங்கம்போல வளர்த்தோம். படிச்சு ஆளானவனுக்குக் கல்யாணமும் பண்ணிவெச்சோம். அதோடு முடிஞ்சது. அவன் பொண்டாட்டிக்கு என்னைப் புடிக்கல. அவளோட சேர்ந்து என்னைத் திட்டிட்டே இருந்தான். இது சரிவராதுன்னு வெளிய வந்துட்டேன்.
கிடைக்கற வேலைகளை செஞ்சு காலத்தை ஓட்டிட்டிருந்தேன். ஒருகட்டத்துல, வேலை செய்ய முடியலே. இங்கே வந்துட்டேன். சமயத்துல வெளியில இருந்தும் எங்களுக்குச் சாப்பாடு வரும். இல்லாட்டி, இங்கே இருக்கறதை வெச்சு நாங்களே சமைச்சுக்குவோம். பக்கத்துல இருக்கற ஸ்கூல் பசங்களுக்கும் சேர்த்துத்தான் சமைப்போம். அவங்களுக்கு எங்க கையால பரிமாறும்போது பேர பசங்களுக்குச் சோறு போடற சந்தோஷம் கிடைக்குது. இதைவிட மனுசனுக்கு வேற என்ன சாமி சந்தோஷம் வேணும்?" என்கிற சகுந்தலா பாட்டி முகத்தில் அவ்வளவு ஆனந்தம்.
``எனக்கு மூணு பசங்க தம்பி. என் புருஷன் இருந்தவரை நல்லாத்தான் இருந்தேன். மூணு பேரையும் நல்லா ஆளாக்கினோம்.கோபாலம்மாள் ஒருத்தன் பெங்களூருல இருக்கான். மத்த ரெண்டு பேரும் இங்கேதான். ஒருத்தனுக்குத்தான் கல்யாணம் ஆச்சு. அவன் வீட்லதான் இருந்தேன். அவன்தான் கொஞ்சம் நல்ல வேலையிலும் இருந்தான். மத்த ரெண்டு பேருக்கும் வருமானத்துக்கே கஷ்டம்.  ஆனா, என்னை மருமகளுக்குப் பிடிக்கலை. `எப்போ பாரு இங்கயே இருக்காங்க. மத்த பசங்க வீட்டுக்கும் போகவேண்டியதுதான'னு சொல்லிட்டே இருப்பா. நம்மால எதுக்குப் பிரச்னை'னு வெளியே வந்துட்டேன். என் புருஷன் என்னைய அப்படித் தாங்கினார். இப்போ இந்தப் பேரப் பசங்களுக்குச் சமைச்சுப் போட்டு, அந்தச் சந்தோஷத்துலயே மிச்ச நாளை கழிக்கிறேன்" எனக் கண்ணீரைத் துடைத்துக்கொள்கிறார் 75 வயது கோபாலம்மாள்.
அன்று பாட்டிகள் சமைத்த சாப்பாட்டை எடுத்துச் செல்வதற்காக, மாணவர்கள் சிலர் முதியோர் இல்லத்துக்கு வந்திருந்தனர். சகுந்தலா பாட்டி சாம்பார் பாத்திரத்தை கஷ்டப்பட்டு தூக்கிவர, ``பாட்டிமா நீங்க கஷ்டப்படாதீங்க. என்கிட்ட கொடுங்க" என வாங்கிக்கொள்கிறான், 7-ம் வகுப்பு சிவா. அவன் கன்னத்தைப் பிடித்து கொஞ்சுகிறார் சகுந்தலா அம்மா.

ஈரநெஞ்சம் அறக்கட்டளையின் மகேந்திரன், ``சாலையோரம் ஆதரவற்று இருப்பவர்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள், மனநலம் மகேந்திரன்பாதிக்கப்பட்டவர்கள் போன்றோருக்கு மறுவாழ்வு கொடுக்கும் எண்ணத்தில் இந்த அறக்கட்டளையை ஆரம்பித்தோம். எங்களால் முடிந்த உதவியைச் செய்து, அவர்களை மீண்டும் அவர்களது வீட்டில் சேர்த்துவருகிறோம். ஒருமுறை, நிகழ்ச்சிக்காக அருகில் இருக்கும் மாநகராட்சி பள்ளிக்குச் சென்றிருந்தேன். அப்போதுதான் அங்கிருக்கும் மாணவர்களின் சூழ்நிலையைச் சொல்லி, ஏதாவது உதவி செய்ய முடியுமா? என்று கேட்டனர். இதைப் பாட்டிகளிடம் சொன்னதும், `புள்ளைகளுக்குக் காலை உணவை நாங்க செஞ்சு கொடுக்கிறோம்' என்றனர்.
எங்கள் இல்லத்துக்கு உணவு கொடுக்க வருபவர்களிடம், மாணவர்களுக்கும் சேர்த்து கொடுக்குமாறு கேட்போம். பள்ளி விடுமுறை நாள்கள் தவிர, மற்ற நாள்களில், காலை உணவு கொடுக்கிறோம். எங்கள் இல்லத்துக்கு உணவு கொடுப்பவர்களுக்கு ஆரம்பத்தில் மரக்கன்றுகளைக் கொடுத்துவந்தோம். தண்ணீர்ப் பஞ்சம், பல்வேறு பிரச்னையால் இப்போது கொடுக்க முடியவில்லை. கோயில்களுக்கு பூ கட்டி கொடுப்பது, விபூதி கொடுப்பது போன்ற பணிகளை இந்தப் பாட்டிகள் செய்வார்கள். தற்போது, இந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சமைத்துக் கொடுப்பதன் மூலம் பெரும் சந்தோஷம் அடைகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில், மாணவர்களுக்குக் காலை உணவு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
``மிகவும் பின்தங்கிய குடும்பத்திலிருந்து வருபவர்கள்தாம் இங்கு அதிகம். காலை உணவை உட்கொள்ளாமல் வருவதால், பிரேயரிலேயே மயங்கி விழும் காட்சி முன்பு அடிக்கடி நடக்கும். தற்போது, அந்தக் காட்சி மறைந்துவிட்டது" என முகம் மலர்கின்றனர் பள்ளி ஆசிரியர்கள்.
முதியோர் இல்ல அம்மாக்கள்
தாய் உள்ளம் எங்கே இருந்தாலும், அப்படியேத்தான் இருக்கும் என்பதை இந்த அம்மாக்கள் நிரூபித்துள்ளனர். 

Sunday, November 10, 2013

கோவை அரசு மருத்துவமனையில் , பசி மயக்கத்தில் இருந்தவரை மீட்டு காப்பகத்தில் சேர்ப்பு.~ஈரநெஞ்சம்


''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(229/09/11/13)

திரு. பாலன் அவர்கள், வயது 70. இவர் கோவை அரசு மருத்துவமனையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் யாரும் கவனிப்பாரின்றி இருந்தார். பொதுமக்களில் சிலர் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு 09/11/13 அன்று காலை தகவல் கொடுத்தனர். உடனே வந்த ஈரநெஞ்சம் அமைப்பினர் அவரை மீட்டனர். பசியால் மிகவும் சோர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். உடனடியாக அவரை மருத்துவ சிகிச்சைக்கு அனுமதித்து முதலுதவி செய்யப்பட்டது. ஈரநெஞ்சம் அவருக்கு உணவு கொடுத்து அவர் சற்று உடல்நிலை தேறிய பின் அவரை பற்றிய தகவல்களை விசாரித்தனர்.

இவர் கடந்த 4 வருடங்களாக கோவையில் ஒரு காப்பகத்தில், தங்கி அங்கே சமையல் வேலை செய்து கொண்டு அங்கேயே இருந்து வந்தார். சில சூழ்நிலை காரணமாக அந்த காப்பகம் தொடர்ந்து செயல்படவில்லை. எனவே அவர் அங்கே இருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவானது. பின்னர் சாப்பிட வழியில்லாமல் பிச்சை எடுக்கும் சூழ்நிலை உருவானது. ஆனால் அதை விரும்பாத அவர் சாப்பிடாமலே இருந்திருக்கிறார். மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் யாரோ சிலர் இவரை அரசு மருத்துவமனை வளாகத்தில் விட்டு சென்று விட்டனர். கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கும் மேலாக சரியான உணவு இல்லாமல் இருந்ததால் நடக்க்கவும் முடியாமல் நினைவு தப்பிய நிலையில் இருந்தார். இந்நிலையில் தான் அவரை மீட்ட ஈரநெஞ்சம் அமைப்பினர் அவருக்கு உணவும் முதலுதவியும் அளித்து கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்து விட்டனர். நல்ல பாதுகாப்பும் பராமரிப்பும் ஏற்படுத்தி தந்த ஈரநெஞ்சம் அமைப்புக்கு பாலன் கண்ணீருடன் நன்றி தெரிவித்து கொண்டார்.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Mr. Baalan, aged about 70 years was found in Coimbatore Goverment hospital campus without conscious and very critical health condition. public informed about him to Eeranenjam trust. Eeranenjam came to spot and rescue balan and admitted in hospital for first aid and treatment. Also they give food to him immediately.

When they inquired abut him, he is from Coimbatore and was stayed in Private home for last 4 years as a cook. Once due to some critical situation, the home was closed. And then balan came out from home and he unable to survive. He didnt like to beg for food. Due to this situatin he became unwell and unconscious. Some of the people taken him to Goverment hospital and left him. In this situation, Eeranejam taken over him and after first aid treatment and food and then admitted him at Coimbatore corporation home. He felt very thank to Eeranejam for his care and help.

Thank you.
~Eera Nenjam