Sunday, October 01, 2023

நாங்க வளர்க்கிற நாய் போல தாங்க இந்த தெரு நாய்களும்

*நாங்க வளர்க்கிற நாய் போல தாங்க இந்த தெரு நாய்களும்*
நாம் தினமும் ஒரு குறிப்பிட்ட பாதையில் தான் அன்றாட அலுவல்களை கவனிக்க வாகனங்களில் விரைந்து கொண்டிருக்கிறோம் . நம்முடைய ஆயிரம் பிரச்சனைகளுக்கும் மன அழுத்தங்களுக்கும் மத்தியில் நம்மைச் சுற்றி நடக்கும் எந்த விஷயங்களும் நம் கண்ணில் படுவதில்லை. அப்படியே கண்ணில் பட்டாலும் மனதில் பதிவதில்லை. 

இன்று மதியம் நல்ல வெயில் நேரத்தில் கோவை ஆர் எஸ் புரம் பொன்னுரங்கம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது நான் கண்ட ஒரு காட்சியில் ஒரு கணம் என்னுடைய பிரச்சினைகளையே நான் மறந்துவிட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரு வீட்டின் காம்பவுண்ட் முன்புறம் உள்ள கேட்டை நோக்கி மணி அடித்து செல்லும் பள்ளி பிள்ளைகள் போல வரிசையாக பத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் சென்று கொண்டிருந்தன. அங்கே வரிசையாக தட்டில் சாப்பாடு வைக்கப்பட்டிருந்தது. உணவு இடைவேளைக்கு செல்லும் மாணவர்களைப் போல பவ்யமாக ஒவ்வொன்றும் தட்டில் தனக்கு வைக்கப்பட்ட அசைவை உணவை அழகாக சாப்பிட ஆரம்பித்தன. 

சக மனிதர்கள் பசியால் துடிக்கும் போது கூட கண்டுகொள்ளாமல் செல்லும் மனிதர்களுக்கு மத்தியில் தெரு நாய்களின் பசியைப் போக்கும் அந்த வீட்டின் உரிமையாளர் நல்லமுத்து என்பவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

அவர் தனது வீட்டில் வளர்த்து வரும் நாய்க்கு உணவு வைக்கும் போதெல்லாம் தெருநாய்கள் ஏக்கத்தோடு பார்க்கும் , அதை பார்த்துவிட்டு எங்கள் மனசு கேட்காமல் தெருவில் உள்ள மற்ற நாய்களுக்கும் சேர்த்து சாப்பாடு வைக்க ஆரம்பித்ததாக கூறுகிறார்.

தன்னுடைய வீட்டில் வளர்க்கும் நாய்க்கு வைக்கும் அதே உணவைத்தான் தெருவில் உள்ள நாய்களுக்கும் கொடுக்கிறார். தெரு நாய்கள் தானே என்று எந்த அலட்சியமும் காட்டாமல் நாய்களுக்கு என்று பிரத்தியேகமாக சமைக்கப்பட்ட உணவை ஒவ்வொரு நாய்க்கும் தனித்தனியாக தட்டில் வைத்து கொடுக்கிறார்.  

15 வருடங்களுக்கும் மேலாக தெரு நாய்களுக்கும் உணவு பரிமாறி வருகிறார். இதனால் இங்கு உணவு கிடைப்பதை அறிந்து வேறு ஏரியா நாய்களும் ஏராளம் வர ஆரம்பித்து விட்டனவாம். 
இந்த நாய்கள் யாரையும் கடிக்காது. அவைகளால் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை... இன்னும் சொல்லப்போனால் இந்தப் பகுதிக்கு பாதுகாப்பாகத்தான் இருக்கின்றன என்று கூறினார். 

பெருநகரங்களில் அதிவேக வாழ்க்கை சூழலில் தெருநாய்களை கவனிக்க யாருக்கும் நேரமில்லை. மீதம் ஆகும் உணவுகளை கூட யாரும் அவைகளுக்கு போடுவதில்லை. நெகிழிப்பைகளில் அடைத்து வீசி விடுகிறோம். இந்த நாய்கள் உணவுக்கு என்ன செய்யும் என்று 
நினைத்தே அவைகளுக்கு தினமும் உணவு அளிப்பதாக கூறுகிறார். பேசுவதற்கு எளிதாக இருந்தாலும் ஒரு நாளைப் போல தினமும் தவறாமல் சமைத்து உணவு அளிப்பதும் சமைத்த பாத்திரங்கள் தட்டுகள் இவற்றை சுத்தம் செய்வதும் மிகவும் சிரமமான விஷயம். மேலும் அவற்றிற்கு ஏதேனும் உடல்நிலை சரியில்லை என்றாலும் கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளிப்பதாகவும் கூறி நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். எனினும் நல்லமுத்து இதைப் பெரிய சாதனையாகவோ சேவையாகவோ சொல்லி விளம்பரம் தேடாமல் ஏதோ என்னால முடிஞ்சது அதுங்களுக்கு பசியாற்றுகிறேன் என்று எதார்த்தமாக சொல்கிறார்.

தண்ணீரைக் கூட வியாபாரம் செய்யும் மனிதர்களுக்கு மத்தியில் இவரைப் போன்ற மனிதர்களால் தான் வாயில்லா ஜீவன்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
இனியாவது நாமும்
தேவைக்கு அதிகமாய் மீந்து இருக்கும் உணவுகளையாவது கெட்டுப் போவதற்கு முன்பே நம் தெருக்களில் இருக்கும் நாய் பூனை போன்ற விலங்குகளுக்கு கொடுக்கலாமே. _இந்தப் பூமி மனிதர் வாழ்வதற்கு மட்டுமானதல்ல.. வாழ்தலும் எவ்வுயிர்க்கும் பொதுவன்றோ?

~ ஈரநெஞ்சம்
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment