Friday, November 21, 2025

செஸ் வீரன் சிறுவன் சலீமின் கனவு

ஒரு தெருவின் ஓரத்தில் தொடங்கிய கனவு… இந்தியாவின் அடுத்த கிராண்ட்மாஸ்டரை உருவாக்க உங்கள் ஒரு உதவி போதும்
10 வயது முகமது சலீமின் அமைதியான போராட்டக் கதை

இராணிப்பேட்டையில் உள்ள ஒரு சாதாரண வீட்டின் நீலச் சுவரின் முன்,
ஒரு சிறுவன் அமைதியாக நிற்கிறான்.
அவனைச் சுற்றி ஒளிவீசும் எண்ணற்ற கோப்பைகள்.
எந்த கோப்பையைப் பார்த்தாலும்,
“இவன் பத்து வயது குழந்தையா? அல்லது பத்தாண்டுகள் விளையாடிய வீரனா?”
என்ற கேள்வி யாருக்கும் தோன்றும்.

அந்த சிறுவன் — முகமது சலீம், வயது 10.
பால்சம் அகாடமியில் 5-ம் வகுப்பு படிக்கும் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பையன்.
ஆனால் அசாதாரணது அவன் திறமை.
சிறிய கைகளில் சதுரங்கக் காயை பிடித்தவுடன் மாறி நிற்கும் வினோதமான அமைதி,
அவனை ஆயிரங்களில் ஒருவராக்குகிறது.


தெருவில் பிறந்த ஆர்வம் — இன்று மாநிலத்தின் பெருமை

சதுரங்கம் கற்றுக் கொள்ள அவன் எந்தப் பெரிய அகாடமியையும் தேடியதில்லை.
ஒரு நாள் தெருவில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தபோது,
அவன் மனதில் ஒரு மென்மையான எண்ணம் தோன்றியது:
“நானும் இதை விளையாடணும்.”

அந்த ஓர் சிறிய ஆர்வமே இன்று அவனை
மாவட்ட– மாநில அளவுகளில் பல முறை முதலிடம் பிடித்த வீரனாக மாற்றியுள்ளது.
இது ஒரு பள்ளி மாணவனின் வளர்ச்சிக் கதை மட்டும் இல்லை;
ஒரு கனவின் அதிசயமான பயணம்.

சிறுவனின் சாதனைகள் — அவன் வயதுக்கு எட்டாத உயரம்

சலீமின் திறமை, அவன் வயதைக் கடந்துவிட்டது.
அவனுக்கு முன், வரிசையாக நின்றிருக்கும் கோப்பைகள்,
இந்த பத்து வயது குழந்தை என்னென்ன வென்றிருக்கிறானோ என
அதே கணத்தில் சொல்லி விடுகின்றன.

மாவட்ட அளவிலான போட்டிகளில் பலமுறை முதலிடம்

மாநில அளவிலான செஸ் போட்டிகளில் சிறப்பான சாதனைகள்

செஸ் ரேட்டிங் பெற்றவர்

பல டோர்னமெண்ட்களில் தொடர்ச்சியாக பாராட்டப்படும் திறமை


இன்னும் கார்ட்டூன் நேரம், விளையாட்டு நேரம் என்று இருக்கும் வயதிலேயே,
சலீம் அடுத்த நகரை கணக்கிட்டு அமைதியாக அமர்ந்திருப்பது
அவனை மற்ற குழந்தைகளிலிருந்து வேறுபடுத்துகிறது.

அவனது கனவு — இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் ஆக வேண்டும்

சலீம் சொல்லும் ஒரு வாக்கியம்,
அவனுடைய கனவின் முழு எடையையும் சுமக்கிறது:

“நான் இந்தியாவின் கிராண்ட்மாஸ்டராக வேண்டும்னு ஆசை.”

அவனது கோச் திரு. நா. தினகரன் கூறுகிறார்:
“சலீமின் திறமை பொதுவானது அல்ல. அரிதான துல்லியம், அசாதாரண கவனம்.
சரியான சூழல் கிடைத்தால், இந்தியாவுக்காக உலக மேடையில் விளையாடும் வீரன் அவன்.”

ஒரு பயிற்சியாளரின் பாராட்டு மட்டும் அல்ல இது—
ஒரு குழந்தையின் வருங்காலத்தைப் பற்றிய நம்பிக்கையின் குரல்.

ஆனால் ஒரு நிதர்சனம் — திறமைக்கு எதிராக நிற்கும் வறுமை

சலீமின் பெற்றோர் கமருதின் மற்றும் ரேவதி (ரேஷ்மா பீ).
அவர்களின் மாத வருமானம் வெறும் 15,000 முதல் 17,000 ரூபாய்.

ஆனால் ஒரு சதுரங்க வீரனுக்கு தேவைப்படும் செலவு?

பயிற்சி கட்டணம்

போட்டி நுழைவுக் கட்டணம்

பயணச் செலவு

தங்கும் வசதி

லேப்டாப்

ஆன்லைன் பயிற்சிக்கான மென்பொருட்கள்

இவற்றை சேர்த்தால் மாதம் 15,000 முதல் 20,000 ரூபாய் வரை செலவாகிறது.
அவர்களின் வருமானமும் இதே அளவு தான்.
வாழ்க்கையை நடத்த வேண்டுமா?
அல்லது குழந்தையின் கனவை காப்பாற்ற வேண்டுமா?
இந்த இரண்டின் நடுவில் சிக்கிக் கொண்டு நிற்கும் பெற்றோர்கள்…
அவர்கள் தவறில்லை; சூழ்நிலை தவறு.

ஒரு அசாதாரண திறமை,
சாதாரண குடும்பத்தில் பிறந்ததால் மட்டுமே
தன் பயணத்தில் தடுமாறக்கூடாது.


சலீமின் கனவு காத்திருக்கிறது — ஒரு உதவிக்கரம்

சலீம் கேட்பது மிகப் பெரிய உதவி அல்ல.
அவனது பயணத்திற்கு தேவையான ஒரு தூர ஓட்டத்தின் தள்ளுதலே.

அவனுக்குத் தேவை:

ஒரு நல்ல லேப்டாப்

சதுரங்க மென்பொருட்கள் மற்றும் ஆன்லைன் பயிற்சி

குறைந்தது ஒரு வருடப் பயிற்சி செலவு

போட்டிகளுக்கான பயணம், நுழைவுக் கட்டணம், தங்கும் வசதி


இந்த ஆதரவுகளில் எந்த ஒன்று கிடைத்தாலும்,
அவனது கனவின் கதவு விரிந்துவிடும்.

திறமை அவனிடம் இருக்கிறது.
ஒழுக்கமும் உழைப்பும் அவனிடம் இருக்கிறது.
கனவும் தீவிரமாக இருக்கிறது.
அகற்ற வேண்டிய ஒன்றே—பொருளாதாரத் தடைகள்.

உங்களால் இன்று ஒரு கிராண்ட்மாஸ்டரை உருவாக்க முடியும்

சமூகத்தில் திறமையை கண்டறிந்து அதை காப்பாற்றும் மனங்கள் இருந்தால்,
இந்த மாதிரியான குழந்தைகள் உலக மேடையில் நாட்டின் பெயரை உயர்த்துவார்கள்.

ஒரு வீட்டின் சுவரை நிரப்பும் அவன் கோப்பைகள் பல சாதனைகளின் நினைவுகள்…
ஆனால் அவனது மிகப்பெரிய கனவு இன்னும் கதவு தட்டிக் கொண்டு காத்திருக்கிறது.

அந்தக் கதவைத் திறப்பது 
உங்களது ஒரு உதவி, ஒரு பார்வை, ஒரு மனம்.

---
உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம்

முகமது சலீம்
க. எ. 67/54, மண்டி தெரு,
இராணிப்பேட்டை மாவட்டம் – 632 401
அலைபேசி: 8608901045

~ ஈரநெஞ்சம் மகேந்திரன்

Thursday, November 20, 2025

ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகளும் சவால்களும்

*ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகளும் சவால்களும்* 
பெண்களின் பிரச்சனைகள் பேசப்படுவதைப் போல ஆண்களின் பிரச்சனைகள் பேசப்படுவதில்லை.

ஆண்களுக்கும் தனிப்பட்ட பிரச்சனைகள், அவர்களுக்கு நிகழ்த்தப்படும் அநீதிகள், மன அழுத்தங்கள், சமூக அழுத்தங்கள் இருக்கின்றன. அவை பெரும்பாலும் வெளிச்சத்துக்கு வருவதில்லை. காரணம் ‘ஆண் என்றால் அழக் கூடாது’, ‘பலவீனம் காட்டக்கூடாது’, ‘எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ள வேண்டும்’ என்ற தவறான சமூக எதிர்பார்ப்புகள்.

1. மனநலப் பிரச்சனைகள் – பேச முடியாத பாரம்

உலக சுகாதார அமைப்பின் ஆய்வுப்படி, ஆண்களில் மன அழுத்தம், மனச்சோர்வு, தனிமை ஆகியவை அதிகமாக உள்ளது. தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த ஆண்கள் பயப்படுகிறார்கள். ‘நான் பலவீனமா?’ என்ற பயம் அவர்களை அமைதியில் அடக்குகிறது. இதன் விளைவாக தற்கொலை விகிதம் உலகளவில் ஆண்களிடம் அதிகம்.

2. பொருளாதார பொறுப்பு – அடக்கமான போராட்டம்

பல குடும்பங்களில் இன்றும் கூட “வீட்டைக் காப்பது ஆணின் பொறுப்பு” என்ற கருத்து நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து பொறுப்புகளும் ஆணின் தலையில் கட்டப்படுகிறது.
வேலை அழுத்தம், சம்பளம் குறைவு, கடன் சுமைகள் — இவை அனைத்தையும் ஆண்கள் தனியாகவே சுமக்கிறார்கள். குடும்பத்திற்காக பல கனவுகளை விட்டுக்கொடுத்து ஓடுகிறார்கள். முதிர்கன்னிகளுக்கு ஓய்வு தொகை கொடுக்கும் அரசாங்கம் கூட குடும்பத்துக்காக திருமணமே செய்யாமல் வாழும் ஆண்களை கண்டு கொள்வதில்லை.

3. சமூக எதிர்பார்ப்புகள் – ‘ஆண்’ என்ற பெயரில் கட்டுப்பாடுகள்

ஆண்கள் அழக்கூடாது

பயப்படக்கூடாது

உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடாது

தோல்வியடைந்தால் மதிப்பு குறையும்

இவை அனைத்தும் சிறுவயதிலிருந்து ஆண்களை ஒரு “உணர்ச்சி இல்லா ரோபோ” போல மாற்றி விடுகிறது. அவர்களின் உணர்வுகள், அச்சங்கள், தேவைகள், ஏக்கங்கள் கவனிக்கப்படுவதில்லை.

4. குடும்ப மற்றும் சமூக பிரச்சனைகளில் ஆண்கள்

விவாகரத்து, குழந்தை பாதுகாப்பு போன்ற வழக்குகளில் ஆண்கள் பல நேரங்களில் சட்டரீதியாக பலவீனமான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
பொய்யான புகார்கள், வரதட்சணை சட்டத்தின் தவறான பயன்பாடு, குடும்ப வன்முறை சட்டங்களின் ஒருதலைப்பட்சமான விளைவுகள் போன்றவை  ஆண்களுக்கு சிக்கல்களை உருவாக்குகின்றன. பெண்கள் பாதுகாப்புச் சட்டங்களை தவறாக பயன்படுத்தி ஆண்கள் பழிவாங்கப்படுகிறார்கள்.

5. ஆண் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் –  பேசப்படாத உண்மை

ஆண்களுக்கு எதிரான உடல் மற்றும் மன வன்முறைகள் அதிகமானாலும், பெரும்பாலானவர்கள் புகார் சொல்ல முடியாமல் மௌனமாக தாங்குகிறார்கள்.
“ஆணை யார் அடிக்கப் போகிறார்கள்?”
“அதைச் சொன்னால் யார் நம்பப்போறாங்க?”
இது அவர்களுக்கு தீவிரமான மன உளைச்சலை தருகிறது. ஆண்களும் குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். பெரும்பாலான தேர்வுகளில் குடும்ப கௌரவத்தை கருத்தில் கொண்டு அதை யாரும் வெளியில் சொல்வதில்லை.

6. வேலைக்குச் செல்லும் ஆண்களின் உடல் நல சிக்கல்கள்

கட்டிடத் தொழில்கள், போக்குவரத்து, சுரங்கத் தொழில்கள் போன்ற அபாயகரமான பணிகளில் பெரும்பாலும் ஆண்களே ஈடுபடுகிறார்கள்.
உயிரிழப்பு, காயங்கள், உடல் சோர்வு — இவை உலகளவில் ஆண்களை அதிகம் தாக்குகின்றன. அதேபோல ராணுவத்தில் கட்டாய சேவையாற்றவும் ஆண்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

  7. ஆண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் – பேசப்படாத விஷயம்

பாலியல் வன்முறை என்பது பெண்கள் மட்டுமே சந்திக்கும் ஒன்று என்று பலர் எண்ணுவது தவறு.
ஆண்களும் – சிறுவர்களும் கூட – பாலியல் துஷ்பிரயோகம்,  பாலியல் தொந்தரவு, கட்டாயம், பலாத்காரம், தன்பால் ஈர்ப்பு கொண்டவர்களால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுவது, போன்றவற்றிற்கு பலியாகுகிறார்கள். பெண்களைப் போலவே ஆண்களும் பல்வேறு காரணங்களுக்காக கடத்தப்படுகிறார்கள்.  உடல் உறுப்பு திருட்டு, பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுதல், அடிமைகளாக வேலை செய்ய வைத்தல் போன்ற பல்வேறு அநீதிகளுக்கு இரையாகிறார்கள். 

 ஆனால் ஆண்களுக்கு எதிரான குற்றங்கள் வழக்குகளாக கூட பதிவு செய்யப்படுவதில்லை.

“ஆண் எப்படி பாலியல் வன்முறை பாதிப்புக்கு ஆளாக முடியும்?” என்ற சமூக கேலி

வெட்கம்
நம்ப மாட்டார்கள் என்ற பயம்

சட்டங்களில் தெளிவு குறைவு

ஆண்களுக்கான சட்டங்கள் இல்லாமை.

இதனால் பல ஆண்கள் உட்புறமாகவே நொறுங்குகிறார்கள்.


பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரத்தில் ஆண்களை புறக்கணிக்கப்பட்ட பாலினமாக கருதுவதும் ஆண்களுக்கு எதிரான பிரச்சினைகள் பேசப்படாமல் இருப்பதும் சரியல்ல.

ஆண்களும் மனிதர்களே.
அவர்களுக்கும் உணர்ச்சிகள், அச்சங்கள், கனவுகள், துயரங்கள்  எல்லாம் உண்டு . எனவே நம்முடைய இலக்கு பாலின சமத்துவத்தை நோக்கி நகர வேண்டும்.

சமூகம் செய்ய வேண்டியது:

ஆண்கள் தாங்கள் சந்திக்கும் சவால்கள் மனநல பிரச்சனைகள் குறித்து  பேச ஊக்குவிக்க வேண்டும்

தங்களது உணர்ச்சியை வெளிக்காட்டுவது  பலவீனம் அல்ல என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும்

குடும்பச்சட்டங்களில் சமநிலை ஏற்படுத்த வேண்டும்

ஆண்களின் பாதுகாப்பு, வேலை நிமிட நெருக்கடிகள் போன்றவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்

இயற்கையின் இரு வேறு கூறுகள் ஆன ஆண், பெண் இருவரையுமே சரிநிகர் சமானமாக  பாதுகாத்தால் தான் சமூகம் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆண்கள் அழுவதற்கும் உரிமை உண்டு.
ஆண்கள் பலவீனப்படுவதும் இயல்பு.
ஆண்கள் உதவி கேட்பதும் தவறில்லை.

தவறிழைக்கும் ஆண்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. ஆனால் எல்லா ஆண்களையுமே தவறானவர்கள் என்று கருதுவது தவறு.

எப்போதுமே ஆண்களை ஆண்களாக மட்டும் பார்க்காதீர்கள்.

எல்லா ஆண்களும் யாரோ

ஒருவரின் 
மகன்கள்…

ஒருவரின் 
  சகோதரர்கள்...

ஒருவரின் 
 கணவர்கள்…

ஒருவரின்
  அப்பாக்கள்...

ஒருவரின் 
  தாத்தாக்கள்...

அவர்களும் மனிதர்கள் தான்.

தன்னையும் தன் குடும்பத்தையும் தன் சமூகத்தையும் கட்டியெழுப்ப வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கும் அனைத்து ஆண்களுக்கும்  *சர்வதேச ஆண்கள் தினம் 2025 நல்வாழ்த்துக்கள்*

~*ஈரநெஞ்சம் மகேந்திரன்*

Friday, November 07, 2025

சுதந்திரம் இருக்கட்டும்... ஆனால் விவேகம் வழிகாட்டட்டும்

சுதந்திரம் இருக்கட்டும்... ஆனால் விவேகம் வழிகாட்டட்டும்
சமீபத்தில் நடந்த கோவைச் சம்பவம் ஒரு பெண்ணின் உயிரைக் குலைத்தது மட்டுமல்ல, சமூகத்தின் சிந்தனையையும் குலைத்திருக்கிறது.
அவள் எதற்காக அந்த இடத்திற்குச் சென்றாள்? அந்த நேரத்தில் ஏன் ஒரு ஆணுடன் இருந்தாள்? — என்று கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இந்த கேள்விகள், உண்மையில் குற்றவாளியை நோக்காமல் பாதிக்கப்பட்டவளையே மீண்டும் தண்டிக்கும் வழியாக மாறியிருக்கின்றன.

பெண்ணின் சுதந்திரம் பற்றி பேசும் சிலர் “ஒரு பெண் எங்கு வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் செல்லலாம்” என்று வலியுறுத்துகிறார்கள்.
அது தவறல்ல — ஏனென்றால் பெண்ணுக்கு முழு சுதந்திரம் இருக்க வேண்டும்.
ஆனால் அந்த சுதந்திரம் விவேகம் இன்றி பயன்படுத்தப்பட்டால் அது ஆபத்தாக மாறும் என்பதையும் மறக்கக் கூடாது.

சுதந்திரம் என்பது “என்ன வேண்டுமானாலும் செய்வது” அல்ல;
அது “சரியானதைச் செய்வதற்கான உரிமை”.
இரவு நேரத்தில், ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் தனியாகச் செல்வது யாருக்கும் — ஆண், பெண் — அபாயகரமானதே.
ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருப்பது தவறில்லை; ஆனால் அவர்கள் சந்திக்கும் இடம், நேரம், சூழல் — அவை பாதுகாப்பிற்கும் மரியாதைக்கும் முக்கியமானவை.

சமூகவிரோதிகள் நடமாடும் இடத்திற்கெல்லாம் செல்வது, “சுதந்திரம்” என்ற பெயரில் நியாயப்படுத்த முடியாது.
அப்படி செய்வது நம் சுதந்திரத்தின் அர்த்தத்தையே மாசாக்குகிறது.
நமது சுதந்திரம் மரியாதையுடன் இணைந்திருக்க வேண்டுமேயன்றி, ஆபத்துக்கு அழைக்கும் ஒரு சாதனமாக மாறக்கூடாது.

ஒரு பெண் எங்கு சென்றாலும் அவள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவளது அடிப்படை உரிமை.
ஆனால் அவள் எங்கு, எப்போது, யாருடன் செல்வது என்ற தீர்மானத்தில் அவளது விவேகமும் பாதுகாப்பு உணர்வும் அவசியம்.

அதனால் நாம் புரிந்துகொள்ள வேண்டியது தெளிவானது —

«சுதந்திரம் இருக்கட்டும்… ஆனால் விவேகம் வழிகாட்டட்டும்.

சுதந்திரம் மரியாதையுடன் கலந்தால் சமூகம் உயர்ந்திடும்;
விவேகம் இன்றி கலந்தால் சமூகவிரோதிகள் வளர்ந்திடுவார்கள்.

~ மகேந்திரன் 

காவலன் ஆப்பின் அவசியம் மற்றும் அதை சமூகத்தில் பரப்பும் வழிகள்

காவலன் ஆப்பின் அவசியம் மற்றும் அதை சமூகத்தில் பரப்பும் வழிகள்
இங்கு யாருக்கும் “இதைக் செய்”, “அங்கே போகாதே” என்று சொல்ல உரிமை இல்லை.
ஆனால், “எச்சரிக்கையாக இரு” என்று அறிவுரை சொல்லும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு.

தமிழ்நாடு காவல் துறை பெண்களின் பாதுகாப்புக்காக பல வருடங்களுக்கு முன்பே “காவலன்” என்ற செயலியை அறிமுகப்படுத்தியது.
இந்த ஆப்பை ஒருமுறை மொபைலில் நிறுவி வைத்தாலே போதும்.
ஏதாவது ஆபத்தான சூழ்நிலையில் அந்த ஆப்பை அழுத்தினால்,
அது நேரடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும்.
மொபைலின் ஜிபிஎஸ் மூலம் இடம் தெரிந்து காவலர்கள் உடனே தொடர்பு கொள்வார்கள்.

அவ்வளவு அருமையான ஆப்பாக இருந்தும், இன்னும் பெண்கள் மத்தியில் போதிய அளவில் பயன்படுத்தப்படுவதில்லை.
அதற்குக் காரணம் சில எளிய விஷயங்கள்தான் —
மக்களுக்கு இதன் பயன்பாடு சரியாக தெரியாமல் இருப்பது,
சிலர் “இது வேலை செய்யுமா?” என்ற சந்தேகம் கொண்டிருப்பது,
மற்றும் சிலர் “நமக்கு இதை செய்ய நேரம் இல்லையே” என்று நினைப்பது.

ஆனால் நம்மால் இதை மாற்ற முடியும்.
ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்திலுள்ள பெண்களிடம், நண்பர்கள், மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள் ஆகியோரிடம்
இந்த ஆப்பை நிறுவி பயன்படுத்தச் சொல்லினால் அது ஒரு உயிரைக் காப்பாற்றும் அளவுக்கு உதவியாகும்.


 “காவலன் ஆப்” விழிப்புணர்வை பொதுமக்களிடம் எப்படிக் கொண்டு சேர்க்கலாம்?

குறும்பட டெமோ:
ஒரு நிமிட வீடியோவில், “ஒரு பெண் இரவில் பயந்து காவலன் ஆப்பை அழுத்துகிறாள் – உடனே காவல் அழைப்பு வருகிறது” என்ற காட்சியை காண்பிக்கலாம்.
இதை Facebook, Instagram, WhatsApp போன்ற இடங்களில் பரப்பலாம்.

 விழிப்புணர்வு:
பெண்கள் கல்லூரிகளில் நேரில் டெமோ நடத்தலாம்.
ஆப்பை திறந்து SOS அழைப்பை எப்படிச் செய்கிறோம் என்பதை மாணவிகளுக்குக் காட்டலாம்.


பஸ்நிலையம், மால்கள், ரயில் நிலையங்களில் சிறிய ஸ்டால்கள் அமைத்து
“பெண்களின் பாதுகாப்பு – காவலன் உங்கள் நண்பன்” என விளம்பர பலகைகள் வைக்கலாம்.
QR கோடு மூலம் ஆப்பை நேரடியாகப் பதிவிறக்கம் செய்ய வசதி ஏற்படுத்தலாம்.


“#InstallKavalanChallenge” என்கிற ஹேஷ்டேக்குடன்
“நான் காவலன் ஆப்பை நிறுவி வைத்துள்ளேன் — நீங்களா?” என்று மக்கள் பகிர ஊக்குவிக்கலாம்.

 சமூகப்பணியாளர்கள் இதனை ஒரு பிரச்சாரமாக நடத்தியால்
பெண்கள் பாதுகாப்பு குறித்து மக்கள் அதிக விழிப்புணர்வுடன் நடந்து கொள்வார்கள்.


பெண்கள் பாதுகாப்பு என்பது சட்டம் அல்லது காவல்துறை மட்டும் அல்ல —
அது நம்முடைய விழிப்புணர்விலும், ஒத்துழைப்பிலும் தான் இருக்கிறது.
ஒரு “அழுத்து” மூலம் உயிர் காப்பாற்றும் காவலன் ஆப்பை
ஒவ்வொரு பெண்களும் நிறுவி வைத்திருப்பது நம் சமூகப் பொறுப்பு. 🙏

~ மகேந்திரன் 

Thursday, November 06, 2025

ஒரு அசம்பாவிதம் நடந்தால் — சமூகத்தின் வெளிப்பாடு எப்படி இருக்க வேண்டும்?

*ஒரு அசம்பாவிதம் நடந்தால் — சமூகத்தின் வெளிப்பாடு எப்படி இருக்க வேண்டும்?* 
ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டால் அது ஒரு குடும்பத்தை மட்டுமல்ல, ஒரு சமுதாயத்தின் மனநிலையையே உடைக்கக்கூடியது.
அந்தச் சம்பவம் எங்கோ யாருக்கோ நடந்தாலும் மனிதர்களாகிய நமக்குள் ஒரு துளி வலி எழும்புகிறது. அந்த வலியில்தான் நம் மனிதநேயம் சோதிக்கப்படுகிறது — அந்த வலியை நாம் எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதில்தான் நம் நாகரிகத்தின் அளவு தெரிகிறது.

ஒரு சம்பவம் நடந்த உடனே சமூக வலைதளங்கள் சத்தம் செய்யத் தொடங்கும்.
ஒவ்வொருவரும் ஒரு நிமிடத்துக்குள் தீர்ப்பளிப்பவர்களாக மாறுகிறார்கள். 
ஆனால் உண்மை என்ன? நமக்குத் தெரியுமா?

வதந்தி, அரை குறை தகவல்கள் அல்லது ஒரு தரப்பு செய்திகள்
இவை எல்லாம் நியாயம் தேடும் பாதையை மங்கச்செய்கின்றன.
எனவே எந்த அசம்பாவிதத்தையும் முதலில் அமைதியுடன், தெளிவுடன் அணுக வேண்டும்.
கோபம் தீர்வல்ல, தெளிவு தான் தீர்வு.

அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை.
ஆனால் அந்தக் குரல் தீர்வுக்காக இருக்க வேண்டுமே தவிர
தாக்குதலுக்காக இருக்கக் கூடாது.

“குரல் கொடுத்தேன்” என்பதற்காக குரல் கொடுப்பது வெறும் வெளிப்பாடு;
“மாற்றம் தேவை” என்பதற்காக குரல் கொடுப்பது தான் சமூக அக்கறை.

ஒரு தீவிரமான வார்த்தை ஒரு மனதை காயப்படுத்தும்;
ஆனால் ஒரு உண்மையான வார்த்தை ஒரு மனதை மாற்றிவிடும்.
அதுவே சமூகத்தை மாற்றும் சக்தி.

நாட்டில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் போது ஒரு சில நாட்கள் அதையே பேசிவிட்டு 
மறந்துவிடுகிறோம். அல்லது பேசுவதற்கு மற்றொரு பரபரப்பான சம்பவம் கிடைத்து விடுகிறது. 
அசம்பாவிதங்கள் நடக்கும்போது மட்டும் நமது மன வருத்தத்தை வெளிப்படுத்துகிறோம்.
இப்படி செய்திருக்கலாம் அப்படி செய்திருக்கலாம் என்று விவாதிக்கிறோம்.
ஆனால் அதற்குப் பிறகு 
அந்த விஷயத்தை அதோடு விட்டு விடுகிறோம்.

ஆனால் உண்மையான சமூகப் பொறுப்பு என்பது
அந்தச் சம்பவம் நமக்குள் ஒரு நிலையான விழிப்புணர்வை உருவாக்கும்போது தான் ஏற்படும்.

நீங்கள் உண்மையிலேயே பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்கிறீர்கள் என்றால் 
அவரைப் போன்று இன்னொருவர் மீண்டும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு ஒரு சிறிய முயற்சியாவது செய்ய வேண்டும். நமது சமூக அமைப்பில் ஒரு சின்ன மாற்றத்தையாவது ஏற்படுத்துவதற்கு ஏதாவது செய்ய வேண்டும்.
அதுவே உண்மையான வெளிப்பாடு.

ஒரு அசம்பாவிதம் நடந்தவுடன் குற்றவாளியை கண்டிப்பது எளிது.
ஆனால் அந்தக் குற்றத்துக்கு வழிவகுத்த சமூக மனப்போக்கை
கண்டிப்பதும் மாற்றுவதும் தான் உண்மையான புரட்சியாகும்.

குற்ற சம்பவங்கள் நடைபெறும்போது குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 
ஆனால் அதே சமயம் 
குற்றவாளியின் குடும்பம் மற்றும் அவர் சார்நதுள்ள சமூகத்தை இழிவுபடுத்தும் நோக்கில் பேசுவதும் தவறே. வழக்கு விசாரணை முடிவதற்குள் என்ன நடந்தது என்று முழுமையாக தெரிவதற்குள் முன் முடிவுகளின் அடிப்படையில் ஒரு தரப்பை மட்டும் குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல. 

 மேலும் அசம்பாவிதங்களோ குற்ற சம்பவங்களோ நடைபெறும்போது அதன் உண்மையான பின்னணி காரணத்தை ஆராய்ந்து மீண்டும் அப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும் தீர்வுகளை கண்டறிவதற்கும் சமூகம், ஊடகங்கள் மற்றும் அரசாங்கம் இணைந்து செயலாற்ற வேண்டும். பிரச்சனைகளை மட்டும் பேசுவதோடு நின்றுவிடாமல் தீர்வைக் கண்டறிவதற்கும் முயற்சிப்பதே ஒரு நாகரிகமான சமூகத்தின் அறச்செயல்பாடாக இருக்கும். 

அசம்பாவிதம் நடந்தால் நம் வெளிப்பாடு
அதிர்ச்சியாய் அல்ல — அறிவாய் இருக்கட்டும்;
கோபமாய் அல்ல — கண்ணியமாய் இருக்கட்டும்;
ஒரு நாளுக்கான சினமாய் அல்ல — வாழ்நாள் முழுதும் விழிப்புணர்வாய் இருக்கட்டும்.

ஒரு சமூகத்தின் வலிமை, அதில் உள்ள மக்கள்
எப்படி உணர்கிறார்கள் என்பதிலல்ல,
அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதில்தான் உள்ளது.

அசம்பாவிதத்தைப் பார்த்து அழுவது மனிதநேயம்;
அதை மீண்டும் நடக்காமல் தடுக்கச் செயல்படுவது — மனிதப் பொறுப்பு.