Showing posts with label மாநகராட்சி பள்ளி. Show all posts
Showing posts with label மாநகராட்சி பள்ளி. Show all posts

Tuesday, July 17, 2018

அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவு..! கோவை முதியோர் இல்ல அம்மாக்களின் பேரன்பு


அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவு..! கோவை முதியோர் இல்ல அம்மாக்களின் பேரன்பு


 

``டி
பன் வந்துருச்சு…" எனச் சொல்லிக்கொண்டே தட்டுடன் துள்ளிச் செல்கிறான், 8-ம் வகுப்பு சச்சின்.
அடுத்த சில நிமிடங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று கூடுகிறார்கள். ``டேய் சாய்… இன்னிக்கு இட்லியாம்" என்கிற 6-ம் வகுப்பு சுரேஷ், தனது உற்சாகத்தை மற்ற மாணவர்களுக்கும் கடத்துகிறான்.
 ``பாட்டிகள் வந்து பரிமாறுவாங்க. எல்லாரும் வரிசைல நில்லுங்க" என ஒழுங்குப்படுத்துகிறார் பள்ளியின் தமிழ் ஆசிரியர்.



கோவை, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அன்றாடம் காணும் காட்சி இது. அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் கான்வென்ட் என்று பெயர் எடுத்த இந்தப் பள்ளியில், தற்போது 300 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், குடிசைப் பகுதியிலிருந்து வருபவர்கள். இவர்களின் பெற்றோர்கள், விடியலிலேயே கிளம்பி கூலி வேலைக்குச் சென்று வியர்வையைச் சிந்தினால்தான் அன்றைய தினம் அரை வயிற்றுக்கு ஏதாவது கிடைக்கும்.
புத்தகம், மதிய சத்துணவு, சைக்கிள் என அரசு வழங்கினாலும், குடும்பச் சூழ்நிலையால் இவர்களில் பெரும்பாலானோருக்குக் காலை உணவு என்பது கானல் நீர்தான். அந்தக் கவலையை நீக்கி, நேச மழையைப் பொழிந்துவருகிறது, `ஈர நெஞ்சம்' அறக்கட்டளை. அந்த முதியோர் இல்லத்துக்குச் சென்றோம்.
சகுந்தலாஅந்தப் பள்ளிக்கு அருகில் இயங்கிவருகிறது, ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்குச் சொந்தமான முதியோர் இல்லம். பெற்றெடுத்து வளர்த்த பிள்ளைகளால் `பாரம்' எனத் தூக்கி வீசப்பட்ட இந்த முதியோர்களுக்கு,  சில நல்ல உள்ளங்களின் உதவியால், வாழ்வு நகர்ந்துகொண்டிருக்கிறது. அப்படித் தங்களுக்குக் கிடைக்கும் உணவின் ஒரு பகுதியை இந்த மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்குத் தினமும் பரிமாறுகிறார்கள் இந்த அம்மாக்கள்.
``எனக்கு 65 வயசு ஆகுது கண்ணு. ஒரே ஒரு பையன். வீட்டு வேலை செஞ்சு தங்கம்போல வளர்த்தோம். படிச்சு ஆளானவனுக்குக் கல்யாணமும் பண்ணிவெச்சோம். அதோடு முடிஞ்சது. அவன் பொண்டாட்டிக்கு என்னைப் புடிக்கல. அவளோட சேர்ந்து என்னைத் திட்டிட்டே இருந்தான். இது சரிவராதுன்னு வெளிய வந்துட்டேன்.
கிடைக்கற வேலைகளை செஞ்சு காலத்தை ஓட்டிட்டிருந்தேன். ஒருகட்டத்துல, வேலை செய்ய முடியலே. இங்கே வந்துட்டேன். சமயத்துல வெளியில இருந்தும் எங்களுக்குச் சாப்பாடு வரும். இல்லாட்டி, இங்கே இருக்கறதை வெச்சு நாங்களே சமைச்சுக்குவோம். பக்கத்துல இருக்கற ஸ்கூல் பசங்களுக்கும் சேர்த்துத்தான் சமைப்போம். அவங்களுக்கு எங்க கையால பரிமாறும்போது பேர பசங்களுக்குச் சோறு போடற சந்தோஷம் கிடைக்குது. இதைவிட மனுசனுக்கு வேற என்ன சாமி சந்தோஷம் வேணும்?" என்கிற சகுந்தலா பாட்டி முகத்தில் அவ்வளவு ஆனந்தம்.
``எனக்கு மூணு பசங்க தம்பி. என் புருஷன் இருந்தவரை நல்லாத்தான் இருந்தேன். மூணு பேரையும் நல்லா ஆளாக்கினோம்.கோபாலம்மாள் ஒருத்தன் பெங்களூருல இருக்கான். மத்த ரெண்டு பேரும் இங்கேதான். ஒருத்தனுக்குத்தான் கல்யாணம் ஆச்சு. அவன் வீட்லதான் இருந்தேன். அவன்தான் கொஞ்சம் நல்ல வேலையிலும் இருந்தான். மத்த ரெண்டு பேருக்கும் வருமானத்துக்கே கஷ்டம்.  ஆனா, என்னை மருமகளுக்குப் பிடிக்கலை. `எப்போ பாரு இங்கயே இருக்காங்க. மத்த பசங்க வீட்டுக்கும் போகவேண்டியதுதான'னு சொல்லிட்டே இருப்பா. நம்மால எதுக்குப் பிரச்னை'னு வெளியே வந்துட்டேன். என் புருஷன் என்னைய அப்படித் தாங்கினார். இப்போ இந்தப் பேரப் பசங்களுக்குச் சமைச்சுப் போட்டு, அந்தச் சந்தோஷத்துலயே மிச்ச நாளை கழிக்கிறேன்" எனக் கண்ணீரைத் துடைத்துக்கொள்கிறார் 75 வயது கோபாலம்மாள்.
அன்று பாட்டிகள் சமைத்த சாப்பாட்டை எடுத்துச் செல்வதற்காக, மாணவர்கள் சிலர் முதியோர் இல்லத்துக்கு வந்திருந்தனர். சகுந்தலா பாட்டி சாம்பார் பாத்திரத்தை கஷ்டப்பட்டு தூக்கிவர, ``பாட்டிமா நீங்க கஷ்டப்படாதீங்க. என்கிட்ட கொடுங்க" என வாங்கிக்கொள்கிறான், 7-ம் வகுப்பு சிவா. அவன் கன்னத்தைப் பிடித்து கொஞ்சுகிறார் சகுந்தலா அம்மா.

ஈரநெஞ்சம் அறக்கட்டளையின் மகேந்திரன், ``சாலையோரம் ஆதரவற்று இருப்பவர்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள், மனநலம் மகேந்திரன்பாதிக்கப்பட்டவர்கள் போன்றோருக்கு மறுவாழ்வு கொடுக்கும் எண்ணத்தில் இந்த அறக்கட்டளையை ஆரம்பித்தோம். எங்களால் முடிந்த உதவியைச் செய்து, அவர்களை மீண்டும் அவர்களது வீட்டில் சேர்த்துவருகிறோம். ஒருமுறை, நிகழ்ச்சிக்காக அருகில் இருக்கும் மாநகராட்சி பள்ளிக்குச் சென்றிருந்தேன். அப்போதுதான் அங்கிருக்கும் மாணவர்களின் சூழ்நிலையைச் சொல்லி, ஏதாவது உதவி செய்ய முடியுமா? என்று கேட்டனர். இதைப் பாட்டிகளிடம் சொன்னதும், `புள்ளைகளுக்குக் காலை உணவை நாங்க செஞ்சு கொடுக்கிறோம்' என்றனர்.
எங்கள் இல்லத்துக்கு உணவு கொடுக்க வருபவர்களிடம், மாணவர்களுக்கும் சேர்த்து கொடுக்குமாறு கேட்போம். பள்ளி விடுமுறை நாள்கள் தவிர, மற்ற நாள்களில், காலை உணவு கொடுக்கிறோம். எங்கள் இல்லத்துக்கு உணவு கொடுப்பவர்களுக்கு ஆரம்பத்தில் மரக்கன்றுகளைக் கொடுத்துவந்தோம். தண்ணீர்ப் பஞ்சம், பல்வேறு பிரச்னையால் இப்போது கொடுக்க முடியவில்லை. கோயில்களுக்கு பூ கட்டி கொடுப்பது, விபூதி கொடுப்பது போன்ற பணிகளை இந்தப் பாட்டிகள் செய்வார்கள். தற்போது, இந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சமைத்துக் கொடுப்பதன் மூலம் பெரும் சந்தோஷம் அடைகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில், மாணவர்களுக்குக் காலை உணவு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
``மிகவும் பின்தங்கிய குடும்பத்திலிருந்து வருபவர்கள்தாம் இங்கு அதிகம். காலை உணவை உட்கொள்ளாமல் வருவதால், பிரேயரிலேயே மயங்கி விழும் காட்சி முன்பு அடிக்கடி நடக்கும். தற்போது, அந்தக் காட்சி மறைந்துவிட்டது" என முகம் மலர்கின்றனர் பள்ளி ஆசிரியர்கள்.
முதியோர் இல்ல அம்மாக்கள்
தாய் உள்ளம் எங்கே இருந்தாலும், அப்படியேத்தான் இருக்கும் என்பதை இந்த அம்மாக்கள் நிரூபித்துள்ளனர்.