Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Tuesday, March 22, 2022

கொரோனா Vs ஹர்ஷினி

கோவை கணபதியில் சாலையோரம் தள்ளுவண்டியில் பானிபூரி கடை நடத்தும் தபசுராஜ் , கொண்டம்மாள் தம்பதியினர். இந்த தம்பதியினரின் மூத்த மகள் ஹர்ஷினி கோவை ராம்நகர் சபர்பன் மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறாள் . 5 ஆம் வகுப்புவரை படிப்பில் முதல் மாணவியாகத் திகழ்ந்து வந்தாள் . ஆறாம் வகுப்பு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்றபின் பள்ளியில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் கொண்டு கராத்தே , கபடி, மாரத்தான் போன்றப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். அது மட்டும் இல்லாமல் கட்டுரைப் போட்டி பேச்சுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பல பரிசுகளும் குவித்தாள் . விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் மிகுந்ததால் படிப்பில் நாட்டம் குறைந்து மந்த நிலை ஏற்பட்டது. இருந்தாலும் இவருடைய பெற்றோர் மகள் மீது நம்பிக்கை வைத்துப் படிப்பில் ஆர்வம் குறைந்ததைப் பெரிது படுத்திக் கொள்ளவில்லை .


இந்நிலையில் கொரோனா தொற்று 2020  ஆம் ஆண்டுத் துவங்கவே அடுத்த இரண்டு வருடங்கள் முழு அடைப்பு போன்ற காரணங்களால் பள்ளி செல்லாமல் இணையவழிக் கல்வி மட்டுமே இருந்தது. இணையவழிக் கல்வியில் புரிதல் இல்லாத நிலை  ஏற்படவே விளையாட்டுப் பிள்ளையான ஹர்ஷினி பொறுப்பற்று தன் போக்கிலிருந்து வந்திருக்கிறார்.  இவளுக்கு மிகவும் ஆர்வமான விளையாட்டுப் போட்டிகள் எதிலும் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள முடியாத நிலை உருவானதோடு படிப்பும் சரிவர ஏறவில்லை .

ஊரடங்கு உத்தரவு காரணமாக தர்ஷினியின் தந்தையால் பானிப்பூரிக் கடை போட முடியாத நிலை ஏற்படவும் ஏற்கனவே வறுமையிலிருந்த இவர்களுக்கு மேலும் வறுமையும், கடன் சுமையும் ஏற்பட்டு வீட்டு வாடகை கூடக் கொடுக்க முடியாத நிலையில் தவித்தனர். கடன் காரர்களுக்குக் கடன் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையும் சேர்ந்து , வறுமையின் உச்சநிலைக்கு தள்ளப்பட்டு நிலைகுலைந்தது குடும்ப பொருளாதாரம் .

இந்த நிலைப்பாட்டை கவனித்து வந்த ஹர்ஷினி சோர்ந்து இருந்த தனது தந்தையிடம் ,  "கடை திறக்க முடியவில்லை என்றால் நமக்குப் பணம் கிடைக்காதா அப்பா எதனால் இந்த நிலை?", என்று கேட்டாள். தபசு தன் மகளிடம் , "உலகமே கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப் பட்டிருக்கிறது, இதனால் உலகமெங்கும் ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது, கிருமித் தொற்று என்றால் என்ன என்றுகூட அறியாத பாமர மக்கள் ஊரடங்கால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர், வீதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லை , கடைகள் மூடப்பட்டுள்ளது , தினசரி வருவாய் இழந்து தவித்துவருபவர்களில் நம் குடும்பமும் ஒன்று . வீட்டிலேயே முடங்க வேண்டிய நிலையில் சேமித்து வைத்த சிறு துளியும் கரைந்து விட்டது , இந்த இக்கட்டான சூழலிலிருந்து எப்படி மீளப்போகிறோம்னு புரியல. உங்களை எப்படிக் காப்பாற்றப் போகிறேன்னு தெரியல. இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த நிலையோ?!", என்று விளக்கத்தோடு தன் மனக்குமுறலை கொட்டியிருக்கிறார் .

பள்ளி விடுப்பு என்ற ஒரே சந்தோஷத்திலிருந்து வந்த ஹர்ஷினி , தந்தையின் மனக்கவலையை உணருகிறாள். தன் தாய் தந்தையரின் ஆற்றாமை நிலையைக் கவனிக்க ஆரம்பித்து , தன் அறியாமையை உணர துவங்கினாள் .

தன் மாற்றமே தனக்கும் , தனது குடும்பத்தின் உயர்வுக்கும் வழி என உணர்ந்து என்ன செய்யலாம் என்ற முயற்சியில் இறங்கினாள் .

மீதம் இருந்த விடுமுறை நாட்களில் கண்ணில் படும் பழைய தினசரி நாளிதழ்களை எல்லாம் வாசிக்கிறாள் . வாசிப்பை நேசிக்கவும் ஆரம்பிக்கிறாள்.. வாசிப்புப் பழக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுப்படுத்திக் கொள்கிறாள்.. தினசரி ஆங்கிலம் , தமிழ் ஏடுகள் தொடங்கி மாத வாரச் சஞ்சிகைகள் வரை படித்துக் குறிப்பு எடுத்து செய்தி வாசிக்கக் கற்றுக் கொண்டாள் .

இந்த வருடம் 2021- 2022 கொரோனா தொற்று சற்று குறையவே பள்ளிகள் திறந்ததும் புது வித மனநிலையோடு மீண்டும் தனது பள்ளிப் படிப்பைத் துவங்க , புது எழுச்சியுடன் பள்ளிக்கு உற்சாகமாகச்  செல்ல துவங்கினாள் . படிப்பில் ஆர்வம் குறைந்து இருந்த ஹர்ஷினி தற்போது தனது வகுப்பில் முதல் மாணவியாக எல்லாப் பாடங்களில் 80 சதவிகித மதிப்பெண் பெற்று வருகிறாள்.

ஒருமுறை தன் ஆசிரியரிடம் தினமும் நான் என் சக மாணவர்களுக்கு நான் படித்த அன்றாடச் செய்திகளைப் பகிர நினைக்கிறேன் என்று தனது ஆர்வத்தைத் தெரிவிக்கவும், தினமும் காலை பிரேயர் நேரத்தில் செய்திகளை வாசிக்க ஆசிரியரும் அனுமதிக்கிறார்.

ஹர்ஷினி செய்திகளைத் தெள்ளத் தெளிவான உச்சரிப்புடன் வாசிப்பதைக் கண்டு ஆசிரியர்கள் , மாணவர்கள் மிகுந்த ஆச்சரியமும் வியப்பும் பெருமையும் கொண்டு , நமது பள்ளிக்கு இது பெருமை சேர்க்கும்படி உள்ளது என்று பாராட்டி வருகின்றனர்.
அது மட்டும் இல்லாமல் தற்போது பள்ளியில் நடத்தப்படும் பேச்சு போட்டி, கதை கட்டுரைப் போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து பரிசுகளையும் பெற்று வருகிறாள். தன்னைத் தானே மேலும் மெருகேற்றி தன் திறமைகளை மிளிரச் செய்து கொண்டு வருகிறாள்


தமிழ் நாட்டின் முன்னணி தினசரி, தினமணி நாளிதழில் பாரதியார் பாடல்கள் போட்டியில் "இரண்டாம் பரிசு" பெற்றாள். தினத்தந்தி நாளிதழில் கொரோனா பற்றிய இவளது கவிதை வெளியானது அவளின் எழுத்துப் பணியை மேலும் சிறக்கச் செய்துள்ளது . தானும் வளர்ந்து தன் சுற்றுச்சூழலையும் சரி செய்ய எண்ணிய ஹர்ஷினி,
தான் சந்திக்கும் பிரச்சினைகளை  தினமலர் நாளிதழுக்கு எழுதிச் சம்மந்தப்பட்டவர்கள் கவனத்திற்குக் கொண்டு சென்று பிரச்சினைகளையும் களைவது குறிப்பிடத் தக்கது.

தற்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இந்த இளம் வயதில் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரம் செய்து   தனது பேச்சுத் திறமையை வெளிப்படுத்தியது, அந்த பகுதி  மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுத் தந்தது மட்டும் இல்லாமல் சம்பந்தப் பட்ட வேட்பாளருக்கு கூடுதல் வாக்குகளும் கிடைத்தது .

இதெல்லாம் போக விடியற்காலை எழுந்து தனது தந்தைக்கு உதவியாகக் காய் வெட்டி கொடுப்பதும், மதிய உணவை வித விதமாகச் சமைக்கச்  செய்தும் தனது குடும்பத்தினரை மிகக் குறுகிய காலத்தில் பெரும் நம்பிக்கை அடையச் செய்து உள்ளார்.

இந்தக் கொரோனா நம்மிடையே எவ்வளவோ அழிவுகளை ஏற்படுத்தி உள்ளது என்றாலும், ஹர்ஷினியின் குடும்பத்திலும் ஹர்ஷினியின் மனதிலும்  நம்பிக்கை விளக்கை ஏற்றி உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை...

~ ஈரநெஞ்சம் மகேந்திரன்

Wednesday, March 12, 2014

கல்வி என்பது கண் போன்றது. ஆனால் கல்வியை கற்றுக் கொடுக்க கண் அவசியமில்லை

"அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது
மானிடராய் பிறந்த காலையின்
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பிறந்த காலையின்
கல்வியும் செல்வமும் தான் பெறுதல் அரிது
கல்வியும் செல்வமும் பெற்ற காலையின்
வாழ வழி நாடி வழி பிறந்திடுமே" :-

"எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்" :-
இவை ஒளவையின் மொழியாகும் ...


கல்வி என்பது கண் போன்றது. ஆனால் கல்வியை கற்றுக் கொடுக்க கண் அவசியமில்லை என்பதை நிரூபிக்கிறார் திரு. ஹக்கீம் அவர்கள் .
09-03-2014 அன்று பின்தங்கிய வகுப்பை சார்ந்தவர்களின் சிறந்த கல்வியாளர் மற்றும் சிறந்த சாதனையாளருக்கான "பெட்டகம்" 2014 ஆண்டுக்கான விருது பார்வையற்ற ஆசிரியர் திரு. ஹக்கீம் வயது 32 அவருக்கு வழங்கப்பட்டது ." பிறவி முதலே பார்வை அற்ற அவர் கோவை குனியமுத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணி புரிகிறார் . பல்லாயிரம் மாணவர்களுக்கு கல்விக் கண் கொடுத்து வரும் திரு. ஹக்கீம் அவரை சந்திக்க அவர் பணிபுரியும் பள்ளிக்கு சென்று நேரில் சந்தித்தபோது.
மாணவர்கள் தங்களது ஆசிரியரான திரு. ஹக்கீம் பாடம் நடத்தும் பொழுது எந்த ஒரு இடையூறும் இல்லாமல் உற்று கவனிப்பதும், அவருக்கு ஒத்துழைப்பாக நடந்து கொள்வதும் பார்ப்பதற்கு வியப்பாக இருக்கிறது. ஆசிரியர்கள் என்றாலே கண்டிப்பு , தண்டனை தான் அதிகம் இருக்கும். ஆனால் இவரிடம் நிதானமும் ஊக்கமும் அதிகமாக இருப்பதை இவரிடம் பயிலும் மாணவர்களை பார்க்கும்போதே தெரியவருகிறது.

அவர் பாடம் கற்றுக்கொடுக்கும் அழகை நாமும் ஆர்வத்துடன் கவனித்து பாடம் முடிந்ததும் அவரிடம் எப்படி சார் உங்களால் இவ்வளவு நேர்த்தியாக பாடம் எடுக்க முடிகிறது? எப்படி உங்களுக்கு இது சாத்தியமாகிறது என்று கேட்டபோது ,

பிறவியிலேயே பார்வை இல்லை என்பதால் இது தனக்கு ஒரு குறையாகவே தெரியவில்லை அதுமட்டும் இல்லாமல் பார்வை இல்லையென்றாலும் ஏதாவது ஒரு வகையில் வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற இலட்சியம் சிறு வயதில் இருந்தே நிறைய இருந்தது, மேலும் பார்வை இல்லை என்பதனால் ஞாபக திறன் வளர்த்துக்கொண்டேன் , அந்த நியாபகத் திறனால் மாணவர்களுக்கு சுலபமாக கற்றுக் கொடுக்க முடிகிறது என்றார் .


அவரிடம் ஆசிரியர் பணியை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள் உங்களது குடும்பத்தின் ஒத்துழைப்பு எப்படி என்று கேட்டபோது .

பெற்றோர் அப்பா முகம்மது மற்றும் அம்மா சாலிஹா, தனக்கு மூன்று சகோதரிகள் மற்றும் இரண்டு அண்ணன் நான் கடைசியாக பிறந்ததினால் அதிக செல்லம் . அப்பா கூலிவேலை செய்துவந்ததால் வறுமை இருந்தபோதும் குடும்பத்தின் அன்பு பெரும் செல்வமாக இருந்தது . பிறவியிலேயே பார்வை இல்லை என்பதால் குடும்பத்தினர் எனக்கு அந்த குறை தெரியாமல் நல்ல படியாக வளர்த்து நல்லபடியாக படிக்க வைத்தனர் தற்போது சபியா என்ற அன்பான மனைவியுடன் இன்னும் கூடுதல் பலமும் ஆறுதலும் கிடைத்துள்ளது. தற்போது கிடைத்த " பெட்டகம் விருது " மிகுந்த உற்சாகத்தை தருகிறது.
ஆறாம் வகுப்பு வரை விடுதியில் தங்கி பார்வையற்றோருக்கான பிரெயில் முறையில் கல்வி அதற்கு பிறகு ஒருங்கிணைந்த பாடத் திட்டத்தின் கீழ் கல்வியை தொடர்ந்தேன் . முதலில் B.A., முடித்து பின் M.A., B.Ed., பயின்றேன் . பார்வை குறை என்பதால் சிற்சில சங்கடங்களையும் சந்திக்க நேர்ந்த போதும் அதை பெரிது படுத்திக்கொள்ளாமல் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் தொடர்ந்து பயின்று வந்தேன். 2008 ஆம் ஆண்டு இலட்சியத்திற்கான வாசல் திறக்கப்பட்டது . நான் எதிர்பார்த்தது போலவே ஆசிரியர் பணி கிடைத்தது கடந்த ஆறு வருடங்களாக, ஆசிரியராக சிறந்த முறையில் பணியாற்றி வருகிறேன் . மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கவேண்டும் என்ற கனவு மெய்பட்டதால் போத்தனூரில் இருக்கும் எனது வீட்டில் இருந்து குனியமுத்தூர் பள்ளிக்கு 6 கிலோ மீட்டர் தூரம் சிரமம் ஒன்றும் தெரியவில்லை. நாள்தோறும் வீட்டில் இருந்து தானாகவே பேருந்தில் பள்ளிக்கு சென்று வருகிறேன் .

மேலும் பள்ளி மாணவர்கள் என்றாலே பெரும் குறும்புடன் இருப்பார்களே உங்களிடம் எப்படி அணுகுகிறார்கள் என்று கேட்டபோது.

குழந்தைகள் எல்லாம் பொதுவாக விளையாட்டுத் தனத்துடன் தான் இருப்பார்கள், என்றாலும் தனது வகுப்புகளின் போது அவர்கள் நல்ல முறையில் ஒத்துழைப்புடன் நடந்து கொள்வார்கள் நான் பள்ளிக்கு வரும் நேரம் நான் வரும் பேருந்து எல்லாவற்றையும் அறிந்து என்னை அழைத்து செல்ல பேருந்து நிலையத்தில் எனக்கு முன்பாக வந்து காத்திருந்து நான் வந்ததும் என்னை பள்ளிக்கு அழைத்து செல்வார்கள். வகுப்பு பாடங்களை நேர்த்தியாக முடிப்பார்கள் , சில மாணவர்களிடம் குறும்புத்தனம் இருந்தாலும் மற்ற மாணவர்கள் எனக்கு துணையாக அவர்களை வழி நடத்திக் கொள்கிறார்கள் . அதுமட்டும் இல்லாமல் நான் அதிகம் கண்டிக்க மாட்டேன் , நிதானத்துடன் அன்புடன் பழகுவதனாலேயே மாணவர்கள் என்னிடம் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறார்கள் .இந்த அணுகு முறையாலே இதுவரையிலும் கிட்டத்தட்ட 1000 மாணவர்களை பெற்று உள்ளேன் என்றார்.
மாணவர்களுக்கு அவர் என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்பதற்கு.

மாணவப் பருவம் என்பது விளையாட்டுத்தனம் நிறைந்த வயது தான் என்றாலும் முன்னேற வேண்டும் என்ற நெருப்பு மனதிற்குள் எப்போதும் இருக்க வேண்டும் , அதுதான் வெற்றிக்கு ஒளியைத்தரும் என்று அறிவுறுத்தினார்.

பார்வை திறன் இல்லாமல் இருந்தாலும் தன்னம்பிக்கை குறையாமல் இருக்கிறார் .பலருக்கு நம்பிக்கை ஊட்டுகிறார் ,
எதிலும் வெல்லலாம் : எதனாலும் வெல்லலாம் ; ஆனால் வாழ்க்கையை வெல்ல தன்னம்பிக்கை உடையவர்களால் மட்டுமே இந்த உலகையும் வெல்ல முடியும் என்பதை நிருபித்துள்ளார் திரு. ஹக்கீம் அவர்கள்

பாராட்டும் அங்கீகாரமுமே பிறரை மேலும் மேலும் முன்னோக்கி தள்ளும் . பார்வை திறன் இல்லாத இவரால் இவ்வளவு செய்ய முடிகிறது என்றால் உங்களாலும் முடியாதா என்ன ???

#மகேந்திரன்




நன்றி
The New Indian Express