Saturday, April 06, 2013

மயானத்தில் ஒரு மனுஷி ~நன்றி தினமலர்


  • http://www.dinamalar.com/news_detail.asp?id=683910
    பெண்ணாகப்பட்டவர்கள், இன்றைக்கும் சுடுகாட்டின் சூழலை தாங்கக்கூடிய பக்குவம் இல்லாதவர்கள், அங்கு எரியூட்டப்படும் அல்லது புதைக்கப்படும் பிணத்தை பார்க்கும் சக்தி கொண்டவர்கள் கிடையாது.
    இப்படி சொல்லப்படும் காரணங்களினால்... எவ்வளவுதான் தனக்கு பிரியப்பட்ட கணவர், தந்தை, தனயன் என்ற உறவாக இருந்தாலும், மரணம் என்ற பிரிவு வரும்போது, வீட்டு வாசலோடு நின்று, இறந்த உறவுகளை வழியனுப்பி வைக்க வேண்டிய நிலையில்தான் இருக்கிறார்கள்.
    இந்த சூழ்நிலையில், இரவு நேரங்களில் வரும் பிணத்தைக்கூட எரிக்கும், புதைக்கும் பக்குவத்துடன் ஒரு பெண் இருக்கிறார் என்றால் ஆச்சரியம்தானே.
    ஆச்சரியமூட்டும் அந்த பெண்ணின் பெயர் வைரமணி, கோவை சொக்கம்புதூர் சுடுகாட்டில் வெட்டியான்(ள்) வேலை பார்த்து வருகிறார்.
    இரவு பத்து மணியளவில் சுடுகாட்டில் எரிந்து கொண்டு இருக்கும் ஒரு பிணத்தை சரிவர எரிகிறதா என்று அருகே இருந்த பார்த்தபடியும், அவ்வப்போது நெருப்பை தூண்டிவிட்டபடியும் தன்னந்தனியாக நிற்கிறார்.
    பிணத்தை எரித்து முடித்த பிறகே பேசத்துவங்குகிறார்.
    என் அப்பா கருப்பசாமிதான் இந்த வெட்டியான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார், எனக்கு எழுதப் படிக்க தெரியாது, ரொம்ப சின்ன வயசிலேயே எனக்கு கல்யாணமாகிருச்சு, மூணு குழந்தைகள் இருக்காங்க, வீட்டுக்காரருக்கு போதுமான வருமானம் இல்லை, இந்த நிலையில் திடீர்னு அப்பா இறந்துட்டாரு, அவர் பார்த்த வெட்டியான் வேலையை எடுத்துப் பார்க்க யாரும் முன்வரலை, குடும்ப சுமையை குறைச்சுக்கலாம், பிள்ளைகள நல்லா படிக்க வைக்கலாம் அப்படிங்ற எண்ணத்துல இந்த வெட்டியான் வேலையை நான் எடுத்துக்கிட்டேன்.
    அப்பா பக்கத்துலயே இருந்து இந்த வேலைய பல நாள் பார்த்ததுனால, எனக்கு எந்த பயமோ, தயக்கமும் இல்லை, இந்த பேய், பிசாசு மேலே துளியும் நம்பிக்கை இல்லை, உண்மைய சொல்லப் போனா இந்த சுடுகாட்டை சிவன் வாசம் செய்யும் கோயிலாத்தான் நான் பார்க்கிறேன்., இந்த தொழிலுக்கு வந்து இப்ப பதினைந்து வருஷமாகப் போகுது.,
    பிணத்தை புதைக்கணும்னாலும் சரி, எரிக்கணும்னாலும் சரி இரண்டாயிரம் ரூபாய் கூலி வாங்குகிறேன். இதுல விறகு மற்றும் உதவியாள் கூலி போக எனக்கு ஐநூறு ரூபாய் மிஞ்சுனா அதிகம்.
    ஒரு பிணத்தை எரிக்கணும்னாலும் சரி, புதைக்கணும்னாலும் சரி ஆறு மணி நேரம் எங்களுக்கு வேலை எடுக்கும். சாயந்திரம் பிணத்தை கொண்டுவர்ரோம், எரிக்கணும், எல்லா ஏற்பாடும் செஞ்சு வையுங்க என்று சொல்லி முன்பணம் கொடுத்து செல்பவர்கள், திடீர்னு நள்ளிரவு நேரத்திற்கு பிணத்தை கொண்டு வந்து கொள்ளிவச்சுட்டு போயிடுவாங்க, நான் தனியாள நின்னு எரிச்சு முடிப்பேன்.
    செத்தது கோடீசுவரான இருக்கும், ஆன எனக்கு கொடுக்கவேண்டிய கூலியை கொடுக்க ரொம்பவே பேரம் பேசுவாங்க, "கொடுக்கிறத கொடுங்கப்பான்னு கேட்டு வாங்கிப்பேன்'. குழந்தைகள் பிணத்தை பார்க்கும் போது மட்டும் மனசு வேதனையா இருக்கும், மற்றபடி பிணங்களை பார்த்து, பார்த்து பழகிப்போச்சு.
    பிணத்தை எரிக்கும் போது நூல் கயிறு கூட இருக்காது, ஆனாலும் அந்த பிணத்தின் கையில இருந்து கழட்டின கால் பவுன் மோதிரத்தை யாரு எடுத்துக்கிறதுன்னு சுடுகாட்டிலேயே சண்டைபோட்டு மண்டைய ஒடைச்சுக்குவாங்க, போகும் போது எதையும் கொண்டு போகமுடியாதுங்கிறத கண் எதிரே பார்த்துக்கிட்டே, இந்த ஜனங்க கால் பவுனுக்கு சண்டை போடுறத பார்க்கும் போது வேடிக்கையாத்தான் இருக்கும்.
    உலகம் ரொம்ப அவசரமாயிடுச்சு இப்ப யாருக்கும் ஆற அமர சுடுகாட்டில் நின்று பிணத்தை எரிக்கவோ, புதைக்கவோ பொறுமையில்லை, அதுனால மின் மயானத்திற்கு போய் பத்து நிமிடத்துல வேலையை முடிக்கத்தான் விரும்புறாங்க, இதன் காரணமா இப்ப எனக்கு கொஞ்சம் தொழில் "டல்' தாங்க...மாதத்திற்கு நாலோ, ஐந்தோ பிணங்கள் வர்றதே அதிகம் என்று கூறிய வைரமணியை மூன்று விஷயத்திற்காக பாராட்டியே ஆக வேண்டும்.
    முதல் விஷயம் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள எந்த வெட்டியானை எடுத்துப் பார்த்தாலும் குடிப்பழக்கம் இருக்கும், கேட்டால் பிணத்தோடு கிடக்கிறோம் அதுனால குடியை விடமுடியாதுங்க என்பார்கள்"அதற்கும்' தனியாக பணம் கேட்டு வாங்கிக் கொள்வார்கள்,ஆனால் வைரமணிக்கு அப்படி பழக்கம் எதுவும் கிடையாது,எல்லாம் மனசு தாங்க காரணம் என்கிறார் எளிமையாக., ஒன்று, ஆதரவில்லாமல் அனாதையாக இறந்து போனவர்களின் பிணங்களை, கூலி கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி, பணத்திற்கு முக்கியத்துவம் தராமல், இறந்து போன பிணத்திற்கு முக்கியத்துவம் தந்து, உறவினர்கள் செய்வது போல காரியம் எல்லாம் செய்து உரிய மரியாதையுடன் பிணத்தை புதைக்கிறார்.
    இரண்டாவதாக, குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தொழிலை செய்து வருகிறார், இருந்தாலும் இதற்கென நிர்ணயம் செய்த தொகையைத் தவிர கூடுதலாக வாங்குவதில்லை, உழைக்காமல் மற்றவர்கள் பணத்தை உதவியாக பெறுவதிலும் விருப்பமில்லை, ஆகவே என்னைப் பற்றி எழுதுங்க, ஆனா நான் ரொம்ப கஷ்டப்படுறேன் யாராவது உதவுங்களேன் என்றெல்லாம் அர்த்தம் வரும்படியா எழுதிராதீங்க என்றவர் இதனாலேயே தனது தொடர்பு எண் வேண்டாம் என்று தவிர்த்துவிட்டார்.
    எவ்வளவு இருந்தாலும் இன்னும் யாராவது,ஏதாவது கொடுப்பார்களா என்று ஏங்கித் தவிக்கும் இந்த உலகத்தில் தனக்கு சிரமம் என்ற போதிலும், தனது உழைப்பில் கிடைக்கும் பணம் மட்டுமே போதும் என்ற வைராக்கியத்துடன் வாழும் வைரமணி சந்தேகமே இல்லாமல் ஒரு வித்தியாசமான நம்பிக்கை மனுஷிதான்.

    - எல்.முருகராஜ்

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

1 comment:

sakthi said...

பெண் என்பவள் பராசக்தி ! முடியாதது என்று ஒன்றில்லை ! பெண் என்ற பெண்மையும் உண்டு அவள் வெகுண்டாள் உலகையும் அளிக்கும் சக்தி உண்டு .அநீதிக்காக மதுரையை அழித்தவளும் ஒரு பெண் தான் .


அஸ்வமேத யாகத்தின் பலன் யார் யாருக்கு கிடைக்கும் ?

உணவுக்காக ஏங்கும் ஏழைக்கு உணவளித்தவனுக்கும் ,
அநாதை பிணங்களை தகனம் செய்பவனுக்கும் ,

ஆயிரம் யாக பலன் கிடைப்பதாக ஐதீகம் .

சாதனை பெண்ணே உன்னை போற்றுகிறேன் ! வாழ்க வளமுடன் !

Post a Comment