Sunday, January 05, 2014

"இயற்கையின் இசையை தேடி" ~மகேந்திரன்

தாயன்பும் தாலாட்டும் கிடைக்காமல் அழும் குழந்தைக்கு இசையால் மட்டுமே சாந்தப்படுத்த முடியும் . அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது இசை. கடந்த சில வருடங்களுக்கு முன்பெல்லாம் திரைப்படங்களில் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுப்பார்கள். கதைகள் இல்லாத படங்களும் இசைக்காகவே மாதக்கணக்கில் வருடக்கணக்கில் திரை அரங்குகளில் ஓடியதுண்டு. முன்பு வெளிவந்த அனேக படங்களைப் பெரும்பாலான மக்கள் இசைக்காகவே விரும்பிப் பார்ப்பார்கள் இதற்க்குக் காரணம் எடுக்கப்படும் படங்களில் வரும் பாடல்களில் இயற்கையான இசைக்கருவிகள் தரும் இசையும், தெளிவான பாடல் வரிகளும் இனிமையான குரல்வளம் கொண்ட பாடகர்களும் கொண்டு உருவாக்கப்பட்டமையே. ஆனால் இப்போது வரும் படங்களில் அது போன்ற இனிமையான தெளிவான இசையோ பாடல் வரிகளோ அதிகமாக இல்லை. புதிது புதிதாக நிறைய பேர் வருகிறார்கள், அளவிற்கு அதிகமாக படங்கள் உருவாக்கப்படுகின்றன. அப்படங்களில் இசைகள் கூட பதிவு செய்யப்பட்ட இசைகளாகவே தருகிறார்கள். அன்றைய காலக் கட்டத்தில் T. M . சௌந்தரராஜன், எஸ்.பி.பாலசுப்ரமணியம், யேசுதாஸ், மலேசியாவாசுதேவன், சுசீலாம்மா, ஜானகியம்மாள், சித்ரா, மனோ, இன்னும் ஒருசில பாடகர்கள் மட்டுமே இருப்பார்கள், 1950 இல் S. தக்ஷினாமூர்த்தி முதல் விஸ்வநாதன் – ராமமூர்த்தி, இளையராஜா, போன்ற சிறந்த இசையமைப்பாளர்கள் இயற்கையான இசை தரும் இசை கருவிகளைக் கொண்டு சிறந்த இனிமையான இசையைத் தந்தார்கள். தபேலா, மிருதங்கம் நாதஸ்வரம், ஹார்மோனியம், புல்லாங்குழல், வீணை , வயலின் போன்ற இயற்கை இசைக்கருவிகளை அதிக அளவில் பயன்படுத்தி இனிமையான இசையை மக்களுக்கு விருந்து படைத்தார்கள்.


இசைக்காக உருவான படங்கள் :

இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அலிபாபாவும் 40 திருடர்களும், கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டப்பொம்மன், கர்ணன், பாலும் பழமும் என அக்காலக்கட்டத்தில் வந்த படங்களில் வரும் இசை ஒருவித தனித்துவமாகவே இருந்தது. அதன் பிறகு MS விஸ்வநாதன் இளையராஜா அவர்களின் வருகையில் இளமை ஊஞ்சலாடுகிறது, நினைத்தாலே இனிக்கும், எங்க ஊருப்பாட்டுக்காரன், சின்னத் தம்பி,இதய கோவில், அம்மன் கோவில் கிழக்காலே, மெல்லத் திறந்தது கதவு, பயணங்கள் முடிவதில்லை, சிந்து பைரவி, காதல் ஓய்வதில்லை, உதய கீதம், பாடு நிலா, இதயத்தை திருடாதே, நிழல்கள், இன்னும் எண்ணற்ற படங்கள் கணக்கிலடங்கா வண்ணம் இசைக்காகவே, இசையை மையமாகக் கொண்டு எடுத்தார்கள், இந்த படங்களின் பெயர்களை கேட்க்கும் போதே அப்படங்களில் வரும் பாடல்கள் கண்டிப்பாக நம் மனதில் நம்மை அறியாமலேயே பாடத்துவங்கி விடும். இன்றும் இப்படங்களில் வரும் பாடல்கள் இரவு நேர பணியாளர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் அனைத்து வானொலியிலும் பணியாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவற்றை ஒலிபரப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.
இசையின் அதிசயம் :

வியக்கத்தக்க ஒரு விஷயமாக கோவை உடுமலைப்பேட்டை வனப்பகுதி அருகில் ஒரு திரை அரங்கில் இளையராஜா இசையில் வெளிவந்த வைதேகி காத்திருந்தாள் திரைப்படம் திரையிடப்பட்டு அமோகமாக ஓடும் காலங்களில், எல்லோருக்கும் தெரியும் வைதேகி காத்திருந்தாள் படத்தில் "ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" என்ற பாடல் இனிமையும் அதன் இசையும், மனிதர்களைத் தாண்டி வனப்பகுதி உள்ள யானைகளையும் விட்டு வைப்பதில்லை. யானைகள் உலா போகும் போது அந்த பாடலைக் கேட்டு திரை அரங்கின் வாசலில் நின்று அப்பாடல் முடியும் வரை ரசித்துக் கேட்டுவிட்டுதான் போகுமாம். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் வெளிவரும் பாடல்களைக் கேட்டாலே எங்கோ ஓடிவிடலாம் போல இருக்கிறது. இசைக்குப் பதிலாக சத்தத்தை மட்டும் கொடுக்கிறார்கள்.
மக்கள் மனதில் இன்னமும் அது போன்ற நல்ல இசை கொண்ட பாடல்கள் எப்போது வரும் என்ற ஏக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இன்றைய இசையமைப்பாளர்கள் மக்கள் மனதின் எண்ணங்களைப் பூர்த்தி செய்யாமல் இருக்கிறார்கள்.

இசைக்கலைஞர் :

இதைப் பற்றிச் சில இசைக் கலைஞர்கள் கூறும்போது அதிகமாக நவீன இசைக்கருவிகள் வந்துவிட்டது அதிலும் கீபோர்ட் என்ற கருவியில் பல இசைக்கருவிகள் கொடுக்கும் இசையை அந்த ஒரு இசை சாதனம் கொடுத்து விடுகிறது. இதனால் 3, 4 இசை கலைஞர்கள் தேவைப்படும் நேரத்தில் இந்த கீபோர்ட் வாசிக்கத்தெரிந்த இசைக்கலைஞர் ஒருவர் இருந்தாலே போதும் என்கிறார்கள் . கீழே தரையில் உட்கார்ந்து வாசிக்கும் தபேலா, நாதஸ்வரம், மிருதங்கம் போன்ற இசை கருவிகளை வாசிப்பதை விட அதே இசை பதிவு செய்யப்பட்டு கீபோட் இல் எல்லாமே வந்து விடுகிறது. கீபோர்ட் கற்று கொள்பவர்களும் கூட அதை ஒரு ஃபேசனாகவே கற்று கொள்கிறார்கள்.
பொதுமக்கள் :

சில பொது மக்கள்  கூறும் போது முந்தைய படங்களில் வரும் பாடல்களில் நல்ல கருத்துக்களும் அக்கருத்தினை தெளிவாக கேட்கவேண்டும் என்பதற்கு பாடல்களுக்குத் தக்கவாறு இசையும் இருக்கும் .இதனால் பாடல்களில் வரும் வரிகளுக்கும் அதன் கருத்தாழத்திற்கும் மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. தற்போது உள்ள நவீன இசைக்கருவிகள் அடித்தட்டு மக்கள் வரை பாடல்களைக் கொண்டு செல்வதில்லை. இப்போதைய காலங்களில் ஓசை மட்டுமே இருக்கிறது. பாடல்களின் வரிகள் சுத்தமாக விளங்குவது இல்லை , எப்போதோ என்றோ குறிஞ்சி பூ பூத்தாற்போல ஒரு சில பாடல்கள் மட்டுமே ஓரளவிற்கு கேட்பதுபோல உள்ளது. அதுமட்டும் இல்லாமல் முன்னரெல்லாம் அவ்வப்போது மேடைக் கச்சேரி, சபா கச்சேரி, கிராமிய பாடல்கள் , தெருக் கூத்து என பலவகை நிகழ்சிகள் நடந்தவண்ணம் இருந்து கொண்டே இருக்கும் ஆனால் காலப்போக்கில் முற்றிலும் அழிந்து விட்டது போல தெரிகிறது. அன்றைய பாடல்கள் பல வருடங்கள் தாண்டி இன்றும் மக்கள் மனதில் நிலைத்து நின்று இனிமை தரும், இப்போதைய பாடல்கள் 3 , 6 மாதங்களில் மக்கள் மனதை விட்டு நீங்கி விடுகிறது.தற்போது சில தொலைக்காட்சிகளில் குரல்வள போட்டிகள் நடத்தப்படுகிறார்கள் அதில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அக்கால கட்டத்தில் வெளிவந்த பாடல்களை படுவதை கேட்க்கும் பொது மனதிற்கு இதமாகவும் மென்மையாகவும் இருக்கிறது எங்களை ஆறுதல் படுத்தும் ஒரு நிகழ்ச்சியாகவும் இருக்கிறது.
இசைக்கருவி தயாரிப்பாளர்கள் : தபேலா, மிருதங்கம் என தயாரிக்கப்படும் இடங்களில் அந்த தயாரிப்பாளர்கள் கூறும்போது தற்போதெல்லாம் மிருதங்கமும் தபேலாவும் வாங்கவருபவர்கள் குறிப்பிட்ட சில சமூகத்தினர், பாரம்பரியமாக கோவில்களில் வாசிக்க வேண்டும் என்ற காரணத்துக்காகக் கற்றுக்கொண்டு கோவிலில் வாசிப்பதற்காகவும் , இசைக் கல்லூரி இசை பள்ளி இதற்குமட்டுமே உபயோகிக்க வாங்கிச் செல்கிறார்கள். ஆனால் முன்பெல்லாம் திரைப்பட இசைக் கச்சேரிக்கே அதிகம் தயாரிக்கப்பட்டு வந்தது , ஆனால் இப்போதெல்லாம் அந்த இசை கச்சேரியில் கீபோர்ட் டாப் போன்ற இசை வரும் கருவிகளை பயன் படுதிக்கொள்வதால் தபேலா, மிருதங்கம் போன்ற இசை கருவிகளின் தயாரிப்பு குறைந்து உள்ளது என்கின்றனர்.
நிறைவாக மக்கள் மனதில் எழும் சந்தேகங்களும், ஏக்கங்களும் என்ன என்றால்.
படிப்பறிவில்லாதவர்கள் இசைஞானம் கொண்டவராக இருந்தால் அவர்களுக்குள் இருக்கும் திறமையை எப்படி வெளி கொண்டுவரமுடியும் ? மிண்டும் மக்களை மயக்கும் பாடல்களை திரை இசையமைப்பாளர்கள் இசைக்கமாட்டார்களா. ? பழைய இசைக்கருவிகள் பொக்கிஷம் ஆக்கப்படாமல் இசைக்கருவியாகவே பயன்பாட்டில் கொண்டுசெல்ல மாட்டார்கள ?
இதைப்பற்றி  போர்க்குற்றம் திரைப்பட இசையமைப்பாளர் கார்த்திக் ஹர்ஷா கூரும்மோது  "மாற்றங்கள் என்பது நிகழ்ந்துக்கொண்டுதான் இருக்கும் அன்று பாகவதர் காலங்களில் ஒரு படத்தில் முழுவதுமாக பாடல்கள் மட்டுமே இருக்கும் வசனங்கள் அதிகம் இருக்காது அதன் பிறகு பாடல்களில் சில மாற்றம் வந்தது வெள்ளித்திரை வந்த காலம் என்பதால் படம் என்றால் , பாடல்கள் என்றால் இப்படிதான் இருக்கும் என்று அதை விருபினார்கள்.அதன் பிறகு ஒரு மாற்றம் MS விஸ்வநாதன் ராமமூர்த்தி, அது ஒரு வகையான இசைக்காலமாக இருந்தது, அதையும் மக்கள் விரும்பினார்கள் இளையராஜா  சார் வந்தது பெரும் மாற்றம் கொடுத்தார் இவர்கள் காலம் வரை இயற்க்கை இசை எழுப்பும் வாத்தியங்களை மட்டுமே பயன் படுத்தி வந்தார்கள்  அதன் பிறகு ரகுமான் இசையில் பல புதுமைகளை படைத்தார்கள் அதன் தொடர்ச்சியாகவே இன்றுவரை வந்த இசையமைப்பாளர்கள் அதனையே பின்பற்றி வருகின்றனர் . மேலும்  இசைக்களைங்கர்களுக்கு சம்பளம் அதிக அளவில் கொடுக்கவேண்டி இருப்பதாலும் கீபோர்ட் இசைக்கலைஞர்களை அதிக அளவில் பயன் படுத்திக்கொள்கிறார்கள் , இடைப்பட்ட காலங்களில் வந்த பாடல்களையே அதிகம் மக்கள் விரும்புகின்றார்கள் என்பதை மறுக்கமுடியாது . ஆனால் மக்களை திருப்திப்படுத்தும் ஒரு விஷயம் மற்றும் இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கப்படவேண்டும் என்பதற்காகவும்   சினிமா இசைத்துறையில் ஒரு பாடலுக்கு குறைந்தது இயற்க்கை இசை எழுப்பும் வாத்தியங்களை கட்டாயம் பயன்படுத்தி ஆகவேண்டும் என்ற உத்தரவும் இப்போது பிறப்பிக்கப்பட்டு உள்ளது ."
  
இசை என்பது வெறும் பொழுது போக்கு மட்டுமல்ல... இது ஒரு சிறந்த அருமருந்தாகும். மக்கள் மனதிற்கு மட்டுமல்லாமல் உடல்நலத்திற்கும் இசை ஆரோக்கியத்தை தரும். அப்படிப்பட்ட இசை வெறும் சத்தமாக இருக்கக் கூடாது. உயிர்ப்பைத் தீண்டும் ஒரு உணர்வுச் சித்தமாக இருக்க வேண்டும் என்பதாகும். கட்டுரையைப் பொறுத்தவரை எல்லோருக்கும் இருக்கக் கூடிய எண்ணங்களையும் ஏக்கங்களையும் இங்கு பிரதிபலித்து இருக்கிறேன்.



~மகேந்திரன்
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment