> சொல்லின் நாகரிகம் — “பிராமணர்” Vs “பார்ப்பனர்”
மொழி என்பது வெறும் வார்த்தைகளின் தொகுப்பல்ல; அது ஒரு சமூகத்தின் எண்ணங்கள், உணர்வுகள், நாகரிகம் மற்றும் பண்பாட்டின் பிரதிபலிப்பாகும். ஒரே சொல், வேறுபட்ட சூழல்களில் வேறுபட்ட உணர்வுகளைத் தூண்டக்கூடும். சில சொற்கள் மரியாதைக்குரியவையாக இருக்கலாம்; சில நேரங்களில் அதே சொல் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்து எள்ளலாக ஏற்கப்படும்.
"பிராமணர்" மற்றும் "பார்ப்பனர்" என்ற இரு சொற்களின் பயன்பாடு இதற்குச் சிறந்த உதாரணம்.
இந்த இரு சொற்களின் உண்மை உருவும், சமூக மனநிலையுடன் ஏற்படும் தாக்கங்களும், எது நாகரிகம் எனும் கேள்விக்கான நுட்பமான பதிலும் பற்றிய ஒரு சுருக்கமான சிந்தனையை இந்தக் கட்டுரைச் சொல்லுகிறது.
> சொல்லின் நாகரிகம் — சொல்லின் மரியாதையும் மனநிலையும்
மொழியில் ஒரு சொல் துல்லியமான பொருளைக் கொடுப்பது முக்கியம் தான். ஆனால் அதே சமயம் அந்தச் சொல்லின் பாவனை எப்படி இருக்கிறது என்பதும் நாகரிகத்தின் ஒரு அளவுகோல். "பிராமணர்" மற்றும் "பார்ப்பனர்" என்ற சொற்கள் இதற்குப் பதிலளிக்கின்றன.
பிராமணர் – மரியாதைக்குரிய மரபுச் சொல்
சமஸ்கிருதத்தின் “ப்ரஹ்மன்” என்பதிலிருந்து வந்த "பிராமணர்" என்பது வேதங்களில் தேர்ந்தவர்கள், யாக யஜ்ஞங்களில் ஈடுபடுவோர் என மரபாகப் போற்றப்பட்ட ஒரு சமூகத்தைக் குறிக்கும் சொல். தமிழ் வரலாற்றுச் சான்றுகளில், கல்வி உரைகளில் இது மரியாதைசொல்லாகவே பயன்படுத்தப்படுகிறது.
பார்ப்பனர் – நாட்டுப்புற வழக்குச் சொல்
“பார்ப்பனர்” என்பது பார்ப்பான் என்ற சொல்லின் பன்மை. இது தமிழகத்தில் பேசுமொழியில் வழக்கமாக இருந்தாலும், பல இடங்களில் நக்கலோடு, இழிவுடன் பயன்படுவதும் உண்டு. குறிப்பாக சமூகநீதியை பேசும் சூழலில், இது எள்ளல் கொண்ட வார்த்தையாகவும் தோன்றும்.
> தமிழைத் தமிழால் கொச்சையாக்கக் கூடாது
"பார்ப்பனர்" என்பது தமிழ்ச் சொல் என்றும் இல்லை என்றும் இரு வேறு கருத்துக்கள் நிலவுகிறது. பார்ப்பனர் என்ற வார்த்தை இலக்கியங்களில் கூட பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கு வரலாற்று அடிப்படையும் உண்டு. ஆனால், இன்று சிலர் அந்தச் சொல்லை இழிவாகப் பயன்படுத்தும் சூழல் நிலவி வருகிறது
> இதை விட வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், தமிழில் உள்ள சொற்களை நாமே கொச்சையாக்கும் நிலைக்கு நாம் வந்துவிட்டோம் என்பதே!
ஒரு மொழி அதன் சொற்கள் மூலமாகவே உயர்கிறது. அந்த சொற்கள் தான் அந்த மொழியின் நாகரிகத்தையும், நம்மைச் சமூகத்தின் முன் எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்துகிறோம் என்பதையும் தீர்மானிக்கின்றன. ஒரு மொழியில் உள்ள சொற்கள் மரியாதையுடன் பயன்படுத்தப்பட வேண்டும்; தவறான பாவனைகள் அந்த மொழியின் மதிப்பையும் குலைக்கும்.
வேண்டுமென்றால் தமிழ் சொல்லான அந்தணர்கள் என்ற வார்த்தையை கூட பயன்படுத்திக் கொள்ளலாமே.
> பிராமணர் என்பதும், பார்ப்பனர் என்பதும், சொற்கள் மட்டுமே. ஆனால் அவற்றைச் சொல்லும் வாயும், சொல்லப்படும் சூழலும் தான் உண்மையான நாகரிகத்தைக் குறிக்கின்றன. துல்லியத்துடன் மரியாதை கலந்த வார்த்தைப் பயன்பாடே நம் தமிழ் மரபிற்கும் சமூக ஒற்றுமைக்கும் வழிகாட்டும்.
~ ஈரநெஞ்சம் மகேந்திரன்