வாழ்வைப் போலவே நம் இறப்பும் மரியாதையாக இருக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புவார்கள்.
இறுதி மரியாதைக்கு பின்னும் ஒரு வாழ்வின் முடிவை மரியாதையாக முடிக்கும் தோழர்கள் தான் மயானத்தொழிலாளர்கள்.
மயானம் மட்டுமல்ல மரியாதையும் தேவை – மயானப் பணியாளர்களுக்கான குரல்............
ஈரநெஞ்சம் அறக்கட்டளை
இன்றைய சமூகத்தில் மாற்றத்திற்கான ஆரம்பம், மனங்களிலிருந்து உருவாகிறது. வார்த்தைகளும் அதன் பிரதிபலிப்பாக அமைந்துள்ளன. முன்னேற்றம் என்றால் தொழிலில் மட்டும் அல்ல; பொருளாதாரத்தில் மட்டுமல்ல. இறுதிநிலை பணியாளர்களாக இருந்தாலும் அவர்களையும் மனித நேயத்தோடு கண்ணோக்கி அவர்களும் மனிதர்கள் தான் என்று உணர்வதில் தான் மனித குலத்தின் உண்மையான வளர்ச்சி இருக்கிறது.
தற்போதும் பலர் மயானங்களில் பணியாற்றும் நபர்களை "வெட்டியான்" என்றே அழைக்கின்றனர். இந்தச் சொல்லின் பின்னணியில் பாழ்மையாகவே படும் ஒரு வரலாறு இருக்கலாம். ஆனால் இன்று இந்தச் சொல், அந்த தொழிலின் பெருமையை காட்டாமல், ஒரு தரப்பினரை ஒதுக்கி வைக்கும் வசைச்சொல்லாகவே
பரவலாக நடைமுறையில் உள்ளது. மயான தொழிலாளர்கள் எவ்வளவுதான் அறிமுகமானவர்களாக இருந்தாலும் அவர்களது பெயர் தெரிந்திருந்தாலும் கூட வெட்டியான் என்றே அழைக்கிறார்கள். குறைந்தபட்ச மரியாதையும் மனித நேயமும் இல்லாமல் தான் அவர்களை நடத்துகிறார்கள் என்று மயானத் தொழிலாளர்கள் பலரும் வேதனை தெரிவிக்கின்றனர்.
நாம் மற்ற சமூக பிரிவுகளை மரியாதையுடன் "துப்புரவுப் பணியாளர்", "மாற்றுத்திறனாளி", "திருநங்கை" என அழைக்க ஆரம்பித்திருக்கிறோம். பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை கூட "பாலியல் தொழிலாளர்கள்" என்று தான் கூறுகிறோம். அதேபோல் இடுகாட்டில் இறுதி அடக்கம் செய்வதன் மூலம் சமூகத் தூய்மை பணியில் தங்களது கடின உழைப்பைத் தரும் மயானப் பணியாளர்களும் அந்த மரியாதைக்கு தகுதியானவர்கள் தான்.
ஒரு உயிரின் பயணத்தின் கடைசி கட்டத்தைக் கையாண்டு, மரியாதையுடன் பூமிக்குள் புனிதமாக இணைத்திடும் பணியில் இவர்களின் பங்கு தீர்க்கமாயுள்ளது.
மரணம் தான் நிஜம். அந்த நிஜத்திற்குத் துணையாக இருப்பவர்கள், நம் வாழ்க்கையிலும் முக்கியமானவர்கள். இவர்களின் பணியை எத்தனை பேரால் செய்ய முடியுமென்று யோசித்தீர்களா? எத்தனை பேரால் அந்த மனஉறுதி, கட்டுப்பாடு, கருணை, பொறுமை கொண்டு இந்தப் பணியை செய்ய முடியும்?
எனவே தான் ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பில், நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம் –
"வெட்டியான்" எனும் பழமை வாய்ந்த ஆனால் இன்றைய சூழலில் தவறாக பயன்படுத்தப்படக் கூடிய சொல்லை நீக்கி "மயானப் பணியாளர்" அல்லது மயான உதவியாளர்கள் என்ற மரியாதைமிக்க சொல்லை நாம் அனைவரும் பயன்படுத்த வேண்டும்.
இந்தப் பெயர் மாற்றம் என்பது ஒரு தொடக்கம் மட்டும்தான். சமூக மாற்றத்தின் வித்து சிறிய விதையாக இருந்தாலும் நாளை பெரும் விருட்சமாக மலரும் என்பதில் ஐயமில்லை.
வார்த்தையை மாற்றினால்
மரியாதையும் மாறும்
மயானத் தொழிலாளர்களின்
வாழ்வும் மாறும்.
-ஈரநெஞ்சம் அறக்கட்டளை