Wednesday, February 05, 2014

அமைப்பு சாரா தொழிலாளர்களின் காப்பாளன் பரமசிவம்

அரசாங்கம் மக்களுக்காக பல நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதை மக்களிடையே கொண்டு செல்ல விளம்பரங்கள், பிரசாரம் , விழிப்புணர்வு கூட்டம் என பல வழிகளை தேடி செயல்படுத்துகிறது. என்ன முயற்சித்தாலும் அந்த திட்டங்கள் பற்றிய முழு தகவல்களும், திட்டங்களும் முழுமையாக எல்லா மக்களுக்கும் சென்றடைவதும் இல்லை தெரிவதும் இல்லை . படிக்காதவர்கள் மட்டுமின்றி படித்தவர்களுக்கும் அது குறித்த போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை. ஒரு சிலர் மட்டுமே அதை அறிந்து பயன் பெறுகிறார்கள்.

என்ன என்ன நல திட்டங்கள் அதை எப்படி பெறவேண்டும் அதற்க்கான வழிமுறை என்ன என்பதை அலுவலகங்களுக்கு மக்கள் நேரடியாக சென்றாலும் அங்கு உள்ள வேலை பளுவின் காரணமாக யாரும் தெளிவாக எடுத்து சொல்ல முன்வரமாட்டார்கள் , அதற்காக அரசு அலுவலகங்களின் வாசலில் எப்போதும் பலர் அமர்ந்து இருப்பார்கள் அவர்கள் விண்ணப்பப் படிவங்கள் தபால்தலைகள் விற்றுக்கொண்டும் இருப்பார்கள். அவர்களிடம் விண்ணப்பப்படிவம் பூர்த்தி செய்வதற்காக சென்றால் மட்டுமே 100 ரூபாய் முதல் 200 ரூபாய்வரை வசூலிப்பார்கள் . ஆனால் பொதுமக்களின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு அரசு ஏற்றும் நலவுதவிகளை மக்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில், என் மக்கள் அனைவரும் என்னுடன் பிறந்தவர்கள் என் தாய் மக்கள் என்று கருதி எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் நாளில் முழுநேரமும் மக்களின் நலதிட்டங்களை தேடி அலைந்து யார் யாருக்கு எந்த உதவி தேவை அது எப்படி பெறவேண்டும் என்று கண்டறிந்து அதை முழுமையாக தேவைப்படும் மக்களுக்கு வாங்கித்தருகிறார்
கோவை 47 வயாதான K.பரமசிவம் A.G.K கல்லூரி பேருந்து ஓட்டுனர் .

கோவை மாநகர மக்கள் தங்களுக்கு கிடைத்த ஒரு வரமாகவே திரு K. பரமசிவம் அவர்கள் எண்ணுகின்றனர். பொது வாழ்வு, சமூக சேவையில் ஈடுபடுபவர்கள் கூட, கிடைக்கும் கொஞ்ச நேரத்திலும் தங்கள் வருமானத்தை பெருக்கி கொள்வது எப்படி தங்கள் குடும்பத்தின் நிலையை உயர்த்துவது எப்படி என்றுதான் யோசிப்பார்கள். ஆனால் கே. பரமசிவம் அவர்கள் மக்களுக்கு உழைப்பதற்காகவே அதிகநேரம் எடுத்துக்கொள்கிறார் .

காலை எட்டு மணிக்கு இவர் கிளம்பி, 60 பேர் கொண்ட அந்த கல்லூரி வாகனத்தை எடுத்துக் கொண்டு ஆங்காங்கே இருக்கும் அனைத்து மாணவர்களையும் ஒன்றிணைத்து பத்திரமாக கல்லூரியில் சென்று விட்டு விட்டு வந்தால், இவருக்காக ஒரு கூட்டமே காத்திருக்கிறது. கைகளில் காகிதங்களும், விண்ணப்ப படிவங்களும், அடையாள அட்டைகளும் வைத்துக் கொண்டு படித்தவர்கள் படிக்காதவர்கள் என வேறுபாடின்றி அனைவரும் இவருக்காக காத்திருக்கிறார்கள்.




அவர்களுக்கு தேவையான அரசின் நலத் திட்டங்கள் பற்றி எடுத்துரைக்கிறார். பலருக்கு வங்கி கணக்கு துவக்க வேண்டுமானாலும் சரி, மக்களுக்கு தேவையான அனைத்து நலத் திட்டங்களுக்கும் சரி விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்து தருதல் முதல், முறையாக சந்திக்க வேண்டிய அரசு அலுவலரை பார்த்து அந்த திட்டத்தை பெறுவதற்கான அனைத்து உதவிகளையும் செய்து தருகிறார். நலத் திட்டங்கள் பெற தகுதி உடையவர்களுக்கு முழு உதவியும் பெற்று தருவது, நலவாரிய உறுப்பினர் நிலையை புதுப்பித்து தருவது முதல்க்கொண்டு அனைத்து உதவிகளையும் செய்து முடித்து தருகிறார்.

இது போல் 4 மணிவரை வங்கிகளுக்கு செல்வது, நலவாரிய அரசு அலவலகத்திற்கு செல்வது , மாநகராட்சி அலவலகத்திற்கு செல்வதுமாக களைப்படையாமல் முடித்துக் கொண்டு மீண்டும் மாலை கல்லூரி விட்டதும் மாணவர்களை அழைத்துக் கொண்டு அவரவர் இடங்களுக்கு சென்று விட்டு வருகிறார். பின்னர் உடனடியாக வீடு திரும்பி அடுத்த நாள் செய்ய வேண்டிய பணிகளுக்கான ஆவணங்கள், விண்ணப்பங்கள் தயார் செய்தல் போன்ற வேலைகளை கவனிக்கிறார்.

இப்படி பரபரப்பாக தொடர்ந்து 7 நாட்களும் மக்களுக்கு சேர வேண்டிய உதவிகளுக்காக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த இயந்திர மனிதரிடம் நேரடியாக "நலவாரியம் என்றால் என்ன? நலத் திட்ட உதவிகள் என்னென்ன? எதற்க்காக இவர்களுக்காக இப்படி உழைக்கிறீர்கள்?" என்று கேட்க்கும் பொழுது,

அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் என்பது தமிழகத்திலுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக்காக தமிழக் அரசால் செயல்படுத்தப்படும் நல வாரியங்கள் ஆகும். இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக சேருவோருக்கு ஓய்வூதியம், மகப்பேறு கால உதவி, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்டம், பணிக் காலத்தில் இறந்தால் நிவாரணத்தொகை, மற்றும் கண் கண்ணாடி அணிவதற்கான உதவித் தொகை உள்பட பல்வேறு நிவராணத் தொகை மற்றும் நல உதவிகள் கிடைக்கும்.

கல்விக்காக பத்தாவது மற்றும் பிளஸ் 1 பயிலும் வாரிய உறுப்பினரின் பெண் குழந்தைக்கு 1000 ரூபாய், பத்தாம் வகுப்பு தேர்ச்சிபெறும் உறுப்பினரின் மகன் மற்றும் மகளுக்கு தலா 1000, பிளஸ் 2 பயிலும் பெண் குழந்தை, பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மகன், மகள் மற்றும் பட்டப் படிப்பு பயிலும் உறுப்பினரின் குழந்தைகளுக்கு தலா 1500 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.தொழில்நுட்ப படிப்பு மற்றும் மேற்பட்ட படிப்புக்கு 2,000 ரூபாய், தொழில் நுட்ப மேற்படிப்புக்கு 4,000, திருமண உதவி ( ஆண்) 3,000, பெண் குழந்தைக்கு 5,000, மகப்பேறு உதவி 6,000, கண் கண்ணாடிக்கு 500 ரூபாய் வழங்கப் படுகிறது. உறுப்பினருக்கு ஓய்வூதியமாக 1,000 ரூபாய், குடும்ப ஓய்வூதியம் 400, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு செலவுக்கு 17 ஆயிரம் ரூபாய், விபத்து மரணத்திற்கு ஒரு லட்சத்து 2,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.

மேலும் அவர் கூறும்பொழுது, கந்தவேலு வயது 32  ஒரு ஆட்டோ டிரைவர் அவருக்கு திருமணம் ஆகவில்லை தாய், மற்றும் திருமணம் ஆனா தங்கை இருக்கிறார்கள் , கந்தவேலு அவர்களுக்கு   நலவாரியம் பற்றி எதுவும் தெரியாத நிலையில் நலவாரியம் பற்றிய பயன்களை எடுத்துக்  கூறி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் சேர காரணமாக இருந்தேன் , கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு  அவர் எதிர்பாராதவிதமாக ஒரு விபத்தில் காலமானார் அவரது குடும்பத்திற்கு இதுவரை விபத்து காப்பீடு கிடைக்கும்  என்பது தெரியாது கந்தவேலுவின் குடும்பத்திற்காக முயற்சி எடுத்து காப்பீடு தொகை ஒரு லட்சம் கிடைக்க வழிவகுதுள்ளேன்.


குடும்பத் ஒரே மகனை   இழந்த அந்த குடும்பத்திற்கு  அவரது இழப்பு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருந்தாலும்,  இந்த உதவித் தொகை நிச்சயம் சிறு ஆறுதலாக ஒரு நல்ல உதவியாக இருக்கும். இது போலத்தான் நிறைய மக்களுக்கு அரசின் பல நல உதவித் திட்டங்கள் பற்றி தெரிவதில்லை. அரசு மக்களுக்கு நல்ல திட்டங்கள் ஏற்படுத்தி கொடுத்தாலும் அது மக்களுக்கு தெரியாததால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல உதவிகள் கிடைப்பதில்லை. எனவே தான் இது போன்ற திட்டங்களை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவர்களுக்கு சேர வேண்டிய நியாயமான உதவிகளின் பலனை அவர்கள் பெறவும் நான் ஒரு கருவியாக இந்த உதவிகளை செய்து வருகிறேன். இதன் பயனும் மகிழ்வும் அவர்களுக்கு என்னால் கிடைக்கிறது என்பதே எனக்கு மன திருப்தியாக இருக்கிறது . கடந்த 10 வருடங்களாக நான் பாடு பட்டதில் என்னால் சுமார் 15000 பேர் வரை பயன் அடைந்திருக்கிறார்கள். இதுவரை சுமார் ஒரு கோடி ருபாய் வரை நல உதவிகள் பெற்று தந்திருக்கிறேன் என்றார்.


 இதுபோல மக்களுக்காக தேடித்தேடி  உதவி செய்யும் மனம் எத்தனைபேருக்கு வரும் , மக்களுக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பாடுபடும் இவர் ஆயிரத்தில் ஒருவன்.

~மகேந்திரன்
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment