Wednesday, October 22, 2025

அரசியல் பேசும் நாகரிகம்: வெறுப்பைத் தவிர்த்து நம்பிக்கையைப் பரப்புவோம்.

அரசியல் பேசும் நாகரிகம்: வெறுப்பைத் தவிர்த்து நம்பிக்கையைப் பரப்புவோம்.
தற்போதைய தகவல் தொழில்நுட்ப காலத்தில்
பொது இணைய தளங்களான வாட்சப் முகநூல் இன்ஸ்டாகிராம்
ஆகியவற்றில் சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த விஷயங்களை விவாதிப்பது சகஜம் ஆகிவிட்டது.

அவ்வாறு பேசும்போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம். அவரவர்க்கு தனியான சார்பு நிலைப்பாடு இருக்கலாம். ஒரு கருத்தை மற்றவர் சொல்லும் போது அதற்கு நீங்கள் உங்களுடைய எதிர்ப்பை அறத்தோடு தெரிவிக்கலாம் ஆரோக்கியமான விவாதத்தில் ஈடுபடலாம். ஆனால், 

இன்றைய சமூக ஊடகங்களில் அரசியல் பேச்சு என்றாலே பொது ஊடகங்களில் வாக்குவாதம், குற்றச்சாட்டு, நையாண்டி, இழிவுபடுத்தல், தரக்குறைவாக பேசுதல் சண்டையிடுதல் 
இதுதான் வழக்கமாகி விட்டது. ஒருவரை ஒருவர் குறை கூறி, அவமானப்படுத்தும் அளவுக்கு பேச்சு மாறி விடுகிறது. இது நாகரிகமான விஷயமாக இருக்குமா?

அரசியல் தொடர்பான விவாதங்கள் நாட்டை முன்னேற்றும் கருத்துக்களின் தளம். ஆனால், அதனை வெறுப்பின் மேடையாக்கி விட்டால் அது விவாதமாகாது, வாக்குவாதமாகி விடும். பேசும் ஒவ்வொரு சொலிலும் மரியாதையும் நாகரிகமும் இருக்க வேண்டும்.
நாம் பேசும் அரசியல் பேச்சு நம்பிக்கையை உருவாக்க வேண்டும், வெறுப்பை அல்ல.

அரசியல்வாதிகள் தங்கள் இடத்தில் அமைதியாக இருக்கிறார்கள். ஆனால், தங்கள் தொண்டர்களை ஊக்குவித்து, அவர்களை
தங்களுக்கென்று இணையத்தில் போராடும் வீரர்களாக மாற்றிக் கொள்கிறார்கள். நம்மை ஒருவருக்கு ஒருவர் எதிரியாக்கும் நிலை வருகிறது. 

இன்று எதிரணியில் இருக்கும் கட்சிகள் நாளை ஒன்றாகி விடலாம். அவர்களுக்காக நாம் இணையத்தில் சண்டை போட்டு உறவுகளை நட்புகளை இழந்துவிடுகிறோம். 

யோசித்துப் பாருங்கள். அவர்களது அபிமானிகளான நம்மை இணையதளப் போராளிகளாக தூண்டிவிட்டு பேச வைத்து பயன்படுத்திக் கொள்கிறார்கள் 

இதனால்தான் பலர் “அரசியல் என்பது ஒரு சாக்கடை” என்று நினைக்கிறார்கள். அரசியல் பேச்சு அருவருப்பாகிவிட்டது என்று பலரும் கூறுகிறார்கள். அதனாலேயே பல வாட்ஸ்அப் குழுக்களிலும், முகநூல் குழுக்களிலும் அரசியல் பற்றி பேசுவதையே மக்கள் விரும்புவதில்லை.

ஆனால் உண்மையில் அரசியல் என்றால் அது அழுக்கு அல்ல; அழுக்கை உருவாக்குவது நமது பேச்சின் நடைமுறைதான்.
“குறை சொல்வதற்கு முன் தீர்வு சொல்லப் பழகுங்கள். ஒரு மாற்றம் உங்களிடமிருந்து தொடங்கட்டும்.”

அரசியல் குறித்து பேசுவது தவறல்ல; ஆனால் பேசும் முறையில் மரியாதை இருக்க வேண்டும். ஒருவரின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், அவமதிக்கக் கூடாது. “நாம் இதைச் செய்ய முடியும்”, “எங்களால் நாடு முன்னேறும்” என்று நம்பிக்கையுடன் பேசுங்கள். அது தான் நாகரிகமான அரசியல் உரையாடல்.

சமீபத்திய ஆய்வுகள், சமூக ஊடக விவாதங்களில் 50%க்கும் மேற்பட்டவை வெறுப்பு அல்லது இழிவுபடுத்தும் தொனியைக் கொண்டிருப்பதாகக் காட்டுகின்றன. குறிப்பாக மாற்றுக்கருத்து கொண்டவர்களை தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டுவதும் தனிமனித தாக்குதல் நடத்துவதும் அதிகரித்துள்ளது. தான் சார்ந்துள்ள அணிக்கு ஆதரவாக பேசுவதாக நினைத்துக் கொண்டு உண்மைக்கு புறம்பான தகவல்களையும் அள்ளி விடுகிறார்கள்.

இந்தப் பழக்கம் மாறினால் தான் சமூக ஒற்றுமையும் அரசியல் விழிப்புணர்வும் உருவாகும்.
நாம் எவ்வாறு பேசுகிறோம் என்பதே எதிர்காலத்தை உருவாக்கும். அரசியல் பேசும் போது அடிப்படை நாகரிகம் மற்றும் அறத்தோடு பேசுங்கள்.

~ ஈரநெஞ்சம் மகேந்திரன்