Showing posts with label மரியாதை. Show all posts
Showing posts with label மரியாதை. Show all posts

Friday, October 17, 2025

ஒரு வருடம்…ஒரு நினைவு…ஒரு மரியாதை

*மறவாமல் நினைவுகூரும் மரபு* 
“ஒரு வருடம்…ஒரு நினைவு…ஒரு மரியாதை…”

நம்முடைய குடும்பத்தில் ஒரு நபர் இறந்துவிட்டால் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு பண்டிகைகள் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என்ற ஒரு மரபு ஆண்டாண்டு காலமாக நம்மிடையே இருக்கிறது. 

ஆனால் நாளடைவில் அந்த மரபை நாம் இழந்து கொண்டிருக்கிறோமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. 

வாழ்க்கை என்பது மகிழ்ச்சியும் துயரமும் கலந்த ஒரு நெடிய பயணம்.
அதில் ஒவ்வொருவரும் தங்களின் குடும்பத்திற்காக தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்து வாழ்ந்து மறைகின்றனர். 

ஒரு குடும்பத்தில் ஒருவர் உயிரிழந்தால், அந்த வீட்டில் ஒரு வருடம் எந்தப் பண்டிகையும், விழாவும், இனிப்பும், புத்தாடையும் இல்லாமல் அமைதியாக இருப்பது — என்பது வெறும் சம்பிரதாயம் மட்டுமல்ல. அது மறைந்தவர்களுக்கு நாம் செய்யும் ஒரு மரியாதை.
அந்த நினைவு வருடம் என்பது ஒரு துக்க ஆண்டாக அல்லாமல் அவருடைய வாழ்க்கைக்கு நாம் கொடுக்கும் ஒரு சிறிய அங்கீகாரம். மறைந்தவருக்கான பெருமையின் சின்னம்.

“இந்த வருடம் எங்களுக்குத் தீபாவளி/ கிறிஸ்மஸ் அல்லது ரம்ஜான் இல்லை…” என்று பலர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். அவரவர் குடும்ப வழக்கத்தின் படி ஒரு சிலர் கோவில்களுக்கு அல்லது மலைக் கோவில்களுக்கு செல்ல மாட்டார்கள். சுப நிகழ்ச்சிகளை தங்கள் குடும்பத்தில் நடத்தவோ கலந்து கொள்ளவோ மாட்டார்கள். தங்கள் குடும்பத்தில் வழக்கமாக செய்யும் எந்த கொண்டாட்டங்களையும் செய்யாமல் அந்த ஒரு வருடம் துக்கம் அனுஷ்டிப்பார்கள்.

இந்த வருஷம் எங்களுக்கு பண்டிகை இல்லை என்ற
அந்த ஒரு சொல்லில் துன்பம் இருக்கலாம், ஆனால் அதற்குள் நன்றியும் இருக்கிறது.
அந்த வீட்டில் ஒரு விளக்கு ஏற்றப்படாமல் இருக்கலாம், ஆனால் அவர்களை நினைக்கும் இதயங்களில் ஆயிரம் விளக்குகள் ஏற்றப்பட்டிருக்கும்.

நம்மில் ஒவ்வொருவருக்கும் தெரியும் — இறந்தவர்
அந்த வீட்டைக் கட்டியவராக, அந்தக் குடும்பத்தை நிலைநிறுத்தியவராக, அந்தப் பிள்ளைகளை வளர்த்தவராக சிலர் தங்கள் முழு வாழ்நாளையும் அர்ப்பணித்து விடுகிறார்கள்.
சிலர் 80 வயது, சிலர் 100 வயது கடந்தும் குடும்பத்தின் தூணாக நிற்பார்கள்.
அவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் இன்பங்களை ஒத்தி வைத்து, குடும்பத்திற்காக சிலுவைகளை சுமந்தவர்கள்.

அப்படிப்பட்டவர்களின் நினைவுகூர்ந்து ஒரு வருடம் பண்டிகைகளை ஒத்தி வைப்பது என்பது
ஒரு துக்க வெளிப்பாடு அல்ல — அது ஒரு தலைமுறை நன்றி செலுத்தும் வழி.

 ஆண்டாண்டு காலங்கள் அழுது புரண்டாலும் மாண்டவர் மீண்டு வரப்போவதில்லை என்பது பழமொழி. குடும்பத்தில் ஒருவர் மறைந்தாலும் யாரும் வருடக் கணக்கில் மூலையில் அமர்ந்து அழுது கொண்டே இருக்க ப்போவதுமில்லை. எவ்வளவு முக்கியமான அன்புக்குரிய நபரை இழந்திருந்தாலும் அடுத்தக் கட்டத்தை நோக்கி வாழ்வு நகர்ந்து தான் ஆக வேண்டும்.

அதே நேரம் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் மறைந்திருந்தாலும் பிராக்டிக்கலாக இருக்கிறோம். அவர்களது நினைவு எங்கள் மனதில் உள்ளது. நீங்கள் சொல்லும் சடங்கு சம்பிரதாயங்கள் போலித்தனமானவை என்று கூறிக்கொண்டு மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபடுவது ஒரு வகையில் இறந்தவருக்கு நாம் செய்யும் அவமரியாதை. 

பண்டிகைகள் ஆண்டுதோறும் வரும்,
ஆனால் ஒருவரின் அன்பும் அர்ப்பணிப்பும் ஒருமுறைதான் —
அவரை நினைத்துப் போற்றுவதற்காக ஒரு வருடம் ஒதுக்குவது (இறந்தவர் குடும்பத்தில் யாராக இருந்தாலும் எந்த வயதில் இறந்திருந்தாலும்)
அவரது வாழ்வின் பெருமையை வெளிப்படுத்தும் சிறந்த வழி.

அந்த நினைவு வருடத்தில் வழக்கமான கொண்டாட்டங்களை தவிர்த்து விட்டு இறந்தவர் படத்திற்கு மாலை அணிவித்து விளக்கேற்றி வழிபட்டு இந்த வருடம் நம் தாத்தா/ பாட்டி இறந்து விட்டார். அதனால் நமக்கு பண்டிகை இல்லை. இந்த குடும்பம் இந்த நிலைக்கு வருவதற்கு அவர் தான் காரணம். அவர் இந்த குடும்பத்திற்காக எவ்வளவோ விஷயங்களை/ தியாகங்களை செய்திருக்கிறார் என்று நினைவுகூறுவது என்பது நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் ஒரு அமைதியான பாடம். 

 *வாழ்க்கைச் சிந்தனை* 

“மனிதன் மறைந்தாலும், அவன் மனிதத்துவம் மறக்கப்படக்கூடாது.”

 “ஒரு வருடம் பண்டிகை தவிர்ப்பது துக்கமல்ல;
அது நன்றி செலுத்தும் ஒரு வடிவம்.”

~ மகேந்திரன்

Tuesday, August 20, 2024

நீர்த்துப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் உடல் உறுப்பு தானங்கள்

*உடல் உறுப்பு தானமும்? மரியாதையும்?* 
இந்தியாவிலேயே தமிழகம் தான் உடல் உறுப்பு தானத்தில் முதலிடத்தில் இருக்கிறது என்பது நம் அனைவருக்குமே தெரியும்.

 இதுவரை 1817 நபர்களின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு 10827 உடல் உறுப்பு தானங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

தமிழக மக்களுக்கு உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகமாகவே இருக்கிறது. 

எதிர்பாராத விதமாக விபத்துகளில் மூளை சாவு அடைந்தவர்கள் இனி பழைய நிலைக்கு திரும்பவோ உயிர் பிழைக்கவோ வாய்ப்பில்லை என மருத்துவர் குழு அறிவித்த பிறகு  குடும்பத்தினரின் சம்மதத்துடன் மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் தானமாக 
பெறப்படுகிறது.

உடலில் உயிர் இருக்கும் போதே குடும்பத்தினர் சம்மதத்துடன் இதயம், சிறுநீரகம், கல்லீரல்,  கணையம், கண் உள்ளிட்ட உடல் பாகங்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு அதன் பிறகு முறையாக பிரேத பரிசோதனை செய்து சம்பந்தப்பட்ட நபரின் உடலானது அவரது குடும்பத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.
ஒருவரது உடல் உறுப்புகள் 20 நபர்களை வாழ வைக்கும்.

 இத்தகைய நேர்வில் 
 விபத்தில் அடிபட்டவர் சுயநினைவே இல்லாமல் இருக்கிறார் என்பதால் அவரது சம்மதம் இங்கே கணக்கில் கொள்ளப்படுவது இல்லை.

மேலும் அவர் பிழைப்பதற்கோ பழைய நிலைக்கு வருவதற்கோ 0.1% வாய்ப்பு இருந்தால் கூட அதைப் பற்றி சிந்திக்கும் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை.

 ஒருவேளை அவர் கோமா நிலையில் இருந்தால் கூட செயற்கை சுவாசம் உள்ளிட்ட மருத்துவ உதவிகளோடு அவர் உயிரோடு இருந்தால் போதும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்ல முடியாத அடித்தட்டு மக்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

 இவ்வாறான சூழ்நிலைகளில் மூளைச் சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் அவர் உயிருடன் இருக்கும் போதே அகற்றப்படுவது ஒரு வகையில் கருணைக் கொலை தான்.

அவரைத்தான் காப்பாற்ற முடியவில்லை. அவரது உடல் உறுப்புகளாவது இன்னொருவருக்கு பயன்படட்டுமே என்ற நல்ல எண்ணத்தில் குடும்ப உறுப்பினர்கள் உடல் உறுப்பு தானத்திற்கு சம்மதிக்கின்றனர்.

உடல் உறுப்பு தானம் செய்ய முன் வருபவர்களில் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களே அதிக அளவில் இருக்கிறார்கள்.

 உடல் உறுப்பு தானம் செய்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் என்று குறிப்பிட்ட தொகை எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்றாலும் அவர்களின் குடும்பசூழலைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பில் சில லட்சங்கள் நிவாரணத் தொகையாக அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இறக்கும் போதும் எத்தனையோ பேரின் வாழ்வுக்கு வழிகாட்டிப் போகும் இந்த மரணங்களுக்கு வழங்கக்கூடிய  இழப்பீட்டுத் தொகையானது மிகவும் குறைவாகவே இருக்கிறது.

வெடி விபத்து, கலவரம் போன்ற அசம்பாவித சம்பவங்களின் போது 5 லட்சம் வரையிலும் இயற்கை சீற்றங்களினால் இறக்கும் போது ரூபாய் 4 லட்சம், இவ்வளவு ஏன் கள்ளச்சாராயம் மரணங்களின் போது கூட ரூபாய் 10 லட்சம் என்று நிதி உதவி வழங்கப்படும் போது உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ஒப்பீட்டளவில் மிகவும் குறைவே.

 தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகளை தேவைப்படும் நபர்களுக்கு பொருத்த மேற்கொள்ளப்படும் மருத்துவ அறுவை சிகிச்சை செலவுகளே
இந்த இழப்பீட்டுத் தொகையை விட பல மடங்கு அதிகம். 

இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கு வழங்கக்கூடிய தொகையை நிவாரணத் தொகை என்றோ உதவி என்றோ சொல்லக்கூடாது. 

ஒரு நாட்டின் ராணுவ வீரன் எப்படி தன்னையே நாட்டுக்காக அர்ப்பணிக்கிறானோஅது போன்ற ஒரு வீர மரணத்தை கௌரவப்படுத்தும் விதமாக இதைக் கௌரவ தொகை என்று அறிவித்து கௌரவமான ஒரு தொகையை கொடுத்து அவர்களின் குடும்பத்தின் நல்வாழ்வுக்கு அரசு உதவ வேண்டும்.

இதன் மூலம் இன்னும் அதிக அளவில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்ச்சி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

மூளைச் சாவு அடைந்ததால் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கும் நபர்களின் இறுதிச் சடங்கில் அரசு சார்பில் மரியாதை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. 
மூளைச் சாவடைந்த நபரின் குடும்பத்தினர் அந்தக் கடினமான சூழ்நிலையிலும் தங்களது நெருங்கிய உறவுகளின் உடல் உறுப்புகளை மற்றவர்களுக்கு தானமாகக்  கொடுக்க முன் வருபவர்களுக்கு அந்த முடிவை கெளரவப்படுத்தும் விதமாக அரசு மரியாதை செய்வது ஒரு நல்ல தொடக்கம்.

 ஆரம்பக் கட்டத்தில்  மாவட்ட ஆட்சியர்களே நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 

இந்த நடைமுறை நீர்த்துப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மாவட்ட ஆட்சியருக்கு பதிலாக அவருக்கு அடுத்தடுத்த படிநிலையில் இருக்கும் அலுவலர்களை அனுப்ப ஆரம்பித்தால் கொஞ்சம் கொஞ்சமாக இறந்தவருக்கு கிடைக்கக்கூடிய அரசு மரியாதை தொய்வடைந்து விடும். 

ஒரு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் அனைவருமே  நேரில் சென்று அஞ்சலி செலுத்துவதே உண்மையான அரசு மரியாதையாக இருக்கும்.

அந்த நபரின் உயிர் தியாகத்துக்கும் அந்த குடும்பத்தின் தியாகத்துக்கும் அப்போதுதான் உரிய மரியாதை கிடைக்கும்.

 முன்பெல்லாம் உடல் உறுப்பு தானம் குறித்த செய்திகள் பத்திரிகைகளில் முக்கியத்துவம் கொடுத்து தலைப்புச் செய்தியாக ஊடகங்களில் காணொளியாக வந்தது போய் இப்போதெல்லாம் சிறிய  பெட்டிச் செய்தியாக மாறி வருகிறது.

 தங்கள் குடும்பத்திற்கு அச்சாணியாக விளங்கிய முக்கிய குடும்ப உறுப்பினர்கள் அகால மரணம் அடைந்த போதும் சேவை உள்ளத்தோடு உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வரும் குடும்பத்திற்கு முறையான கௌரவம் வழங்கப்பட வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

~ஈரநெஞ்சம்

Thursday, November 10, 2022

உங்களுக்கு புண்ணியமா இருக்கட்டும் எங்களை அப்படி கூப்பிடாதீங்க

*உங்களுக்கு புண்ணியமா இருக்கட்டும் எங்களை அப்படி கூப்பிடாதீங்க*
~~~~~~~~~~~~~~~~~~~


"ஏன் டா மா நீ இன்னைக்கு ஸ்கூலுக்கு  போகலை ...?"
 "சார் இனிமே நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன் என்னை எல்லோரும் _*வெட்டியான் வீட்டு பிள்ளை*_ன்னு கிண்டல் பண்றாங்க நான் இனி போகமாட்டேங்க" . 

ஆமாங்க இது நான் மிகவும் மதிக்கும் மயானத்தில் பணிபுரியும் என் சகோதரி போன்ற வைரமணியின் பேத்தி தான் அந்த சிறுமி. பள்ளியில் இவங்க குடும்பத்தொழிலை சக மாணவர்கள்  ஏளனமாக பேசியது அந்த பிஞ்சு மனதில் அவ்வளவு காயத்தை உண்டாக்கி உள்ளது. 

_*விபரம் தெரியாத குழந்தைகள் மட்டும் இல்லைங்க விபரம் தெரிந்த படித்த மேதாவிகள் முதல் படிக்காதவர் வரை பலரும் இப்படித்தான் மரியாதை குறைவாக பிறர் மனதை புண் படுத்தி பேசுவதே நாகரிகமாக எண்ணி பெருமைபட்டுக்கொள்கிறார்கள்.*_

நீங்கள் யாரும் கவனித்து இருக்கீங்களா , ஏன் அதில் நீங்கள் கூட ஒருவராக இருந்திருக்கலாம் ,  மயானத்தில்  நாம் மதிக்கும் மாண்பான நம் குல வழக்கப்படி சடங்கு சம்பிரதாயங்கள் செய்கிறோம் ... ஒரு சடங்கு முடிந்ததும் அந்த  தொழிலாளியை  இறந்தவரின் உறவினர்கள்  அழைக்கும்  தோரணை இருக்கிறதே... மனித நேயம் உள்ளவர்கள் கண்டிப்பாக வருந்த கூடும்  . " எங்க டா அந்த வெட்டியானை வர சொல்லு .. எங்க டா போயிட்ட , என்ற உரத்த குரலில் கத்துவதும் , இல்லங்க சாமி இங்கே தானுங்க இருக்கேன் என்று  அந்த  மயான தொழிலாளி  தன் தோளில் இருந்த துண்டை தன் கையில் ஏந்தி கூனி நிற்பதும்  உனக்கு எவ்வளவு கூலி , ஐயா 3000 ங்க   என்று கூற ... இந்தா இவ்வளவு தான் இது போதும் என்று பேரம் பேசுவதற்கு கூட தகுதியற்றவர்களாக எண்ணி ஒன்றுக்கு பாதியாக கூலி கொடுத்து விரட்டிவிடும் நிகழ்வு நடந்து கொண்டு தான் இருக்கிறது.  அந்த கூலி கொடுப்பது கூட எப்படி என்று அனைவருக்கும் தெரியும். ஒரு வேட்டியை தரையில் விரித்து வைத்துக் கொண்டு அதில் அந்த பணத்தை தூக்கி போடுவார்கள் , அந்த மயான தொழிலாளி சற்று தள்ளி இருந்து வேட்டியில் இருக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு செல்வார். 

அது சரி வெட்டியானை வெட்டியான்னு கூப்பிடாம எப்படி கூப்பிடுறது ன்னு உங்களுக்கு தோணலாம்... அவரின் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டு பெயர் சொல்லி அழைக்கலாமே... அதனால் அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள் தெரியுமா..!  நீங்கள் அவர்கள் பார்த்த வேலைக்கு தான் கூலி தருகிறீர்கள் , பிச்சை கிடையாது அதை மனதில் வைத்துக் கொண்டு அவர்கள் கையில் பணத்தை கொடுங்கள்... அப்படி பெரியவர்கள் நடந்து கொள்வதைப் பார்த்து சிறியவர்களும் அவர்களை மதிக்க கற்றுக் கொள்வார்கள் ..


மனித உடல்களை எரிப்பதற்கும் , அடக்கம் செய்வதற்கும் மட்டும் நாம் அவர்களை பயன் படுத்திக் கொள்வது இல்லை. எங்காவது இறந்து கிடக்கும் விலங்குகளை அகற்றவும் (மாடு, ஆடு, பூனை, நாய்) சாலை விபத்தால் இறந்த உடல்களை அகற்றவும், இரயிலில் அடிபட்டு இறந்த விலங்குகள் மற்றும் மனித உடல்களை அகற்றவும்  பயன் படுத்திக் கொள்கிறோம் . இதற்கு அவர்களுக்கு அளிக்கப்படுவது 100 லிருந்து 150 ரூபாய் மற்றும் ஒரு குவாட்டர் பாட்டில் சரக்கு அவ்வளவு தான்.

அது மட்டுமின்றி பிணவறைகளில் பிரேத பரிசோதனையில் உதவி செய்யவும் பல நாட்களாகப் பல மாதங்களாக யாராலும் வாங்கப்படாத உடல்களை நல்லடக்கம் செய்ய இன்னும் சில நேரங்களில் இயற்கை சீற்றத்தால் இறந்த உடல்களை எல்லாம் அகற்றவும்  நீரில் மூழ்கி இறந்து போன அழுகி கிடக்கும் சடலம் எடுப்பதும் என  பயன் படுத்திக் கொள்கிறோம் .

ஒரு கேள்வி? ஏன் பல தலைமுறைகளாக தொடர்ந்து ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களே இந்த தொழிலை செய்து கொண்டு வரவேண்டும்? ஒரு மயான தொழிலாளியின் மகன் ஏன் ஒரு மருத்துவராகவோ, மாவட்ட நிர்வாகியாகவோ, ஒரு மந்திரியாகவோ, ஒரு ஆகக் கூடாது. முதலமைச்சராகவோ ஏன் ஆகவில்லை? ஏன் அவர்கள் குடும்பம் சொந்த வீடு, நல்ல உணவு, நல்ல உடை என்ற ஒரு வாழ்க்கையை வாழ இயலவில்லை? கல்வி பெற அவர்களை நாம் அழைக்கும் அந்த பெயர் முட்டுக்கட்டையா?

ஆம் வெட்டியான் என்ற அந்த ஒற்றை வார்த்தையில் தான் அவர்களை ஒதுக்கியும் , ஒடுக்கியும்  முன்னேற விடாமல் மயானத்திற்குள்ளேயே வைத்து இருக்கிறோம் .  இந்த தொழிலுக்கு அவ்வளவு சுலபமாக யாரும் வந்து விட முடியாது , அந்த வேலையை செய்திடவும் முடியாது. இவர்கள் சமுதாயத்தில்  முன்னேறிவிட்டால் என்ன என்ன விபரீதம் நடக்கும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று .


ஒன்று தெரியுமா தாழ்த்தப்பட்ட இனத்தவர்கள் தான் இந்த மயான தொழிலாளர்கள் , ஆனால் இந்த தொழில் செய்வதால் சக தாழ்த்தப்பட்ட இனத்தவர்கள் அதாவது இவர்களுடைய உறவினர்களே  இவர்களிடம் நெருங்குவது இல்லை... எவ்வளவு பெரிய  சாபக்கேடு இது. 

ஒரு குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டால் அவருக்கு கொள்ளி வைப்பதை அவ்வளவு முக்கியத்துவமாக பார்க்கிறோம். ஆனால் கொள்ளி வைத்து முடித்ததும் அனைத்து உறவினரும் அங்கிருந்து சென்று விட்ட பிறகு , இந்த மயான தொழிலாளர் குடும்பத்தில் உள்ள பெண்கள் குழந்தைகள் என யாவரும் பிணத்தை சரியாக பார்த்து பார்த்து எரிப்பது யாருக்கு தெரியும். 

தொடர்ந்து பிணங்களை எரிப்பதால் அவர்களில் பலரும் சுவாச சம்பந்தமான நோய்வாய்ப்படுகிறார்கள்.  25 பிணம் எரிக்கும் தொழிலாளர்களில் ஒருவர் கண்டிப்பாக நுரையீரல் பாதிப்புக்குள்ளாகின்றார். பல காரணங்களுக்காக இறந்து போன உடல்களையும் சில சிதைந்து போன எரிந்து போன உடல்களையும் தகனம் செய்யும் போது இவர்கள் மன ரீதியான பாதிப்புக்குள்ளாவது எத்தனை பேருக்கு தெரியும் .

பிணம் எரிக்கும் தொழில் செய்யும் ஊழியர்களுக்கான பணி நியமனம், மாதச்சம்பளம், மருத்துவப் பரிசோதனை முறைகள், தடுப்பு ஊசிகள், எரிப்பதற்கான தற்காப்பு சாதனங்கள் பெறுவது போன்ற எதற்கும் இவர்களுக்கு வழி தெரியாது.


அரசு தரப்பில் 

அரசு தரப்பில் இவர்களுக்கான நலத்திட்டங்கள் என்று பார்த்தால் மிகவும் விரல்விட்டு எண்ணும் அளவிற்கே உள்ளது. நடைமுறையில் இத்திட்டங்கள் உள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம், திரு.ஸ்டாலின் அவர்கள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த போது சென்னை மாநகராட்சியில் நிரந்தரப் பணியில் இல்லாமல் தற்காலிகப் பணியில் இருந்த 173 பிணம் எரிக்கும் தொழிலாளிகளுக்கு ‘மயான உதவியாளர்கள்’ என்று பணிநியமனக் கடிதம் வழங்கப்பட்டது. மாதச் சம்பளமாக ரூ.5,000 வழங்குமாறும் பணி நியமனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இம்மயான உதவியாளர்களுக்கு சென்னை மாநகராட்சியில் பணிநியமனம் அளித்தது போல கூடிய விரைவில் தமிழகம் முழுவதும் கிராமங்களில் இருக்கும் பிணம் எரிக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்த 173 தொழிலாளர்களின் தற்போதைய நிலை என்ன என்பதுக் குறித்த சரியான விவரமும் தற்போது இல்லை. இதைத் தொடர்ந்து, “மயான பணியாளர்கள்  சங்கம்" என்று ஒரு சங்கம் நிறுவப்பட்டு அதன் முதல் மாநில அளவிலான மாநாடு, 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மதுரையில் நடந்தது . இம்மாநாட்டில், பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. மாத ஊதியம், வெட்டியான் என்ற பெயரை நீக்குவது ,  மயான  தொழில் செய்யும் பெண்களுக்கான பிரசவ கால உதவித்தொகை, மருத்துவக் காப்பீடு, தடுப்பூசிகள் போடுவது, மருத்துவ பரிசோதனைகள், மாற்றுத் தொழில் வழங்குவது போன்றவை.

ஆனால், அதற்குப் பின் அந்த சங்கத்தைப் பற்றியோ கோரிக்கைகள் பற்றியோ தொடர்ந்து செய்திகள் வரவில்லை என்பதே உண்மை. இத்தொழிலாளர்கள் பலருக்கு இச்சங்கத்தைப் பற்றியே தெரியவில்லை. இந்த மாநாடு அப்போது  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலவாரிய அமைச்சராக இருந்த திருமதி.ஏ. தமிழரசி அவர்களின் முன்னிலையில் நடந்தது என்பது கூடுதல் தகவல்.

அரசாங்கத்தில் வேலை பார்க்கும்  தலைமை பதவியில் இருப்பவரில் இருந்து கடை நிலை ஊழியர் வரை அனைவரும் சம்பளம் சார்ந்த மற்றும் சம்பளம் சாராத பல உதவியைப் பெறும் நிலையில், (மயானங்களில்) தலைமுறை தலைமுறையாக பணிபுரியும் ஊழியர்களில் நிலைதான் என்ன?  முதலில் சக மனிதர்கள் இவர்களையும் மனிதர்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறோமா ? 
மயானங்களைப் பராமரிப்பது, மயானங்களை ஏற்படுத்துவது, அரசாங்கம் மற்றும் அரசாங்கங்களின் பணி என்றால் மயான பணியாளர்களை நியமிப்பது அவர்களுக்கான சலுகைகள் வழங்குவதும் அரசாங்கத்தின் பணி தானே.



தலைமுறை தலைமுறையாக இப்பணியைச் செய்யும் தொழிலாளிகளின் இன்றைய தலைமுறையினருக்காக கல்வி உதவி, மாற்றுத் தொழிலுக்கான உதவிகளையும் அரசாங்கம் மனதில் கொள்ள வேண்டும் . பிணம் எரிப்பதைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பவர்களின் மனநிலை பாதித்து குடிப்பழக்கத்திற்குப் பலியாகாமல் இருக்க மனநிலை நிபுணர்களைக் கொண்டு சிறப்பு கலந்தாய்வு கூட வழங்கலாம் என்பது  என்னுடைய   தாழ்மையான வேண்டுகோள்.

ஐந்தறிவு படைத்த யானைகளுக்குப் புத்துணர்வு அளிக்கப் புத்துணர்வு முகாம் நடத்தும் போது, இறந்து போன நமது உறவினரையும் நமது நண்பர்களையும் நமது உற்றார்களையும் சீராக தகனம் செய்யும் நம் மயான தொழிலாள நண்பர்களுக்கான அனைத்து அடிப்படை மற்றும் நிதி வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்துவது நம்மைப்போன்று ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கடமை அல்லவா..! எங்கேயோ உலகத்தின் மூலையில் யாருக்கோ நடக்கும் அநீதி கண்டு சமூக ஊடகங்களில் பொங்கி எழும் இளைஞர்கள் இது போன்ற நம் வாழ்வியலில் கட்டாயம் இருக்க வேண்டிய இவர்களுக்காகவும் கொஞ்சம் நேரம் ஒதுக்கலாமே... இளைஞர்கள் தம் வீட்டில் உள்ள சிறு பிள்ளைகளுக்கு இது போன்றவர்கள் மனதை புண்படுத்தி பேசக்கூடாது என அறிவுறுத்தலாம். இளைஞர்கள் நினைத்தால் கண்டிப்பாக நல்ல மாற்றம் உருவாகும்...

இப்படி எல்லாம் எழுதி விட்டு அந்த மயான தொழிலாளி வைரமணி அவர்களிடம் கொண்டு போய் படித்து காட்டினால் , அந்த வைரமணி என்ன சொன்னாங்க தெரியுமா. 

" இத்தனை ஆண்டு காலம் எந்த மனிதர்களும் எங்க முகம் பார்த்து பேசியது இல்லை . ஊருக்குள்ள என்ன நடக்குதுனே தெரியாது , வரவங்க போறவங்க எல்லாம் எங்களை வெட்டியான் வெட்டியான்னு தான் கூப்பிடறாங்க அதுவே இன்னும் மாத்திக்க தெரியாத இந்த மனுசங்க தானா எங்களுக்கு இவ்வளவு உதவி செய்ய போறாங்க . எங்களை எல்லாம் முன்னேறவே விட மாட்டாங்க சார்  நீங்க ஏனுங்க சார் வெட்டியா இப்படி எழுதிட்டு உங்க நேரத்தை கெடுத்துட்டு இருக்கீங்க ,

( கோவை சங்கனூர் பகுதியில் உள்ளது மையானத்தில் பணிபுரியும் பழனியம்மாள் கூறுவதை கேளுங்க )




முதலில் அந்த வெட்டியான்னு சொல்றதை நிப்பாட்ட சொல்லுங்க சார் . நாங்களும் எங்க குழந்தைகளும் வருங்கால தலைமுறைகளும் நல்லா இருப்போம். உங்களுக்கு புண்ணியமா போகட்டும் "

இனி வெட்டியான்னு கூப்பிடாதிங்க...

~ ஈரநெஞ்சம் மகேந்திரன்

Saturday, October 01, 2011

என்னுடைய முதல் மேடை ...


என்னுடைய முதல் மேடை ஸ்ரீ நேரு வித்யாலய NSS   மாணவர்களுக்காக சிறப்பு சொற்பொழிவு ஆற்ற எனது நண்பர் பழனியப்பன் பரிந்துரைக்க மறுக்க மனம் இல்லாமல் சென்றேன் .
அங்கு 70  மாணவர்கள் படைக்கு முன்னாள் நான் என்ன பேச போகிரோமோ என்ற சிறு தயக்கம் , பேச என்னை ஒரு மாணவி அழைக்க மைக் முன்னாள் நான், எனக்கு முன்னாள் மாணவர்கள் , தயக்கத்துடன் உரையை துவக்கினேன் ,நான் பேசுவதை மாணவர்கள் கவனிப்பதை நான் கவனித்தபடியே உரையை  தொடர்ந்தேன்  . நான் செய்த  சேவைகளை சொல்லிக்கொண்டு இருந்தேன்

15 வருடம் கழித்து வீடு சென்ற அசோகன

பழனிக்கு உறவு கிடைக்கவேண்டும்...

வீடு திரும்பிய சண்முகம் தாத்தா

என்ன செய்தேன்

மரண நேரத்தில் மகனை சந்தித்த அம்மா

மண்ணைவிட்டு மறைந்த மணியம்மா

நான்கு வருடத்திற்கு பிறகு பெற்றோருடன் இணைந்த நிர்மலா

மணிகண்டனின் மறுவாழ்வு

ஆதரவற்றவர்களின் ஆதரவு

எங்க போனாங்களோ பழனியம்மாள்

இதை  மாணவர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டேன் . அதனை தொடர்ந்து மாணவர்களிடம் முகத்தில் மாற்றம்  காணமுடிந்தது , தாங்களும் மனிதகுலத்தை காக்கும் இந்த சேவைக்கு வருகிறோம் என்ற மாற்றம் அதில் கண்டேன் ,
இறுதியில் மனித நேயம் தினம் ஒன்றை உருவாக்குவோம் உலகமெங்கிலும் கொண்டாடுவோம் என்ற உறுதியுடன் மாணவர்களிடம் இருந்து விடை



 
பெற்றேன் .விடை பெரும் வேளையில் எனக்கு இராமாயணம் புத்தகம் ஒன்றும் மாணவர்கள் பரிசளித்தனர் ...