Showing posts with label தானம். Show all posts
Showing posts with label தானம். Show all posts

Tuesday, August 20, 2024

நீர்த்துப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் உடல் உறுப்பு தானங்கள்

*உடல் உறுப்பு தானமும்? மரியாதையும்?* 
இந்தியாவிலேயே தமிழகம் தான் உடல் உறுப்பு தானத்தில் முதலிடத்தில் இருக்கிறது என்பது நம் அனைவருக்குமே தெரியும்.

 இதுவரை 1817 நபர்களின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு 10827 உடல் உறுப்பு தானங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

தமிழக மக்களுக்கு உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகமாகவே இருக்கிறது. 

எதிர்பாராத விதமாக விபத்துகளில் மூளை சாவு அடைந்தவர்கள் இனி பழைய நிலைக்கு திரும்பவோ உயிர் பிழைக்கவோ வாய்ப்பில்லை என மருத்துவர் குழு அறிவித்த பிறகு  குடும்பத்தினரின் சம்மதத்துடன் மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் தானமாக 
பெறப்படுகிறது.

உடலில் உயிர் இருக்கும் போதே குடும்பத்தினர் சம்மதத்துடன் இதயம், சிறுநீரகம், கல்லீரல்,  கணையம், கண் உள்ளிட்ட உடல் பாகங்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு அதன் பிறகு முறையாக பிரேத பரிசோதனை செய்து சம்பந்தப்பட்ட நபரின் உடலானது அவரது குடும்பத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.
ஒருவரது உடல் உறுப்புகள் 20 நபர்களை வாழ வைக்கும்.

 இத்தகைய நேர்வில் 
 விபத்தில் அடிபட்டவர் சுயநினைவே இல்லாமல் இருக்கிறார் என்பதால் அவரது சம்மதம் இங்கே கணக்கில் கொள்ளப்படுவது இல்லை.

மேலும் அவர் பிழைப்பதற்கோ பழைய நிலைக்கு வருவதற்கோ 0.1% வாய்ப்பு இருந்தால் கூட அதைப் பற்றி சிந்திக்கும் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை.

 ஒருவேளை அவர் கோமா நிலையில் இருந்தால் கூட செயற்கை சுவாசம் உள்ளிட்ட மருத்துவ உதவிகளோடு அவர் உயிரோடு இருந்தால் போதும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்ல முடியாத அடித்தட்டு மக்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

 இவ்வாறான சூழ்நிலைகளில் மூளைச் சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் அவர் உயிருடன் இருக்கும் போதே அகற்றப்படுவது ஒரு வகையில் கருணைக் கொலை தான்.

அவரைத்தான் காப்பாற்ற முடியவில்லை. அவரது உடல் உறுப்புகளாவது இன்னொருவருக்கு பயன்படட்டுமே என்ற நல்ல எண்ணத்தில் குடும்ப உறுப்பினர்கள் உடல் உறுப்பு தானத்திற்கு சம்மதிக்கின்றனர்.

உடல் உறுப்பு தானம் செய்ய முன் வருபவர்களில் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களே அதிக அளவில் இருக்கிறார்கள்.

 உடல் உறுப்பு தானம் செய்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் என்று குறிப்பிட்ட தொகை எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்றாலும் அவர்களின் குடும்பசூழலைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பில் சில லட்சங்கள் நிவாரணத் தொகையாக அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இறக்கும் போதும் எத்தனையோ பேரின் வாழ்வுக்கு வழிகாட்டிப் போகும் இந்த மரணங்களுக்கு வழங்கக்கூடிய  இழப்பீட்டுத் தொகையானது மிகவும் குறைவாகவே இருக்கிறது.

வெடி விபத்து, கலவரம் போன்ற அசம்பாவித சம்பவங்களின் போது 5 லட்சம் வரையிலும் இயற்கை சீற்றங்களினால் இறக்கும் போது ரூபாய் 4 லட்சம், இவ்வளவு ஏன் கள்ளச்சாராயம் மரணங்களின் போது கூட ரூபாய் 10 லட்சம் என்று நிதி உதவி வழங்கப்படும் போது உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ஒப்பீட்டளவில் மிகவும் குறைவே.

 தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகளை தேவைப்படும் நபர்களுக்கு பொருத்த மேற்கொள்ளப்படும் மருத்துவ அறுவை சிகிச்சை செலவுகளே
இந்த இழப்பீட்டுத் தொகையை விட பல மடங்கு அதிகம். 

இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கு வழங்கக்கூடிய தொகையை நிவாரணத் தொகை என்றோ உதவி என்றோ சொல்லக்கூடாது. 

ஒரு நாட்டின் ராணுவ வீரன் எப்படி தன்னையே நாட்டுக்காக அர்ப்பணிக்கிறானோஅது போன்ற ஒரு வீர மரணத்தை கௌரவப்படுத்தும் விதமாக இதைக் கௌரவ தொகை என்று அறிவித்து கௌரவமான ஒரு தொகையை கொடுத்து அவர்களின் குடும்பத்தின் நல்வாழ்வுக்கு அரசு உதவ வேண்டும்.

இதன் மூலம் இன்னும் அதிக அளவில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்ச்சி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

மூளைச் சாவு அடைந்ததால் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கும் நபர்களின் இறுதிச் சடங்கில் அரசு சார்பில் மரியாதை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. 
மூளைச் சாவடைந்த நபரின் குடும்பத்தினர் அந்தக் கடினமான சூழ்நிலையிலும் தங்களது நெருங்கிய உறவுகளின் உடல் உறுப்புகளை மற்றவர்களுக்கு தானமாகக்  கொடுக்க முன் வருபவர்களுக்கு அந்த முடிவை கெளரவப்படுத்தும் விதமாக அரசு மரியாதை செய்வது ஒரு நல்ல தொடக்கம்.

 ஆரம்பக் கட்டத்தில்  மாவட்ட ஆட்சியர்களே நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 

இந்த நடைமுறை நீர்த்துப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மாவட்ட ஆட்சியருக்கு பதிலாக அவருக்கு அடுத்தடுத்த படிநிலையில் இருக்கும் அலுவலர்களை அனுப்ப ஆரம்பித்தால் கொஞ்சம் கொஞ்சமாக இறந்தவருக்கு கிடைக்கக்கூடிய அரசு மரியாதை தொய்வடைந்து விடும். 

ஒரு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் அனைவருமே  நேரில் சென்று அஞ்சலி செலுத்துவதே உண்மையான அரசு மரியாதையாக இருக்கும்.

அந்த நபரின் உயிர் தியாகத்துக்கும் அந்த குடும்பத்தின் தியாகத்துக்கும் அப்போதுதான் உரிய மரியாதை கிடைக்கும்.

 முன்பெல்லாம் உடல் உறுப்பு தானம் குறித்த செய்திகள் பத்திரிகைகளில் முக்கியத்துவம் கொடுத்து தலைப்புச் செய்தியாக ஊடகங்களில் காணொளியாக வந்தது போய் இப்போதெல்லாம் சிறிய  பெட்டிச் செய்தியாக மாறி வருகிறது.

 தங்கள் குடும்பத்திற்கு அச்சாணியாக விளங்கிய முக்கிய குடும்ப உறுப்பினர்கள் அகால மரணம் அடைந்த போதும் சேவை உள்ளத்தோடு உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வரும் குடும்பத்திற்கு முறையான கௌரவம் வழங்கப்பட வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

~ஈரநெஞ்சம்

Sunday, February 18, 2024

உடல் தானம்


உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடியாக திகழ்வதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும், உடல் உறுப்பு தானம், உடல் தானம் பெறுவதில் தமிழக சுகாதாரத் துறையின் அக்கறை இன்னமும் போதாது என்கிறார்கள்.

தமிழகத்தில் 2010-க்குப் பிறகுதான் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் பரவியது. இதை ஏற்படுத்தியது கூட தனியார் மருத்துவமனைகள் தான். அப்படியிருந்தும் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகளுக்குத் தேவையான உறுப்புகள் கிடைக்காமல் இறப்பவர்களின் எண்ணிக்கையை இன்னமும் கட்டுப்படுத்த முடியவில்லை. இதேபோல்தான், மருத்துவ மாணவர்களின் உடற் கூறு ஆய்வுக்குத் தேவையான மனித உடல்கள் கிடைப்பதிலும் சிக்கல்கள் நீடிக்கின்றன. இதற்குக் காரணம் உடல் தானம் குறித்த விஷயங்களில் அரசு அக்கறை எடுக்காமல் இருப்பதே.

மேலை நாடுகளில், மூளைச் சாவு அடைந்த நிலையில் உடல் உறுப்புகளை தானம் செய்யவும், இறந்த பிறகு உடல் தானம் செய்யவும் அநேகம் பேர் முன் வருகின்றனர். ஆனால், தமிழகம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் இன்னமும் அந்த அளவுக்கு விழிப்புணர்வு ஏற்படவில்லை.


மூளைச் சாவு அடைந்தவரின் உடலில் இருந்து உடல் உறுப்புகளை தானம் கொடுப்பதற்கு அவர்களது உறவினர்கள் சம்மதிக்க வேண்டும். ஆனால், இறந்த பின் தனது உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக கொடுக்க விரும்புவோர், தாங்கள் உயிருடன் இருக்கும் போதே அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்துவைக்க வேண்டும். இதற்கான வழிமுறைகள் மிகவும் எளிமையானது.

இதற்கென அரசு மருத்துவக் கல்லூரி உடற் கூறு கழகத்தில் விண்ணப்பம் கொடுத்தால் போதும். நேரில் வரமுடியாமல் சிகிச்சையில் இருப்பவர்களிடம் மருத்துவமனையில் இருந்தபடியே ஒப்புதல் கையெழுத்துப் பெற்றும் விண்ணப்பத்தை வழங்க முடியும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, உடல் தானம் செய்பவர்களின் எண்ணிக்கை முன்பைவிட உயர்ந்திருந்தாலும், ஒப்புதல் அளித்தபடி உடல்களை ஒப்படைப்பதில் சிக்கல்கள் நீடிக்கின்றன. நூற்றுக்கு ஐந்து சதவீதம் பேரது உடல்கள் மட்டுமே ஒப்புதல் அளித்தபடி மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைக்கப்படுகின்றன. எஞ்சியவர்களின் உடல்களை அவர்களது உறவினர்கள், சம்பிரதாய சடங்குகளைச் சொல்லியும், சென்டிமென்டான விஷயங்களைப் பேசியும் எரிக்கவோ புதைக்கவோ செய்துவிடுகிறார்கள்.

இதுபோன்ற சமயங்களில், இறந்தவர் முன்பே ஒப்புதல் அளித்திருந்த விண்ணப்பத்தின்படி அவரது உடலை கேட்டு பெறுவதற்கான முயற்சிகளை மருத்துவக்கல்லூரி உடற் கூறு கழகம் எடுப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரை, தந்தால் ஏற்றுக் கொள்வோம்; தராவிட்டால் அலட்டிக் கொள்ளமாட்டோம் என்ற மன நிலையிலேயே இருக்கிறார் கள். இதற்குக் காரணம் உடல் தான திட்டத்தில் உள்ள குறைபாடுகளே.

இறந்தவரின் உடலை வாரிசுகள் ஒப்படைக்க வந்தாலும் அதை எடுத்துக் கொண்டு வருவதற்கு மருத்துவக் கல்லூரிகளில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை. சம்பந்தப்பட்டவர்களே ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொண்டுவந்தால் தான் உண்டு. உடல் தானம் பெறுவதற்கான விண்ணப்பங்களை மருத்துவக் கல்லூரிகளுக்கு பகுமானமாக வழங்கும் அரசு, அந்தத் திட்டத்தை செம்மையாக செயல்படுத்துவதற்கான நிதியை ஒதுக்குவதில்லை.

உடல் தானம் கொடுக்க விருப்பமாக இருந்தாலும் அதற்கான வழி முறைகள் தெரியாததால் மக்கள் சோர்ந்து விடுகிறார்கள். 15 ஆண்டு காலகட்டத்தில் சுமார் 600 பேர் மட்டுமே மருத்துக்கல்லூரிகளுக்கு உடல் தானம் வழங்கியிருக்கின்றனர். வடக்கில், மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு, உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது உடல்களை தானமாக தந்திருக்கிறார்கள்.

ஆனால், தமிழகத்தில் இப்படியான பிரபலங்கள் உடல் தானம் அளிப்பது மிகவும் அரிது. உடல் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் அதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதிலும் சுகாதாரத்துறையும் போதிய கவனம் செலுத்தவில்லை. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் உடல் தானம் கொடுப்பவர்கள் எண்ணிக்கை மிக குறைவே. உடல் உறுப்பு தானம் பெறுவதில் காட்டும் அக்கறையில் 10 சதவீதம்கூட உடல் தானம் பெறுவதில் காட்டப்படுவதில்லை.

மருத்துவக் கல்லூரிக்கு தானமாக பெறப்படும் உடல்கள் உரிய முறையில் பதப்படுத்தப்படும். இவை 15 ஆண்டுகள் வரை கெடாது. இந்த உடல்களைக் கொண்டு, மருத்துவம் படிக்கும் முதலாமாண்டு மாணவர்களுக்கு உடலின் பாகங்கள் குறித்து வகுப்பு நடத்தப்படும். பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்யும் முறைகள் குறித்துக் கற்றுக் கொடுக்கப்படும்.

அரசு மருத்துவக்கல்லூரிக்கு ஆண்டுக்கு சராசரியாக 12 உடல்கள் தேவைப்படும். அதைவிட  கூடுதலாக பெறப்படும் உடல்களை மற்ற மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுப்புகின்றனர். சென்னை, சேலம், கோவை, மதுரையில் உள்ள மருத்துவக் கல்லூரிகளைத் தவிர மற்ற கல்லூரிகளுக்கு உடல்கள் கிடைப்பது பற்றாக்குறையாகவே உள்ளது.

உடல் தானம் செய்ய விண்ணப்பிப்பது எப்படி?

உடல் தானம் செய்வதற்கான விண்ணப்பங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளின் உடற் கூறு கழகத்தில் இலவசமாக கிடைக்கும். உடல் தானம் செய்ய விரும்புவோர், தனது இறப்புக்குப் பிறகு தனது உடலை தானம் தர முழு சம்மதம் என படிவத்தைப் பூர்த்தி செய்துகொடுக்க வேண்டும். இதில் இரண்டு சாட்சிகளும் கையெழுத்திட வேண்டும். கூடவே, தனது அங்க அடையாளங்களைத் தருவதுடன் தனக்கு ஹெச்.ஐ.வி. உள்ளிட்ட எவ்வித தொற்றும் இல்லை எனவும் மனுதாரர் உறுதியளிக்க வேண்டும். மாற்றும்  தங்கள் அருகாமையில் உள்ள நோட்டரி  பப்ளிக்கில் (Notary Public) உறுதிமொழி பத்திரம் மூலம் பதிவு செய்ய வேண்டும்.


கொலை, தற்கொலை, விபத்து உள்ளிட்ட போலீஸ் வழக்குகள் இருக்கும் உடல்களை தானமாக தரமுடியாது. பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை நேரிலோ தபாலிலோ மருத்துவக்கல்லூரி உடற் கூறு கழக தலைவருக்கு அனுப்பலாம். இறந்தவரின் உறவினர்களே அவரது உடலைக் கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும். அப்போது, மருத்துவர் அளித்திருக்கும் இறப்புச் சான்றிதழ் அவசியம் இருக்க வேண்டும். தானம் தர முன்பே ஒப்புதல் வழங்காமல் இறந்துவிட்ட ஒருவரது உடலை வேறு யாரும் தானமாக தரமுடியாது.


~ மகேந்திரன்

Saturday, October 22, 2011

உங்கள் மூலமாகவும் கடவுள் நேரில் வரலாம்...

உயிருக்கு போராடும்
ஒருவருக்கு
இரத்தம் குடுப்பதன் மூலம்
ஒரு உயிர் காப்பாற்ற படுவது மட்டும் இல்லைங்க
அவங்க குடும்பம்,
குடும்பத்துடைய எதிர்காலம் எல்லாமும்
காப்பாற்றப்படுகிறது,
அப்படிப்பட்ட பெரும்
உதவி
உங்களால் ஒருவருக்கு கிடைத்தால் ,
கடவுளை சந்தித்த
வரம் கிடைத்தது போல இருக்காதா..?
நீங்களும்
இரத்ததானம் செய்பவர் என பதிவு செய்துகொள்ளுங்கள்...
உங்களது அலைபேசி மூலமாகவே...!

~மகி
-------------------------------------------------------------------------------------------------
நீங்கள் இரத்த தானம் செய்ய விரும்பினால் இரத்ததானம் செய்பவர் என பதிவு செய்ய உங்கள் மொபைலில் இருந்து கீழே உள்ள SMS அனுப்பவும்.

SMS BLOOD TO 9665500000
(உ_ம ) BLOOD 022 B+

உங்கள் பகுதியில் இருக்கும் இரத்ததானம் செய்பவரை தொடர்பு கொள்ள உங்கள் மொபைலில் இருந்து கீழே உள்ள SMS அனுப்பவும்.

SMS DONOR TO 9665500000
(உ_ம ) DONOR 022 B+

கடவுள் குடுத்த உயிர் போராடும் பொது உங்கள் மூலமாகவும் கடவுள் நேரில் வரலாம்...