Showing posts with label நன்றி. Show all posts
Showing posts with label நன்றி. Show all posts

Thursday, March 21, 2013

தன் செயலே தனக்கு உதவி நன்றி வைரமணி

தன் செயலே தனக்குதவி
ஆதரவற்றவர்கள் சாலையோரமாக உடல்நலம் இல்லாமல் சாலையில் இருந்தால் அவர்களை மருத்துவமனைக்கோ அல்லது காப்பகங்களிலோ சேர்த்துவருகிறோம் .
அப்படி சேர்க்கப்படும் நபர்கள் உடல்நலம் இல்லாமல் இறந்துவிட்டார்கள் என்றால் அவர்களை நல்லடக்கம் செய்யும் பணி இங்குள்ள ஒரு அமைப்பின் உதவியுடன்நாங்களே அடக்கம் செய்கிறோம் ,இந்த நாள்வரை அப்படித்தான் செய்துவந்தோம் .
இப்படி இருக்க கடந்த சிலநாட்களுக்கு முன்னாள் எங்களால் சாலையில் உடல்நலம் இல்லாமல் இருந்த ஒரு பெரியவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு ,சிகிச்சை பலனின்றி காலமானார் , அவரது பிரேத உடலை காவல்துறை உதவியுடன் நல்லடக்கம் செய்ய அந்த அமைப்பை அணுகும் போது எப்போதும் அடக்கம் செய்யும் இடத்தில வெட்டியான் இல்லை ஆகையால் நீங்கள் வேறு வழியை பார்த்துக்கொள்ளுங்கள் என்று கைவிரித்தார்கள் .
என்ன செய்வது என்று தெரியவில்லை , நாங்களாக மயானத்திற்கு பிரேத உடலை கொண்டு சென்று நல்லடக்கம் செய்ய வேண்டுமானால் , குழியை வெட்டுவதற்கே 2000 வரை கேட்கிறார்கள் , கையில் அந்த அளவிற்கு பணம் அப்போது இல்லை மயானம் செல்ல தயாராக பிரேத உடல் மருத்துவ மனை சவக்கிடங்கில் இருந்து வெளியே கொண்டு வந்தாயிற்று ,
தன் நல்ல செயலே தன்னை காக்கும் என்பதற்கேற்ப வைரமணி என்னும் ஒரு 30வயது பெண் வெட்டியானின் தொடர்பு சொக்கம்புதூர் மயானத்தில் கிடைத்தது , ஒரு பெண் மயானத்தில் தன்னந்தனியாக குழியை வெட்டி பிரேதங்கள் வந்தால் தனியாகவே குழிக்குள் இறக்குவதும் , இரவானாலும் பிரேதத்தை எரிப்பதும் தெரியவந்தது, அவரது அனுமதியோடு எனது நண்பன் பழனியப்பன் மூலமாக வைரமணியை, அவரது துணிச்சல் பற்றி பத்திரிக்கையின் மூலமாக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது ,
இந்த இக்கட்டான சூழலில் அந்த வைரமனியின் ஞாபகம் வந்தது நாங்கள் (பிணத்துடன் இருப்பதும் அடக்கம் செய்ய வழிதெரியாமல் இருப்பதும்) உடனடியாக அவரைத் தொடர்பு கொண்டு எங்களுடைய இக்கட்டான சூழ்நிலையை தெரிவித்தோம் . 
அதற்கு வைரமணி கவலையை விடுங்கள் நான் உங்களுக்கு உதவி செய்கிறேன் அந்த நபர் இறப்பிற்கான தகுந்த சான்றிதழை கொண்டுவாருங்கள் அதுபோதும் என்றார் , எங்கள் நெஞ்சில் பால்வார்த்த வைரமணிக்கு நன்றி சொல்லிவிட்டு உடனடியாக பிரேதத்தை ஆம்புலன்ஸ் மூலமாக சொக்கம்புதூர் மயானத்திற்கு கொண்டு சென்று அந்த முதியவரை வைரமணி வெட்டிவைத்த குழியில் நல்லடக்கம் செய்தோம் . அடக்கம் செய்ததும் பணத்தை நாளை கொடுத்தால் போதும் அதுவும் மிக குறைந்த அளவுமட்டுமே போதும் என்ற ஈர மனது கொண்ட வைரமணி அப்போது எங்கள் கண்ணிற்குகடவுளைப் போல தெரிந்தார் .
அந்த வைரமணிக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் இருகை கூப்பி வணங்கினோம் வெட்டியான் வைரமணிக்கு காலில் விழுந்து நன்றி சொல்லி இருந்தாலும் அது மிகை ஆகாது .
எனது வேண்டுகோளுக்கு இணங்க வெட்டியான் வைரமணியை பற்றி நாளிதழில் கட்டுரை எழுதிய எனது நண்பர் திரு . பழனியப்பனுக்கும் .
பிணத்தை கையில் வைத்துக்கொண்டு எங்கு , எப்படி அடக்கம் செய்வது என்று தெரியாமல் விழித்திருக்கும் வேளையில்உதவிய வைரமணிக்கும் காலம் முழுவதும் நன்றி செலுத்தக் கடமை பட்டுள்ளோம். இவர்கள் செய்த உதவிக்கு ஈடுஇணை எதுவும் இல்லை.
~மகேந்திரன்








Friday, February 15, 2013

அனைவருக்கும் மனமார்ந்த வணக்கம்...

03/02/12 காலை தினமலர் வாரப்பத்திரிக்கையில் வந்த செய்தியை தொடர்ந்து அலைபேசியில் வாழ்த்துக்கள் குவியத்தொடங்கியது. யார் யாரோ வாழ்த்தினார்கள். என்னவெல்லாமோ சொல்லி வாழ்த்தினார்கள். நூறாண்டுகள் இல்லை இருநூறாண்டுகள் வாழவேண்டுமென்று வாழ்த்துகிறார்கள். கடவுள் என்றார்கள். மனிதாபிமானத்தின் மறு உருவம் என்றார்கள். இரக்கத்தின் இன்னொரு பெயர் என்றார்கள். எல்லா வாழ்த்துக்களும் என் செவிகளை தீண்டின. மனம் மட்டும் தவித்தது. இது ஒருவர் மட்டும் செய்யும் செயலோ சாதனையோ இல்லையே.... ஒவ்வொருவரும் தங்கள் கடமையை உணர்ந்து தங்கள் பிள்ளைகளை தாங்கள் அரவணைத்தால், தங்கள் பெற்றோரை தாங்கள் அரவணைத்தால் இது போன்ற செயல்களுக்கு இடமே இல்லையே. ஆதரவற்றவர்கள் என்பதே இல்லாமல் இருக்குமே.

இதை தொடர்ந்து சில செயல்கள் மனதுக்கு சற்று இதமளித்தது. அந்த வாரப்பத்திரிக்கையை பார்த்த சில இளைஞர்கள் இனி தாங்களும் இது போல் செயல் பட போவதாக தெரிவித்தனர். ஈரநெஞ்சம் போல் ஒரு அமைப்பை உருவாக்கி தாங்களும் தங்களால் இயன்ற வரையில் தங்கள் கடமையை செய்யப்போவதாக தெரிவித்தனர்.
மேலும் பல்வேறு பள்ளிகளில் இந்த கட்டுரையின் சாராம்சம் குழந்தைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன் பின் குழந்தைகளும் அனைவரும் தாங்கள் தங்கள் பெற்றோரை கை விட்டு விடாமல் காலம் முழுதும் அரவணைத்து காப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டனர்.

கடந்த ஐந்து நாட்களாக வீதியில் விடப்பட்ட தாயை இந்த கட்டுரையை படித்துவிட்டு மீண்டும் தங்களது தாயை அழைத்துக்கொண்டு சென்றார்கள் என்பதை கேட்க்கும் போது தினமலரின் கட்டுரையின் வெற்றியை உணர்ந்தேன்.

எனக்கு அழைத்த அநேகம் பேர் 70 வயதை கடந்த தாத்தா பாட்டி, அந்த அனைவருக்கும் மரண பயத்தை காட்டிலும் தனிமை என்ற பயமே கொல்கின்றதை முதியவர்களின் கண்ணீரால் உணரமுடிந்தது.

என்னை வாழ்த்தியவர்களில் ஒருவர் மட்டும் சொன்னது மனதில் பதிந்தது. மனித நேயம் என்பதே மறைய வேண்டும், உங்கள் பாரம் குறைய வேண்டும் என்றார் அவர். ஆமாம் அனைரும் தங்கள் குழந்தைகளையும், தங்கள் பெற்றோர்களையும் பாசமுடன் பராமரித்து வந்தால் தங்கள் கடமையை சரியாக செய்தால் ஆதரவற்றவர்கள் என்பவர்களே இருக்க மாட்டார்கள். பிறகு எதற்கு மனித நேயம் தேவைப்படும்.? அப்படி ஒரு நிலைமை வரவேண்டும். அதுவே என் செயல்களுக்கு கிடைக்கும் வெகுமதியாக நான் கருதுகிறேன்.

நன்றி தினமலர்ருக்கு
நன்றி மனம் மாற்றிய மனிதர்களுக்கு
நன்றி என்னை பெற்ற அம்மா அப்பா அவர்களுக்கு
நன்றி என் நண்பர்களுக்கு
நன்றி ஈரநெஞ்சம் உறுப்பினர்களுக்கும்
நன்றி ஈரநெஞ்சம் கொண்ட அனைவருக்கும்
வணங்குகிறேன்...

~மகேந்திரன்