Showing posts with label அக்கா. Show all posts
Showing posts with label அக்கா. Show all posts

Saturday, August 16, 2025

தாயும் தந்தையும் ஆனவர்கள்

*_தாயும் தந்தையும்_* *_ஆனவர்கள்_* 
“தாய்க்குப் பின் தாரம், தந்தைக்குப் பின் தந்தையின் இடத்தை இட்டு நிரப்ப யாருமில்லை” என்று சொன்னாலும், சில பிள்ளைகள் தாயுமானவர்களாகவும், தந்தைமானவர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

சிறு வயதில் பெற்றோரை இழந்தோ அல்லது பொறுப்பற்ற பெற்றோரால் கைவிடப்பட்டோ வளர்ந்த பிள்ளைகள் அல்லது மிகவும் வறுமையான குடும்ப சூழ்நிலையில் இருப்பவர்கள் அவர்களுடைய உடன் பிறந்தவர்களை காப்பாற்ற தாய் தந்தை பாசத்துடன் நிற்பதுண்டு. குறிப்பாக, பெண் குழந்தைகளுக்கு அக்கா தாயாகவும், ஆண் குழந்தைகளுக்கு அண்ணன் தந்தையாகவும் ஆகிவிடுகிறார்கள்.

இளம் வயதிலேயே அக்காவிற்கு திருமணம் செய்து வைக்கத் தம்பிகள் தங்கள் கனவுகளைத் தியாகம் செய்கின்றனர். பலர் தங்கள் சொந்த திருமணத்தை கூட தள்ளிப் போட்டு, குடும்ப பாரத்தை சுமக்கின்றனர். அதேபோல் தனது சகோதரனுக்கோ சகோதரிக்கோ பிறந்த பிள்ளைகளை தன் பிள்ளைகளாகவே வளர்க்கும் அக்காக்கள் பல குடும்பங்களில் உண்டு. 


நோய்வாய்ப்பட்ட பெற்றோரை கவனித்துக் கொள்வதற்காக தங்களுடைய வாழ்வின் சுக துக்கங்களை கூட பாராமல் தங்கள் வாழ்வின் சிறந்த ஆண்டுகளை தியாகம் செய்து, கண்ணும் கருத்துமாக பெற்றோரைப் பார்த்துக் கொள்ளும் பல பிள்ளைகள் உள்ளனர். பல இடங்களில் பெற்றோர் வாங்கிய கடனை அடைப்பதும் பிள்ளைகளின் தலையில் விழுகிறது. உடன் பிறந்தவர்களின் படிப்பு திருமணம் வேலை அவர்களுடைய நல்வாழ்வு இதற்காக கடன்பட்டு அந்தக் கடனை தன் வாழ்நாள் முழுக்க அடைத்துக் கொண்டிருப்பவர்கள் எத்தனையோ பேர்.

வெளிநாடு சென்று வாழ்வில் உயர வேண்டும் படிப்பு வேலை காதல் திருமணம் என்ற பல கனவுகளையும் கைவிட்டு, குடும்பத்தின் சுமையை சுமந்து நிற்கும் பிள்ளைகள் ஏராளம். சிலர் தங்கள் விருப்பங்களை முழுவதும் ஒதுக்கி வைத்து, தம்பி தங்கை வாழ்க்கை செழிக்க வேண்டும் என்பதற்காக அயராது உழைக்கின்றனர். இன்னும் ஒரு படி மேலே போய் குடும்பத்திற்காக உடன் பிறந்தவர்களுக்காக திருமணமே செய்து கொள்ளாமல் தன்னுடைய அத்தனை உழைப்பையும் குடும்பத்துக்கே அர்ப்பணித்தவர்கள் பலரை நம் வாழ்க்கையில் சந்தித்திருப்போம்.

ஆனால் இந்த தியாகத்தின் மறுபக்கம், அவர்கள் உள்ளத்தில் மழையாய் கொட்டும் ஆதங்கத்தை யாரும் காண முடியாது. அதை அவர்கள் வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் தங்கள் மனதின் ஆசைகளை அடக்கிக் கொள்ளும் வேதனை, சமூகத்தில் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. ஒருநாள் அவர்கள் வாழ்வு சிதைந்த பின்னரே, அவர்களது உளவியல் துன்பம் வெளிப்படும்.

இவ்வாறு, தாயும் தந்தையும் ஆன பிள்ளைகள், நம் சமூகத்தில் மறைந்திருக்கும் அன்றாட வீரர்கள். வெளிச்சத்துக்கு வராத கதாநாயகர்கள்.


இன்றைய காலகட்டத்திலும் பெற்றோர் இடத்தை பிள்ளைகள் நிரப்பும் சூழல் குறையவில்லை. அவர்களின் உழைப்பும், அர்ப்பணிப்பும் தான் பல குடும்பங்களை கரை சேர்த்திருக்கிறது.
இவர்களின் தியாகத்தை புரிந்து கொண்டு, நாமும் அவர்களை ஆதரிக்க வேண்டும். அப்படி யாராவது உங்கள் குடும்பத்திலோ அக்கம்பக்கத்திலோ இருந்தால் அவர்களைப் போற்றாவிட்டாலும் கூட அவர்களை காயப்படுத்தாமல் அன்போடும் அரவணைப்போடும் கவனித்துக் கொள்வோம்.

~ மகேந்திரன் 

Friday, January 12, 2018

இறைவனது படைப்பில் சிறு துரும்பும் கூட அர்த்தமற்றதாக இருப்பது இல்லை , ஆனால் அதை உணர்ந்து கொள்ளத்தான் பலருக்கு ஞானம் இல்லை.

இறைவனது படைப்பில் சிறு துரும்பும் கூட அர்த்தமற்றதாக இருப்பது இல்லை , ஆனால் அதை உணர்ந்து கொள்ளத்தான் பலருக்கு ஞானம் இல்லை.
~~~~~~~~~~~~~~~~~~~

அமுதா வயது 52 . இரண்டு சகோதரர் சகோதரிகள் இருவர் இவருக்கு. குடும்பத்தில் இரண்டாமவர் இவர். ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கூட இவர் பிறந்த நாள் முதல் இறந்த நாள் வரையில் வாழ்வில் அனுபவிக்காத துன்பமே இல்லை.





பிறந்து சிறிது காலத்திலேயே ஒரு விபத்தில் தலை நரம்பில் அடிபட்டதால் வாழ் நாள் முழுவதும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர். அந்த காலத்தில் போதிய மருத்துவ வசதி இல்லாததால் இந்த வியாதிக்கு முழு மருத்துவம் கிடைக்கவில்லை. இந்த வலிப்பு நோயின் காரணமாக பள்ளி படிப்பும் துவக்கத்திலேயே நிறுத்த வேண்டியதாயிற்று.

பள்ளி படிப்பு இல்லை என்றாலும் வீட்டில் இருந்து தனது உடன் பிறந்தவர்களுக்கு தேவையான அனைத்து பணிவிடைகளும் செய்து கொடுப்பார். சொந்த தாய்மாமனுக்கு மணம் முடித்து அவர்கள் வாழ்விற்காக பெரும் பொருளுதவியும் அமுதாவின் பெற்றோர்கள் செய்து கொடுத்தனர்..

ஆனால் மூன்று வருடத்திலேயே அவர் திருமண வாழ்வு முடிவுக்கு வந்தது. அதற்குள் ஒரு அழகான பெண் குழந்தையும் பெற்றெடுத்து , அதை எமனுக்கு தாரைவார்த்துக் கொடுத்துவிட்டார். தன் கணவர் வேறு ஒரு பெண்ணை மணமுடித்துக் கொண்டதால் மன அழுத்தம் காரணமாக மனநோய் ஏற்பட்டு தன்னை யார் என்றே தெரியாத நிலைக்கு ஆளானார். .








அதன் பின் அமுதாவின் பெற்றோர்கள் தொடர்ந்து செல்லாத மருத்துவமனை இல்லை , வேண்டாத தெய்வங்கள் இல்லை. அமுதாவின் நலனில் எந்த முன்னேற்றமும் இல்லை.

வாழ்ந்த நாளில் எந்த ஒரு நல்லது கெட்டதிற்கும் சென்றது இல்லை. அக்கம் பக்கம் கூட சென்றது இல்லை. சென்றது எல்லாம் மருத்துவமனை மருத்துவமனை மட்டுமே. 2015 இல் மனநலம் பெரிதும் பாதிக்கப்பட்டது அதுவரை இவரது நிலையை ஓரளவிற்கு கட்டுப்பாட்டில் வைத்திருந்த மருத்துவர்களும் முற்றிலும் கைவிட்டு விட்டனர்.

எத்தனையோ விஞ்ஞானம் வளர்ந்த இந்த உலகில் இவருக்கு வைத்தியம் பார்க்க தமிழ் நாட்டில் எந்த மருத்துவமும் கிடைக்க வில்லை. வீதியில் விட வேண்டிய கட்டத்திற்கு தள்ளப்பட்டார். அதன் பிறகு தனது குடும்பத்தை பிரிந்து பெங்களூரில் உள்ள ஒரு மருத்துவமனையிலும் காப்பகத்திலும் மூன்று வருடம் இருந்தார்.

அமுதாவை சந்திப்பவர்கள் எல்லோரும் பாவப்பட்ட பிறவி , வாழ்வில் எந்த ஒரு சுகத்தையும் அனுபவிப்பதற்கு இல்லை. எப்போது இறைவன் அழைத்து செல்ல போகிறான் , யார் யாருக்கோ முடிவு வருகிறது ஒரு புரயோஜனமும் இல்லாத இந்த அமுதாவிற்கு எப்போது முடிவு வரும் என்றே புலம்பிக் கொண்டு இருந்தனர்.


இவர்களது பார்வைக்கு அமுதா ஒரு வேண்டாத பொருளாகத்தான் இருந்தார்.

ஆனால் அமுதாவின் மற்றொரு பக்கம் அவர்களுக்கு தெரியாது .

அமுதாவின் நிலையைத் தான் மேம்படுத்த முடியவில்லை ஆனால் அமுதாவை பின்னணியாக கொண்டு அவரை போல மற்றொருவர் இந்த உலகில் பாதிக்க கூடாது என்று அமுதாவின் உடன் பிறந்தவர்களும் அவர்களது நண்பர்களும் சேர்ந்து ஈரநெஞ்சம் என்ற அறக்கட்டளை உருவாக்கினர்.

அமுதாவின் வாழ்வு சுகமாக இல்லை என்றாலும் . அவரது பின்னணியில் உருவான இந்த ஈரநெஞ்சம் அறக்கட்டளை மூலமாக அமுதாவை போன்றவர்கள் ஆயிரக்கணக்கில் மறுவாழ்வு பெற்று வாழ்கின்றனர்.
மனநிலை பாதிக்கப்பட்ட எத்தனையோ பேர் , தன்னிலை மறந்து குடும்பத்தை இழந்தவர்கள் குணமாகி குடும்பத்துடன் இணைந்து உள்ளார்கள். சாலையில் ஆதரவற்று உயிர் நீத்தவர்களை அவர்களுக்கு உறவாக நின்று நல்லடக்கம் செய்வதும். ஆதரவற்ற குழந்தைகள் பாதுகாப்பு, கால்கள் இழந்தவர்களுக்கு செயற்கை கால் வழங்குவது , மற்றும் ஈரநெஞ்சம் காப்பகத்தில் ஆதரவற்றவர்கள் 150 பேருக்கும் மேல் ஆதரிக்கப்பட்டு வருகிறார்கள் . இந்த செயல்கள் அனைத்திற்கும் பின்னணி இந்த அமுதா என்ற தேவதை தான்.

இவ்வளவு பெருமைக்கும் உரிய இந்த தேவதை, கடந்த 3/1/18 அன்று தான் மண்ணுக்கு வந்த இறை பணியை முடித்துக் கொண்டு மீண்டும் இறைவடிவம் பெற்றுக் கொண்டது.

கடவுள் சில நேரம் தேவதைகளை மண்ணிற்கு ஏதோ சில காரணத்திற்காக அனுப்பி வைப்பார் . அவர்கள் மண்ணுலகில் பொழுது போக்கிற்காக வந்து மனிதகுல நன்மைக்காக வாழ்ந்து போவார்கள். அவர்கள் இருக்கும் காலத்தில் பெரும் கூட்டத்திற்கு தலைவராகவோ, அல்லது தான் சொல்லும் அனைத்தையும் மக்கள் வேதவாக்காக எடுத்துக் கொள்ளும் போலி சாமியார்களாகவோ இருக்க மாட்டார்கள் . நாம் அடிக்கடி கேட்டு இருக்கின்றோம் சித்தர்கள் வாழ்வு பற்றி . பெரும் துன்பம் அனுபவிப்பார்கள் ஆனால் அது எல்லாம் அவர்களது பொழுது போக்காகவே இருக்கும் என்று .

இறைவன் படைப்பில் சிறு துரும்பும் கூட பயனற்றதாக இருப்பது இல்லை..!!!

~மகேந்திரன்