Friday, July 10, 2026

வேர்கள் அழிவதில்லை அத்தியாயம் 1


வேர்கள் அழிவதில்லை

பழனிசாமி ஒரு சகாப்தம்

*அத்தியாயம் – 1* 

 *_மண்ணின் அழைப்பு_* 

"மண்ணுக்கும் நினைவுகள் உண்டு...
மனிதர்கள் மறந்தாலும், மண் ஒருபோதும் மறப்பதில்லை."

திண்டுக்கல் மாவட்டம்...

குஜிலியம்பாறை வட்டம்...

ரெட்டியப்பட்டி...

வரைபடத்தில் தேடினால் ஒரு சிறிய கிராமம்.

ஆனால் அந்த மண்ணின் அடியில் புதைந்துக் கிடந்த வரலாறு, ஒரு குடும்பத்தின் வாழ்வை மீண்டும் உயிர்ப்பிக்கப் போகிறது என்பதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை.

பல ஆண்டுகளாக அந்த இடத்தை உறவினர்கள் சிலர் பாதுகாத்து வந்தனர்.

அது வெறும் காலி நிலமல்ல.

ஒரு காலத்தில் ஒரு குடும்பம் வாழ்ந்த இடம்.

முன்னோர்களின் நினைவுகள் உறங்கிக் கிடந்த புனித மண்.

ஆண்டுதோறும் அந்த இடத்தில் வழிபாடும் நடைபெற்றது.

அப்படி ஒரு நாள்...
வழிபாட்டிற்காக சிறிய குழி தோண்டிக் கொண்டிருந்தபோது, மண்வாசனையோடு சில பழமையான பொருட்கள் வெளிவந்தன.

ஒரு காவடியில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள்...

திருநீறு வைக்கப்பட்டிருந்த சிறிய குவளை...

சலங்கை மணிகள்...

அவற்றைக் கையில் எடுத்துப் பார்த்த பெரியவர்கள் அமைதியாக நின்றனர்.

அவை சாதாரணப் பொருட்கள் அல்ல.

ஒரு குடும்பத்தின் மறைந்து போன அடையாளங்கள்.

ஒரு தலைமுறையின் சாட்சிகள்.

அப்போது அங்கிருந்த வயதானவர் ஒருவர் மெதுவாகச் சொன்னார்:

«"இது சுப்பன் செட்டியார் வாழ்ந்த இடம்...
அவருடைய குடும்பத்தின் அடையாளங்கள் இவை..."»

அந்தச் செய்தி உடனே ஒரு மனிதரைத் தேடிச் சென்றது.

அவர் பெயர்...

பழனிசாமி.

பல தசாப்தங்களுக்கு முன்பு இந்த மண்ணை விட்டுச் சென்றவர்.

ஆனால் அந்த மண் மட்டும் அவரை மறக்கவில்லை.

செய்தி கிடைத்ததும் அவர் ரெட்டியப்பட்டிக்கு வந்தார்.

அந்த மண்ணில் நின்றபோது, அவரது கண்கள் சுற்றிலும் நோக்கின.

அவருக்குத் தெரியாத முகங்கள்.

ஆனால்...

அவரை நன்கு நினைவில் வைத்திருந்த மண்.

அருகில் வாழ்ந்த முதியவர்கள் அவரைப் பார்த்து கூறினார்கள்:

"இதுதான் உன் தந்தை வாழ்ந்த இடம். உன் முன்னோர்கள் நடந்த மண்.
"இதுதான் நீ பிறந்த மண் "

அந்த ஒரு வாக்கியம்...

பல ஆண்டுகளாக உள்ளத்தின் ஆழத்தில் உறங்கிக் கிடந்த ஒரு சிறுவனை எழுப்பியது.

காலம் அவனை எங்கெங்கோ அழைத்துச் சென்றிருந்தது.

வாழ்க்கை அவனுக்கு எண்ணற்ற சோதனைகளைக் கொடுத்திருந்தது.

ஆனால் அந்த மண்ணில் நின்ற அந்த நொடியில்...

அவர் ஒரு முதியவர் அல்ல.

தன் வேர்களைத் தேடி வந்த ஒரு மகன்.

அவன் கையில் இருந்தது எந்தச் சொத்துப் பத்திரமும் அல்ல.

மண்ணே கொடுத்த சாட்சி.

முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களே அவனுடைய உரிமைக்கான அடையாளங்களாக நின்றன.

அந்த ஊர் மக்களின் சாட்சியும், உறவினர்களின் நேர்மையும், மண்ணுக்குள் கிடைத்த அந்த அடையாளங்களும் இணைந்தபோது, அந்த இடம் அவரது குடும்பத்திற்கு மீண்டும் கிடைக்கும் வழி உருவானது.

அன்று பழனிசாமி ஒரு நிலத்தைப் பெறவில்லை.

தன் தந்தையின் நினைவையும், தன் முன்னோர்களின் வேர்களையும் மீண்டும் பெற்றார்.

அந்த நினைவு தான் பின்னாளில் ஒரு வீடாக மாறியது.

அதே நினைவு தான் முன்னோர்களின் நினைவாக எழுந்த முருகன் ஆலயமாக மலர்ந்தது.

ஒரு நாள்...

அதே மண்ணில்...

ஒரு தந்தை தெய்வமாக வணங்கப்படும் நாளும் வரும் என்பதை...

அன்று அந்த மண் கூட அறிந்திருக்காது.

ஆனால்...

வரலாறு ஏற்கனவே தனது முதல் வரியை எழுதத் தொடங்கியிருந்தது...............
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment