Showing posts with label மனைவி. Show all posts
Showing posts with label மனைவி. Show all posts

Thursday, June 15, 2023

ஆயிரம் தாஜ்மஹாலுக்கு சமம்

பிரேக் அப்புக்கு ஒரு பார்ட்டி... விவாகரத்துக்கும் கூட போட்டோ ஷுட் என்று இருக்கும் இந்தக் காலத்திலும்... தம்பதிகள் ஒருவரை ஒருவர் கொலை செய்யும் அளவிற்கு மனதில் குரோதம் வளர்த்துக் கொண்டிருக்கும் இந்த கலியுகத்திலும் அத்திப்பூத்தார் போல் ஆங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்க்கைத் துணையை உயிராய் நேசிக்கும் ஒரு சிலரை காண முடிவது ஆறுதலான விஷயம் தான்...


கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுப்பிரமணியம் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்த அவரது மனைவி சரோஜினியின் சமாதியில் தினம் தோறும் காலை மாலை இருவேளையும் விளக்கேற்றி, ஊதுபத்தி சூடம் கொளுத்தி வணங்குவதை பார்த்து ஆச்சரியப்பட்டு அவரிடம் பேச்சு கொடுத்தோம்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு அவரது மனைவி இறந்த பிறகு மகனுடன் வசித்து வரும் இவர் மனைவி மீது கொண்ட காதலால் மட்டும் இதை செய்யவில்லை என்றும் ..., 
உயிருடன் இருக்கும் போது மனைவி தன் மீது உயிராய் இருந்தார் என்றும் தனக்கு ஏதாவது ஒன்று என்றால் துடித்துவிடுவார் என்றும் கூறினார். தனக்கு ஹார்ட் அட்டாக் வந்தபோது மனைவி தன்னை மிகவும் அக்கறையுடன் கவனமாக பார்த்துக் கொண்டதாகவும் கூறினார்.
தன் மனைவி சரோஜினி தன் மீது வைத்திருந்த காதல், பாசம், அக்கறை ஆகியவற்றுக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக நாள்தோறும் தவறாமல் தன் மனைவியின் சமாதியை விளக்கேற்றி வணங்குவதாக தெரிவித்தார். தினமும் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டாலும் கூட கண்டிப்பாக வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை இங்கு வருவதாகவும் கூறினார்.

இன்னமும் கூட தன் மனைவி தன்னுடனேயே இருப்பதாக உணர்ந்து வாழ்வதாக வார்த்தையிலே அம்புட்டு காதலை வைத்து நெகிழ்ந்து போகிறார் சுப்ரமணி...

வெறுமனே காரையும் சுண்ணாம்பும் பூசிய இந்த சமாதி ஆயிரம் தாஜ்மஹால்களுக்கு சமம் இல்லைங்களா..!!!

~ ஈரநெஞ்சம் மகேந்திரன்