Showing posts with label மனிதர்கள். Show all posts
Showing posts with label மனிதர்கள். Show all posts

Sunday, November 24, 2013

பிணவறை உழைப்பாளிகள்




"இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்" ~ குறள் 1035

"தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார், தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார்.

இந்த குறளுக்கு ஏற்ப தொழில் செய்து வாழ்ந்து வரும் மனிதர்கள் பலர். கைத்தொழில் செய்பவர், சிறு தொழில் முனைவோர், சொந்த தொழில் நடத்துவோர் என்று ஏராளமானோர் , எல்லாம் நாம் நினைத்ததுபோல அமைவது இல்லை , தமக்கு வாய்த்த விதிப்படி தொழிலை அமைத்துக்கொண்டு செய்யும் தொழிலை தெய்வமாக வணங்கி வாழ்ந்து வருகிறார்கள். ஒருவர் செய்யும் வேலையை பொறுத்தும் அதில் வரும் வருவாயைப் பொறுத்துமே இந்த சமுதாயம் அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கிறது. அழகான உடைகள் அணிந்து கொண்டு, காரில் மிடுக்காய் வேலைக்கு செல்பருக்கு ஒரு விதமான மரியாதை என்றால், சாலை ஓரம் இருக்கும் குப்பைகளை அகற்றும் துப்புரவு தொழிலாளிக்கு அந்த தொழிலுக்கு ஏற்ற மரியாதை தான் கிடைக்கிறது.

" பிணவறை பணியாளர்கள் " இவர்களைப் பற்றி நாம் நினைத்துக்கூட பார்த்திருக்க வாய்ப்பில்லை .

நமக்கென தருணம் வரும் வரை இப்படி சற்றும் நம் கவனத்திற்கு வராதவர்கள் தான் இந்த பிணவறையில் வேலை செய்யும் பணியாளர்கள். தமது உறவினர் இறந்தாலே அந்த உடலை பார்ப்பதற்கு பலருக்கு பயம், இறப்பு செய்தி கேட்டாலோ அல்லது இறந்த வீட்டுக்கு சென்றாலோ அங்கு இறந்தவர்களின் உடலை தொடவோ அல்லது பார்ப்பதற்க்கோ கூட சிலர் அச்சப்படும் நிலையும் இருக்கிறது. இப்படி இருக்க சடலங்களை குவித்து வைத்திருக்கும் கிடங்கு என்றால் எப்படி இருக்கும், அந்த கிடங்கில் சடலங்களை கையாளும் உழைப்பாளி மனிதர்களை பற்றியதுதான் இந்த கட்டுரை.

அந்த உழைப்பாளிகள் அப்படி என்ன தான் செய்கிறார்கள்.

பிணவறை வேலை செய்பவர்கள் என்று சொல்லும்போதே பலருக்கு பயம் இருக்கும். உயிருக்கு உயிராய் பழகிய நண்பன் ஆனாலும் என்ன ? பத்து மாதம் கருவில் சுமந்த தாயாயினும் என்ன ?உயிருடன் இருக்கும் வரை கட்டித்தழுவிய உறவுகள் கூட இறந்த பிறகு அவர்களது சடலங்களை தொட முன் வருவது இல்லை , இந்த உழைப்பாளிகள் அவற்றைக் கையாள்கிறார்கள். தற்கொலை செய்து கொண்ட உடல், முழுவதும் எரிந்து
போன உடல், நோயால் அவதிப்பட்டு உயிரிழந்த உடல், இறந்து பல மாதங்களான உடல், அடையாளம் தெரியாத உடல் என அனைத்து சடலங்களையும் வெட்டுதல், தேவை இல்லாத பாகங்களை அகற்றுதல், விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழந்து சிதைந்து வரும் உடலுக்கு உருவம் கொடுத்தல் போன்ற வேலைகளை இவர்கள் செய்கிறார்கள். ஒருவர் இறந்து பல மாதங்கள் ஆகி அழுகிய உடலானாலும் அந்த உடலை பிரேத பரிசோதனை செய்யும் போது இவர்களே வரவேண்டும். மருத்துவர்கள் பார்வை சோதனை மட்டுமே நடத்துவார்கள் . அது முடித்த பிறகு மீண்டும் அந்த உடலை கோரமாக இல்லாமல் நல்ல முறையில் சீர்படுத்தி உறவினர்கள் கையில் ஒப்படைக்கிறார்கள்.

பொதுவாக சடலங்களை குளிரூட்டப்பட்ட அறை அல்லது குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் வைத்து பராமரிப்பார்கள் . தற்போது ஏற்படும் மின் தட்டுப்பாட்டால் , சடலங்கள் விரைவில் அழுகி புழுக்கள் வர ஆரம்பித்து விடுகின்றன. அவற்றை சுத்தப்படுத்துதல் மிகவும் கடினம் அவற்றை
கையாளுவதில் கொஞ்சமும் அருவருப்பு பயம் இல்லாமல் அவர்கள் கையாள்வதை பார்க்கும்போது அவர்களுக்குள் இருக்கும் சகிப்புத் தன்மை நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

தங்கள் கைகளுக்கு கவசம் அணியும் இவர்களைல் சிலர் சுவாசக் கவசம் அணிவதில்லை. இந்த வாடை பழகிப் போனதே அதற்குக் காரணம் . நாற்றத்தை சமாளிக்க மது அருந்த காரணம் தேடும் துப்புரவு தொழிலாளிகள் மத்தியில் இப்படி பிணங்களை தூய்மைபடுத்தும் சிலர் மதுவை தொடாதவர்கள் என்பது ஆச்சரியமாகவே உள்ளது.

பொதுவாக எட்டாம் வகுப்பு வரை தான் இவர்கள் படித்திருக்கிறார்கள். வேலைக்கு சேரும் போது இவர்கள் மருத்துவ வளாகங்களை சுத்தபடுத்தும் துப்புரவு பணியாளர்களாகவே சேர்க்கப்படுகின்றனர். பின்னர் சடலங்களை கையாள்வது , அப்புறப்படுத்துவது போன்றவையும் மருத்துவ துறையில் துப்புரவு பணிகளில் ஒன்றே என்பதை புரிந்து கொண்டு அதைச் செய்வதில் அவர்கள் தயக்கம் காட்டவில்லை. காரணம் வருமானத்திற்கு வேறுவழி இல்லை என்கிறார்கள் அதுவும் இல்லாமல் இந்த பணியிலும் ஒரு ஆத்மார்த்தத்தைக் காண்கிறார்கள். புதிய தொழிலாளர்களுக்கு ஆரம்பத்தில் இந்த வேலை கொஞ்சம் பயமாக இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல அதுவே பழகி கொள்கிறார்கள். தினமும் சடலங்களுடன் இருப்பதால் பேய் பிசாசு, மரணம், பற்றிய பயம் இவர்களுக்கு அறவே இல்லை.

துப்புரவுத் பணியாளர்கள் என்று வெளியே சொல்லிகொண்டாலும் மருத்துவமனையில் இப்படி சடலங்களை கையாளும் வேலையை தாங்கள் செய்வதாக ஒரு நாளும் வெளியில் சொல்லுவதில்லை. தங்களின் மனைவி மற்றும் குழந்தைகளிடம் கூட இவர்கள் தாங்கள் செய்யும் வேலையை பற்றி சொன்னதில்லை. ஏனென்றால் சடலங்களை சடலங்களை கையாளுகிறார்கள் என்று தெரிந்தால் மனைவி மக்கள் பக்கத்தில் வரக் கூட யோசிப்பார்கள் என்ற காரணமே. அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், நண்பர்கள் கூட இவர்கள் செய்யும் தொழில் பற்றி தெரிந்தால் உடனே பேசுவதை நிறுத்தி விடுவார்கள் என்ற அச்சத்தால் இவர்கள் தங்களை பிணவறை பணியாளராக சொல்லிக்கொள்வது இல்லை . அப்படி இவர்களைப் பற்றி தெரிந்த சிலர்கள் சடலங்களுடன் பழகும் ஒரு கொடுரமான மனிதனாகவே இவர்களை சித்தரிக்கிறார்கள் . இவ்வளவு சகிப்புத்தன்மையுடன் வேலை செய்யும் இவர்களை எப்படி பாராட்டுவது என்று நாம் வியந்து பாராட்டினாலும் இவர்களுக்கு இந்த சூழ்நிலை ஏற்பட்டிருப்பது கொஞ்சம் வருத்தமாகவே இருக்கிறது.

தற்கொலை செய்துகொண்டவர்கள் , குழந்தைகள், விபத்தில் உயிர் இழந்த சடலங்களை இவற்றைப் பார்க்கும் போது மனம் வருத்தப்படும் இவர்கள் வயதானவர்களின் சடலங்கள் வந்தால் அவர்களுக்காக வேண்டிக்கொள்கிறார்கள் . ஆதரவற்றோர் அடையாளம் தெரியாத சடலங்கள் காவல்துறை விசாரணை முடியும் வரை கிடங்கிலேயே மாதக்கணக்கில் இருக்கும் அப்படிப்பட்ட சடலங்களை தினமும் பார்த்து "உனக்கென்று முழு விடுதலை எப்போது வரும் என்ற ஏக்கமும் வேண்டுதலும் இருக்கிறது இவர்களுக்கு" அப்படிப்பட்ட சடலங்களைக் கையாளும்போது இவர்கள் மிகுந்த ஆத்ம திருப்தி அடைகிறார்கள். வாங்கும் சம்பளம் குறைவாக இருந்தாலும் இவர்கள் யாரிடமும் வற்புறுத்திப்
பணம் கேட்பதில்லை. விருப்பப்பட்டுக் கொடுப்பதை வாங்கிக்கொள்கிறார்கள். ஆதரவற்ற சடலங்கள் வரும்போதும் அதை நல்லடக்கம் செய்யும் சமூக அமைப்புகளுடன் இணைந்து அந்த உடலின் ஆத்மாக்களை மகிழ்ச்சியடையச் செய்கிறார்கள். சடலங்களுடனும் ரத்தங்களுடனும் வாழ்ந்து பழகியதால் இவர்கள் அந்த சடலங்கள் இருக்கும் இடத்தில் தான் உணவும் உண்கிறார்கள் . தொற்றுநோய் பரவும் அபாயம் இல்லையா என்ற சந்தேகத்தைத் தீர்க்க அவர்கள் கூறும்போது, இறந்த உடலை அன்றே கையாள்வதுதான் ஆபத்து , ஒருவர் இறந்து குறைந்தது மூன்று நாட்களுக்குள் அந்த உடலில் இருக்கும் தோற்று நோய்க் கிருமிகளும் இறந்து விடும் புதிய கிருமிகள் தோன்ற மேலும் சிலநாள் ஆகும் அதற்குள் அந்த உடலை கையாண்டுவிடலாம் என்கிறார்கள்.

உழைப்பே தெய்வமாக வணங்கி இந்த பணியை மேற்கொள்ளும் இவர்கள் சடலத்தை கையாள்வதற்கு முன் இறந்தவரின் கால்களை
தொட்டுக் கும்பிட்ட பின்னரே வேலையை செய்யத் தொடங்குவார்கள். இவர்கள் தொடும் ஒவ்வொரு உடலின் ஆத்மாக்களும் அவர்களது உறவினர்களை ஆசிர்வதிக்கிறதோ இல்லையோ இவர்களை நிச்சயம் ஆசிர்வதிக்க வேண்டும்.

இப்படிப்பட்ட "பிணவறை பணியாளர்கள் " இல்லை என்றால் நாம் கட்டி அணைத்து அழ நமக்கு நம் சொந்தங்களின் உடல் முழுமையாக கிடைக்காது . அனால் எல்லாம் தனியார் மயமாக்கப்பட்டு வரும் நிலையில் எப்போது வேலை போகும் என்று அச்சத்துடன் வாழும் இவர்களின் நிலைமையோ மிகவும் மோசமானது தான். எத்தனையோ சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி அங்கீகாரம் கொடுக்கும் நாம், இறந்தபின் நமக்கு அங்கீகாரம் கொடுக்கும் இவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து தர எண்ண வேணாமா..?

~மகேந்திரன்

"மயான தொளிலாளியையும் அவர்களின் ஆத்மார்த்தமான பணிகளைப்பற்றியும் எழுதிய நான்
"பிணவறை பணியாளர்கள்' அவர்களோடும் அவர்களுடைய உணர்வுகளையும் உடன் இருந்து
அறிந்து எழுதியது இந்த கட்டுரை.

அவர்களைக்கண்ட பிறகு ஒன்று மட்டும் நன்றாக உணர்ந்து கொண்டேன்.

"முற்றுப்புள்ளிக்கு முகவரிதரும்
இந்த
மனிதர்களைப் பற்றி அறிந்தால்
தொடர் புள்ளிக்கு பின்னால்
போடும் ஆட்டங்கள்
சீர்ப்படுதப்படும் "







Saturday, July 20, 2013

உண்மை கதாநாயகர்கள்...



காசு கொடுத்து ஒட்டு வாங்கிய அரசியல் வாதிகளையும் , திரையில் நடிக்கும் நடிகர்களையும் மட்டுமே நாம் கதாநாயகர்களாக நினைத்து பழகி விட்டோம் .

சலுகைகளை கொடுப்பவர்களைதான் நாம் உயர்த்தி பழகி விட்டோம் , அதன் பின்னணி அறியாத பாமரர்களாகவே வாழ்ந்து வருகிறோம்.

உண்மையில் நமக்கு கதாநாயகர்கள் யார்?

தனது சொந்தங்களையும் , சந்தோசங்களையும், சொத்துக்களையும் , முகமறியாதவர்களுக்காக தியாகம் செய்பவர்களே தான் என எப்போது அறியப்போகிறோம்?

கடந்த மாதம் உத்ரகண்ட் மாநிலத்தில் ஏற்ப்பட்ட வெள்ளம் யாராலும் மறக்க முடியாத ஒரு பேரழிவு. இமயமலையே ஒரு பகுதி கரைந்து உருகியது, வானம் உடைந்து கடல் கொட்டியது, நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு திரும்பிப்பார்க்கும் இடமெல்லாம் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மலையில் ஒரு சுனாமி , மழையா அல்லது கொட்டும் கடலா..? தண்ணீர்... தண்ணீர் வீட்டை அடித்து செல்ல வில்லை , ஊரையே அடித்துக் கொண்டு போகிறது, ஆயிரத்திற்கும் மேலானோர் அதில் ஜலசமாதியானார்கள், அதில் தப்பித்தவர்கள் மலை முகடுகளிலும் மணல் திட்டுக்களிலும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு நின்றார்கள் , எத்தனை நாட்கள் அப்படி நிற்க முடியும்? பசியால் உயிர் போனவர்கள் ஏராளம் , இப்போதோ, எப்போதோ என உயிரை கையில் பிடித்தபடி தவித்த லட்சத்துக்கும் மேற்ப்பட்ட மக்களை பார்த்து இந்திய தேசமே பரிதவித்தது.

ஊரே உருக்குலைந்து கிடக்கிறது. ஊரெல்லாம் அழிந்து அடர்ந்த காடுபோல கிடக்கிறது. பார்த்தாலே குலை நடுங்கும் பகுதி ஆங்காங்கே பிணங்கள் குவியல் குவியலாக, போனவர்கள் மீண்டும் வரப்போகிறார்களா என்ன..? இருப்பவர்களையாவது காப்பாற்றுங்கள் என இந்திய தேச இதயங்கள் எல்லாம் குரல் கொடுக்க எந்த அரசியல்வாதிகளும் வந்ததாக தெரியவில்லை , திரைப்பட நடிகர்கள் வந்ததாக தெரியவில்லை. மீதமுள்ள மக்களை மீட்க ராணுவம் விரைந்தது. வைரம் பாய்ந்த உடலும்… தினவெடுத்த தோளும்… எதிரிகளை பந்தாடும் வீரமும் கொண்ட பாரததாயின் உண்மை கதாநாயகர்கள் அப்பகுதி மக்களை காப்பாற்றும் பணியில் துணிச்சலுடன் இறங்கினார்கள்.பத்து அல்ல இருபது என்ற எண்ணிக்கையில் காலத்திற்கு வந்த ஹெலிகாப்டர்களின் எண்ணிக்கை பேரழிவின் விபரீதத்தை உணர்ந்து 60-க்கும் மேல் ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டது..

ஹெலிக்காப்டரின் மூலமாக மழையில் பசியால் நடுங்கி கொண்டிருந்த மக்களுக்கு உணவு பொட்டலங்கள் கொடுக்கப்பட்டது , அடுத்ததாக, தவித்த மக்களை மீட்க ஹெலிகாப்டர்கள் மூலம் ராணுவ வீரர்கள் உயிரையும் அடமானம் வைத்து காட்டுப்பகுதியில் இறங்கி கயிறு வழியாக பலர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். இந்த வகையில் அனைவரையும் மீட்பது கடினமாக இருப்பதால் தற்காலிக பாதைகள், தற்காலிக பாலங்கள் அமைப்பு பணியில் மின்னல் வேகத்தில் அமைத்து மக்களை மீட்டார்கள், ஒரு சிலரா லட்சோப லட்சம் மக்கள்.. நம்மை காப்பாற்ற மாட்டார்களா என மரணகுரலில் கதறல் ,பயந்து நடுங்கியவர்கள், பெண்கள், வயதானவர்கள் குழந்தைகள் என இந்த கதாநாயகர்கள் தோளில் சுமந்தும், முதுகில் தாங்கியும் உயர்ந்த பாறைகளின் மீது தவித்தவர்களை கயிறுகள் மூலமும் மீட்டு வந்தனர். யாருக்காக இதெல்லாம் ?

ஒரு பகுதியில் ஹெலிக்காப்டராலும் செல்ல முடியாத நிலை, உடைந்து போன பாலம் ,அந்த பகுதியில் முன்னூறுக்கும் மேற்ப்பட்டவர்கள் பாலத்தை கடக்க வேண்டும், தற்காலிகமாக போட்ட பாலமும் உடைந்து போனது , இந்த கதாநாயகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா ?

இருபுறங்களிலும் கயிறுகளை கொண்டு கட்டி விட்டனர். பின்னர் அந்த கயிற்றின் மேல் ராணுவ வீரர்களும் பாலம் போல படுத்து கொண்டு தங்கள் மேல் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் முதியவர்கள் என அனைத்து மக்களையும் ஏறி மறுபுறம் வர செய்துள்ளார்கள் ,அனைவரின் உயிரையும் தங்கள் மேல் சுமந்து காப்பாற்றினர்.
 நமக்கெல்லாம் கதாநாயகர்களாக இருக்கும் , இந்த ராணுவ கடவுள்கள் காப்பாற்றிய மக்களுக்கு தாய்மார்களாக திகழ்ந்தார்கள் , ஆம் ஒரு தாய் தன் வயிற்றில் ஒரு உயிரைத்தான் சுமந்து வரமுடியும் , நமது ராணுவ வீரர்கள் தங்கள் மேல் பலநூறு உயிரை சுமந்து காப்பாற்றினார்கள், இந்த செயல் யாரால் முடியும்.?

ஒவ்வொருவருக்கும் நமக்கு எதற்கு? நான் நல்லா இருந்தால் போதும்... என நினைப்பவர்கள் ஏராளம் இதிலும் ஒரு வேதனை "சுயநல எமன்கள்" அடித்தது யோகம்! கிடைத்தது லாபம்! என எண்ணத்தில் ஒரு சப்பாத்தி ரூ.250-க்கு விற்று பணம் சம்பாதித்தவர்களும் அந்த பகுதியில் இருக்கிறார்கள். மரண போராட்டம் நடத்துபவர்களிடம் கத்தி முனையில் பணம், நகை பறிக்கும் இரக்கமற்ற கூட்டமும் அங்கு இருக்கிறார்கள்.

இவர்களுக்கு மத்தியில்தான் நம் உயிர் போனாலும் பரவாயில்லை என் நாட்டு மக்களை பத்திரமாக மீட்க வேண்டும் என்று ஒவ்வொரு ராணுவ வீரரும் பலரது உயிரை காப்பாற்றினார்கள் , அதில் பல ராணுவ வீரர்களும் உயிரை தியாகம் செய்தனர்.

நமகெல்லாம் ஊர் எல்லையில் சிலையாக இருக்கும் அய்யனாரும், மதுரை வீரனும் மட்டுமே கடவுளாக எண்ணுகிறோம் , வழிபடுகிறோம்.

தனது சொந்தங்கள், ஆசைகள், கடமைகள் எல்லாவற்றையும் விட்டு விட்டு நமக்காக நாட்டு எல்லையில் இருக்கும் இந்த இந்திய கடவுளை நாம் மனதார ஒருநாளாவது நினைத்து பார்த்திருப்போமா?

என்னை பொறுத்தவரை...

என் நாட்டை காப்பவர்கள் , என் மக்களை காப்பவர்கள் எவர்களோ அவர்களே

உண்மையான மனிதர்கள்...

கதாநாயகர்கள்...

காக்கும் தெய்வங்கள்...

ஆம் இவர்களே மனித தெய்வங்கள்.

"ஜெய் ஹிந்த்"

~மகேந்திரன்