Showing posts with label நோம்பு. Show all posts
Showing posts with label நோம்பு. Show all posts

Monday, March 15, 2021

காரடையான் நோன்பு

 *பங்குனி மாதம் பிறக்கும் நேரமும், மாசி மாதம் முடியும் நேரமும் கூடுகின்ற தருணம்தான் காரடையான் நோன்பு எனும் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து பலவிதமான முறையில் சரிதங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.*

சத்தியவானுக்கும் சாவித்திரிக்கும் திருமணம் நடந்தேறியது. பின்னர் கணவனுடன் அவனுடைய நாட்டுக்குச் சென்றாள் சாவித்திரி. கண் பார்வை அற்ற கணவனின்  தாய், தந்தையரைப் பேணிக் காத்தாள். இந்த நிலையில், மன்னன் ஒருவன் சத்தியவானை நாடு கடத்தினான். தாய், தந்தை மற்றும் மனைவி சாவித்திரி  முதலானோருடன் காட்டில் குடில் அமைத்து வாழ்ந்துவந்தான். 


காட்டில் மரம் வெட்டி, நாட்டிற்குள் சென்று விற்றுப் பிழைப்பு நடத்திவந்தான். சாவித்திரிக்கு மட்டுமே அவனது வாழ்நாளின் இறுதி நாள் தெரியும். வேறு எவருக்கும் அவனின் ஆயுள் விவரம் தெரியாது. அதனால் அன்றைய தினம் அவன், மரம் வெட்டக் கிளம்பும்பொழுது தானும் உடன் வருவதாகச் சொன்னாள் சாவித்திரி.  மாமியார், மாமனாருக்கு உணவு தயாரித்துக் கொடுத்துவிட்டு சத்தியவானுடன் புறப்பட்டாள்.


காட்டில் நல்ல முதிர்ந்த மரத்தைத் தேர்ந்தெடுத்த சத்தியவான் அதனை வெட்டத் தொடங்கினான். அருகே இறை தியானத்தில் இருந்தாள் சாவித்திரி. மதிய வேளை  வந்தது. இருவரும் சாப்பிட்டார்கள். உண்ட களைப்பில் சாவித்திரியின் மடியில் அப்படியே தலைவைத்துப் படுத்தான். தூங்கியவன் அப்படியே ஒரேயடியாகக் கண் மூடினான். இறந்துபோனான். யம தர்மன், சத்தியவானின் உயிரைக் கொண்டுசெல்வதை சாவித்திரியால் பார்க்க முடிந்தது.


மடியில் தலை வைத்து இருந்த சத்தியவானின் தலையை இறக்கித் தரையில் வைத்துவிட்டு, கண்ணில் தெரிந்த யமனின் பின்னே சென்றாள் சாவித்திரி. பின்  தொடரும் காலடிச் சத்தம் கேட்ட யமன் திரும்பிப் பார்த்தான். சாவித்திரி கை கூப்பினாள்.


பத்தினிப் பெண்களால் மட்டுமே தன்னைக் காண முடியும் என்பதால், என்னைக் காணும் வல்லமை பெற்ற நீ தீர்க்க சுமங்கலியாக வாழ்க என வாழ்த்தினான்  யமதர்மன். கணவன் உயிர் மீள இந்த வரம் ஒன்றே போதும். ஆனாலும் தனது மாமியார், மாமனாருக்கு பார்வை திரும்ப வேண்டும் என்றும், தனக்கும்  சத்தியவானுக்கும் நூறு பிள்ளைகள் பிறக்க வேண்டும் என்றும் வரம் பெற்றாள் சாவித்திரி. ‘அப்படியே ஆகட்டும்’ என அருளினான் யம தருமன்.


உடனே விழித்தெழுந்தான் சத்தியவான். இருவரும் வீட்டிற்குத் திரும்பிய தருணத்தில், இருட்டத் தொடங்கியது. அன்றைய தினம் மாசி மாதத்தின் கடைசி நாள். பங்குனி மாதமும் பிறக்கத் தொடங்கியிருந்தது. இரு மாதமும் கூடும் நேரம் அது. அதுவே காரடையான் நோன்பு என்று கொண்டாடப்படுகிறது. விரதம் அனுஷ்டிக்கப்  படுகிறது.