Showing posts with label சாப்டியா. Show all posts
Showing posts with label சாப்டியா. Show all posts

Thursday, February 15, 2024

சாப்டியா

சாப்டியா..
இந்த சொல் உதிரும்போதே
மனதோரம்
மலர்ந்து விடுகிறது நேசம்

இந்தச் சொல்
ஆறுதலை தருவதற்கு முன்பே
அன்பைப் பெற்றுவிடுகிறது

இந்தச் சொல்
கருணையை வழங்கியதற்காக
கண்கள் கண்ணீரை
பரிசளித்துவிடுகிறது

பசியை
சீண்டிப்பார்க்கும் சொல்தான்
என்றாலும்
அக்கறையை அள்ளித்தரும்
அழகில்
மண்ணில் இன்னும் ஈரம் இருக்கிறது என்ற நம்பிக்கை

இயலாமைக்கு தன்மானத்தை
பசி பந்தி வைக்கும்போதும்
இந்தச் சொல்
மனதை நிறைத்து விடுகிறது

ஒற்றைச் சொல்தான்
ஓராயிரம் செல்களை
தட்டி எழுப்பி கட்டிக்கொள்ளும்
மந்திரம் கொண்டது
மனிதம் நிறைந்தது.

இது கேள்விதான்
என்றாலும்
நான் இருக்கிறேன் என்ற பதிலை
சொல்லாமல் சொல்கிறது

பசி அறிந்த தாயின் சாயலை
இந்தச் சொல்
இழுத்து வரும்போது
மறந்து போன
அம்மாவும் அப்பாவும் 
இணைந்தல்லவா வருவார்கள்.

இது சொல் அல்ல
உயிரை தாலாட்டும் உணர்வு
உறவை வளர்க்கும்
உரிமையின் கீதம்
ஆமாம்
மனிதம் கேட்கும்
கடவுளின் கருணை. 🙏

 *சாப்டியா*