Showing posts with label ஒற்றுமை. Show all posts
Showing posts with label ஒற்றுமை. Show all posts

Wednesday, August 20, 2025

“சடங்குகள் ஒற்றுமைக்கு வழிவகுக்கட்டுமே”

பாரம்பரியமும் ஒற்றுமையும்: குடும்பச் சடங்குகளில் ஒருமித்த நிலைப்பாடு அவசியம்.


"பாரம்பரியம்" என்பது வெறும் பழைய வழக்கமல்ல; அது குடும்பங்களின் ஒற்றுமைக்கும் சமூகத்தின் ஒழுங்குக்கும் அடித்தளமாக இருந்து வந்திருக்கிறது. ஆனால், காலம் மாறும்போது, பாரம்பரியம் பிளவுகளின் காரணமாக மாறிவிடும் நிலை அதிகரித்து வருகிறது. சடங்குகள் என்பது வெறும் சம்பிரதாயம் மட்டுமல்ல; அது ஒரு ஒற்றுமையின் வெளிப்பாடு. இந்த உணர்வு சிதைந்துபோகும்போது, குடும்ப உறவுகளும் பலவீனமடைகின்றன.

 *திருமணச் சடங்குகளில் குழப்பங்கள்* 
​திருமண நிகழ்வுகளில், "தாய்மாமனுக்கா? சம்பந்திகளுக்கா?" என்ற கேள்விகளில் கூட கருத்து வேறுபாடுகள் உருவாகின்றன. யாருக்கு முன்னுரிமை? யார் என்ன சடங்கு செய்ய வேண்டும்? என்ற போட்டி மனப்பான்மை, மகிழ்ச்சி நிறைந்த நிகழ்வையே சில நேரங்களில் மனக்கசப்பாக மாற்றுகிறது. ஒரு புதிய குடும்பம் உருவாகும் இந்த புனிதமான தருணத்தில், அன்பையும், மரியாதையையும் பரிமாறிக்கொள்ள வேண்டியவர்கள், அதிகாரப் போட்டியால் மோதிக்கொள்கிறார்கள்.

 *இறப்பு சடங்குகளில் பிரிவினைகள்* 
​அன்புக்குரியோர் மறைந்தபின் நடைபெறும் ஈமச் சடங்குகளில் கூட, "யார் சடங்குகளைச் செய்ய வேண்டும்?", "யாருக்குத் தலைமை உரிமை?" என்ற விவாதங்களில் உறவினர்கள் மோதிக் கொள்கிறார்கள். துக்கத்தில் ஒன்றிணைய வேண்டிய குடும்பம், இவ்வாறான சீரமைப்பில்லாத நிலைகளால் பிளவுபட்டு விடுகிறது. இது, அன்புக்குரியோரை இழந்த துயரத்தை விட அதிக மன வேதனையை அளிக்கிறது.

 *பாரம்பரிய மாற்றமும் புதிய வழிகாட்டுதலும்* 
​முன்னோர் தலைமுறையில் பின்பற்றப்பட்ட சில சம்பிரதாயங்கள் காலப்போக்கில் மறந்து போயிருக்கலாம். ஆனால், ஒவ்வொரு சமூகமும் தங்கள் தேவைக்கு ஏற்ப வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து, அதை அனைவரும் பின்பற்ற வேண்டும். இப்படி ஒருமித்த நிலைப்பாடு உருவானால் தான், பாரம்பரியத்தின் உண்மையான அர்த்தம் நிலைத்திருக்கும். சடங்குகளின் உண்மையான நோக்கமான அன்பு, மரியாதை, மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். இது, எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு தெளிவான பாதையை அமைத்துக் கொடுக்கும்.

​சடங்குகள் என்றால் அது ஒரு "சடங்கு" மட்டுமல்ல; அது ஒரு ஒற்றுமையின் வெளிப்பாடு. நதி பாயும் பாதையில் சிதறல்கள் இருந்தாலும், அதன் ஓட்டம் ஒருமித்ததாக இருக்கும். அதுபோல, குடும்ப உறவுகளும் வேறுபாடுகளுடன் இருந்தாலும், ஒற்றுமை தான் அவர்களை முன்னோக்கி நகர்த்தும் சக்தியாக இருக்க வேண்டும்.

 *ஒற்றுமையே உண்மையான சடங்கு; அன்பே உயர்ந்த மரபு.*

~ மகேந்திரன்

Saturday, August 02, 2025

*வாரிசுச் சான்று* காலங்களைக் கடந்து வந்த உறவுப் பாலம்

*வாரிசுச் சான்று* காலங்களைக் கடந்து வந்த உறவுப் பாலம்



“வாரிசுச் சான்றிதழ்... சிலருக்கு அது வெறும் அரசாங்க ஆவணம் தான். ஆனால் அறிவழகனுக்கு அது – தந்தையிடமிருந்து கிடைத்த இறுதி ஆசீர்வாதம்!”

கந்தசாமி தன் வாழ்நாள் முழுவதும் ஒரு உழவனாய், வியர்வைத் துளிகளை நிலத்தில் சிந்தி, கடினமாக உழைத்து ஒரு பைசாவைக் கூட வீணாக்காமல் பாடுபட்டு சேர்த்த சொத்துகளைப் பிள்ளைகளுக்கு நியாயமாக பிரித்துக் கொடுத்திருந்தார்.

அவருக்கு ஐந்து பிள்ளைகள் – மூன்று மகள்கள், இரண்டு மகன்கள். தன் உழைப்பால் வந்த செல்வத்தைப் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து பிரச்சனை இல்லாமல் பிரித்துக்கொள்ள வேண்டும்; தனது காலத்துக்கு பின் சண்டை சச்சரவுகள் வரக்கூடாது என்பதில் உறுதியுடன் இருந்தார். ஆனால், விதி வலியது. அவரது இரண்டாவது மகள் எதிர்பாராத விதமாக முன்னரே இவ்வுலகைவிட்டு மறைந்தார்.

கந்தசாமியின் மறைவுக்குப் பின், எஞ்சியிருந்த இரண்டு மகள்களும், மூத்த மகனும்,
"அப்பா நமக்கு தரவேண்டிய சொத்துக்களை ஏற்கனவே பிரித்துக் கொடுத்து விட்டார். இனி அப்பா பெயரில் இருந்து நமக்கு எதுவும் வர வேண்டியது இல்லை. வாரிசுச் சான்றிதழ் என்பது வெறும் காகிதம்; அதற்கான தேவையும் இல்லை; அலைந்து திரிந்து வாங்க வேண்டிய அவசியமும் இல்லை என்று கூறி ஒதுங்கிக்கொண்டனர்.

அவர்களின் பார்வையில், பாகப்பிரிவினை முடிந்த பிறகு, ஒரு புதிய ஆவணம் பெறுவது அவசியமற்ற ஒன்றாக தோன்றியது. ஒருவேளை, தங்கள் தந்தையின் பெயரில் வங்கியில் நிறைய பணமோ வேறு எதுவும் சொத்துகளோ இருந்திருந்தால், இந்தச் சான்று வாங்க ஆர்வம் காட்டி இருப்பார்களோ என்னவோ? சொத்துக்கள் அவரவர் பெயரில் வந்துவிட்டாலும் கூட என்றேனும் ஒரு நாள் இந்த சான்று தேவைப்படலாம் என்பதும் அவர்களுக்கு புரியவில்லை.

ஆனால், இளைய மகன் அறிவழகனின் மனசு அத்தனை சீக்கிரம் ஒப்பவில்லை. அவனுக்கு அந்தச் சான்றிதழ் வெறும் காகிதம் அல்ல, ஒரு குடும்பத்தின் வரலாறு ஒரு தலைமுறையின் அடையாளம் 

 கந்தசாமி என்ற மனிதனின் வேர்களும் விழுதுகளும் இவர்கள்தான் என்று உலகுக்கு காட்டக்கூடிய அதிகாரப்பூர்வமான ஆவணம் என்பதை உணர்ந்து எப்படியாவது தன் தந்தைக்கு வாரிசு சான்றை வாங்கி விட வேண்டும் என்று அறிவழகன் உள்ளம் உருகினான்.

 தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரது பெயரும் இடம்பெறும் அந்தச் சான்று தான் தன் அப்பா கொடுத்ததிலேயே மிகப்பெரிய சொத்து என்று நம்பினான். 

வாரிசுச் சான்றிதழ் பெறுவது அறிவழகனுக்கு ஒரு தவம் போலவே இருந்தது. அறிவழகனின் எந்த முயற்சிக்கும் மற்ற மூன்று பிள்ளைகளும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை 
 உடன்பிறந்தவர்கள் தங்கள் அடையாள அட்டைகளை வழங்க மறுத்தனர். அவர்களுக்கு அதன் உண்மைத் தேவை புரியவில்லை.
"ஒற்றுமை இல்லை – ஆதாரங்கள் இல்லை – ஆதரவும் இல்லை" என்று அவர்கள் கைகழுவினாலும், அறிவழகனின் முயற்சி ஓயவில்லை.

தந்தையின் மீதான அன்பு, இந்தச் சான்றிதழைப் பெற்றே தீர வேண்டும் என்ற வைராக்கியமாக அவன் நெஞ்சில் வேரூன்றியது.

அண்ணன், அக்காக்களுக்குத் தெரியாமல், கண்ணீரும் வியர்வையுமாய் பல இடங்களுக்கு அலைந்தான். ஒரு துப்பறிவாளனைப் போல, வீட்டின் மூலை முடுக்குகளில் எப்போதோ எதற்காகவோ விட்டுச்சென்ற அவர்களின் அடையாள அட்டைகளின் நகல்களைத் தேடிப் பிடித்தான்.

இந்தத் தேடலின் போது 
தந்தையுடனும், குடும்பத்தினருடனும் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படங்கள், பள்ளிக் காலச் சான்றிதழ்கள், தந்தையின் கையெழுத்துகள் பதிந்த பழைய கடிதங்கள் என ஒவ்வொரு துகளையும் தேடித் திரட்டினான்.

ஜெராக்ஸ் நகல்கள் கூட அவனுக்குத் தந்தையின் நினைவுகளாய், உறவுகளின் சுவாசமாய் தோன்றின. ஒவ்வொரு தாளிலும் தன் குடும்பத்தின் உயிர் துடிப்பதை உணர்ந்தான்.

கிடைத்த ஆவணங்களை முறையாகத் தயார் செய்து, நம்பிக்கையுடன் வருவாய்த்துறை அலுவலர்களை பார்க்கச் சென்றான் அங்கே இருந்த அதிகாரி அறிவழகன் சமர்ப்பித்த ஆவணங்களைத் தீவிரமாக ஆராய்ந்தார்.

இவை எல்லாமே நகல்களாக இருக்கிறதே? அசல் ஆவணங்கள் இல்லையா? அரசு விதிகளின் படி அசல் ஆவணங்கள் அவசியம் என்று விண்ணப்பிக்கும் இடத்தில் ஆரம்பித்து உயர் அதிகாரி வரை திருப்பி அனுப்பினர். 

ஏன் உங்களுடன் பிறந்தவர்கள் அசல் ஆவணங்களை தர மறுக்கிறார்கள், உங்களுக்குள் ஏதாவது சொத்து பிரச்சனையா, நீங்கள் சொல்லும் வாரிசு விவரங்கள் உண்மைதானா என்று அறிவழகனை சந்தேக கண்ணோட்டத்தோடு பார்த்தார்கள்.

அறிவழகன் கண்களில் நீர் அரும்பியது.

> “ஐயா… இந்த வாரிசு சான்றிதழில்,
எங்கள் அப்பாவின் முகம், மனம், விருப்பங்கள் — எல்லாம் நான்கே வரிகளில் தெரிகிறது.
 தன்னுடைய பிள்ளைகள் நால்வரும் ஒற்றுமையோடு இருக்கணும் என்பதே அவருடைய ஒரே ஆசையாக இருந்தது.
ஆனால்... காலம் அவருடைய ஆசையை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து விட்டது.


 இந்த சான்றிதழில் 
அவருடைய எல்லா பிள்ளைகளின் பெயர்களும் ஒரு வரிசையில், ஒரே ஆவணத்தில் இருக்கும் போது, தன்னுடைய பிள்ளைகள் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற அவருடைய ஆசை இங்கேயாவது நிறைவேறட்டும் என்று அரசு அலுவலர்களிடம் மன்றாடினான். என் தந்தையின் வாரிசு பற்றி நான் அளித்த விவரங்கள் அனைத்தும் உண்மை, எங்கு வேண்டுமானாலும் விசாரித்துக் கொள்ளலாம் என்று உறுதிப்பட தெரிவித்தான்.

இந்த விண்ணப்பத்தில் நான் குறிப்பிட்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் உண்மையே இதில் ஏதேனும் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் அதற்கு முழு பொறுப்பையும் நான் ஏற்கிறேன், மேலும் இந்த அரசு ஆவணத்தை தவறான முறையில் பயன்படுத்த மாட்டேன் என்று உறுதிமொழி எழுதிக் கொடுத்த பிறகே அவனது மனுவை ஏற்றுக் கொண்டார்கள்.

 பொதுவாக சொத்துக்கள் பணம் இவற்றை பெறுவதற்காகத்தான் வாரிசு சான்று வாங்க பலரும் வருவார்கள். என் அப்பாவின் நினைவாக இந்த வாரிசு சான்றை ஒப்புதல் அளியுங்கள் என்று அறிவழகன் பரிதாபமாக கேட்டபோது அறிவழகனின் மனநிலையை அந்த விசாரணை அதிகாரி புரிந்து கொண்டார்.

அந்த உணர்வை மனதில் ஏற்றி, தயக்கமின்றி வாரிசுச் சான்றிதழ் வழங்க ஒப்பமிட்டார்கள்.

 வருவாய்த் துறையின் அனைத்து படிநிலைகளையும் கடந்து ஒரு வழியாக வாரிசு சான்று அறிவழகன் கைக்கு வந்து சேர்ந்தது. 

அதில், இறந்த அக்காவின் பெயரும், தன் தந்தை சிறுபிள்ளையாக இருக்கும் போது 70 வருடங்களுக்கு முன் மறைந்துபோன தாத்தா-பாட்டியின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.

அவர்களின் பெயரைக் கூட இன்று நினைத்துப் பார்க்க யாரும் இல்லாத சூழலில், அந்தச் சான்றிதழில் அவர்களின் பெயர்கள் மிளிர்வது அறிவழகனை மெய்சிலிர்க்க வைத்தது.

 மேலும் அந்தச் சான்று அறிவழகன் குடும்ப வரலாற்றின் சின்னமாக, உறவுகளின் பாலமாக மாறியது.

தனியே நின்று போராடி, தனது குடும்பத்தின் அடையாளத்தை கையில் கொண்டுவந்த அறிவழகன், அந்தச் சான்றிதழை வாழ்நாள் முழுக்க தந்தையின் ஆசீர்வாத சுடராக ஏந்திக்கொண்டான்

 அது வெறும் சான்றிதழ் அல்ல — காலங்களைக் கடந்து வந்த உறவுப் பாலம்!

~ மகேந்திரன்

Thursday, January 15, 2015

முக்கனி சங்கமம் சுகுணா புரம் மத ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டு

தமிழ்நாட்டில் பாசத்திற்கும் ஒற்றுமைக்கும் கோயமுத்தூரை ஒரு முன்னுதாரணமாக சொல்லலாம். அந்த சிறப்பும் குனியமுத்தூர் பகுதியில் இருக்கும் சுகுணா புரம் பகுதி மக்களாலேயே வந்தது என்பதை சொன்னால் அது மிகையாகாது. கோவைக்கு இப்படி ஒரு தனி சிறப்பை தேடிக் கொடுத்த அந்த சுகுணா புரம் மக்களிடையே அப்படி என்ன ஒரு தனித்துவம்.




இதோ சுகுணா புரத்தின் வரலாறு...


நாற்பது வருடத்திற்கு முன்பாக இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என மும்மதத்தவர்களும் சேர்ந்து சுமார் 1000 குடும்பங்கள் வசிக்கும் சுகுணா புரத்தில் குடிநீர் வசதி, கால்வாய் வசதி, மின்சாரவசதி போன்ற மிக அத்தியாவசியமான தேவைகள் முற்றிலும் இல்லாத ஒரு கிராமமாகவே இருந்தது. குடிக்கும் தண்ணீர் வேண்டுமானால் 10 கிலோமீட்டர் வரை கரடு முரடான சாலையில் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் அவலநிலை இருந்து வந்தது. கோவில்கள், பள்ளி என எதுவும் இல்லை. இப்படிப்பட்ட சூழலில் சுகுணா புரம் மக்கள் தம்முடைய அத்தியாவசிய தேவைக்காக அரசாங்கத்திடம் பல மனுக்கள் கொடுத்தனர் ஆனால் எந்த பயனும் கிடைக்கவில்லை .


இந்த சூழலில்தான் மும்மதத்தவர்களும் ஒன்று கூடி முக்கனி வாலிபர் முன்னேற்ற சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி பல போராட்டங்களுக்கு இடையில் சட்டப்பூர்வமாக அத்தனை வசதிகளையும் பெற்றுக் கொண்டார்கள். இந்தச் சூழலில் தான் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என இவர்களுக்கிடையில் சகோதரத்துவம் அமைந்தது. மதங்களாலும், இனத்தாலும் அப்பகுதி மக்கள் வேறுபட்டிருந்தாலும், குணத்தாலும் அன்பின் ஒற்றுமையாலும் ஒன்றுபட்டு வாழ்ந்து வருகின்றனர்.








சுகுணா புரத்தில் மூன்று மதத்தினரும் ஒன்று கூடியே கோவில், மசூதி, திருச்சபைகள் கட்டியுள்ளனர். மூன்று சமயத்தினரின் கல்லறைகளும் ஒன்று சேர்ந்து இங்கு இருப்பது எந்த ஊர் மக்களிடையேயும் இல்லாத மிக உயர்ந்த ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது.


அது மட்டுமா ? எந்த ஒரு பண்டிகையானாலும் ஜாதி மத பேதம் இல்லாமல் மும்மதத்தவரும் ஒன்று கூடியே தான் கொண்டாடுவார்கள். அதுமட்டும் இல்லை, ஒரு மதத்தவரின் வீட்டு குடும்ப நிகழ்ச்சி என்றாலும் அதில் மற்ற மதத்தவரின் பங்கு கண்டிப்பாக இருந்து வருகிறது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் இஸ்லாமியர் யாரேனும் காலமானால் சடலத்தை நல்லடக்கம் செய்வதில் இந்து சமயத்தினரின் பங்கும் இருக்கும். இந்து சமயத்தினரின் வீட்டு திருமணம் என்றால் மற்ற மதத்தினரின் பங்கும் கலந்திருக்கும் .


ரமலான் நோன்பு இருக்கும் 30 தினங்களும் மற்ற மதத்தினர் அதிகாலை 3 மணிக்கு எழுந்து வீதி வீதியாக பாட்டுப்பாடி நோன்பிருக்கும் இஸ்லாமியர்களை எழுப்பிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். கோவை சுகுணா புரத்து மக்களின் மனித நேயத்தையும் மனித ஒற்றுமையையும் அதிக அளவில் நாம் அறிந்திராதது நமது அறியாமையையே வெளிப்படுத்துகிறது .






1998 இல் கோவையில் நடந்த மிகப்பெரிய மதக்கலவரத்தில் இப்பகுதி மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க வந்த கலவரக்காரர்களை இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் என மூன்று மதத்தினரும் ஒன்று கூடி விரட்டி அடித்த மக்கள் இவர்கள். அப்படியிருக்க இன்றும் மதம் ஜாதி என உயிரை விடும் மக்களை நாம் மூடர்கள் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது...?


சுகுணா புரத்தில் இன்று பொங்கல் திருநாளில் மூன்று மதத்தினரும் ஒன்று கூடி பொங்கல் வைத்து கொண்டாடியது மதநல்லிணக்கத்தை உலகிற்கு பறைசாற்றும் வகையில் இருந்தது.




மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் இந்த பொங்கல் திருநாளைக் கொண்டாடும் அப்பகுதி மக்கள் கூறும் பொழுது "கடந்த நாற்பது வருடத்திற்கு முன்பு எங்கள் பகுதியில் இருந்த இளைஞர்கள் கூடி உருவாக்கிய முக்கனி முன்னேற்ற சங்கமே இன்றுவரை மதங்களை கடந்து ஒற்றுமையுடன் வாழ வழிக்காட்டி உள்ளது. சமூகத்தின் மீது உள்ள அக்கறையினாலும், கறைகளை துடைப்பதற்காகவும் நாங்கள் எடுத்துக்கொண்ட தற்காலிக தீர்வு அல்ல. இது முழுக்க முழுக்க மனமாற்றம் ஒன்றே. மதத்தாலும் ஜாதிகளாலும் பிரிந்து இருக்கும் சமூகத்தை மாற்ற வேண்டும் ; ஜாதி மதம் என்பது தனிமனித ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டி உருவாக்கப்பட்டதே தவிர மனிதர்களிடையே பிரிவினையை உண்டாக்குவதற்காக அல்ல என்பதை நாங்கள் நன்கு உணர்ந்து இங்கு வாழ்கிறோம்", என்று அப்பகுதி மக்கள் கூறும் பொழுது நமது உடலில் புது ரத்தம் ஊறிய உணர்வு ஏற்பட்டது .


~மகேந்திரன்.

Saturday, November 09, 2013

ஒரு ஊர் இரண்டு தீபாவளி


மயிலந்தீபாவளி.
பசுமை நிறைந்த கிராமம் , இதமான தட்பவெட்பம் , விவசாய பூமி , மக்களிடையே கள்ளம் கபடம் இல்லை. எங்கு பார்த்தாலும் பசுமை இதுவரை எந்த ஒரு தொழிற்சாலை அதிபர்களின் கண்களுக்கும் படாததால் அங்கு இன்னும் மண்வாசம் வீசிக்கொண்டுதான் இருக்கிறது. கோவையில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த பசுமையான கிராமம் வடசித்தூர்.
இங்கேதான் மக்கள் இரண்டு தீபாவளி கொண்டாடுகின்றனர். தீபாவளி நாளில் கூட ஊர் களைகட்டுவது இல்லை. அதற்கு அடுத்தநாள் மயிலன் தீபாவளியாக சுத்துப்பட்டு 16 கிராம மக்களும் வடசித்தூரில் சங்கமமாகி இந்து , கிறித்தவர், இஸ்லாமியர் என சமயம் பாராமல் ஒரே குடும்பமாக கொண்டாடுகின்றனர். பலவிதமான விளையாட்டுகளும் ஒயிலாட்டம்,மயிலாட்டம், கூத்து, கேளிக்கை , பட்டாசுகள், மற்றும் வித விதமான உணவு என்று இந்த மயிலன் தீபாவளியை கொண்டாடுகின்றனர். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அப்படி ஒரு சந்தோசத்தோட இந்த மயிலன் தீபாவளில கலந்துகிட்டு சந்தோஷ படறாங்க. தலை தீபாவளிக்கு வந்த புது தம்பதியினரை கூட மயிலந்தீபாவளி அன்று மிக சிறப்பாக உபசரிக்கிறார்கள் வடசித்தூர் மக்கள் அனைவருமே.
அது சரி.. அதென்ன "மயிலந்தீபாவளி"
அங்கே கொண்டாடும் சிலரிடம் விசாரித்தபோது , ஏறக்குறைய சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் இந்த பசுமை கொஞ்சும் வடசித்தூர் கிராமத்தை ஆட்சி செய்தவர் 'மயில்சாமிக் கவுண்டர்'. அந்த ஊருக்கு நிறைய நன்மைகளை செய்தார். அவரது பேச்சுக்கு கட்டுப்பட்டு அந்த ஊர் மக்கள் நடந்துகிட்டாங்க. அவர் மேல ஊர் மக்கள் எல்லோரும் மிகுந்த மரியாதை வச்சிருந்தாங்க. இவரைக் கேட்காமல் ஒர் அணுவும் அசைந்ததில்லை இவருடைய சொல்லில் துவங்கியதுதான் இந்த மயிலன் தீபாவளி .
வடசித்தூர் கிராம மக்கள் இன்னால் வரையிலும் செவ்வாய்க் கிழமை அசைவ உணவு உண்பதில்லை என்ற வழக்கம் கொண்டு இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது சுமார் 100 வருடங்களுக்குமுன் ஒரு தீபாவளி செவ்வாய்கிழமையில் வந்தது, .தீபாவளி அன்று அசைவம் இல்லை என்றால் எப்படி..? அதுவும் தலைதீபாவளிக்கு வந்த புது மாப்பிள்ளையை எப்படி உபசரிப்பது? வந்திருக்கும் பிள்ளைகள் எப்படி மகிழும் என்றும் தீபாவளி சிறப்புடையதாக இருக்காதே என மக்கள் குழம்பிய நிலையில், பெரியவர் மயில்சாமி அவர்களிடம் யோசனைக் கேட்க அவரும் ''ஏன் நாளைக்கு மாமிசம் சாப்பிட்டால் என்ன?'' நாளையும் தீபாவளி கொண்டாடலாமே என்று முடிவெடுத்து அந்த வருடம் தீபாவளிக்கு அடுத்தநாள் மீண்டும் தீபாவளி கொண்டாடினர்.
எதிர்பாராதவிதமாக அடுத்து வந்த தீபாவளியும் செவ்வாய்க் கிழமையே வர, மக்களும் அதற்கடுத்த நாளையே மிகச் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். இப்படி கொண்டாடுவது ரொம்ப மகிழ்ச்சியா இருந்ததால ஒவ்வொரு வருசமும் தீபாவளிக்கு அடுத்த நாளும் இவங்க ஊர் மக்கள் எல்லாரும் சேர்ந்து தீபாவளி கொண்டாட ஆரம்பிச்சாங்க. பக்கத்துக்கு கிராம மக்கள் இந்த விழாவை பற்றி கேட்கும் போது மயில்சாமி ஐயா சொல்லி இருக்காங்க அதனால நாங்க இப்படி இந்த நாளும் கொண்டாடுகிறோம் என்று கூற காலப்போக்கில் மயில்சாமி தீபாவளி, மயிலந்தீபாவளி என்று ஆகி சுத்தி இருந்த 16 கிராம மக்களும் இவங்களோட இந்த தீபாவளியில கலந்துக்க ஆரம்பிச்சாங்க.
100 ஆண்டுக்கு முன் மயில்சாமிக் கவுண்டரால் உருவாகிய இந்த வழக்கத்தை இன்றளவும் இளைய தலைமுறைகளும் ஏற்று கொண்டாடுவது நம்மை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கிறது.அவரது பெயரிலேயே ''மயிலந்தீபாவளி" யில் 16 கிராம மக்களும் வடசித்தூரில் ஒன்று கூடி இந்து, முஸ்லீம்,கிறித்தவர் என மதப் பாகுபாடின்றி ஒருவரையொருவர் ஆரத்தழுவி கொண்டாடி மகிழ்வது சிறந்த மதநல்லிணக்கத்திற்கு உதாரணமாக உள்ளது. இப்படிப் பட்ட நிகழ்வுகளை வரவேற்பது நம் கடமை.
காலங்கள் கடந்தும் காவியம் படைக்கிறது "மயிலந்தீபாவளி"
~நிறைமதி